புதன், 30 செப்டம்பர், 2020

திருக்குறள் சமணம் தொடர்பு மலர்மிசை ஏகினான் அருகன் கடவுள்

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 10 பிப்., 2019, பிற்பகல் 9:48
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
திருக்குறளில் வரும் ஆதி பகவன் என்பவர் பல மதத்தவரும் தங்களுடைய கடவுளையே குறிக்கிறது என்று கூறிவரும் வேளையில் அது எந்தக் கடவுளையும் குறிக்கவில்லை ஆதி பகலவன் அதாவது சூரியனைக் குறிக்கிறது, அது சமய சார்பற்ற குறள் எனவும் பேசவும் எழுதவும் தொடங்கியுள்ளனர்.
ஆதி பகவன் என்ற பெயர் போக
மலர் மிசை ஏகினான்
எண் குணத்தான்
தமக்குவமை இல்லாதான்
அறவாழி அந்தணன்
வேண்டுதல் வேண்டாமை இல்லாதான்
பொறிவாயில் ஐந்தவித்தான்
இரு வினையுஞ் சேராவிறைவன்
இவர்கள் எல்லாம் யார்?
இப்பெயர்கள் குறித்து ஏராளமாய் தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றனவே அது குறித்து குறளை சமய சார்பற்றதாகச் சொல்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இனி வரும் பதிவுகளில் இப்பெயர்கள் குறித்து ஆராயலாம். முதலில் மலர் மிசை ஏகினான் என்ற பொருள் குறித்து பார்க்கத் தொடங்கலாம்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
இக்குறளில் சொல்லப்படும் 'மலர்மிசை ஏகினான்' என்பது யாரைக்குறிக்கும
்? பல்வேறு மதத்தினரும் தங்களுடைய கடவுள் தானென்றும் திருக்குறள் தங்களுடையதென்றும் நிறுவ முயற்சிக்கின்றனர்.
'மலர் மேல் நடந்த திருவடி' என்று பொருள்தரும் என சூடாமணி நிகண்டு, சேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டுகள் கூறுகின்றன. இவை சமணரின் அருகக் கடவுளையே குறிக்கிறது என்பதை இதர சமண இலக்கியங்கள் வழியே அறிந்து கொள்ளமுடிகிறது.
தேவாரத்தில் எங்கேனும் சிவனுடைய பாதம் 'பூ மேல் நடந்தபாதம்' என்றுள்ளதா என ஆராய்ந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் சீனி வேங்கடசாமி அவர்கள் ஒரே ஒரு தேவாரப் பாடல் உண்டென்றும் அது கூட சமணத்திலிருந்து சைவம் சென்ற அப்பர் பாடியதாகும் என்கிறார்.
மலர்மிசை ஏகினான் அருகனையே குறிக்கும் என்பதைக்கூறும் சமணச் செய்யுட்கள் சில:
1 ) பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது” - நாடுகாண் காதை (200 - 205)
2) இரதநூபுரச் சருக்கத்தில்,
“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” - 18
3) “முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” - 18
4) “மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” - 189
5) அறநெறிச்சாரம் என்ற நூலின்கண் அமைந்த கடவுள் வாழ்த்தில்,
“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” - (1)
6) அவிரோதி ஆழ்வார் அருளிய “திருவெம்பாவை” என்னும் நூலில்,
“வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னும் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈரேழ் புவிக்கு இறையைப் பாடலோர் எம்பாவாய்” - (9)
7) ஜீவசம்போதனை என்னும் நூலின்கண் அமையப் பெற்ற பாடல்,
“பன்னிரண்டு மாகணமு மேத்தப்பைந் தாமரைடின்
சென்னி மிசைநடந்த சேவடியை - யுன்னியுயி
ரல்லாத அன்னியமே யென்னும் மதிகாரம்
நல்லா யினியுரைப்ப னன்கு” - (185)
8 ) திருப்பாமாலை” என்னும் நூலில், கடவுள் வாழ்த்துப் பாடலில்,
“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ! நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” - (1-5)
9) “மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே”
10) உதீசி தேவர் அருளிய திருக்கலம்பகம் என்னும் நூலில்,
“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - (74)
11) “தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - (6)
12) “திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” - (11)
13) திரு இரட்டைமணி மாலை என்னும் நூலில்,
‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” - (1)
14) “சூடாமணி நிகண்டு” அருகனின் பெயர்களைக் கூறும்போது
பின்வருமாறு கூறுகிறது!
“அநகன், எண்குணன், நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்
சினன் வரன் உறுவன் சாந்தன்
சினேந்திரன் நீதி நூலின்
முனைவன் மாசேனன் தேவன்
மூவுல குணர்ந்த மூர்த்தி
புனிதன் வென்றோன் விராகன்
பூமிசை நடந்தோன் போதன்..” - (9)
15) மலர்மிசை நடந்த மலரடி யல்லதுஎன்
தலைமிசை யுச்சி தானணிப் பொறா அது
(# சிலப்பதிகாரம் )
16) எங்கு முலகுமிருள் நீங்க இருந்த எந்தை பெருமானார்
தங்கு செந்தா மரையடி என் தலையவே என் தலையவே
(# சீவக_சிந்தாமணி )
17) மன்றனாறு மணிமுடிமேல் மலிந்தசூளா மணிபோலும்
வென்றோர் பெருமான் அறவாழி வேந்தன் விரிபூந்தாமரைமேல் சென்ற திருவாரடி ஏத்தித் தெளியும் பொருள்களோரைந்தும்
அன்றி யாரும் ஒன்பானும் ஆகுமென்பா ரறவோரே
(# முத்தியிலம்பகம் சீவக சிந்தாமணி)
18) விரைமணந்த தாமரைமேல் விணவணங்கச் சென்றாய
19) முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர் மேற்சென்றாய
20) மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய
21) மணங்கமழுந் தாமரையின் மத்திவலை கொப்பளித்து மதர்த்து வாமன
22) அரும்பிவரும் அரவிந்தம் அறிவரன
தடிநிழல தடைந்தோ மென்ற
23) அழலணங்கு தாமரையார் அருளாளி
யுடையகோன் அடிகீழ்ச் சேர்ந்த
24) சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ?
(# சூளாமணி )
25) தாமரையே எத்தவங்கள் செய்தாய்!
சகமூன் றினுக்குந்
தாமரைசே என்று சாற்று
போலும் முச் சத்திரத்துத்
தாமரைசேர் திருவைத் திருமார்பிற்
றரித் தவர்செந்
தாமரையேய் சரணந்தலை மேற்கொண்டு
தாங்கு தற்கே
(# திருநூற்றந்தாதி )
26) ........................ தண்டா மரைமேல் நடந்தான்
தடந்தாள் வணங்கிக்
கண்டேன் கிடந்தேன் கனவின்னது
கண்ட வாறு
(# நீலகேசி )
27) தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப் பூவின்மேற் சென்றான் புகழடியை
(# அறநெறிச்சாரம் )
28) தாமரை மலர்புரை அடியினை
தாமரை மலர்மிசை ஒதுங்கின
29) மாதவர் தாதயை மலர்மிசை மகிழ்ந்தன
30) ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி
வீடொன்று கட்டினை விளக்கும் நின்மொழ
(# யாப்பருங்கலவிருத்தி )
சரி, இவை புத்தரையும் குறிக்கும் எனவும் கூறுவர். ஆனால் குறள் புலால் உண்ணாமையை வலியுறுத்துவதன்படி மலர் மிசை ஏகினான் என்பது அருகக் கடவுளையே குறிக்கிறது.
மறுப்பவர்கள் தக்க சான்றுடன் மட்டுமே மறுக்க வேண்டும். அடுத்த பதிவில் எண் குணத்தான் என்பது குறித்து பார்ப்போம்.
சமணம் என்பது முழுக்க தமிழ் மரபு நெறியென்ற முறையில் பதிவிட்டப்பட்டுள்ளது. இது சைனம் அல்ல.
பதிவு:- காளிங்கன்

இலக்கியம் மதம் மெய்யியல் 

1 கருத்து: