வியாழன், 26 ஜூலை, 2018

காவிரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன? ஏன் தேவை?

aathi1956 aathi1956@gmail.com

மார். 15
பெறுநர்: எனக்கு



#காவேரி_மேலாண்மை_வாரியம் அமைப்பது தான் நிரந்தர தீர்வு என்று ஏன் சொல்கிறோம் ???
-----------------------------------------------------------------------
(காவிரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன?.... அதற்கான அதிகார எல்லைகள் எது?... அதை அமைக்காமல் இழுத்தடிப்பது ஏன்?.. அதை அமைத்துவிட்டால் முழுமையாக பிரச்சனை தீர்ந்துவிடுமா?
இதுதான் பலரின் மனதில் இருக்கும் கேள்வி. அதற்கான விரிவான பதிலை சகோதரர் Surya Xavier பதிவு செய்திருக்கிறார். அதில் சில திருத்தங்களை மட்டும் நான் செய்திருக்கிறேன்)
ஆண்டாண்டு காலமாக நீடித்துக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
உண்மையில், காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், தனது இறுதித் தீர்ப்பை முறையாகவும் உறுதியாகவும் அமல்படுத்த இரண்டு அமைப்புகள் வேண்டுமென்று சொல்லியிருந்தது.
அவை,
காவிரி மேலாண்மை வாரியம்
மற்றும்
காவிரி ஒழுங்காற்றுக் குழு.
அதோடு, அவற்றுக்கான பணிகளையும் அதிகார எல்லைகளையும் விரிவாக வரையறை செய்திருந்தது.
மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய மேலாண்மை வாரியத்துக்கு,
ஒரு முழு நேரத் தலைவரையும்
இரண்டு முழு நேர உறுப்பினர்களையும்
#மத்திய_அரசு நியமிக்க வேண்டும். இவர்கள், நீர்த்தேக்க நிர்வாகம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் 15 முதல் 20 ஆண்டுகள் விரிவான கள அனுபவமும் நிபுணத்துவமும் பெற்ற தலைமைப் பொறியாளர்களாக இருக்க வேண்டும்.
மேலும்,
தலைமைப் பொறியாளர் / ஆணையர் தகுதியுள்ளவர்களை பகுதி நேர உறுப்பினர்களாக மத்திய விவசாயத் துறையும் நீர்ப்பாசனத் துறையும் வாரியத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்.
அடுத்து,
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தலா ஓர் உறுப்பினரை வாரியத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்.
இவர்கள், பொதுப்பணி/விவசாயம்/நீர்வளத் துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் தகுதியில் இருக்க வேண்டும்.
இறுதியாக,
வாரியத்தின் செயலாளர். இவர் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சாராத கண்காணிப்புப் பொறியாளர் தகுதி கொண்டவர்.
வாரியத்தின் கூட்டத்தை நடத்துவதற்கு குறைந்தபட்ச எண்ணிக்கை (Quorum)
ஆறு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அது இல்லாததன் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட கூட்டத்தை அடுத்த மூன்று நாட்களுக்குள் கூட்டியாக வேண்டும். வாரியத்தில் விவாதிக்கப்பட்டு, எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் பெரும்பான்மை அடிப்படையிலானது.
#காவேரி_மேலாண்மை_வாரியம் அமைக்கப்பட்ட பிறகு,
#தமிழகத்தின் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர்,
#கர்நாடகத்தின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், கேரளாவின் பாணாசுரசாகர் ஆகிய அணைகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒருங்கிணைந்த "வழிகாட்டுதலின்படியே" சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இயக்கப்பட வேண்டும்.
#காவிரி_ஒழுங்காற்றுக்_குழுவை உருவாக்குவது மேலாண்மை வாரியத்தின் முதல் பணி.
மத்திய நீர்ப்பாசனத் துறையிலிருந்து ஒரு முழு நேர உறுப்பினர்,
சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள்,
மத்திய நீர் ஆணையத்தின் பிரதிநிதி,
மத்திய விவசாய அமைச்சகப் பிரதிநிதி,
காவிரி மேலாண்மை வாரியச் செயலாளர்
ஆகியோரைக் கொண்ட குழுவாக இந்த ஒழுங்காற்றுக் குழு நிறுவப்படும்.
ஒழுங்காற்றுக் குழுவின் முக்கியப் பணி,
அனைத்து அணைகளிலும் இருக்கும் நீரின் அளவு,
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு ஆகிய தகவல்களைச் சேகரிப்பது, வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நீரைத் திறந்துவிடுவது, பருவகால, வருடாந்திர அறிக்கை தயாரிப்பது ஆகியவை இந்த ஒழுங்காற்றுக் குழுவின் முக்கியமான பணிகள். இவற்றுக்குத் தேவைப்படும் பணியாளர்களை மேலாண்மை வாரியமே நியமித்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டின் ஜூன் முதல் தேதியன்று, அந்த ஆண்டுக்கான நீர்த் தேவை குறித்து ஒவ்வொரு மாநில அரசும் தத்தமது பிரதிநிதிகளின் வழியே மேலாண்மை வாரியத்துக்கு அறிக்கை தந்துவிட வேண்டும்.
பாசனப் பரப்பு, சாகுபடிப் பருவம் ஆகியவற்றை ஆய்வுசெய்து, நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரைத் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு உத்தரவிடுவது மேலாண்மை வாரியத்தின் பணி. பற்றாக்குறை காலங்களில், நடுவர் மன்றத் தீர்ப்பு குறிப்பிட்டிருக்கும் விகிதத்தின்படி நீர்ப்பங்கீட்டு அளவை வாரியம் நிர்ணயிக்கும்.
அணைக்கட்டுகளில் தேவைப்படும் ஹைட்ராலிக் கட்டமைப்புகளை உருவாக் கவும், அளவீட்டுக் கருவிகளைப் பொருத் தவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தர விடுவதும், பணிகளைக் கண்காணிப்பதும் வாரியத்தின் வரம்புக்கு உட்பட்டவை.
வாரியம் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும்
நீர்த் தேக்கங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரின் அளவு, மழைநீர் அளவு, திறந்துவிடப்பட்ட நீரின் அளவு, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு தொடர்பான விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கேட்டுப் பெற முடியும்.
மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்களாக நடுவர் மன்றம் கூறியது எதுவென்றால்
மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் விரும்பினால், எந்தவொரு அணைக்கட்டு, நீர்த் தேக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் நேரில் சென்று பார்வையிடுவது, தகவல்களைக் கோருவது, அளவீட்டுக் கருவியைப் பொருத்தும் பணிகளைப் பார்வையிடுவது, கேள்வி எழுப்புவது, குறைகளைச் சுட்டிக்காட்டுவது, தேவையெனில் பணிகளை நிறுத்துவது போன்றவற்றைச் செய்ய முடியும்.
சீனி.மாணிக்கவாசகம்

காவேரி நதிநீர் மத்திய அரசு நடுவணரசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக