செவ்வாய், 29 செப்டம்பர், 2020

நெல் ஜெயராமன் வாழ்க்கை

aathi1956 வியா., 6 டிச., 2018, பிற்பகல் 4:51 பெறுநர்: எனக்கு Poomozhi Poomozhi Tprm உடன். அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன் அவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று இயற்கை எய்தினார். மன்னிக்கவும், விதையானார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் நெல்’ ஜெயராமன் என பெயர் சூட்டப்பட்ட ஜெயராமன் அவர்கள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, திருத்துறைப்பூண ்டியில் அச்சகத் தொழிலாளியாக வேலை செய்தார். ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான நெல் வகைகள், நம் முன்னோர்களிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப்படியாக காணாமல் போனது. குறிப்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான், பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆய்வுகள் நமது செவிகளில் அரைகிறது. இத்தகைய அபாய சூழலில்தான், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த ‘நெல்’ ஜெயராமன் அவர்கள், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் களப்பணியைத் தொடங்கினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெல் ஜெயராமன் அவர்கள், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, திருத்துறைப்பூண்டியில் அச்சகத் தொழிலாளியாக வேலை செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003ஆம் ஆண்டில், பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். பாரம்பரிய நெல் இரகங்களைத்தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார். அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில், நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்ட இந்த பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாக திகழ்கிறது. யானைக்கவுனி, கருங்குருனை, உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டையக்காலத்தின் பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை தனது பன்னையில் விளைவித்தார். ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தின் இறுதி வாரத்தில், பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். இதில் தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டு கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்குவார் ஜெயராமன். அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச்செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும்போது நான்கு கிலோ விதையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால், பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகிறது. நெல் திருவிழாவில் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு விவசாய ஆய்வாளர்களைப் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து விவசாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் ஜெயராமன். இலட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபட வைத்து, உற்பத்தியை பெருக்கி அதனை சந்தைப்படுத்தியதன் மூலம், உலக விவசாயிகளின் பார்வையை காவிரி டெல்டா பக்கம் திரும்பச் செய்தார் ஜெயராமன். இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தையும் உருவாக்கினார் நெல் ஜெயராமன். தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தார் நெல் ஜெயராமன். நெல் ஜெயராமன் அவர்களைப் பாராட்டி ஜனாதிபதி விருது, தமிழக அரசின் விருது, தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான SRISTI சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி சிறப்பித்துள்ளது. கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகம் மற்றும் அமைப்புகள், ஜெயராமன் அவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான புற்றுநோய் தாக்குதலுலில் ஆட்பட்ட ஜெயராமன் அவர்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலும், தனது உயிரினும் மேலான விவசாய விழிப்புணர்வு பயணத்தை "உமி"யளவும் கைவிடாமல், தன்னம்பிக்கையுடன் தொடர்ந்தார். இந்நிலையில், நோயின் தக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் உயிர்காக்க ஜெயராமன் மருத்துவமனையின் படுக்கையில் போராடினார். அவருக்கு உதவியாக அவரது பதினோரு வயதேயான ஒரே மகனும், அவரது மனைவியும், உறவினர்களும் இருந்தனர். நோயின் கொடியக் கரங்களிலிருந்து மீளமுடியாத நிலையில், இன்று நெல் ஜெயராமன் அவர்கள் இயற்கை எய்தினார். மன்னிக்கவும், விதையானார். வேளாண்மை விவசாயம் நம்மாழ்வார் விதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக