செவ்வாய், 26 செப்டம்பர், 2017

மீத்தேன் பின்விளைவு மழை இல்லை நிலம் மலடு வேலைவாய்ப்பு கூட இல்லை விகடன் ஹைட்ரோகார்பன் ongc

'ஆம்... ஓ.என்.ஜி.சி வந்த பிறகு எங்கள் ஊர் பாலைவனமாக மாறிவிட்டது!'' -
கதறும் காவிரி டெல்டா மக்கள் #SpotVisit #DepthArticle #VikatanExclusive

“அ ரசு எரிவாயுத் திட்டங்களை நெறிமுறைப்படுத்தாதவரை, எரிவாயு
நிறுவனங்களைக் கண்காணிக்காதவரை, எரிவாயு நிறுவனங்கள் புதிதாக பூமியில்
துளையிட, மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்” - இது அலாஸ்கா மாகாணத்தின்
முன்னாள் கவர்னர் சாரா பாலின் சொல்லியது. சாரா, எண்ணெய் திட்டங்களின்
தீவிர எதிர்ப்பாளர் எல்லாம் ஒன்றும்  இல்லை. அவரும் வளர்ச்சி குறித்த
அமெரிக்கச் சிந்தனை கொண்டவர்தான். ஆனால், அவருக்கு எண்ணெய் நிறுவனங்களின்
அறமற்றத் தன்மை குறித்த ஒரு புரிதல் இருந்தது.
''தமிழக மக்கள், ஏன் தொடர்ந்து எரிவாயுத் திட்டங்களை எதிர்க்கிறார்கள்?
மன்னார்குடி, நெடுவாசல், கதிராமங்கலம் என அரசு, எரிவாயுத் திட்டங்களைச்
செயல்படுத்த எங்கு சென்றாலும் தமிழக மக்கள் ஏன் வீதிக்கு வந்து
போராடுகிறார்கள்?'' என்ற சாமான்யர்களின் கேள்விக்கு சாராவின்
வார்த்தைகளும் அவரது புரிதலும்தான் சரியான பதிலாக இருக்கும்.
ஆம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரிப் படுகையில் , எரிவாயு
எடுத்துக் கொண்டிருக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். ஆனால், அவை முறையாகக்
கண்காணிக்கப்பட்டு இருக்கிறதா? நெறிமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா?
குறைந்தபட்சம் அவை அந்தப் பகுதி மக்களுக்காவது விசுவாசமாக இருக்கிறதா
என்றால், அது கேள்விக்குறிதான்!
“எங்கள் நிலத்தில் எண்ணெய் எடுங்கள்”
கிண்டலான மொழியில் சொல்ல வேண்டுமென்றால், மென்மையான தடியடியை ஏவிய தமிழக
காவலர்களுக்கும், 'போராட்டங்கள் ஃபேஷனாகிவிட்டது' என்று முத்தான
மொழியில், சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமிக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆம், கதிராமங்கலம் மக்களுடன்
உரையாடி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இவர்கள்
செவிசாய்த்திருப்பார்கள் என்றால், நாங்கள் ஏறத்தாழ 1,000 கி.மீட்டர்
காவிரிப் படுகையில் பயணித்திருக்கமாட்டோம். அங்கு ஏற்கெனவே எண்ணெய்
நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து இருக்கமாட்டோம்.
Advertisement
எண்பதுகளின் பிற்பகுதியில், ஓ.என்.ஜி.சி காவிரிப் படுகையில் எண்ணெய்
எடுக்கத் திட்டமிட்டபோது, அந்தப் பகுதி மக்கள், “எங்கள் நிலத்தில்
எண்ணெய் எடுங்கள். நாங்கள் நிலத்தைத் தருகிறோம். எங்கள் நிலம் வழியாக
எண்ணெய்க் குழாயைப் பதியுங்கள்” என்று மனமுவந்து நிலத்தை அளித்து
இருக்கிறார்கள். இதற்கு காரணம் வெறும் பணம் மட்டும் அல்ல. 'நம்
பகுதியில், நம் நிலத்தில் எண்ணெய் எடுக்கப்படப்போவதால், இந்தத் தேசம்
வளமாகப் போகிறது, வலிமையாகப் போகிறது. குறிப்பாக தங்கள் பகுதி, இந்தப்
பிரபஞ்சத்தின் சொர்க்கம் ஆகப்போகிறது' என்று நம்பி இருக்கிறார்கள் அந்த
மக்கள்.
ஓ.என்.ஜி.சி காவிரி டெல்டாவில், எண்ணெய் எடுக்கத் தொடங்கிய
காலகட்டங்களில், எண்ணெய் குழாய் பதிக்க தம் நிலத்தை அளித்த கமலாபுரத்தைச்
சேர்ந்த சிங்காரவேலு சொல்வதைக் கேளுங்கள். “உண்மையில் அப்போது
வறுமையிலெல்லாம் வாடவில்லை. பணத்துக்காகவெல்லாம் ஏங்கவில்லை. எண்ணெய்
எடுத்தால் வளம் வரும், வளர்ச்சி வரும் என்று நினைத்தோம். ஆனால்,
எங்களுக்கு வந்ததென்னவோ துரதிர்ஷ்டம்தான். ஆம், 3 ஆண்டுகளுக்கு முன்
என்னுடைய நிலத்தில் எண்ணெய் சிந்தியது. 3 ஆண்டுகள் கடந்து இப்போதும் அந்த
நிலத்தில் ஒரு புல், பூண்டுகூட முளைக்கவில்லை. ஓ.என்.ஜி.சி இழப்பீடு
தந்தார்கள்தான்; நான் மறுக்கவில்லை. ஆனால், நிலத்தை இழந்தபின்
பணத்தைமட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?” என்கிறார்
வருத்தமான குரலில்.
இது சிங்காரவேலு ஒருவரின் வருத்தம் மட்டும் இல்லை. அந்தப் பகுதியில்,
ஒவ்வொருவரிடமும் இதுபோன்ற வலிமிகுந்த கதைகள் இருக்கின்றன. அந்தக்
கதைகளில், முதன்மையானது கதிராமங்கலம் பத்மநாபனின் கதை.
“வெடித்த குழாய்... எரிந்த பயிர்”
பத்மநாபனின் மகன் கணேஷ் நம்மிடம் பேசினார். “ஆண்டுகள் எல்லாம் சரியாக
நினைவில்லை. ஆனால், அந்த சம்பவம் நிகழ்ந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும்
மேல் இருக்கும் என்று நினைவு. எங்கள் நிலத்தின் வழியாக சென்ற எண்ணெய்
குழாய் உடைந்து நிலம் முழுவதும் எண்ணெய் படர்ந்தது. இது மாலை நேரத்தில்
நடந்ததால், எங்களுக்கு இந்த விபரீதம் முதலில் தெரியவில்லை. பின்
தெரிந்தபோது, அது எங்களுக்குப் புரியவும் இல்லை. எண்ணெய்தானே என்று
சாதாரணமாகக் கடந்துவிட்டோம். சில நாட்களுக்குப் பிறகுதான் விபரீதத்தின்
ஆழம் புரிந்தது. ஆம், பக்கத்து நிலத்தில் களைகளைத் தீ கொளுத்தியபோது
பறந்துவந்த நெருப்புத் துகள் எங்கள் நிலத்தில் விழுந்ததும் தீப் பற்றி
எரிந்தது. அதன்பின் ஓ.என்.ஜி.சி வந்தது. முதற்கட்டமாக ஒரு தொகை
கொடுத்தது. ஆனால், நாங்கள் எங்கள் நிலத்தைச் சீர்படுத்தித் தாருங்கள்...
மீண்டும் விவசாயம் செய்யத்தக்கதாக மாற்றித் தாருங்கள் என்றோம். ஆனால்,
அதற்கு மறுத்துவிட்டது. நிலம் சரியாகும் வரை நிவாரணத் தொகை
வேண்டுமென்றால், தொடர்ந்து தருகிறோம். நிலத்தையெல்லாம் சீர்படுத்தித்
தரமுடியாது என்று சொல்லிவிட்டது. ஆனால், அந்த நஷ்டஈட்டுத் தொகையையும்
நீதிமன்றத்துக்கு சென்ற பிறகுதான் கொடுத்தது.
பணத்தேவை இருக்கிறதுதான். ஆனால், எங்கள் நிலம் வளமாக இருந்திருந்தால்
அந்தப் பணத்தை எங்கள் நிலத்திலிருந்தே ஈட்டி இருப்போம். நிவாரணத்துக்காக
நாங்கள் நின்று கொண்டிருக்கமாட்டோம்” என்று துயர் மிகுந்த வார்த்தைகளில்
சொல்லி முடித்தார்.
கணேஷின் நிலத்தில் எண்ணெய் சிந்தி, எரிந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும்
மேல் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் அந்த நிலம் வேளாண்மைக்கு தகுதியற்ற
பாலையாகத்தான் இருக்கிறது. கணேஷிடம் உரையாடிக்கொண்டே பக்கத்து நிலத்தைப்
பார்த்தோம். அந்த நிலத்தின் ஒரு பகுதி எண்ணெய்க் குழாய் தந்த காயங்களைச்
சுமந்து பாலையாகக் காட்சி தந்தது. அதுகுறித்து விசாரித்த போது கிடைத்த
தகவல்கள் அனைத்தும் அச்சமூட்டுபவையாக இருந்தன. அந்த நிலத்தின் உரிமையாளர்
சிவசாமி சொல்கிறார், “இந்தப் பகுதியில், அடிக்கடி குழாய் வெடித்து
எண்ணெய் சிந்தி இருக்கிறது. ஒரு இடத்தில் சிந்திய எண்ணெய்
மழைக்காலங்களில் இன்னொரு நிலத்துக்குப் படரும்போது அந்த நிலமும்
தரிசாகிப் போய்விடும். அப்படித் தரிசாக்கப்பட்ட நிலங்களில், என் நிலமும்
ஒன்று. ஹூம்... என்ன செய்ய...? வளம் வரும் என்று கொடுத்தோம். ஆனால்,
நம்பிக்கையாக இருந்த நிலமும் நாசமானதுதான் மிச்சம்” என்று தன்னைத்தானே
நொந்துகொள்கிறார்.
“குறைந்த நிலத்தடி நீர்... இடியும் வீடுகள்”
கமலாபுரம் பகுதியைச் சுற்றி மட்டும் ஏழுக்கும் மேற்பட்ட எண்ணெய்
எடுக்கும் குழாய்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், அந்தப்
பகுதியின் நிலத்தடி நீரும் மோசமான அளவில் குறைந்திருக்கிறது என்கிறார்கள்
பகுதி மக்கள். ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும்
ஏகாம்பரம், “நிலத்தடி நீர் குறைந்தது மட்டும் இல்லை. எண்ணெய்க் கழிவுகளை
எங்கள் நிலத்துக்குள் செலுத்துகிறார்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏன்
என்றால், எண்ணெய்க் கழிவுகளைச் சுமந்து செல்லும் வண்டிகளை எங்கள்
பகுதியில் அடிக்கடி பார்க்கிறோம்” என்கிறார்.
நஞ்சாகிப் போன நிலம், குறைந்த நிலத்தடி நீர்... இதுவெல்லாம் வேளாண்மையின்
பிரச்னை என்றால், இந்தப் பகுதியில் உள்ள நிலமற்ற தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு இருக்கும் அச்சம் தங்கள் உயிர் சம்பந்தப்பட்டது.
அந்த மக்கள் சொல்கிறார்கள், “ஓ.என்.ஜி.சி-யின் லாரிகள் மோதி எங்கள்
வீடுகள் பலமுறை சேதமாகி இருக்கின்றன. பெரிய பெரிய எண்ணெய் லாரிகள்
குறுகலான எங்கள் வீதியைக் கடக்கும்போதெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டுதான் இருக்கிறோம். இதுவரை அவர்கள் உண்டாக்கிய சேதங்களுக்கான நஷ்ட
ஈடு என்று எதுவும் தந்தில்லை. அதுகூட பரவாயில்லை... 'வீதிகளில் கொஞ்சம்
மெதுவாகச் செல்லுங்கள்' என்று ஓட்டுநர்களிடம் சொன்னால், 'இது ஓ.என்.ஜி.சி
சாலை... அப்படித்தான் போவோம். நீ வேண்டுமானால், வேறு இடத்துக்குச் செல்”
என்று மரியாதையற்ற வார்த்தைகளில் எங்களைத் திட்டுகிறார்கள். எங்களுக்கு
இங்கு நிலமும் இல்லை, வாழ்க்கையும் இல்லை. வேறு எங்காவது செல்லலாம்
என்றால், அதற்கான வாய்ப்புகளும் இல்லை” என்று சொல்லி முடித்தபோது,
ஓ.என்.ஜி.சி வாகனம் ஒன்று எங்களை வேகமாகக் கடந்து சென்றது.
“மறுக்கப்பட்ட வேலைவாய்ப்பு... விஷமான குடிநீர்!”
கமலாபுரம் மட்டும் அல்ல. காவிரி டெல்டா கடைமடையில் இருக்கும்
நரிமணத்தின் நிலையும் இதுதான். 'எண்ணெய் நிறுவனங்கள் வந்தால், தங்களுக்கு
வேலைவாய்ப்பு கிடைக்கும்' என்று இந்த மக்களும் நம்பியிருக்கிறார்கள்.
வாழ்க்கை தரம் உயரும் என்று நம்பியிருக்கிறார்கள். வழக்கம்போல், மிகவும்
கவனமாக அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறது ஓ.என்.ஜி. சி!
நரிமணம் பகுதியைச் சேர்ந்த சோமு, “யாரை நொந்துகொள்ள... யாரைக் குற்றம்
சொல்ல...? முதலில் எங்களின் அறியாமையின் மீதுதான் வருத்தம்கொள்ள
வேண்டும். எல்லாம் மாறும் என்று நினைத்தோம். எண்ணெய் நிறுவனங்களினால்,
எங்கள் பகுதி துபாய் போல் மாறும் என்று நினைத்தோம். துபாய் போல்தான் மாறி
இருக்கிறது. எங்கள் நிலம் பாலையாக மாறி இருக்கிறது. சுத்துப்பட்டில்
எல்லாம் மழை பெய்தாலும்கூட, எண்ணெய் குழாய் பதித்த கிராமங்களில் மட்டும்
சொட்டுத் தண்ணீர்கூட விழுந்ததில்லை. இந்த எண்ணெய் நிறுவனங்கள்
ஏற்படுத்தும் சுற்றுப்புற மாசுதான் இதற்குக் காரணமாக இருக்கும் என
நாங்கள் சந்தேகிக்கிறோம்.
வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு தருகிறோம் என்றார்கள். தரவில்லை.
உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம் என்றார்கள். மேம்படுத்தவில்லை.
என்னென்னவோ வாக்குறுதிகள் தந்தார்கள். ஆனால், சொன்ன வார்த்தைகள் எதையும்
செய்யவில்லை. பொய்யும், புரட்டும்தான் ஓ.என்.ஜி.சி! அரசும், நிறுவனமும்
எங்களை முட்டாளாக்கிவிட்டன” என்கிறார் கோபமான குரலில்.
அவரே மேலும், “வேலை வாய்ப்பு, வளர்ச்சி குறித்த நம்பிக்கைகள் பொய்யாகிப்
போயிருந்தால் கூட பரவாயில்லை... எங்கள் நிலத்தடி நீரே மொத்தமும்
விஷமாகிவிட்டது. நச்சாகிப்போன இந்தத் தண்ணீரை மனுசங்க நாங்க மட்டும்
குடிக்கவில்லை.... மாடுகளும் இதைத்தான் குடிக்கின்றன! அந்த
மாடுகளுக்காகவாவது இந்த அரசாங்கங்கள் அக்கறை காட்டவேண்டும்” என்று தன்
வீட்டு அடிகுழாயில் பிடித்த நீரைக் காட்டுகிறார். தண்ணீர் மஞ்சள்
நிறத்தில் இருக்கிறது. அவர் வீடு மட்டுமல்ல... அந்தப் பகுதியின் மொத்த
நிலத்தடி நீரும் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கிறது. இந்த உலை நீரில்
வேகும் அரிசியும் மஞ்சள் நிற சோறாகவே சாப்பாட்டுத் தட்டுகளில்
பரிமாறப்படுகின்றன.
''ஓ.என்.ஜி.சி-யிடம் முறையிட்டீர்களா...?'' என்ற நம் கேள்விக்கு,
“இதையெல்லாம் கேட்க அவர்களுக்கு எங்கு நேரம் இருக்கிறது? எங்கள்
நிலத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கட்டடத்துக்குள்
எங்களை என்றுமே அனுமதித்ததில்லை” என்று வருத்தம் தோய்ந்த குரலில் பதில்
சொல்கிறார்கள் அந்த மக்கள்.
“ஏன் மக்கள் எண்ணெய் நிறுவனத்தை நம்புவதில்லை?”
கமலாபுரம், நரிமணம், வெள்ளக்கொடி, வெள்ளப்பாக்கம் என்று காவிரி
டெல்டாவில், எண்ணெய் நிறுவனங்கள் எங்கெல்லாம் கால் பதித்து இருக்கிறதோ...
அங்கெல்லாம் இதுதான் நிகழ்ந்திருக்கிறது; மக்களின் அவநம்பிக்கையைச்
சம்பாதித்திருக்கிறது. இந்தப் பிரச்னையில், அரசும் மக்களின் பக்கம்
நின்றதாக எந்தத் தரவும் இல்லை! எந்த மக்களின் நிலத்தில் தன்
சாம்ராஜ்யத்தை உண்டாக்கி இருக்கிறதோ... அவர்களிடமும் ஓ.என்.ஜி.சி
அறத்துடன் நடந்துகொள்ளவில்லை. இப்போது மீண்டும் முதல் பத்திக்குச்
செல்லுங்கள்... சாரா சொல்வதை உரக்கப்படியுங்கள். அதை கமலாபுரத்துடன்,
நரிமணத்துடன் பொருத்திப்பாருங்கள்... ஏன் மக்கள், எண்ணெய் நிறுவனங்களை
எதிர்க்கிறார்கள் என்று புரியும். ஆம், “அரசு எரிவாயுத் திட்டங்களை
நெறிமுறைப்படுத்தாதவரை, எரிவாயு நிறுவனங்களைக் கண்காணிக்காதவரை, எரிவாயு
நிறுவனங்கள் புதிதாக பூமியில் துளையிட, மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.”
மு.நியாஸ் அகமது 
வீடியோ
M Niyas Ahmed இடுகையிட்டார்
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
'அவ மனசுல நான்தான் அந்த யானை!’ - தன் காதல்
வீடியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக