செவ்வாய், 10 அக்டோபர், 2017

குளச்சல் போர் திருவிதாங்கூர் படையில் ஐரோப்பியர் இருந்தனர் 1741


குளச்சல் போர் :
திருவிதாங்கூர் அரசுக்கும் டச்சுப்படைக்கும் நடந்த குளச்சல் போர் குறித்த
வரலாறுகள் பலவும் பல கட்டுக்கதைகளுடனும் பலவிதமான கண்ணோட்டங்களுடன்
வரலாறாக பதிப்பிக்கப்பட்டுள்ளன.
குளச்சல் துறைமுகத்தில் வர்த்தகம் செய்திட பிராஞ்சுக்காரர்கள்
திருவிதாங்கூர் அரசிடம் போருக்கு முன்பே முன்னனுமதி பெற்றிருந்தனர்.
இதற்கிடையில்தான் டச்சுக்காரர்கள் தங்களது வாணிபத்திற்கு பிற
ஐரோப்பியர்கள் (ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சு) இடைஞ்சலாக இருந்தனால்
குளச்சலை கையகப்படுத்தி குளச்சல் துறைமுகத்தில் 'கோட்டை'கட்டி தங்களது
படையை அங்கு நிலைநிறுத்துகின்றனர். திருவிதாங்கூர் அரசு தனது
இடத்திலமைந்த டச்சுக் கோட்டையை கையகப்படுத்திட ஆங்கிலேயரின் உதவியுடன்
நடத்திய போர்தான் குளச்சல் போர். இப்போரின் வரலாறு பன்முகத்தன்மையுடன்
பார்க்கப்படாமல் 'ஒற்றை சாளரப்பார்வை'யுடன் பார்க்கப்பட்டதால் தான்
வரலாற்றில் பலக்குழப்பங்கள் கைகூடியுள்ளது.
பார்வை : 1
அக்காலத்தில், பிரிட்டிஷ் வணிகக்குழு திருவிதாங்கூர் அரசிடம் அனுமதி
பெற்று திருவிதாங்கூருக்குட்பட்ட 'அஞ்சுதெங்கி'ல் வர்த்தகம்
செய்துவந்தது. ஆங்கிலேயர்கள், தங்களது தலைமையிடமான சென்னைக்கு
திருவிதாங்கூரிலிருந்து தங்களது வர்த்தகம் மற்றும் அதன் பாதிப்புகள்
தொடர்பாக தொடர்ந்து கடிதங்களின் மூலம் தலைமையிடத்துடன் தொடர்பில்
இருந்தனர்.
இவை குளச்சலுக்கு வெகுதொலைவில் அமைந்த அஞ்சுதெங்கிலிருந்து FORT St.
GEORGE - க்கு அனுப்பப்பட்டவை. அந்த கடிதங்கள், FSG ஆவணங்கள் என
அறியப்படுகின்றன. அஞ்சுதெங்கிற்கான ஆங்கிலேய வர்த்தகக்களத்தின் தலைமைப்
பொறுப்பாளர் 'சார்லஸ் ஒயிட்ஹில்'. இவரது கடிதங்கள் ஆங்கிலேயர்களால்
முறையே பாதுகாக்கப்பட்டு, அட்டவணைப்படுத்திடப்பட்டு உள்ளது.
அட்டவணைப்படுத்தப்பட்ட பதிவுகளில் கடிதத்தின் சாராம்சம் மட்டும் இங்கு
சொல்லப்பட்டுள்ளது.
போர் நடைபெற்ற குளச்சலுக்கும் அஞ்சுதெங்குக்கும் சுமார் நூறு
கிலோமீட்டருக்கும் அதிகம் உள்ளது. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் தகவல்
தொடர்பென்பது ஒற்றர்கள் மூலம் தொலைதூரம் கடந்துவரவும், நாட்களை
குறிப்பிட்டு சொல்வதிலும், நிகழ்வுகளை ஒப்பித்தலிலும் பரிமாற்ற
மாறுபாடுகள் என்பது இயல்பே.
நாகமையா தனது திருவாங்கூர் வரலாற்று புததகத்யில் குளச்சல் போர்நிகழ்வுகள்
ஜூலை 31, 1741 அன்று முடிவுக்கு வந்ததாக குறிப்பிடுகிறார். இதற்கான அவரது
தரவு என்பது, சார்லஸ் ஒயிட்ஹில் ஆகஸ்ட் 8, 1741 அன்று FORT St. GEORGE -
க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலானது. ஆனால், உண்மையான தகவல்
என்னவெனில், சார்லஸ் ஒயிட்ஹில் ஆகஸ்ட் 8 எழுதிய கடிதத்தில் டச்சுகாரர்கள்
"on July 31, Dutch SURRENDERD colochel to the Travancore King"'
என்பதே.
குளச்சல் போர்நிகழ்காலத்தில் டச்சுப்படையில் பணிபுரிந்த பலர்,
டச்சுப்படையிலிருந்து தங்களை விலக்கி திருவாங்கூர் அரசிடம் தங்களை
இணைத்துக்கொண்டும், பலர் சரணடைந்தும் உள்ளனர். அதாவது, ஆகஸ்டு 8 - ம்
தேதிக்கு முன்பாக டச்சுப்படையினர் சிலர் சரணடைந்தனர். பின்பாக பலரும்
சரணடைந்துள்ளனர். அதற்கெல்லாம் முன்பே (ஆகஸ்ட் 2 - ல்) டச்சுப்படையை
சார்ந்த பிரஞ்சுப் போர்வீரன் 'டி லெனாய்' உட்பட சிலர் கன்னியாக்குமரி
டச்சு முகாமிலிருந்து (டி லெனாய் குளச்சல் கோட்டை முகாமைச் சார்ந்த போர்
வீரனல்ல) திருவிதாங்கூர் அரசுப்படையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.
"உயிர் பயத்தின் காரணமாக ஒரு படையிலிருந்து விலகி எதிரி முகாமில் தங்களை
இணைத்துக் கொள்வதற்கும் ..., சரணடைவதற்கும் ..., ஒட்டுமொத்த கோட்டையை
சார்ந்த மொத்த படையினரும் சரணடைந்து கோட்டையின் சாவியை ஒப்படைப்பதற்கும்
... பெருத்த வித்தியாசம் உண்டு."
இங்கே ... ஆராயப்படாத பதிவு ஜூலை 31, 1741 அன்று அனைத்து வீரர்களும்
சரணடைந்து கோட்டை திருவாங்கூரின் கைவசமானதா என்பதேயாகும். அத்தகைய
தகவல்கள் தினமும் களத்தில் இருப்பவர்களால் மட்டுமே பதிவு செய்திட இயலும்.
நூற்றுக்கும் மேலான கிலோமீட்டர் தூரத்திற்கும், தொடர்புச்சாதனங்களற்ற
அக்காலத்தில் பிறிதொரு ஒற்றனின் காலங்கடந்த வாய்மொழி வார்த்தைகளை
ஏற்பதென்பது சற்று கடினமானதே ! எனவே, தூரங்கடந்த, நேரடி களத்தில்
இல்லாதவரின் சமகணம் கடந்திட்ட பதிவுவை ஏற்பதைவிட சமகால, சமகணங்களில்
பதிவான டச்சுக்களின் நேரடி ஆவணங்களை ஏற்பதே ஏற்புக்குரியது.
பார்வை : 2
'திருவிதாங்கூர் ஸ்டேட் மேனுவல்' எழுதிய பிற நபர்களான சங்குணி மேனன்
மற்றும் டி.கே. வேலுப்பிள்ளை இருவரும் குளச்சல் போர் ஆடிமாதம் 31 - ல்
(ஆகஸ்டு மாதத்தின் இரண்டாம் வாரம்) முடிந்ததாக குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் எத்தகைய ஆவணத்துடன் இவற்றை பதிவு செய்தார்கள் என்பது
அறியக்கிடைக்கவி
ல்லை.
ஆனால் ஒரு உண்மை என்னவெனில், குளச்சல் களத்திலிருந்து டச்சின்
தலைமையிடமான இலங்கைக்கு எழுதப்பட்ட தினசரி கடிதங்கள் மட்டுமே உண்மையை
உணர்த்திடும். அதாவது களப்போராளிகளின் தினசரி கள நிலவரங்களே வரலாறாகும்.
அதைப்போல் களத்தைப் பிடித்தாண்டுவரும் ஒருவருக்கே களத்தில் வாழும்
குடியானவர்கள் உதவிடுவர். களத்தின் புறத்திலிருப்போரே அரசப்படைக்கு
உதவிடுவர். ஆனால், அக்காலத்தில் திருவிதாங்கூர் அரசிடம் வெடிமருந்துகளின்
தொழில்நுட்பம் கைவரப்பெறவில்லை. கண்டிப்பாக அவர்களுக்கு ஆங்கிலேயர்களின்
பீரங்கியும், துப்பாக்கி தொழில்நுட்பமும், டச்சுப்படையியிருந்து விலகிய
பிற ஐரோப்பிய போர்வீரர்களின் உழைப்புமே வெற்றியை வசமாக்கியிருக்கும்.
ஆகவே ... குளச்சல் போர் என்பது தற்போது வெளிவந்திருக்கும் 'குளச்சல்
போர்' புத்தகத்தில் சொல்லப்படும் அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையிலேயே
நடந்திருக்கும்.
பிற தொலைதூரப்பதிவுகளான ஆங்கிலேயரின் பதிவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட
வரலாறுகள் தவறாகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக