திங்கள், 30 ஜூலை, 2018

தமிழ்தேசியம் சிந்தனையாளர் நா.திருமலை பார்ப்பனர் மபொசி சீடர் மறைந்தார் இன்பாக்ஸ் x

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்
நா. திருமலை அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழ்த் தேசியச் சிந்தனையாளர் ஐயா நா.திருமலை அவர்கள் சென்னையில் 26.3.2018 அன்று இரவு 10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 82.

மதுரையில் நடைபெறும் தமிழ்மொழி மீட்சிக்கான போராட்டங்களில் தீவிரமாக பங்கு பெற்றவர் ஐயா திருமலை.  உடல் நிலை தளர்ச்சி அடைந்த போதிலும் கூட, சோர்வுறாது தமிழ்வழிக் கல்வி, உயர் நீதி மன்றத்தில் தமிழ் ஆகியவற்றுக்காக நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கு பெற்று உரையாடுவது மட்டுமின்றி, போராட்டங்களிலும் உற்சாகமாக கலந்து கொள்வது அவரின் வழமையாகும்.

பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது இரத்த அழுத்தம் காரணமாக மயக்கமுடைந்து கீழே விழுந்து விடுவார். அவரைத் தோழர்கள் நீர் தெளித்து, விழிப்படைய வைத்து வீட்டில் கொண்டு போய் விட்டு வருவார்கள். தமது உடல் நலக் குறைவு குறித்து கிஞ்சித்தும் கவலைப் படாது அடுத்தடுத்த சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வார். ஓய்வு எடுக்க வேண்டியது தானே என்று கேட்டால், தமிழுக்கு ஏற்பட்ட  பிணியை யார்  போக்குவது ? என்று கேள்வி எழுப்புவார்.

இவர் தூத்துக்குடியில் பிறந்தவர் என்ற போதிலும்,  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைதான் இவர் அதிக காலம் சுவாசித்த மண்ணாகும். ஆயுட் காப்பீடு கழகத்தில் பணி புரிந்து வந்த போது ம.பொ.சி.யின் தமிழ்த் தேசிய சிந்தனை இவரை ஆட் கொண்டது .  இளம் வயதிலேயே ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ம.பொ.சி. நடத்திய செங்கோல் இதழில்  1962 முதல்  'பொன்னன்' என்ற புனைப் பெயரில் முதன் முதலாக கட்டுரைகள் பல எழுதி வந்தார். மொழி வழி மாநில வரலாறு, தமிழ் வழிக் கல்வி, பொதுவுடைமைக்  கண்ணோட்டத்தில் தமிழ்த்தேசியம் , திராவிட கருத்தியல் மறுப்பு ஆகியவை விளக்கும் கட்டுரைகள் பலவற்றை தினமணி, தினகரன், மதுரை மணி, தீக்கதிர், ஜன சக்தி, எழு கதிர், தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.

இவர் பிறப்பால் பிராமணர் என்ற போதிலும்,  நால்வர்ணக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் பிராமணர்களுக்கு கடும் எதிர்ப்பு காட்டக் கூடியவர். அதே வேளையில், நால்வர்ணக் கொள்கையை எதிர்க்கும் பிராமணர்களை அணி சேர்ப்பதில் தவறில்லை என்றும் வாதிடுபவர்.

பொதுவுடைமைச் சிந்தனைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்ட  இவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நூலகத்தில் பதினான்கு ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அண்மையில் தம்மையும், தமது துணைவியாரையும் பராமரிக்கும் பொருட்டு சென்னையில் உள்ள தமது மகன் வீட்டிற்கு இடம் பெயர்ந்தார்.

அங்கு நிகழ்ந்த துணைவியாரின் மரணம் அவரை மிகவும் வாட்டி வதைத்தது.  இறுதியாக அவர் சென்னையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய "வெளியாரை வெளியேற்றுவோம்" மாநாட்டில் பங்கு கொண்டதோடு, தாம் எழுதிய " தமிழ் தமிழர் வளர்ச்சிக்கான படைப்புகள்" நூலை மாநாட்டில் பங்கு பெற்றவர்களுக்கு  இலவயமாக அளித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும்,  வீட்டிலிருந்த படியே தொலைபேசி வாயிலாக தமிழிய உணர்வாளர்களிடம் உரையாடுவதை வழக்கமாக்கி கொண்டார். அந்தப் பேறு பெற்றவர்களில் அடியேனும் நானும் ஒருவன். அவரின் இறுதி உரையாடல் யாரிடம் இருந்ததோ தெரியவில்லை. ஆனால், நேற்றிலிருந்து அவர் உரையாடுவதை  நிறுத்திக் கொண்டார்.

-கதிர்நிலவன்

பார்ப்பனத்தமிழர் இனப்பற்று 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக