செவ்வாய், 29 செப்டம்பர், 2020

வான்மீகி வால்மீகி தமிழரே இராமாயணம் இராமன் இலக்கியம் தொடர் பகுதி புராணம்

aathi1956 செவ்., 11 டிச., 2018, பிற்பகல் 2:07 பெறுநர்: எனக்கு 65. தமிழன் திராவிடனா ? வால்மீகியும், தமிழும். தொல்காப்பியம் சொல்லும் அறுவகைப்பட்ட பார்ப்பன வகையிரால் கற்பிக்கப்பட்ட தமிழ்க் கல்வியில், தலையாய கல்வி, இடையாய கல்வி, கடையாய கல்வி என்னும் மூன்று வகைகளில் “தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும் போலார் செய்தன தலை”. என்று நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளது சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. நமக்குத் தெரிந்த வான்மீகனார், ராமாயணம் எழுதிய வால்மீகி ஆவார். அவர் எழுதிய ராமாயணத்தையே தலையாய கல்வியாகச் சொல்லியுள்ளாரோ என்று நினத்தால், அது அப்படியல்ல. ‘ தமிழ்ச் செய்யுட்கண்ணும்’ என்று தெளிவாகச் சொல்லியுள்ளாதால், வான்மீகனார் என்பவர் தமிழில் இயற்றிய நூல்களையே சொல்வதாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழில் வான்மீகனார் எழுதியுள்ளாரா என்று தேடினால், புறநானூறில் 358 ஆம் பாடலை ‘வான்மீகியார்’ என்பவர் எழுதியுள்ளார் என்ற விவரம் இருக்கிறது. பாடினோர் வரலாற்றில், இவரைப் பற்றி எழுதும்போது, டா .உ .வே .சா அவர்கள் முதற் சங்கத்தில் வான்மீகியார் என்று ஒருவர் இருந்தார் என்று சொல்லியுள்ளார். ஆனால் வேறு குறிப்புகள் கிடைக்காமையால், அவர் வேறு, இந்தப் பாடலை எழுதிய வான்மீகியார் வேறு என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். வான்மீகி என்ற பெயரே காரணப் பெயராக உள்ளதால் அதே பெயரில் மற்றொருவர் இருக்க சாத்தியமில்லை. (வான்மீகி, வால்மீகி என்பவை ஒன்றுக்கொன்று இயைந்து வரும் ஒரே பெயர்களே. லகரம், னகரம் ஒன்றுக்கொன்று மாறிக் கொள்ளும்.) வால்மீகியால் கவரப்பட்டு தங்களை வால்மீகி குலத்தினர் என்று சொல்லிக் கொண்ட மக்கள் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் குலப் பெயராக இப்படி அமைத்துக் கொண்டது சில நூறு வருடங்களுக்கு முன்புதான். ஆனால் வான்மீகி அல்லது வால்மீகி என்ற பெயரில் மற்றொருவர் இருந்ததாகத் தமிழிலும், சமஸ்க்ருத்த்திலும் குறிப்புகள் இல்லை. ஆனால் அந்தப் பெயரைக் கொண்ட ஒருவரால் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன, அவை தலையாய கல்வியாகக் கற்பிக்கப்பட்டன என்பது நச்சினார்க்கினியர் வாயிலாகத் தெரிகிறது. வான்மீகனார் என்னும் பெயரில் புறநானூறில் மட்டுமல்ல, சித்தர் பாடல்களிலும் ’வால்மீகன் பதினாறு’ என்னும் ஒரு பாடல் தொகுப்பு உள்ளது. இவை தவிர வால்மீகியின் பெயரில் இருக்கும் பாடல், ராமாயணம் ஆகும். இவை மூன்றையும் ஆராய்ந்தால், இவை அனைத்தையும் ஒருவரே எழுதியிருக்கிறார் என்பது புலனாகிறது. ஆம், ராமாயணம் எழுதிய வால்மீகியே , புறநானூறுச் செய்யுளையும் எழுதியுள்ளார், சித்தர்கள் பாடல் தொகுப்பில் உள்ள ‘ வால்மீகன் பதினாறும் ’ அவராலேயே எழுதப்பட்டுள்ளது. அது எப்படி என்று பார்ப்போம். இந்த மூன்று நூல்களிலும் முக்கியமானதாக ஒரு குறிப்பிட்ட செய்தியே சொல்லப்பட்டுள்ளது. அது சீதையாக அவதரித்த ’திரு ’ அல்லது லக்ஷ்மி அல்லது ‘ தாயார் ’ என்றும் சொல்லப்பபடும் திருமகள் ஆகும் . புறநானூற்றில் வான்மீகியார் எழுதிய செய்யுள், ‘திரு’ எனப்படும் லக்ஷ்மியை வழிபட வேண்டும் என்று சொல்கிறது. வால்மீகி எழுதிய ராமாயணம் ‘ மா நிஷாத’ என்றே ஆரம்பிக்கிறது. ‘மா’ என்னும் அந்தச் சொல் மாதா என்னும் லக்ஷ்மியைக் குறிக்கிறது என்றே பண்டிதர்கள் கூறுகிறார்கள். வால்மீகியார் எழுதிய வால்மீகன் பதினாறிலும் முடிவான செயலாகத் ‘ தாயாரைப் பூசித்து வேதம் ஓது ’ என்று லக்ஷ்மியான தாயாருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சித்தர் பாடல் கருத்துக்களிலேயே இது வித்தியாசமானது. வால்மீகியின் பெயரால் வழங்கப்படும் மூன்று நூல்களிலும், லக்ஷ்மி என்னும் தாயார் குறித்த இந்தக் கருத்து ஒரே மாதிரியாக வருகிறதே, அது எப்படி? ஒரே வால்மீகி எழுதியிருந்தால்தானே இது சாத்தியமாகும்? அதிலும் அந்த வால்மீகி சீதையிடம் பக்தி பூண்ட ராமாயண கால வால்மீகியாக இருந்தால்தானே அப்படி எழுதியிருக்க முடியும்? அந்த விசாரணைக்குப் போவதற்கு முன், இந்தப் பாடல்களைத் தெரிந்து கொள்வோம். புறநானூறு 358:- "பரிதி சூழ்ந்த விப்பயன்கேழு மாநிலம் ஒரு பகல் எழுவர் எய்தியற்றே வையமும் தவமும் தூக்கிற்றவக்துக் கையவி யனைத்து மாற்றா தாகலிர் கைவிட்டனரே காதலர் அதனால் விட்டோரை விடாள் திருவே விடாதோர் இவள் விடப்பட்டோரே " ஏழு வரிகளாலான சிறிய செய்யுள் இது. காஞ்சித்திணையில், மனையறம், துறவறம் என்னும் துறையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இது, வான்மீகியார் அல்லது வான்மீகையார் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது என்று டா. உ.வே.சா அவர்கள் கண்டெடுத்த சுவடிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் :- இந்த உலகம் எல்லாப்பக்கங்களிலும் சூரியனால் சூழப்பட்டு, அதாவது அதன் ஒளியால் சூழப்பட்டு, அந்த சூரியன் பொருட்டு கொடுக்கப்படும் அவிப்பயனையும் பெற்று, ஒரு பகலில் ஏழு பேர்களால் (ஏழு ஓரைகள்) அடையப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த உலகத்தின் பொருட்டு கிடைக்கின்ற பயனையும், தவத்தின் பயனையும், ஒரு தராசில் எடை பார்த்தால், உலக இன்பத்தால் கிடைக்கும் பயன், ஒரு வெண்சிறுகடுகளவும் இருக்காது. அதனால் காதலர்கள் (காதலர் = வீடு பேறு விரும்புவோர்). உலக இன்பத்தைக் கைவிட்டனர். அப்படி விட்டவர்களை திரு என்னும் லக்ஷ்மியானவள் கைவிட மாட்டாள். ஆனால் உலக இன்பங்களை விடாதவர்களை லக்ஷ்மியானவள் கை விட்டு விடுவாள். இதுவே அந்தச் செய்யுள் தரும் விவரமாகும் . பொதுவாக உலக இன்பத்துக்கும், செல்வத்துக்கும் லக்ஷ்மியே காரணமாவாள் என்று நினைக்கிறோம். அந்தச் செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி . ஆனால் நமக்குச் செல்வம் வேண்டுமா, அல்லது லக்ஷ்மியே வேண்டுமா என்றால் , லக்ஷ்மிதான் வேண்டும் என்கிறது இந்தச் செய்யுள். செல்வத்தின் மீது பற்று கொண்டால், லக்ஷ்மி நம்மைக் கை விட்டு விடுவாள். செல்வத்தை நாம் விட்டால், லக்ஷ்மி நம்மை விடமாட்டாள் என்கிறது இந்தச் செய்யுள் . அதாவது உலக இன்பத்தைத் துறக்க வேண்டும் . அப்படித் துறந்தாருக்கு லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும் . அந்த நிலையில் உள்ளவர்களுக்கு அவள் தரும் கடாக்ஷம் , அஷ்டமாசித்திகளும், ஆத்ம சாதனைகளும், வீடு பேறும் ஆகும் . மேற்சொன்ன புறநானூறின் தொடர்ச்சியோ என்று நாம் நினைக்கும் வண்ணம் இதே கருத்தை வால்மீகன் பதினாறு தெரிவிக்கிறது . பதினாறு செய்யுட்களைக் கொண்ட வால்மீகன் பதினாறு என்பது மற்ற சித்தர் பாடல்களிலிருந்து வேறுபட்டது. எப்படி என்றால் , மற்ற சித்தர்கள் சிவனையே முழு முதற் கடவுளாகப் போற்றி , சிவனருளால் முக்தியைத் தேடினர் . அது அவர்கள் இயற்றிய பாடல்களிலும் எதிரொலிக்கிறது . ஆனால் வால்மீகன் பதினாறின் முதல் செய்யுளிலேயே, 'சிவசக்தி திருமாலின் ரூபமாகும். வருமுருவே சிவசக்தி வடிவமாகும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது திருமாலிலிருந்து சிவசக்தி ரூபம் உண்டானது என்கிறார் வால்மீகியார். இது மற்ற சித்தர்கள் கருத்துடன் ஒத்துப் போகவில்லை. அதை வால்மீகியாரே ஒத்துக் கொள்கிறார். 11-ஆம் பாடலில் அதைச் சொல்லுகிறார். தன்னுடைய நூலைப் பார்த்து (கருத்தைப் பார்த்து), மற்ற சித்தர்கள் எல்லாம் சிவனிடம் கோள் சொன்னார்கள். ஆனால் சிவன் அவர்களைப் பார்த்துத்தான் சினம் கொண்டான் என்கிறார். மற்ற சித்தர் பாடல்களுக்கெல்லாம் திறவுகோல் போன்ற தனது பாடலை ஏற்றுக் கொண்டான் என்று சொல்லுமிடத்தே, தாயாரைப் பூஜித்து பயன் பெற வேண்டும் என்று கூறுகிறார். அந்தச் செய்யுள் வரிகள் இங்கு கொடுக்கப்படுகின்றன:- சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்: சிவம்பெத்த சித்தரேல்லா மென்னூல் பார்த்துச் சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்: அவமாகிப் போகாமல் சிவனுத் தார அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக: நவமான நவக்கிரகம் தன்னுளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கப்பால். (11) நாக்கு வாய் செவி மூக்கு மத்திக் கப்பால் நடுவீதி குய்ய முதல் உச்சி தொட்டுத் தாக்குவாய் அங்கென்ற அதிலே முட்டுத் தாயாரைப் பூசித்து வேதம் ஓது: (12) வேதத்தை விடு என்று சொல்லும் சித்தர் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் வால்மீகியார் வேத்த்தை ஓது என்கிறார். அதிலும், தாயாரைப் பூசித்து வேதம் ஓது என்கிறார். இந்தத் தாயார் என்பது சிவ-சக்தியில் உள்ள சக்தியைக் குறிக்கலாமே எனலாம். இவரது பாடலில் வேறொரு இடத்திலும், மற்ற சித்தர் பாடல்களிலும் தாய்- தந்தை என்று ஒன்றாகவே சிவ சக்தியைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதிலும் அர்த்தநாரீஸ்வர ரூபத்தைச் சித்தர்கள் பல இடங்களில் போற்றியுள்ளார்கள். ஆனால் சிவனில் ஐக்கியமாகி சித்தி பெறுவதையே பிற சித்தர்கள் சொல்லியுள்ளார்களே தவிர, தாயாரைத் தனியே பூசித்து மேன்மை பெறுவதைச் சொல்வதில்லை. மேலும் சக்தியைப் பற்றிச் சொல்லுமிடத்தில் சக்தி என்றே சொல்லியுள்ளார்களே தவிர, வால்மீகியார் போலச் சொல்லவில்லை. வான்மீகியார் சொல்லும் கருத்து வேதத்திலும் காணப்படுகிறது. திரு என்னும் செல்வத்தைத் தேடுவதைவிட, திரு தரும் லக்ஷ்மியைத் தன்னிடம் வரவழைப்பதே மிகவும் சிறந்தது என்று சொல்லும் ரிக் வேதப் பாடல் ஒன்று இருக்கிறது. ஸ்ரீ சூக்தம் என்னும் அந்தப் பாடல் கருத்தை ஒட்டி, புறநானூற்றுச் செய்யுளும், வால்மீகன் பதினாறு சொல்லும் தாயாரும் அமைந்துள்ளன. ராமாயணம் எழுதிய வால்மீகி, தான் எழுதிய அந்த காவியத்தை ‘சீதாயா சரிதம் மஹத் ’ என்றே குறிப்பிட்டுள்ளார். அது சீதையின் மகத்தான சரித்திரம் என்பது பொருள். சீதையுடைய வாழ்கையின் முக்கியக் காலக்கட்டத்தில் வால்மீகியே அவளுக்குத் தந்தையாகவும், பக்தனாகவும் இருந்தார். சீதையின் மீது அவருக்கு இருந்த அன்பு மகத்தானது. இந்தப் பாடல்களில் திருவும், தாயாரும் சொல்லப்பட்டுள்ளதால், சீதையைப் போற்றின ராமாயண வால்மீகியே இந்தப் பாடல்களையும் எழுதியுள்ளார் என்று எண்ண ஏதுவாகிறது. வான்மீகனார் என்னும் பெயர் தமிழ் நாட்டின் இரண்டு இடங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. ஒன்று எட்டிக்குடி, மற்றொன்று திருவான்மியூர். சென்னையில் உள்ள திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தின் தல புராணத்தில், வான்மீகனாரது வரலாறு சொல்லப்பட்டுள்ளது. இது ராமாயணம் எழுதிய வால்மீகியின் வரலாறுடன் ஒத்துப் போகிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி உண்மையில் ஒரு முனிவரது மகன். அவரது இயற்பெயர் ‘ ப்ராசேதஸ்’ என்பதே. அவர் சிறுவனாக இருந்தபோது காட்டில் தொலைந்து விடுகிறார். அவரை ஒரு வேடன் வளர்த்து வந்தான். அவர் வேடனாகவும், திருடனாகவும் இருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவதால் அவர் வாழ்க்கையை வெறுத்து தியானத்தில் அமர்ந்தார். பல வருடகாலம் அவர் அசையாமல் தியானம் செய்து வந்த போது அவர் மீது கரையான் புற்று எழும்பி விடுகிறது. வெண்மை நிறத்தில் இருக்கும் அந்தக் கரையானை ‘ வால்மீகம் ’ என்று சமஸ்க்ருத்த்தில் அழைப்பார்கள். அதனால் அவருக்கும் வால்மீகி என்ற பெயர் ஏற்பட்டது. இப்படி ஒரே வரலாற்றையே நாம் காண்கிறோம். மருந்தீஸ்வரரைப் பூசித்து வந்ததால், அந்தத் தலத்துக்குத் திருவான்மியூர் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த வால்மீகி முனிவர் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள எட்டிக்குடி என்னும் தலத்தில் சமாதி அடைந்தார் என்று சித்தர்கள் பற்றிய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. எட்டி மரங்கள் அதிகம் காணப்பட்டதால் எட்டிக்குடி என்ற பெயர். இப்பொழுது எட்டுக்குடி என்றும் வழங்கப்படுகிறது. இந்தத்தலத்தில் இருக்கும் முருகன் கோவிலில் வான்மீகியாருக்கு என சன்னிதியும் இருக்கிறது. எட்டிக்குடியில் வான்மீகியார் சமாதி அடைந்தது உண்மையே என்பதை ஒரு சித்தர் பாடல் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழில் எழுதிய வால்மீகியார், ராமாயணம் எழுதிய வால்மீகியே ஆவார் என்றும் அந்த நூல் தெரிவிக்கிறது. போகர் என்னும் சித்தர் எழுதியுள்ள ’போகர் ஏழாயிரம்’ என்னும் நூலின் 5834 ஆம் பாடலில் , ராமாயணம் எழுதிய வால்மீகியும், வான்மீகனாரும் ஒருவரே என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கடுத்த பாடலில் (பாடல் எண் 5835), வான்மீகியார் தமிழ்ப் புலமை வாய்ந்தவர் என்றும் அவர் 700 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவர் எட்டிக்குடியில் சமாதி அமைந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டுடன் சம்பந்தம் பெற்ற வால்மீகியாரும், ராமாயணம் எழுதிய வால்மீகியும் ஒருவரே என்பதை போகர் தெளிவுபட எழுதியுள்ளார். ஆதி காவியம் என்று சொல்லப்பட்ட ராமாயணத்தை சமஸ்க்ருதத்தில் எழுதிய வால்மீகி முனிவரே, தமிழிலும் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார். வால்மீகி வாழ்ந்த காலம் ராமன் வாழ்ந்த காலமாகும். அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி வாழ்ந்திருக்கிறார் . அந்தக் காலம் தென்னன் தேசத்தில் முதல் சங்கம் நடந்து கொண்டிருந்த காலம். முதல் சங்கத்தில் வான்மீகியார் என்ற ஒருவர் இருந்தார் என்று டா . உ.வே . சா அவர்கள் சொல்வது, இந்த வால்மீகிக்குப் பொருந்துகிறது. சரயு நதிக் கரையிலும் , கங்கை நதிக்கரையிலும் ராமனைக் கண்டு அவன் புகழ் பாடிய இவர் , அங்கிருந்து எங்கோ தென் முனையில் இருந்த தென் மதுரைக்கும் சென்று சங்கப் பலகையில் உட்கார்ந்திருக்கிறார் . அவருக்குத் தமிழ்ப் புலமையும் இருந்திருக்கிறது. அது எப்படி? அன்றைய பாரதம் முழுவதும் பரவலாகத் தமிழ் பேசப்பட்டிருந்தால் இது சாத்தியம். மேலும், தமிழ்ச் சங்கத்தில் பங்கு பெற வேண்டும் என்ற அவா அன்றைய பாரத மக்களுக்கு இருந்திருந்தாலும், அவர்கள் தமிழைக் கற்று இவ்வாறு சங்கத்தில் அரங்கேற்றியிருப்பார்கள். இதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம். அன்றைய தமிழ்ச்சங்கத்தில் இறையனார் என்ப்படும் சிவ பெருமானார், தனது சங்கத்தோடு அணிந்த செவியைத்தீட்டி, பாடல்களைக் கேட்டு ரசித்தார் என்றே சொல்லப்பட்டது என்று கண்டோம் (பகுதி 43). சிவபெருமான் மீது மாறாக் காதல் கொண்ட ஒருவர், பாரதத்தின் எந்த மூலையில் இருந்திருந்தாலும், சங்கத்தில் பாடல் அரங்கேற்றுவதை ஒரு வரப்பிரசாதமாகவே நினைத்திருப்பார். அதற்காகவேனும் தமிழைக் கற்று, பாடல் இயற்றும் திறமை பெற்று, சங்கப்பலகையில் அமர்ந்திருப்பார். இந்தக் காரணத்தினாலும், தமிழ் மொழி பாரதம் முழுவதும் நன்கு அறிமுகமான மொழியாக இருந்திருக்கும். தமிழ்ச் சங்கத்தில் பங்கு பெறுவது பெருமைப்படக் கூடியதாக இருந்திருக்கவேதான், துவரைக் கோமானான கிருஷ்ணன் 2-ஆம் சங்கத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அந்தச் சங்கத்தில் கிருஷ்ணன் பாடல் அரங்கேற்றியதாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் அரங்கேறிய பாடல்களைச் செவிமடுத்திருக்கிறார். அவருக்குத் தமிழ் தெரிந்திருந்தால்தான் அப்படிப் பங்கு கொண்டதில் ஒரு அர்த்தம் இருக்கும். வெறும் வரட்டு கௌரவத்துக்குக் கிருஷ்ணன் பங்கு கொண்டிருந்திருக்க முடியாது. கிருஷ்ணனுக்கும் தமிழ் தெரிந்திருந்தது என்று சொல்லும் வண்ணம் சில விவரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிறகு பார்க்கலாம். இங்கு வால்மீகியாருக்குத் தமிழ் தெரிந்தது என்பதும், தமிழின் தலையாய கல்வியான இலக்கியத்தையும், இலக்கணத்தையும் அவர் அளித்திருந்தார் என்பதும், தமிழ் மொழி பரவலாக அறியப்பட்டிருந்த மொழி என்பதற்குச் சான்றுகளாகும் என்பதை ஏற்றுக் கொள்வோம். சித்தர்களில் தலையானவரான அகஸ்தியர் தமிழைச் செம்மைப்படுத்தினார். பெரும்பாலான சித்தர்களும் தமிழில் பேசியும், எழுதியும் இருக்கின்றனர். சமஸ்க்ருதம் அறிந்த பதஞ்சலி முனிவரும் சித்தர் பரம்பரையில் வருபவர். மார்க்கண்டேயரும் அவ்வாறே சித்தர்களுடன் சேர்த்துச் சொல்லப்படுபவர். அவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை அவர்கள் சிவ பக்தர்கள் என்பதே. அன்றைய காலக்கட்டத்தில் ‘தென்னாட்டுடைய சிவன்’ என்று தென்மதுரையில் சிவபெருமான் குடி கொண்டிருந்து தமிழ் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறார். அதனால் பாரதம் முழுவதிலும் இருந்து சிவ பக்தர்கள் தென்னன் தேசத்துக்குச் சென்றிருப்பது சாத்தியமானது. பாமர மக்களுடன் கலந்துறவாடிய இந்தச் சித்தர்கள், அவர்கள் பேசிய மொழியையும் அறிந்திருந்திருந்தது சாத்தியமானதே. முன்பே சிபியின் வழி வந்த சோழவர்மன் , தமிழ் நாட்டில் தனது சோழ நாட்டை ஸ்தாபித்தான் என்று பல கட்டுரைகளில் பார்த்தோம். வடக்கு, தெற்கு என்ற வித்தியாசம் இல்லாமல், தமிழ் மொழி எங்ஙணும் பேசப்பட்டிருந்தால் மட்டுமே இப்படி எளிதில் கலந்திருக்க முடியும். இது சாத்தியமாக வேண்டும் என்றால், வடக்கில் மனு முதலானவர்களோடு சென்ற மக்களுக்கும், சங்கம் வாழ்ந்த தென்னன் தேசத்தில் இருந்த மக்களுக்கும் ஒரு ஆரம்பத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் . ஒரே மூலத்திலிருந்து உண்டான மக்கள் ஒரே மொழியைப் பேசியும், ஒரே கலாச்சாரத்தைக் கடை பிடித்தும் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அப்படி ஒரு மூலத்தைச் சாகத்தீவு காட்டுகிறது. அது இருந்த இடம் பெருமளவு கடலுக்குள் மூழ்கி விட்டிருந்தாலும், எஞ்சிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தென்னன் பாதுகாப்பில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சங்கம் கண்டு மொழி வளத்துடன் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவாக மனுவும், பிறரும், 13,000 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி நதி தீரத்தில் நுழைந்திருக்கவே, அவர்கள் கொண்டு வந்த பேசு மொழி, தமிழாகத்தான் இருந்திருக்க முடியும். அவர்கள் வட இந்தியாவில் குடியமர்ந்து பல நாடுகளாகப் பிரிந்திருந்த போதிலும் சாதாரண மக்கள் பேசிய மொழி தமிழாகத்தான் இருந்திருக்க முடியும். அப்படி இருந்திருந்தால்தான், நேபாளத்தில் இருந்த மிதிலையில் பிறந்து, கங்கை நதி பாயும் கோசல நாட்டின் மருமகளான சீதை, லங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த போது, அவளைச் சூழ்ந்திருந்த ராட்சசிகளுடன் அவர்கள் பேசிய மொழியில் பேசி இருக்க முடியும். தென்னிந்தியக் காடுகளில் அமைந்திருந்த கிஷ்கிந்தையில் வாழ்ந்த அனுமன், அந்த ராட்சசிகள் சீதையை என்ன சொல்லி மிரட்டினார்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்க முடியும். அது மட்டுமல்ல. வானர ரூபத்தில் உள்ள தன் மீது சீதைக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும் என்றால், மானுஷம் வாசம் என்றும், மானுஷம் வாக்யம் என்றும் சொல்லப்படும், சாதாரண மக்கள் பேசிய மொழியில் பேச வேண்டும் என்று அனுமன் முடிவு செய்கிறானே அது அயோத்தி முதல், இலங்கை வரை அறியப்பட்டிருந்த மொழியாகத்தானே இருந்திருக்க முடியும்? அந்த மொழி தமிழ் மொழியே என்று காட்டும் வண்ணம் சில உட்குறிப்புகளை வால்மீகி தருகிறார். அவற்றை அடுத்தக் கட்டுரையில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக