செவ்வாய், 10 அக்டோபர், 2017

பழந்தமிழர் விளையாட்டு இலக்கியம் 2

ஒருவர் விடுகதை சொல்வார். மற்றொருவர் அதனை விடுவிப்பார். அல்லது எதிர்
விடுகதை சொல்லி, அவரவர் விடுகதையை அவரவரே விடுவித்துச் சமனாக்குவார்.
 - பிணைமொழி விளையாட்டு:
புதிதாகப் பிணைத்து இட்டுக்கட்டிச் சொல்வது பிணைமொழி. இதனைத்
தொல்காப்பியம் பண்ணத்தி எனக் குறிப்பிடுகிறது.
“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே” செய்யுளியல், 180.
இதற்கு, ‘பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும்
உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு’ என்று பேராசிரியர் உரை
எழுதியிருக்கிறார்.
இக்காலப் பிணைமொழிக்கு ஓர் எடுத்துக்காட்டு,
எங்கே போகிறாய் - ஊருக்குப் போகிறேன்
என்ன ஊர் - மயிலாப்பூர்
என்ன மயில் - காட்டு மயில்
என்ன காடு - ஆர்க்காடு
என்ன ஆர் - அடையார்
என்ன வடை - ஆமை வடை
என்ன ஆமை - குளத்து ஆமை
என்ன குளம் - செட்டிகுளம்
விடை கிடைக்கும்வரை இப்படியே தொடர்ந்து விளையாடுவர்.
 - நாப்பயிற்சி விளையாட்டு:
நாவுக்கு உச்சரிப்புப் பயிற்சி தரும் விளையாட்டுகளைப் பேசுமொழி
விளையாட்டாகக் கொள்ளலாம். இவற்றைச் சேர்ந்தாற்போல் திரும்பத் திரும்பச்
சொல்ல வேண்டும்.
“ஓடுற நரியிலை ஒருநரி சிறுநரி, சிறுநரி முதுகிலே ஒருபிடி நரைமயிர்”
“மலையிலே ஒருகல் உருளுது புரளுது”
“கடலையிலே ஒருகல் உருளுது புரளுது, தத்தளிக்குது தாளம் போடுது”
“இது யாரு தச்ச சட்டை, எங்க தாத்தா தைச்ச சட்டை”
“ஊர் பூவரச மரமெல்லாம் என் பூவரச மரம்” இதைத் திரும்பத் திரும்ப
விரைவாகச் சொல்லும்போது 'ஊர்ப் புருசனெல்லாம் என் புருசன்' என வாய்
குழறிவிடும் என்பர்.
ஓரையாடுதல்:
ஓரை என்பது சங்ககால இளம் மகளிர்; விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.
ஓரை என்றால் ஒலி எழுப்புதல் என்று பொருள். இது
ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.
கடல் அலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும்,
முற்றத்தில் பரப்பப்பட்ட மணலிலும் இது விளையாடப்பட்டதாகச் சங்கப்
பாடல்கள் தெரிவிக்கின்றன.
ஆமை, நண்டு ஆகியவற்றைக் கோல் கொண்டு அலைத்து விளையாடுவது ஓரையாடுதல் என்ற
விளையாட்டில் ஒருவகையாகும். இவ்விளையாட்டை ‘அலவனாட்டல்’ என்று
பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.
‘‘ஓரையாயத் தொண்டொடி மகளிர்’’ என ஓரையாடும் மகளிரை புறநானூறு 176
குறிப்பிடுகின்றது.
வண்டலிழைத்தல்:
வண்டலிழைத்தல் என்பது பழங்கால விளையாட்டுகளில் ஒன்றாகும். மணலை நீளமாகக்
குவித்து அதில் ஒரு குச்சியையோ அல்லது விதையையோ மறைத்து வைப்பர்.
மற்றொருவர் இருகைகளையும் கொண்டு மூடிய மணலுக்குள் மறைக்கப்பட்டதைத் தேடி
எடுப்பர். அவ்வாறு எடுத்துவிட்டால் எடுத்தவர் வெற்றி பெற்றவராகக்
கருதப்படுவார்.
இவ்வாறு வண்டல் இழைத்த ஒருத்தி, வண்டலுக்குள் ஒரு புன்னை விதையைப்
புதைக்கையில் தாய் அழைக்க, ஓடிவிடுகிறாள். பின் அவ்விதை முளைத்து
மரமாகிறது. பின்னாளில் அதே மரத்தருகில் காதற் தலைவன் அணைக்க
முற்படுகிறான். அவள் புன்னை மரத்தைக் காட்டி, ‘இதோ என் தங்கை, அவள் முன்
இவ்வாறு செய்யலாகாது’ எனத் தடுக்கிறாள். இது நற்றிணை கூறும் ஓர் அழகிய
காட்சி.
இவ்விளையாட்டு இப்போது “கிச்சுக் கிச்சுத் தாம்பளம்’’ எனக் கிராமப்புற
மக்களால் அழைக்கப்படுகின்றது.
நீர் விளையாட்டுகள்.
பழங்காலத்தோர் நீர் விளையாட்டுகளுக்குப் பேரிடம் வழங்கியிருக்கின்றனர்.
இவ்விளையாட்டுகளைக் ‘களிநீராடல்’ என அழைத்திருக்கின்றனர். நீர்
விளையாட்டுகள் பல, கட்டுரையின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. சில
நீர் விளையாட்டுகள் பற்றி நோக்குவோம்.
- புனல் நயந்து ஆடல் (ளலnஉhசழnணைநன ளறiஅஅiபெ நீச்சல் நடனம்):
இந்நீர் விளையாட்டு அக்காலத்தில் சிறப்புற்று விளங்கியிருக்கின்றது.
கழார் என்னும் ஊரிலுள்ள காவிரியாற்று நீர்த்துறையில், அரசன் கரிகாலன்,
அவன் மகள் ஆதிமந்தி முன்னிலையில், ஆட்டனத்தி என்ற நீச்சல் வீரனும்,
காவிரி என்னும் நீச்சல்மகளும் இணைந்து நீச்சல் நடனம் ஆடிக் காட்டினர் என
அகநானூறு கூறுகின்றது.
“அத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் அணியை நீரில் மூழ்கிக்கொண்டு காலை
நீருக்குமேல் தூக்கி ஆட்டிப் புரட்டிக் காட்டினான். வயிற்றில் கட்டிய ஆடை
நழுவாமல் இருக்கக் கச்சம் கட்டியிருந்தான். அத்துடன் பாண்டில் என்னும்
அணிகலனும் அணிந்திருந்தான். அந்தப் பாண்டில் அணியில் மணிகள்
கோக்கப்பட்டிருந்தன. அந்த மணிகள் ஒலிக்கும்படி வயிறு மட்டும் மேலே
தெரியும்படி உருண்டு ஆட்டிக் காட்டினான்.  இப்படி ஆடிய அத்தியோடு கூடி
ஆடியவள் காவிரி. அத்தியை விரும்பிய காவேரி நீரோட்டத்துடன் அவனை ஒளித்துக்
கொண்டு சென்றாள்” என அகநானூறு மேலும் கூறுகின்றது.
“கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு” (அகம் 376)
- பண்ணை:
மகளிர் நீரில் பாயும் விளையாட்டுக்குப் பண்ணை என்று பெயர்.
சங்க காலத்தில் ஆற்றங்கரையிலிருந்த மருதமரத்தில் ஏறி ஒருத்தி பண்ணை
பாய்ந்தாள். அது மயில் ஒன்று விண்ணிலிருந்து மண்ணுக்குத் தோகை விரித்தபடி
இறங்குவதைப் போன்றிருந்தது. அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மயிலின்
தோகையில் காணப்பட்ட வண்ணப்புள்ளிகளைப் போன்றிருந்தன என ஐங்குநூறு
கூறுகின்றது.
“விசும்பிழி தோகை சீர் போன்றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே” – ஐங்குறுநூறு 74.
மரந்தை என்னும் ஊரில் சங்ககால மகளிர் கடலிற் பாய்ந்து விளையாடினர்.
அப்போது அவர்கள் அணிந்திருந்த பூக்கள் கடலலையில் மிதந்து வந்தன என
நற்றிணை (395) கூறுகின்றது.
- படகு விளையாட்டுகள்:
சங்ககாலத்தோர் பலவகையான படகு விளையாட்டுகளை விளையாடியிருக்கின்றனர்.
பின்படகு (rowing), முன்படகு (canoeingஇ வளிப்படகு (wind-surfing) என்பன
முதன்மையான படகு விளையாட்டுகளாக இருந்தன. படகை அக்காலத்தோர் புணை என்றும்
அழைத்தனர்.
படகை முன்புறமாகச் செலுத்துவதும், பின்புறமாகச் செலுத்துவதும்
இக்காலத்திலும் உண்டு. முன்படகைத் தலைப்புணை என்றும், பின்படகைக்
கடைப்புணை என்றும் அழைத்திருக்கின்றனர்.
“பலர் புணை செலுத்தி நீரில் விளையாடினர். தலைவன் செலுத்திய புணையை
ஒருத்தி பின் தொடர்ந்தாள். அவன் தலைப்புணையில் முன்னோக்கிச் சென்றால்
அவளும் தலைப்புணையில் முன்னோக்கி வந்து அவனைப் பின் தொடர்ந்தாள். அவன்
கடைப்புணையில் பின்னோக்கிச் சென்றால் அவளும் கடைப்புணையில் பின்னோக்கிச்
சென்று அவனைத் தொடர்ந்தாள். அவன் புணையைக் கைவிட்டு நீரோடு மிதந்து
சென்றால், அவளும் அவ்வாறே செய்து அவனைத் தொடர்ந்தாள்” என்ற செய்தியைக்
குறுந்தொகைப் பாடல் தருகின்றது.
“தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்” (குறுந்தொகை 222)
- நீச்சல் பந்தாட்டம்:
இவ்விளையாட்டைக் காதலர் பெரிதும் விளையாடியிருக்கின்றனர். நீராடும்
காதலர் ஒருவர்மீது ஒருவர் பந்தை வீசி விளையாடுவர். ‘பூநீர் பெய் வட்டம்’
என்று அந்தப் பந்து அழைக்கப்பட்டிருக்கின்றது. பலவகை வண்ண நீரினால்
நிரப்பப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொள்வர். பந்து
மோதியதும் உடைந்து வண்ண நீர் சிந்தும். இக்காலத்தில் வட இந்தியாவில்
கொண்டாடப்படும் ‘கோலி’ விழாவை ஒத்ததாக இது காணப்படுகின்றது. இதன்
தொடர்ச்சியாக இன்றும் மாமன் முறை கொண்டோர் மீது மஞ்சள் நீர் ஊற்றும்
வழக்கம் காணப்படுகின்றது. இச்செய்தியைப் பரிபாடல் தெரிவிக்கின்றது.
“கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்” (பரிபாடல் 11)
“உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய..” (பரிபாடல் 12)
நிறைவுரை:
சங்ககால மக்கள் விளையாட்டின் வழியாகப் பெருமகிழ்வு கொண்டனர். ஒருவரோடு
ஒருவர் இணக்கமாகக் கூடி வாழ விளையாட்டு பெருந்துணை செய்தது. நல்ல
தோழியரையும் பாங்கர்களையும் (நண்பர்) விளையாட்டுகளே உருவாக்கின. போர்
நிறைந்த அக்காலத்தில் உள்ளம், உடல் ஆகிவற்றின் வலிமைகளைப் பேண
விளையாட்டுகள் பெரிதும் பயன்பட்டன. ஏறு தழுவல், மற்போர், வாட்போர் யானை,
ஏற்றங்கள் என்பன சிறந்த வீரரை அரசருக்கும், மணப்பெண்களுக்கும் அடையாளம்
காட்டின.
இக்காலத்தில் உலகெங்கும் போற்றப்படுகின்ற பல விளையாட்டுகள் வேற்றுலகத்
தொடர்புகள் பெரிதும் அற்றிருந்த சங்ககாலத்திலும்
விளையாடப்பட்டிருக்கின்றன என்பது ஆச்சரியம் தருகின்ற உண்மையாகும்.
குறிப்பாக பெரும் செல்வாக்கும் பெற்றிருக்கும் எழில் உலாவரங்கு (குயளாழைn
ளூழற) சங்ககாலப் பெண்களால் நடத்தப்பட்டது என்பது பெருவியப்பளிக்கின்றது.
தற்போதைய உலகப்புகழ் பெற்ற விளையாட்டுகள் பல அக்காலத்தில் எம்மாலும்
விளையாடப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இனம் சார்ந்து எம்மைப்
பெருமைப்படுத்துபவனவாக உள்ளன.
ஒத்த தன்மை நிலவிய பண்டைய சமூகத்தில் வேளாண் சமூகநிலை
ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டது என்பர். இச்சமூக மாற்றங்கள்
விளையாட்டிலும் தாக்கங்களை ஏற்படுத்தின. ‘உள்ளத்தில் உவகை ஏற்படுத்துதல்’
என்ற சமூகச் சமதன்மை நிலையில் இருந்து பொருளியல் தாக்கத்தினூடாக
விளையாட்டு முறைகள் மாறத்தொடங்கின. பொருள் இழத்தலும் ஈட்டலும் சில
விளையாட்டுகள் புகுந்துகொண்டன. வன்முறையின்றி சொத்துகளைக் கவரவும் சூது
போன்ற விளையாட்டுகள் பயன்படுத்தப்பபட்டன. இந்த மாற்றங்களுக்கு அதிகாரமும்
பொருளியற் சமச்சீரின்மையும் உதவின.
எம் பண்பாட்டு விழுமியங்கள் பலவற்றையும் சுமந்து சமூக ஒருமைப்பாட்டைப்
பேணப் பயன்பட்ட பல விளையாட்டுகளை நாம் தெலைத்துக்கொண்டிருக்கின்றோம். பல
தொலைந்தே போய்விட்டன. பெரும் பண விளையாட்டுகளும், உலகமயமாதலும்
தனித்துவமான விளையாட்டு வடிவங்களை மெல்ல மெல்ல அழித்து வருகின்றன.
எம் தொன்மங்கள் சுமந்த இவ்விளையாட்டுகளை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா?
என்பது ஐயமேயாயினும் அவற்றைப் பற்றிய வரலாற்றை அழியவிடாது பேணிக்காப்பது
எமது கடன்.
ஆக்கத்திற்கு உதவிய நூல்களும் இணையத்தளங்களும்:
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்: கே. கே. பிள்ளை
பண்பாட்டு அசைவுகள்: தொ பரமசிவன்
தமிழர் நாகரிகமும் பண்பாடும்: முனைவர் அ. தட்சினாமூர்த்தி
பழந்தமிழர் விளையாட்டுகள்: முனைவர் இரா. குணசீலன்
சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்: சு. சிவகாமசுந்தரி
புறநானூறு
பரிபாடல்
நற்றிணை
பட்டினப்பாலை
அகநானூறு
குறுந்தொகை
புறநானூறு

http://paniveli.blogspot.in/2015/12/blog-post_12.html?m=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக