செவ்வாய், 10 அக்டோபர், 2017

சன் டிவி குறுக்குவழி முன்னேற்றம் 2

ஒவ்வொரு நகரத்திலும் செயல்பட்டன. ஆனால் தனது அதிகாரபலத்தால்
போட்டியாளர்களை அழித்தொழிக்கும் வேலையை அசராமல் செய்தது சன் குழுமம்.
தமிழகத்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இன்று எஸ்.சி.வியை எதிர்க்கவே
ஆளில்லை . இதனால் தான் தமிழன் தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி,
தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள்
தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டு ஓரம்கட்டப்பட்டன. கேரளாவில்
பிரபலமான 'ஏசியாநெட்' தொலைக்காட்சி தமிழில் 'பாரதி'
தொலைக்காட்சியைத்தொடங்கி பற்பல தொல்லைக்களுக்காளாகி சன் குழுமத்தால்
சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. இந்தியா டுடே குழுமத்திலிருந்து வெளிவரும்
'ஆஜ்தக்'சேனலை தமிழ்நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்துவந்தார்
கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட
இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர்களின் மனதில் இடம்பிடித்தது
'ஆஜ்தக்'. இதனால் உடனே 'ஆஜ்தக்' சேனல் தமிழ்நாட்டில் ஒளிப்பரப்ப
ஒப்பந்தமானது . இதற்கு பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின்
நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு
ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது இந்தியாடுடே.
இப்படியாக கேபிள் வலைப்பின்னல் மூலமாக தாங்கள் விரும்புவதை மட்டுமே-
தங்கள் நலன் களுக்கு அனுகூலமானதை மட்டுமே-மக்கள் பார்வைக்கு
கொண்டுச்செல்லும் சர்வாதிகாரம் மாறன் சகோதரர்கள் வசம்போனது.
வியாபாரத்தில் கிடைத்த வெற்றி அரசியல் ஆசைக்கு அடித்தளமிட்டது. இந்த
நிலையில் தான் தாத்தா கருணாநிதியிடம் முரசொலிமாறனுக்குப் பிறகான ஒரு
அரசியல் முக்கியத்துவம் கருதி கலாநிதியும், தயாநிதியும்
காய்நகர்த்தினார்கள். அரசியல் அதிகாரம் என்பது வியாபார
எதிரிகளைவீழ்த்துவதற்கு எவ்வளவு உறுதுணையானது என்பதை அவர்கள் அனுபவ
பூர்வமாக அறிந்திருந்தனர். அப்பாவின் அதிகாரபலத்தால் தானே முதலில்
டிரான்ஸ்பாண்டரும், பிறகு மிக சுலபமாக வெளிநாடுகளிலிருந்து கருவிகளை
இறக்குமதிச்செய்யும் TRAI லைசென்சும், இந்தியாவிலிருந்து நிகழ்ச்சிகளை
ஒளிப்பரப்புவதற்கான WPC கிளியரன்ஸும் கிடைத்தது. ஆனால்
ஜெ.ஜெ.தொலைக்காட்சியினர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுப்பட்டு முடியாமல்
போய், வழக்கம்போல் அத்துமீறி செயல்படமுயன்ற போது அன்னியசெலவானி
மோசடியில் அகப்பட்டு அடங்கிப்போனர்கள்.
கருணாநிதியின் உடன் பிறந்த அக்கா சண்முகசுந்தரத்தம்மாளின் மகன் தான்
முரசொலி மாறன்.'1967ல் தி மு க சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று
ஆட்சிக்கு வர நேரிட்ட போது முதலமைச்சர்பொறுப்பு ஏற்கவேண்டி பாராளுமன்ற
உறுப்பினர் பொறுப்பை அறிஞர்அண்ணா ராஜூனாமா செய்தபோது, அந்த சீட்டை
அண்ணாவிடம் மன்றாடி மாறனுக்கு பெற்றதந்தவரல்லவா கலைஞர். அந்த கலைஞர்
இன்று கழகத் தலைவர். மாறனுக்கு தந்த முக்கியத்துவத்தை மகனும்
கேட்டுப்பெற்றால் என்ன?" என்று குடும்பத்தினர் தந்த தைரியத்தில்
தயாநிதியும் தயாரானார்.
ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா
மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின்
குடும்பத்திலிருந்து வந்தவர். ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும்
தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிரமாயிரமாய் இருக்க, அவர்களிலும்
அறிவிற்சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O எனப்படும்
இரவுநேர விடுதி நடத்தி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது
குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தினர்.
*தயாநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள்*
அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை
நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்பட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில்
கால் பதிக்கும் போதே 'காபினெட்' அந்தஸ்த்து அமைச்சரானார் தயாநிதிமாறன்.
ஸ்டாலினை அரசியலில் முன்நிறுத்தும் போதெல்லாம் கருணாநிதி வாரிசு அரசியல்
செய்கிறார் என்று வரிந்து கட்டிய ஊடகங்கள் தயாநிதியை முன்நிறுத்தியபோது
பெரியளவு விமர்சனக்கணைகளை வீசவில்லை.
அதே சமயம் தொலைப்பேசியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் இந்தியா முழுவதிலும்
பேசலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது, ரோமிங் கட்டணத்தை
சமச்சீராக்கியது, ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் -
குறிப்பாக தமிழ்நாட்டில் செய்யதூண்டியது, தகவல் தொழில் நுட்ப
வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டியது... போன்றவற்றால் படித்தவர்கள் மத்தியில்
பிரபலமானார் தயாநிதி மாறன்.
திஹிந்துவும், தினமலரும், விகடன் குழும இதழ்களும் தயாநிதியை
தாங்கிப்பிடித்து, தனிப்பெரும் திறமையாளராக அடையாப்படுத்தினர்.
மு.க.ஸ்டாலினைக்காட்டிலும் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு தலைமை தாங்க
பொறுத்தமானவர் என்று மிக வெளிப்படையாக தினமலர் வாசகர் கடிதப்பகுதியில்
விலாவாரியான கடிதங்கள் வெளியாகின.
*தயாநிதிமாறன் தனிபெரும் திறமையாளரா...?*
புதுப்புது அறிவிப்புகள் மூலம் நாளும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்
தயாநிதி. ஆனால் அவரது செயல்பாடுகளால் BSNL எனப்படும் தொலைத்தொடர்பு
துறை வளர்ந்ததா? பலன் பெற்றதா என பார்க்கவேண்டும் . 'தனியார்
தொலைப்பேசிகள் புழக்த்திற்கு வந்து விட்ட பிறகு அதற்கு ஈடாக BSNLஐ
வளர்ப்பதற்கு மாறாக வாட்டி வதக்கினார் தயாநிதி' என BSNLன் உயர்
அதிகாரிகளும், ஊழியர்சங்கங்களும் பல முறை குற்றசாட்டியுள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் அத்துமீறல் மூலமாக BSNLக்கு சுமார் 7,000 கோடிக்கு
மேல் இழப்பு ஏற்படுத்தியது. ஆனால் ரிலையன்ஸுக்கு ஆதரவாக இந்த விஷயத்தை
தயாநிதி மூடிமறைக்க முயன்றார். இது போன்ற நடவடிக்கைகளால் இடது சாரி
உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தயாநிதி மாறனை எச்சரிக்கும் சூழலும்
ஏற்பட்டது.
சர்வதேச நிறுவனங்கள் ஜி.எஸ்.எம் நெட்வொர்க் அமைப்பதற்கான சாதனங்களை
வழங்குதல் மற்றம் ஜி.எஸ்.எம் இணைப்புகள் அமைப்பதற்காக வழக்கமான சந்தை
மதிப்பைவிடவும் கூடுதல் தொகையை BSNL லாபம் பெற்று கொள்ளையடித்து
வந்துள்ளனர் என இப்போது அம்பலமாகி யுள்ளது புதிய தகவல் தொழில் நுட்ப
துறை அஅமைச்சராக வந்த ஆ.ராசா சமீபத்தில் இதை கண்டுபிடித்து ஒரு டெண்டரை
நிறுத்தி வைத்ததன் மூலம் BSNL இழக்கவிருந்த ரூ 1, 800காடி
காப்பாற்றப்பட்டது. ஆனால் இதற்கு முன் நிகழ்ந்த இழப்புகள் எவ்வளவோ?
மற்றொரு சிறிய புள்ளி விவரத்தை பார்ப்போம் BSNL வலுவான கூட்டமைப்பும்,
மிகப்பெரிய ஊழியர் பலமும் சுமார் 50000கோடிக்குமேல் கையிருப்புமுள்ள
மிகப்பெரிய நிறுவனம் ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய
மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள
நிலையில் BSNLவெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது இப்படிப்பட்ட
திறமையுடன் துறையை நிர்வகித்த தயாநிதிமாறனின் பதவி பறிப்பின் போது சில
ஊடகங்கள், "ஐயோ ஒரு நல்ல திறமை யாளரை இழந்துவிட்டோமோ....." என புலம்பி
தீர்த்ததை நினைத்தால் வியப்பாக இருக்கிறது
*போட்டியாளர்களை பொசுக்குவேன்*
'தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தான் வேண்டும்' என தாத்தாவிடம்
வாதாடி பதவிப் பெற்ற தயாநிதிமாறன் செய்த அதிகார அத்துமீறல்கள் அளவற்றவை.
தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் சேனல் ஆரம்பிக்க வேண்டி வந்த
விண்ணப்பங்களை அலட்சியம் காட்டினார். TRAI லைசென்சும், W.P.C
கிளியரன்சும் இல்லையென்றால் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாது. இவை
இரண்டையும் அனுமதிக்கும் அதிகாரம் தம்பி தயாநிதியின் கையிலிருந்தது.
அண்ணன் கலாநிதியின் கட்டளைப்படி காட்சி ஊடகங்கள் எதையும் கால் பதிக்க
விடாமல் தடுத்தாண்டார் தயாநிதி.'மலர் தொலைக்காட்சி' என்பதாக தினமலர்
குழுமத்திலிருந்து திட்டமிட்ட சேனல் முயற்சிகளுக்கு மூன்றாண்டுகள்
முட்டுக்கட்டை. இதே நிலை ஜெ. தொலைக்காட்சியிலிருந்து திட்டமிட்ட
24மணிநேர நியூஸ் சேனலுக்கும் ஏற்ப்பட்டது. (ஜெயா தொலைக்காட்சி நீதி
மன்றம் சென்று போராடியும், அரசியல் பலத்திலும் உரிமம் பெற்று விட்டது)
'தமிழ்த்திரை' தடம் தெரியாமல் மறைந்தது. 'லைசென்சை' புதுப்பிக்க
காலதாமதமானதை காரணங்காட்டி 'ராஜ் ப்ளஸ்' சேனல் ஒளிப்பரப்பு
ரத்துச்செயப்பட்டது. இப்படியாக சுமார் 60சேனல்களுக்கு அணைப்போட்டு
தடுத்து அண்ணன் கலாநிதிக்கு அனுசரனையாக அதிகாரத்தை கையாண்டார் தயாநிதி.
ராஜ் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள்
ஒளிப்பரப்பு தடைசெய்யப்பட்டது விஜய் தொலைக்காட்சியில் 'மக்கள் யார்
பக்கம்' என்ற பிரபல அரசியல் நிகழ்ச்சியை 'உடனே நிறுத்தாவிட்டால்
விளைவுகள் விபரிதமாகும்' என தயாநிதியே தொலைபேசியில் மிரட்டி
நிறுத்தினார். 'சன் தொலைக்காட்சி பார்வையாளர்களை திசை திருப்பும் எந்த
ஒரு ஊடக செயல்பாட்டையும் சகித்து கொள்ளமுடியாது' என்பதே தயாநிதி
அமைச்சகத்தின் எழுதப்படாத தாரக மந்திரமாயிருந்தது.
*கதிகலங்கிய கருணாநிதி*
இப்படியாக எவ்வளவு வில்லங்கங்கள் செய்து வியாபாரத்தை
விரிவுபடுத்தியபோதும் கருணாநிதி கண்டு கொண்டாரில்லை. உலகப்பெரும்
பணக்காரரான பில்கேட்ஸை தமிழகம் அழைத்து வந்து கலாநிதி வீட்டில்
விருந்துண்ண வைத்தார் தயாநிதி. ரிலையன்ஸ் குழுமத்துடன் நெருங்கிச் சென்று
வியாபார பரிவர்தனைகளை விருப்பம் போல் ஏற்படுத்திக் கொண்டார். பரம்பரை
பணக்காரான ரத்தன் டாட்டாவிடம் வியாபார உறவு வேண்டி நிர்பந்தித்த போது, '
இது வில்லங்க கூட்டம்' என அவர் விலகிச் சென்றார்.'விட்டேனா பார் உன்னை'
என தயாநிதி தடாலடியாக ரத்தன் டாட்டாவை மிரட்டிய போது கூட, கருணநிதி,
பேரனை அழைத்து கண்டித்ததாகச் செய்தி இல்லை.
கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, மற்ற அமைச்சர்களை கடுகளவும்
மதிக்காமல், தானடித்த மூப்பாக தயாநிதி டெல்லியில் வலம் வந்தபோதும்
கருணாநிதி இதையெல்லாம் கவனித்தாக காட்டிக் கொள்ளவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக திராவிடஇயக்கச் சித்தாந்தங்களுக்கு எதிரான,
பழைமைவாத, மூடநம்ப்பிக்கையை பரப்பும் பத்தாம் பசலித்தனமான கருத்துகளை
மீட்ருவாக்கம் செய்வதில் சன்தொலைகாட்சி சளைக்காமல் சாதனை புரிந்த
போதும், கருணாநிதி வேதனை கொண்டாவராகக் தன்னை வெளிக்காட்டவில்லை.
கூட்டணிகட்சிகளுக்கிகிடையே குளறுபடி உருவாக்கும் செய்திகளை பரப்பிய
போதும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்தாரில்லை. ஆனால், 'தனக்கு பிறகு
கட்சித் தலைமையைக் கைப்பற்ற கணக்கு போட்டுவிட்டனர்' என அறிய வந்த போது
தான் கதிகலங்கிப் போனார். கட்சியையும், ஆட்சியையும் கபளிகரம்
செய்யத்துடிப்பவர்களை வெட்டிவிடுவது தான் விவேகம் என வேகமாக
முடிவெடுத்தார்.
*எப்போது முதல் இந்தப் பிளவு ?*
**
1993-ல் கட்சியின் சொத்தை வங்கி அடமானம் வைத்து பெரும் தொகை தந்து சன்
குழுமத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி. இன்று சன் குழுமத்திற்கு14
தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி
நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள் சொந்தம். சன்தொலைகாட்சி பப்ளிக்
லிமிடெட் கம்பெனியாக 2005 முதல் அறிவித்து கொண்டு களத்திற்கு வந்து
விட்டதால் இன்று அதன் மொத்த ஷேர்கள், அவற்றின் மதிப்பு போன்றவற்றை
கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதி மாறன்
கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதன் படி , சன் தொலைகாட்சியில்
கலாநிதி மாறனின் 90சதவிகித பங்குகளின் மதிப்பு இன்றைய பங்குமார்க்கெட்
நிலவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9,000கோடி..! அதாவது
இது அதிகாரப்புர்வமான, சட்டப்படியான சன் தொலைகாட்சி மூலமான
சொத்துமதிப்பு மட்டும் தான்!
இதை கணக்கிட்டுத்தான் இந்தியாவின் இருபதாவது பணக்காராக கலாநிதிமாறன்
அறிவிக்கப்பட்டார். ஆனால் சன்குழுமம் தவிர்த்த 25 நிறுவனங்களையும் அவர்
நடத்தி வருகிறார். ஜெமினி தொலைகாட்சி , உதயா தொலைகாட்சி, தினகரன்ன்ன்
குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள் , எப்.எம் வானொலி நிலையங்கள்
கால் கேபிள்ஸ் , கால் கம்யூனிகேஷன்ஸ், DMS எண்டர் டெயின்மெண்ட் பிரைவேட்
லிமிடேட், D.K. எண்டர் பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான்
மிகப் பிரதான பங்குதாரர்கவும், மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி...
உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்கு தாரர்களாகவும் கொண்டு
நடத்திவருகிறார்.இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த
பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார்.
கலாநிதியின் எந்த ஒரு நிறுவனத்திலும் கருணாநிதியின் ரத்த உறவுகள்
பங்குதாரர்களாக அனுமதிக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. தனது
சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாகவுள்ளதால்
செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளார்.
(ஆகவே தான் முரசொலி செல்வம் மாறன் சகோதரார்களை தீவிரமாக ஆதரிக்கிறார்)
ஆரம்பத்தில் சன்தொலைகாட்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்
பிரதான பங்குதாராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர். ஆனால்
காலப்போக்கில் இவர்கள் எப்படி கழட்டி விடப்பட்டனர் என்ற சூட்சுமம்
தெரியவில்லை. ஆனால் நவம்பர் 2005-ல் அதிகார பூர்வமாக தயாளு அம்மாள்
தனது20சதவிகித பங்குகளை விட்டுக்கொடுத்து விட்டு விலகினார் என செய்தி
வெளியானது. அதில் ஒரு பகுதியாக பத்துகோடியை தனக்கு தந்தார் என கூறிய
கருணாநிதி, அதில் ஐந்துகோடியை தன் பெயரிலான அறக்கட்டளை அமைத்து
தமிழறிஞர்களுக்கு உதவப்போவதாக அறிவித்தார். ஆனால் 20 சதவிகித பங்கின்
மூலமாக மொத்தம் சிலநூறு கோடி ருபாய் தயாளு அம்மாளுக்கு தரப்பட்டிருக்க
வேண்டும். தயாயாளு அம்மாள் தொடர்ந்திருந்தால் இன்றைய பங்குசந்தை
நிலவரப்படி (ஒரு பங்கின் மதிப்பு ரூ 1400) அவர் பங்கிற்கு கிடைக்க
வேண்டிய தொகை இருமடங்காகியிருக்கும். வேகமாக விஸ்வரூபமெடுத்து வளரும்
நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள்
விருப்பப்பட்டு விலக்கி கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற
நிர்பந்திக்கப் பட்டாரா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சன்
குழுமம் ஆக்டோபஸ் மிருகமாய் விஸ்தரித்துக கொண்டு போகும் தருவாயில்
ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கருணாநிதியின் குடும்ப
உறவுகளுக்கு எந்த பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்!
*தொடர்ந்து செய்த துரோகங்கள்*
ஆனால் மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்புகளை எந்த நிலையிலும்
வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும், பல நேரங்களில்
பெருந்தன்மையாகவுமிருந்தார் கருணாநிதி.
தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கருணாநிதி. அதை
குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதித்தந்தார். ஆனால் அதை
பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப் படுத்தினார் கலாநிதி. கலாநிதியின்
கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை. என்பதை அறிந்த
கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம்
வெளியாகி வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.
பல நேரங்களில் கருணாநிதியின் முக்கிய அறிக்கைகள் போதுமான
முக்கியத்துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது, அவர் கலந்து கொள்ளும்
நிகழ்ச்சிகளில் சிலவற்றை ஓளிபரப்பாதது, பேராசிரியர் அன்பழகன், மு.க.
ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும்,அறிக்கைகளையும் கூடுமானவரை
தவிர்த்தது, நாடறிந்த கவிஞரான கனிமொழி 'கருத்து' என்ற அமைப்பை
தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போதும்
இயன்றவரை இருட்டடிப்பு செய்தது... போன்ற பல சம்பவங்கள் கருணாந்ிதியை
பலமாக பாதித்த போதும் வெளிப்படையான மோதலை அவர்
விரும்பவில்லை.கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன்,
கலாநிதிமாறனால் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். கருணாநிதி
சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்தி பிரிவிலோ அல்லது வேறுபிரிவிலோ
சேர்ப்பதில்லை என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாக கடைபிடித்தார் கலாநிதி .
*சன் டிவியின் சமூக சேவை*
பெரியார், அண்ணா கொள்கை வழி வந்த குடும்பத்தின் வாரிசுகளல்லவா...
பகுத்தறிவு கருத்துகளை பரப்ப வேண்டாமா? அன்று அண்ணாவின் வேலைக்காரி,
ரங்கோன்ராதா, கருணாநிதியின் பராசக்தி, மனோகரா, கலைவாணரின் கருத்தான
நகைச்சுவைகள் போன்றவை சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை
சவக்குழிக்குள் தள்ளுவதற்காகவே அவதார மெடுத்து 'சன் தொலைகாட்சி '
வேப்பிலைக்காரி, கோட்டை மாரியம்மன், விக்கிரமாதித்தன், சொர்க்கம்......
போன்ற தொடர்கள் மூலமாக 'சன்' சமூகத்திற்குத் தந்த விழிப்புணர்ச்சி
கொஞ்சமா,நஞ்சமா?
ஜோசியதை மதிக்காதவங்க நாசாமப் போயிடுவாங்க...
சூனியவாதிங்க, மந்திரவாதிங்க கோபத்துக்கு ஆளானால் அதோகதிதான்!
சாமியார்கள் நினைத்தால் எந்த அதிசயத்தையும் சாத்தியப்படுத்தலாம்...
அடடா, எவ்வளவு மகத்தான கருத்துகள்.........
இவையெல்லாம் விஷத்தையே வெட்கப்படவைக்கும் வீரிய நச்சல்லவோ!
தமிழ் தெரியாதவர்கள் தான் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக இருக்கமுடியும்
என்ற போக்குகள். இவை மட்டுமின்றி குடும்பங்களின் அமைதியைக்குலைக்கும்
குரோதச் சிந்தனைகளின் குவியல்களாக எண்ணற்ற தொடர்கள், அவற்றில்
விதவிதமாக வெளிப்படும் பாலியல் பிறழ்வுகள், பழிவாங்கும் போக்குகள்,
கொலை,கற்பழிப்பு,வன்முறை....
என்ன பாவம் செய்தார்களோ.... தமிழக மக்கள்!
சன் தொலைக்காட்சியோடு நிற்கவில்லை இவர்களின் சமூகசேவை. "எந்நேரமும்
மக்கள் சினிமா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவர்களின் சிந்தனை
மழுங்கவேண்டும்" என்ற கருணை உணர்வில் 'கே' சேனல்,
'நாட்டின் வளர்ச்சிக்கு அடிபடையாக உள்ள இளம் தலை முறையினர் எப்போதும்
இன்பம் எனும் சினிமா இசை வெள்ளத்தில் மூழ்கிச் சீரழிய வேண்டும்' என்ற
சீரிய முயற்சியில் 'சன் மியூசிக் சேனல்' , 'தங்கள் அரசியலுக்கு உகந்த
செய்தியை மட்டுமே மக்கள் எப்போதும் அறிந்து கொள்ள வேண்டும்' என்ற
பெருந்தன்மையோடு 'சன் நியூஸ் சேனல்',
இப்போது குழந்தைகளையும் குட்டிச்சுவராக்கிவிட 'சுட்டி சேனல்' இவற்றை
பார்க்காவிட்டால் மக்களின் பகுத்தறிவு மங்கிவிடும்' என்று தான் இலவச
தொலைக்காட்சியை அறிவித்தாரோ..... என்னவோ கருணாநிதி.
*யாருக்கு யாரால் நன்மை :*
1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி
தேர்தல்களிலும் தி.மு.க வின் வெற்றிக்கு சன் தொலைகாட்சியின் பலம்
பிரதானமாகக் கருதப்பட்டது. பெருவாரியான பார்வையாளர்களை தன் வசம்
வென்றெடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், நேர்காணல்கள், விவாதங்கள்,
கருத்துகணிப்புகள் போன்றவை தி.மு.கவின் வெற்றிக்கு கணிசமான
பங்காற்றியது.
கருணாநிதி 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்தமுடியாத தாக்கத்தை சன்
தொலைகாட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது.... அவரது காலடி
தடம் படமுடியாத குக்கிராமங்களுக்கெல்லாம் தங்கள் சேனல் தான் அவரது
கருத்துகளை கொண்டு சேர்க்கிறது... என்றும், சன் குழுமத்தின் பிரச்சார
பலமில்லாமல் தி.மு.க வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாததென்றும் மாறன்
சகோதரர்கள் மனக்கணக்கு போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்து
போவதை தவிர கருணாநிதிக்கு வேறுவழியில்லை என்றமுடிவுக்கு வந்தனர்.
அதுவும் சமீபத்திய தேர்தல்களில் போட்டியிட்ட குறிப்பிடத்தக்க
வேட்பாளர்களுக்கு சன் குழுமத்திலிருந்து நிறைய பண உதவியும்
தரப்பட்டுள்ளது. திமு.க தலைமை கஞ்சத்தனமானது என்ற பெயரை மாற்றி தராளமாக
கட்சிக் கரார்களுக்கு பணம் தந்தனர் மாறன் சகோதரர்கள். திமு.க
தலைமையகத்தை 'கார்ப்பரேட்' அலுவலகமாக ஆக்கியதுபோல் மாவட்ட கட்சி
அலுவலகங்களையும் மாற்ற திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். பிரச்சாரம்
செய்ய கருணாநிதிக்கு சொசுகு கார் தந்ததுபோல் மாவட்ட செயலாளர்களுக்கும்
கார்கள் தரவும் அவர்களுக்கு அந்த அந்த மாவட்டத்து கேபிள்நெட் வோர்க்
தொழில் வாய்ப்பை தரவும் திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். இந்த சூழலில்
தான் கருணாநிதியின் அடுத்த வாரிசு பற்றிய கருத்துகணிப்பை நடத்தியது
தினகரன் நாளிதழ். 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா...' என கருணாநிதி
உசாரானார்.
*தயாநிதியின் தணியாத பேராசை*
மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியை தங்கள் வியாபார
விஸ்தரிப்பிற்கும், பாதுக்காப்பிற்கும் போட்டியாளர்களை
பொசுக்குவதற்கும் தயாநிதி தயங்காமல் பயன்படுத்தினார். அதே சமயம்
மிகப்பெரும் தொழில் அதிபர்களிடம்-அவர்களது நிறுவனங்களில்- அண்ணன்
கலாநிதியையும் பங்குதாராக சேர்க்கும் படி பகிங்கமாகக் கேட்டார்.
ஏர்டெல் நிறுவனத்திலிருந்து 500 செல்போன்களை இலவசமாக சன் குழுமத்திற்கு
பெற்றுத்தந்தார். ஸடார், விஜய், ராஜ் தொலைக்காட்சிகள் கட்டண
தொலைக்காட்சிகள். அதற்கான கட்டணங்களை எஸ்.சி.வி. வாடிக்கையாளர்களிடம்
வசூலித்த போதும் மேற்படி நிறுவனங்களுக்குத் தருவதில்லை. எஸ்.சி.வி.யே
விருப்பப்பட்டு எப்போதாகிலும் கொடுத்தால் தான் உண்டு. அமைச்சரின்
கோபத்திற்கு ஆளாவது தொழிலுக்கே ஆபத்து என அவர்களும் அடங்கிப்
போனார்கள்.
மன்னராட்சி மனோபாவம் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது.
கருணாநிதியின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி இருக்க , அதற்கு
தடைக்கற்களாக ஸ்டாலினும், அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள்
லட்சியத்திற்கு இடையூராகக் கருதினார்கள்.
ஓரணியில் ஒன்றாக இருக்கும் ஸ்டாலினையும், அழகிரியையும் பிரிப்பது,
இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரியாய் மாற்றுவது, கருத்துக்கணிப்பின்
விளைவாய் அழகிரி ஆதரவாளர்கள் செய்யும் அராஜகங்களை அடிப்படையாக வைத்து
அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது...... போன்றவையே மாறன் சகோதரர்களின்
திட்டம்.
மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வியின் ஏகபோகத்தை தடுத்து, சிறுகேபிள்
ஆபரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக அழகிரி செயல்படுவதும் மாறன்
சகோதரர்களின் மட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது.
மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான
பிறகு அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயல்படுகிறார் என்று
மீண்டும், மீண்டும் ஒலமிட்ட சன் தொலைக்காட்சியும், தினகரனும், இத்தனை
ஆண்டுகளில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக அழகிரி செயல்ப்பட்டு
வந்த போது அதை ஒருநாளும் சுட்டிக் காட்டியதில்லை என்பது
கவனத்திற்குரியதாகும்.
அரசியலில் லாபமும், நஷ்டமும் சகஜமே ஆனால் கருணாநிதி தயவால் லாபத்தை
மட்டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், நஷ்டத்தை கண்டு கதிகலங்கி
குமுறி தீர்த்தனர். "அழகிரியை சிறைக்குள்தள்ளாமல் நாங்கள்
ஓயப்போவதில்லை....." என மார்த்தட்டினார்கள்.அழகிரி ஆதரவாளர்கள் செய்தது
அக்கிரமாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்த்து தர்மாவேஷம் கொள்வற்கு மாறன்
சகோதரர்களுக்கு தார்மீக தகுதி இல்லாமல் போய்விட்டது.
தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னை கடந்து சென்று தன் மகன் அழகிரியை
அழித்தொழிக்க நினைப்பதை தனது ஆளுமைக்கு விடப்பட்ட அறை கூவலாகத்தான்
கருணாநிதி எதிர்க்கொண்டார். பொது மக்கள் மத்தியிலேயே பட்டப்பகலில்
பகிங்கரமாக தனது கட்சிக்காரர்களால் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு
கொளுத்தப்பட்டதையும், அதில் அப்பாவிகள் மூவர் உயிரிழிந்த அவலத்தையும்,
அதை தடுக்கத்தவறி காவல் துறையினர் செயலற்று வேடிக்கை பார்ததால் தன்
ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரையும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்ட தன்
மூலம் சீர்படுத்தி விட்டதாக மக்களை நம்ப வைக்க முயற்சித்தார். அவர்
அழகிரியை அரவணைப்பதால் அழகிரியின் அராஜகங்களை அங்கிகரித் துள்ளதாக மக்கள்
கருதினார்கள். துரோகம் செய்தவர்களைத் தூக்கி எறியவேண்டும் என்ற கோப
உணர்ச்சி தான் அவரிடம் மேலோங்கி நின்றது.தன்னை தவிர தாங்கிப்பிடிக்க
ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு
சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை. கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும்
மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக்கிடந்தது. அது அவர்களை,
கருணாநிதியே கைவிட்டபின்பு பொது குழுவில் பொங்கி பிரவகித்தது. மாறன்
சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க
திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின், பேராசை பெருநஷ்டத்தில்
முடிந்தது.
*கலாநிதியின் கணக்கற்ற தில்லுமுல்லுகள் *
ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள்
பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700கோடி கடன்
பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ்
தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு
சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம்
ஈட்டுகிறது.இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதான்
இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம்
தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது. இதே ஜெமினியில் மற்றொரு பங்குதாரராக
சேர்ந்து பெரும் பணத்தை முதலீடு செய்து, கடுமையாகப் பாடுபட்டு சேனலை
தூக்கி நிறுத்திய சரத் என்ற கலாநிதியின் நண்பர் ஏமாற்றப்பட்டு
வெளியேற்றப்பட்டார்.
பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப்படுத்துவதற்காக, உண்மைக்கு மாறான
தகவல்களையும், கணக்குகளையும் கலாநிதி காண்பித்துள்ளார். இதன் மூலம்
மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன்
குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்டமாக உயர்த்திக்கொண்டார்.1993ல்
தொடங்கிய சன் குழுமத்தை 1985லிருந்து செயல்படுவதுபோல் அவரால்
எப்படிதான் கணக்கு காட்ட முடிந்ததோ..... தெரியவில்லை. சன் குழுமத்தின்
கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் குறைவான வாடிக்கையாளர்
கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி
வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.
புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குதான்
விற்க்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தங்களுக்கு
உடன் படாதா திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின்
'டாப் 10 மூவிஸ்' திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி
விடுகின்றனர்..! போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி
தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை ! இந்த ஊடகப் பலத்தை
கண்டு மிரலும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம்
சரணாகதியாகிவிடுகின்றனர்.
போட்கிளப்பில் 36கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000சதுர
அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பங்களா உள்ளது. ஐந்து நட்சத்திர
ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பைபர்
மற்றும் விலை உயர்ந்த மரப்பொருட்களைக் கொண்டு அழகூட்டப்பட்டு
சொர்க்கபுரியிலிருக்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பஙுகளாவில் உள்ள நீச்சல்
குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இந்த ஆடம்பர பங்களாவை
விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கிவிடும் என்பதால் இத்தோடு விட்டு
விடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை
இல்லத்தை புகைப்படமெடுத்து, 'ஏழைபங்காளன் வாழும் பங்களா
பார்த்தீர்களா....? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து
தொலைகிறது.
சுமார் 40,000கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி
மாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40கோடியை
இன்று வரை திருப்பிதர மனமில்லாதவராய் இருக்கிறார்.
*வாரிசுபோட்டி வந்தது எதனால்?*
அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு ஜனநாயக இயக்கமாக தொடங்கி
நடத்தினார். அவர் தனிப்பெரும் தலைவராக அறியபட்டநிலையிலும்
என்.வி.நடராஜன், இரா.நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன் போன்றவற்கு சம
மதிப்பளித்து அவர்களை அடுத்து தலைதாங்க தக்கவருகளாக ஆயத்தப் படுத்தினார்.
கருணாநிதியின் திறமைகளையும், ஆற்றல்களையும் அறிந்த அண்ணா அவர் உட்பட
எவரையுமே தன தலைமைக்கு ஆபத்தான தம்பியாக கருதவில்லை.
எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தனக்கு ஆபத்தாகி விடுமோ என அவரை புறக்கணித்தார்
கருணாநிதி. கட்சி இரண்டானது.கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்டபிறகும்
நாவலர் நெடுஞ்செழியனை நல்ல முறையில் நடத்தவில்லை அதனால் அவரும் 1977ல்
வெளியேறினார். வைகோவின் வளர்ச்சி தன் வாரிசுகளுக்கு ஆபத்துஎன்று
அவரையும் அகற்றினார். இப்படி கருணாநியின் குடும்ப உறவுகள் கட்சியில்
கோலோச்சமுடியும் என்ற நிலை ஏற்பட்டதால் தான் தயாநிதி மாறன்
போன்றவர்கள் தான்தோன்றிதனமாக உயர் நிலைக்கு வரமுடிந்தது. கொள்கை
அடிப்படையில் ஒரு இயக்கம் செயல் பட்டால் அங்கே குடும்ப ஆதிக்கம் வராது.
அதுவே கொள்ளை அடிப்படையில் செயல் பட்டால் உடைமை உணர்வும்,
உறவுமனப்போக்கும் மேலோங்கி விடுகின்றது.
இப்போது கலைஞர் தொலைக்காட்சி ஆகஸட் 15லிருந்து ஒளிப்பரப்பாகும் என
கருணாநிதி அறிவித்துள்ளார். சுமார் 60 சேனல்கள் மூன்றாண்டுகளாக அனுமதி
மறுக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலையில், கருணாநிதி
நினைத்தவுடன் ஒரு தொலைக்காட்சியை தொடங்க முடிகிறது. ஜெயலலிதா ஆட்சியில்
கேபிள் டி.வி.நெட்வொர்க்கை தமிழக ஆரசு பொறுப்பில் எடுத்துக்கொள்ளும்
என்று அவசரச் சட்டம் கொண்டுவந்தபோது அதை அடுத்த நாளே கவர்னரை சந்தித்து
ஒப்புதல் அளிக்கவேண்டாம் என்று கேட்டவர் கருணாநிதி. அது எவ்வளவு பெரிய
தவறு என இன்று அவர் உணர்ந்திருக்ககூடும். ஒரு வேளை அதே சட்டத்தை
கருணாநிதியே இப்போது அமல் படுத்த முனைந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
மேலைநாடுகளில், அமெரிக்கா, ஐரோப்பாவில், ஒரே குடும்பத்திலுள்ளவர்கள்
அரசியல், ஊடகம் இரண்டிலும் மேலாதிக்கம் செய்வதை தடுக்கும் சட்டம் ஒன்று
உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில்
ஊடகத்துறையில் தனியொரு நிறுவனமே ஒட்டுமொத்த பார்வையாளர்களையும்
கபளிகரம் செய்வது மாதிரியான போக்குகளுக்கு தடை ஏற்படுத்தும் சட்டங்கள்
உள்ளன. குறிப்பாக ஒரேநிறுவனம், ஒரேபிரதேசத்தில் பல சேனல்களை ஆரம்பிப்பது,
காட்சி ஊடகம், அச்சு ஊடகம், வானொலி போன்ற அனைத்திலுமே ஒரே குடும்ப
நிறுவனம் தனி மேலாதிக்கம் (Monopoliy) செய்வதை தடுப்பது மாதிரியான
சட்டங்கள் 1980,1990களிலிருந்து அமலில் உள்ளது. இது போன்ற சட்டத்தை
இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டி சில ஆண்டுகளாக பாராளுமன்ற
உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு எல்லா
தரப்பிலும் வலுவான ஆதரவு வெளிப்படவேண்டும்.

http://stufftoreadtamil.blogspot.in/2011/07/blog-post_639.html?m=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக