வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இமயமலை தமிழர் தொடர்பு இலக்கியம் சான்று ஆதாரம் மண்மீட்பு தொடர் 3 4

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 10 ஜூலை, 2018, பிற்பகல் 4:36
பெறுநர்: எனக்கு

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 3

முன்னுரை:

இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாக மேலும் பல சான்றுகளை இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.


சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 4

மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு           
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும்       
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய       
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து       
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புறம் 2.

வரி விளக்கம்: 

மண் திணிந்த நிலனும் = மண் நிறைந்த இப் புவியும்
நிலம் ஏந்திய விசும்பும் = இப் புவியினைத் தாங்கிநிற்கும் வான்வெளியும்
விசும்பு தைவரு வளியும் = வான்வெளியினை வருடிக்கொடுக்கும் காற்றும்
வளி தலைஇய தீயும் = காற்றினால் தலையெடுக்கும் தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு     = தீயுடன் முரண்படுவதான நீரும் என்று   
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல = ஐம்பெரும் பூதங்களின் இயல்பான தன்மைகளைப் போல
போற்றார் பொறுத்தலும் = பகைவரைப் பொறுத்தலும்
சூழ்ச்சியது அகலமும் = சிந்தனையின் பரப்பும்
வலியும் தெறலும் அளியும் உடையோய் = வலிமையும் அழித்தலும் இரக்கமும் உடையவனே !
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் = உனது கிழக்குக் கடலில் தோன்றிய ஞாயிறானது மறுபடியும் உனது
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும்     = வெண் நுரை மேவிய மேற்குக் கடலில் மறைவதான   
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந = வளம் கொழிக்கும் பரந்த நாட்டின் தலைவனே !
வான வரம்பனை நீயோ பெரும = வானமே எல்லையாகக் கொண்டவன் நீ பெருமானே !
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ = அசைந்தாடும் தலையணி கொண்ட குதிரைவேந்தர்கள் ஐவருடன் பகைத்து
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை = அழகிய பூக்களுடைய தும்பைச்செடிகள் வளர்ந்திருக்கும் அம் மண்ணில்
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய = போரிட்ட நூற்றுவரும் போர்க்களத்திலே இறந்துபட   
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் = நிறைய சோற்றுடன் கள்ளையும் கணக்கின்றி கொடுத்தவனே !
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் = பால் புளித்துப்போனாலும் பகல்மாறி இருள்வந்தாலும்
நாஅல் வேத நெறி திரியினும் = நால்வேதங்கள் கூறும் நெறிமுறைகள் மாறினாலும்
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி = மாறாத சுற்றத்துடன் நெடுங்காலம் வாழ்ந்து
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை = துன்பமின்றி நிலைத்திருப்பாயாக !    
அடுக்கத்து சிறு தலை நவ்வி = மலைச்சாரலில் சிறிய தலையுடைய மான் குட்டியானது
பெரும் கண் மா பிணை = பெரிய கண்களையுடைய தனது தாயுடன்
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் = மாலைநேரத்தில் அந்தணர்கள் அந்திக்கடனின்போது ஏற்றுகின்ற
முத்தீ விளக்கில் துஞ்சும் = மூவகைத் தீயின் வெளிச்சத்தில் உறங்குவதான
பொன் கோட்டு இமயமும் = பொன்போல் ஒளிரும் உச்சியை உடைய இமயமலையினையும்
பொதியமும் போன்றே = பொதிகை மலையினையும் போல !!!

பொருள் விளக்கம்:

மண் நிறைந்த இப் புவியும் இப் புவியினைத் தாங்கிநிற்கும் வான்வெளியும் வான்வெளியினை வருடிக்கொடுக்கும் காற்றும் காற்றினால் தலையெடுக்கும் தீயும் தீயுடன் முரண்படுவதான நீரும் என்று ஐம்பெரும் பூதங்களின் இயல்பான தன்மைகளைப் போல பகைவரைப் பொறுத்தலும் சிந்தனையின் பரப்பும் வலிமையும் அழித்தலும் இரக்கமும் உடையவனே ! உனது கிழக்குக் கடலில் தோன்றிய ஞாயிறானது மறுபடியும் உனது வெண் நுரை மேவிய மேற்குக் கடலில் மறைவதான வளம் கொழிக்கும் பரந்த நாட்டின் தலைவனே ! வானமே எல்லையாகக் கொண்ட பெருமானே ! அசைந்தாடும் தலையணி கொண்ட குதிரைவேந்தர்கள் ஐவருடன் பகைத்து அழகிய பூக்களுடைய தும்பைச்செடிகள் வளர்ந்திருக்கும் அம் மண்ணில் போரிட்ட நூற்றுவரும் போர்க்களத்திலே இறந்துபட நிறைய சோற்றுடன் கள்ளினைக் கணக்கின்றி கொடுத்தவனே ! பால் புளித்துப்போனாலும் பகல்மாறி இருள்வந்தாலும் நால்வேதங்கள் கூறும் நெறிமுறைகள் மாறினாலும் மாறாத சுற்றத்துடன் மலைச்சாரலில் சிறிய தலையுடைய மான் குட்டியானது பெரிய கண்களையுடைய தனது தாயுடன் மாலைநேரத்தில் அந்தணர்கள் அந்திக்கடனின்போது ஏற்றுகின்ற மூவகைத் தீயின் வெளிச்சத்தில் உறங்குவதான பொன்போல் ஒளிரும் உச்சியை உடைய இமயமலையினையும் பொதிகை மலையினையும் போல நீ நெடுங்காலம் வாழ்ந்து துன்பமின்றி நிலைத்திருப்பாயாக !

மேல் விளக்கம்:

இப் பாடலில் மன்னனின் இயல்புகளை ஐம்பூதங்களின் இயற்கைத் தன்மைகளுடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. பகைவர்களின் தீமைகளைப் பொறுத்துக்கொள்வதில் பூமியைப் போலவும் தனது சிந்தனையின் பரப்பில் அதாவது பரந்த மனப்பான்மையில் வான்வெளியைப் போலவும் போரில் எதிரிகளைப் பந்தாடும் வலிமையில் சூறைக் காற்றினைப் போலவும் எதிர்த்து நிற்கும் பகைவர்களைக் கொன்று அழிப்பதில் தீயினைப் போலவும் இல்லை என்று இரந்தோரின் உள்ளத்தைக் குளிர்விப்பதில் நீரினைப் போலவும் விளங்குபவன் என்று மன்னனைப் புகழ்கிறார். இப்படிப் புகழும்போதே அம் மன்னனின் வீரம், கருணை, அறிவாற்றல், இனப்பற்று ஆகிய பண்புகளை அறியச் செய்துவிடுகிறார்.

அடுத்து, அம்மன்னன் ஆண்ட நிலப்பரப்பு பற்றிக் கூறுமிடத்துக் கதிரவனை உதவிக்கு அழைக்கிறார். கதிரவன் இவனது நாட்டின் கிழக்குக் கடலில் தோன்றிய பின்னர் இவனது நாட்டின் மேற்குக் கடலில் மறையுமாம். இதன் மூலம் அம் மன்னனது ஆட்சியின் கீழிருந்த நிலப்பரப்பானது கிழக்கில் வங்கக் கடலை ஒட்டியும் மேற்கில் அரேபியக் கடலை ஒட்டியும் இருந்திருக்கவேண்டும். அல்லது இந்த இரண்டு கடல்களுக்கு இடைப்பட்ட பகுதி முழுவதும் அவனது ஆட்சியின் கீழ் இருந்திருக்க வேண்டும். ஆனால் புலவரோ ' யாணர் வைப்பு ' என்று கூறுகிறார். பொதுவாக ஆற்றுவளம் மிக்க இடமே யாணர் வைப்பாக இருக்க முடியும். ஏனென்றால் இங்குதான் வளம் கொழிக்கும் என்பதுடன் நாள்தோறும் புதிய வருவாயும் கிடைக்கும். ஆக, புலவர் கூறும் ' யாணர் வைப்பு ' என்பது கங்கைஆறு பாயும் நிலப்பரப்பினையே குறித்திருக்க வாய்ப்புண்டு. அவ்வகையில் பார்த்தால், இம் மன்னனது ஆட்சிக்குக் கீழ் இருந்த நிலப்பரப்பானது தற்போதைய இந்தியாவில் குறைந்தபட்சம் மேற்கே குஜராத், ராஜஸ்தானிலிருந்து கிழக்கே மேற்குவங்காளம் வரை பரவி இருந்தது என்று முடிவு செய்யலாம்.

அடுத்து, இம்மன்னனின் தமிழினப் பற்றினை விளக்குகிறார். இம் மன்னனது ஆட்சிக் காலத்தில், தமிழ் இனத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஐவருக்கும் வேற்று இனத்தைச் சேர்ந்த எதிரி மன்னர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்த பெரும்போரில் வேற்றின மன்னர்கள் தோற்றுப்போயினர். பலநாட்கள் நடந்த இப்போரில் சிற்றரசர்கள் ஐவருக்கு உதவிசெய்யும் வகையில் அவர்களது போர்வீரர்களுக்குத் தேவையான சோற்றினையும் கள்ளினையும் இம் மன்னன் மிகுதியாக வழங்கியதைக் கூறுகிறார். இப்போரில் மன்னன் நேரடியாக ஈடுபடாமல் தமிழ் மன்னர்களுக்கு உதவி மட்டுமே செய்கிறான். காரணம், அவனது படைகளும் அப்போது வேறொரு போரில் ஈடுபட்டிருக்கக் கூடும். இதிலிருந்து, இப்போர் நடந்த இடமானது இவனது ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்புக்கு வெளியே இருப்பதுடன் வெகுஅருகிலும் தான் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்த இடத்தைப் பற்றி மேலும் ஆராயுமிடத்து, இது தற்போதைய ஹரியானா மாநிலத்தில் தும்பாஹேரி என்னும் இடத்திற்கு அருகில்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. அக் காலத்தில் தும்பைச் செடிகள் அதிகமாக வளர்ந்து சூழ்ந்திருந்த ஒரு ஏரியைச் சுற்றிய பகுதியாக இது இருக்க வேண்டும். இப்போதும் இந்த ஊருக்கு வெகு அருகில் பிந்தவாஸ் என்னும் ஏரி ஒன்று உள்ளது. பொதுவாக உணவு சமைப்பதற்கும் குடிப்பதற்கும் நல்ல நீர் தேவை. அதேசமயம், பல நாட்கள் தொடர்ந்து போர் நடக்கும்போது, போர்வீரர்களுக்குத் தேவையான உணவு சமைக்கவும் குடிப்பதற்கும் மிக அதிகமான நன் நீர் தேவைப்படும் இல்லையா?. இந்த நீர்த்தேவையினை தீர்த்துவைத்து போரில் வெற்றிபெற இந்த ஏரி பெரிதும் உதவியதால் இந்த இடத்திற்கு தும்பை ஏரி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதுவே தற்போது தும்பாஹேரி என்று மருவி வழங்கப்படுகிறது. இப் பாடலில் பாடப்பெறும் மன்னனின் ஆளுகைக்குட்பட்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வடமேற்கு திசையில் வெகுஅருகில் தான் இந்த தும்பாஹேரி அமைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தும்பாஹேரியானது குருஷேத்திரம் என்னும் ஊருக்கு அருகில் அமைந்திருப்பதால் ஒருவேளை இப்போரினைத் தான் பாண்டவர்கள் ஐவருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்த மகாபாரதப் போராகத் திரித்துக் கூறியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் இதனை மெய்ப்பிக்க மேலதிக தரவுகள் தேவைப்படுகிறது.

' காலம் மாறலாம். நம் காதல் மாறுமா?' என்ற பழைய திரைப்பாடல் ஒன்று உண்டு. ஆம், காலப்போக்கிலே காதல் மட்டுமல்ல பல உறவுகளும் பொருட்களும் மாறிப்போய் விடுகின்றன. நீண்ட நேரம் பாதுகாப்பின்றி வைத்திருந்தால் பால் கெட்டுப் புளித்துப்போய் விடுகிறது. கதிரவனின் ஒளியும் நீண்ட நேரம் நிலைத்து இருப்பதில்லை; இருள் சூழ்ந்து விடுகிறது. நால்வகை வேதங்களிலே சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகளும் கூட காலத்திற்கேற்ப மாற்றம் அடைந்துவிடுகின்றன. இப்படி அனைத்துமே காலமாற்றத்துக்கு உட்படும்போது உறவுகளும் அப்படித்தானே மாற்றமடையும்?. உறவுகள் மாற்றமடைந்துவிட்டால் விளைவு என்னாகும்?. வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்காது இல்லையா?. எனவே காலம் மாறினாலும் மாறாத கெடாத உறவுகள் தேவை. இப்படிப்பட்ட உறவுகள் ஒருவருக்கு அமைவதென்பது அவருக்குக் கிடைக்கும் வரம் என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு வரம் இம் மன்னனுக்கு கிடைக்கட்டும் என்று அவனை வாழ்த்துகிறார் புலவர். அப்படி வாழ்த்தும்போதுதான் இமயமலையினைப் பற்றியும் பொதிகைமலையினைப் பற்றியும் கூறுகிறார்.

இமயமலைச் சாரலில் மான்கள் கூட்டம் கூட்டமாக வாழும் என்று முன்னர் கண்டோம். அங்கு மான்கள் மட்டுமல்ல பல அந்தணர்களும் வாழ்ந்துவந்தனர் என்பதை இப் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது. இந்த அந்தணர்கள் வேதநெறிப்படி தீ வளர்த்து யாகம் செய்பவர்கள். அந்திநேரத்தில் இவர்கள் வளர்க்கும் யாகத்தீயின் வெளிச்சத்தில் மான்குட்டியானது தனது தாயுடன் உறங்குவதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் புலவர். இதிலிருந்து, யாகம் வளர்க்கும் இடத்திற்கு அருகில்தான் இவை இருந்திருக்க வேண்டும் என்றும் இக் காலத்தில் நாய். பூனை போன்றவற்றை செல்லப் பிராணிகளாக நம்முடன் வீட்டில் வளர்ப்பதைப் போல மான்கள் இந்த அந்தணர்களுடன் அச்சமின்றி பழகியிருக்க வேண்டும் என்றும் தெரிய வருகிறது. இப்படி இமயமலையின் விலங்குகளும் மனிதர்களுடன் உறவுபாராட்டும் நிலையில் ' நீயும் அந்த இமயமலையினைப் போல என்றும் மாறாத உறவுகளுடன் நெடுங்காலம் துன்பமின்றி வாழ்ந்து நிலைத்திருப்பாயாக 'என்று மன்னனை வாழ்த்துகிறார். இப்பாடலில் இமயமலையில் நடக்கும் நிகழ்வுகளை விளக்கமாகக் கூறுவதால் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப் பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம் என்பது துணிபாகும். 

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 5

இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து
நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல்
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி
கல்லா மழவர் வில் இடம் தழீஇ
வருநர் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே - அகம். 127

வரி விளக்கம்:

இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும் = ஒளிமிக்க கண்மையணி கெடுமாறு வருந்தி நாளும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய = கண்கலங்கி அழுதவாறு நாம் இங்கே தனித்திருக்க
வலம் படு முரசின் சேரலாதன் = வெற்றி முரசுடைய சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து = கடலில் பயணித்து கடம்பமரத்தினை வெட்டி இமயமலையில்
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து = அவனது முன்னோர்களைப் போலவே வில்கொடியினை ஏற்றி
நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார் = மாந்தை என்னும் நகருக்கு வெளியே அவனது எதிரிகள்
பணி திறை தந்த = பணிந்து கப்பமாகத் தந்த
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று = தங்கப்பதுமைகள் வயிரங்களுடன் யானை ஒன்றினையும்
பாடுசால் நன்கலம் வாய் நிறைய குவைஇ = பெருமைசான்ற தனது கப்பல் நிறைய ஏற்றிக் குவித்தபின்
அன்று அவண் நிலம் தின துறந்த நிதியத்து அன்ன = அங்கேயே விட்டுச்சென்ற மிச்சமான செல்வத்தைப் போல
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் = தேவையான செல்வத்தை ஒருநாளின் பகற்பொழுதிலே பெற்றுவிட்டால்
வழி நாள் தங்கலர் வாழி தோழி = மறுநாள் தங்கமாட்டார் தோழியே நீ வாழ்க
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர் = கரிய காலுடைய மராமரத்தின் வெண்ணிறப் பூங்கொத்துக்களை
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி = சுருண்டும் வளைந்தும் இருக்கிற தமது தலைமயிரில் அழகாக அணிந்த
கல்லா மழவர் செங்கோல் = ஆறலைக் கள்வர்கள் குருதி தோய்ந்த அம்பினைப் பூட்டிய
வில் இடம் தழீஇ = வில்லினை இடக்கையில் ஏந்தியவாறு
வருநர் பார்க்கும் வெருவரு கவலை = வருவோரைக் கொல்லக் காத்திருக்கும் அச்சம்மிக்க பாதையில் சென்று
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் = பிறமொழி பேசுவோரின் நாட்டிலே இருந்தாலும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே = பழிக்கு அஞ்சும் உன் காதலர் அந்த நாட்டில்.

பொருள் விளக்கம்:

தோழியே நீ வாழ்க ! ஒளிமிக்க கண்மையணி கெடுமாறு வருந்தி நாளும் கண்கலங்கி அழுதவாறு நாம் இங்கே தனித்திருக்க, கரிய காலுடைய மராமரத்தின் வெண்ணிறப் பூங்கொத்துக்களை சுருண்டும் வளைந்தும் இருக்கிற தமது தலைமயிரில் அழகாக அணிந்த ஆறலைக் கள்வர்கள் குருதி தோய்ந்த அம்பினைப் பூட்டிய வில்லினை தமது இடக்கையில் ஏந்தியவாறு வருவோரைக் கொல்லக் காத்திருக்கும் அச்சம்மிக்க பாதையில் சென்று தற்போது பிறமொழி பேசுவோரின் நாட்டிலே இருந்தாலும் உன் காதலர் பழிக்கு அஞ்சுபவர் என்பதால், வெற்றி முரசுடைய சேரலாதன் கடலில் பயணித்து கடம்பமரத்தினை வெட்டி அவனது முன்னோர்களைப் போலவே இமயமலையில் வில்கொடியினை ஏற்றி மாந்தை என்னும் நகருக்கு வெளியே அவனது எதிரிகள் பணிந்து கப்பமாகத் தந்த தங்கப்பதுமைகளையும் வயிரங்களையும் ஒரு யானையினையும் பெருமைசான்ற தனது கப்பல் நிறைய ஏற்றிக் குவித்தபின்னர் அங்கேயே விட்டுச்சென்ற மிச்சமான செல்வத்தைப் போல தேவையான செல்வத்தை ஒருநாளின் பகற்பொழுதிலே பெற்றுவிட்டால் மறுநாள் அந்த நாட்டில் தங்கமாட்டார்.

மேல் விளக்கம்:

இப் பாடல் அகத்திணையைச் சார்ந்ததாகவே இருந்தாலும் புறத்திணை சார்ந்த செய்திகள் இப்பாடலில் மிகுதியாகவே காணப்படுகிறது. பிறநாட்டுக்குச் சென்றிருக்கும் தலைவன், தேவையான அளவு பொருள் சேர்ந்ததும் தனது ஊருக்குத் திரும்பிவிடுவான் என்று கூறி தலைவிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதுதான் இப்பாடலின் மையக்கருத்து. இதை நேரடியாகக் கூறிவிட்டால் பாடலில் சுவை இருக்காது என்பதால் சேரலாதனின் வெற்றிகளையும் சேர்த்துக் கூறி பாடலுக்கு ஒரு வரலாற்றுச்சுவை கூட்டியிருக்கிறார் புலவர். 

சேரலாதனின் வெற்றிச்செயல்களைக் கூறுமிடத்து, அவன் வங்கக் கடலில் கப்பலில் பயணம் செய்ததையும் எதிரிகளின் நாட்டில் இருந்த கடம்ப மரத்தினை வெட்டி வீழ்த்தியதையும் இமயமலையில் தனது வில்கொடி ஏற்றியதையும் எதிரிகள் தனக்குக் கப்பமாகக் கட்டிய செல்வத்தைத் தனது கப்பல் நிறையும் அளவுக்குத் தங்கம், வயிரம் என்று ஏற்றியபின் கூடவே ஒரு யானையினையும் கொண்டுவந்ததையும் இப்பாடலில் கூறுகிறார். பொன் பொருளுடன் யானையையும் ஏற்றிக்கொண்டு வந்ததிலிருந்து சேரலாதனின் கப்பல் எவ்வளவு பெரியதாய் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, முன்னோர்களைப் போலவே சேரலாதனும் இமையமலையில் வில்கொடி ஏற்றினான் என்று கூறுவதிலிருந்து இவனுக்கு முன்னரே பல சேரமன்னர்கள் இமயமலையினை வென்று வில்கொடி ஏற்றி ஆண்டுவந்தனர் என்பது அறியப்பெறுகிறது. அப்படி இவனது முன்னோர் காலத்திலிருந்து இமயமலையில் சேரர்களின் ஆட்சிக்குட்பட்டு வந்த நகரங்களில் ஒன்றுதான் மாந்தை என்னும் நகரமாகும். 

சேரலாதனிடம் தோற்ற மன்னர்கள் இமயமலையின் மாந்தை நகருக்கு வெளியே பொன்னையும் வயிரங்களையும் கப்பமாகக் கொண்டுவந்து குவித்தனர். இவற்றில் தனக்குத் தேவையானதை மட்டும் தனது கப்பலில் ஏற்றிக்கொண்டு மீண்டும் வங்கக் கடலில் பயணித்துத் தென்னகம் திரும்புகிறான் இந்த சேரலாதன். இதிலிருந்து இந்த சேரலாதன் இந்தியாவின் தென்பகுதியினை ஆண்டுவந்தவன் என்று தெரிகிறது. இம் மன்னனும் இதற்கு முன்னால் கண்ட புறநானூற்றுப் பாடல் எண் 2 ல் பாடப்பெறுகின்ற தமிழ் மன்னர்கள் ஐவரின் வெற்றிக்குத் துணையாக உணவளித்து உதவிய மன்னனும் ஒருவரா இல்லை வேறா என்ற குழப்பம் தோன்றுகின்றது. காரணம், புறநானூற்றில் வரும் மன்னன் இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை ஆண்டு வந்தவன். இன்னும் பல தரவுகளை ஆய்வுசெய்த பின்னரே இதில் ஒரு முடிவு காணமுடியும்.

பாடலில் வரும் தலைவியானவள் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள மாந்தை நகரில் வசிப்பவள். எனவே இவள் சேரலாதனின் வெற்றியைப் பற்றியும் அவன் கப்பலில் பரிசுகளை ஏற்றிச் சென்றதையும் அறிவாள். இவளது கணவன் பொருள் ஈட்டும் முயற்சியாக மாந்தை நகரிலிருந்து பிறமொழி பேசுவோராகிய ஆரியர்கள் வாழும் இமயமலையின் வடக்குப் பகுதிக்குச் செல்கிறான். அப்படி அவன் போகும்வழியோ சாதாரணமானதல்ல. அவ் வழியில் செல்வோரை ஆறலைக் கள்வர்கள் கொன்று அவரிடமிருக்கும் பொருளை எடுத்துக்கொள்வார்கள். இந்த ஆறலைக் கள்வர்கள் பார்ப்பதற்குக் கரிய நிறத்தில் இருப்பார்கள். தலைவாராமல் சுருண்டும் வளைந்தும் நீக்ரோ இனமக்களைப் போல இருக்கும் தங்களது தலைமயிரில் வெண்ணிற மராமரப் பூக்களைச் சூடியிருப்பார்கள். இவர்களின் கண்ணில் படாமல் கவனமாக அப் பாதையினைக் கடந்துசெல்லவேண்டும். மலைப்பாதை என்பதால் ஒரே வழிதான்; வேறுவழியில்லை. கண்ணில் பட்டால் அம்பெய்து கொன்று விடுவார்கள். இப்படி உயிர் போகும் வாய்ப்பு இருப்பது தெரிந்தும் இல்லறத்திற்கான பொருள்தேட தலைவன் தலைவியைப் பிரிந்து அவ்வழியே செல்கிறான்.  இப்படிப் பிரிந்துசென்ற தலைவன், மன்னன் சேரலாதனைப் போலத் தனக்குப் போதுமான பொருள் ஒரேநாளில் கிடைத்துவிட்டாலும் உடனே திரும்பிவிடுவான்; அங்கே நீடித்துத் தங்கமாட்டான் என்று அழுது அழுது கண்மை கசங்கிய நிலையில் மனம் வெம்பிக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள் அவளது தோழி.

............ தொடரும்.....

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 4

முன்னுரை:

இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரங்களாக மேலும் சில சான்றுகளை இங்கே விரிவாகக் காணலாம்.



சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 6

வரை மருள் புணரி வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல்
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூர் உடை முழுமுதல் தடிந்த பேர் இசை               
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
மனால கலவை போல அரண் கொன்று               
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின்
கடி உடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்                   
போர் அடு தானை சேரலாத
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே               
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்னம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே    - பதிற். 11

வரி விளக்கம்:

வரை மருள் புணரி = மலைபோல எழுகின்ற உயரமான அலைகளையும்
வான் பிசிர் உடைய = தூறல் மழையினையும் உடையதாய்
வளி பாய்ந்து அட்ட = சூறைக்காற்றும் உடன்வீசி வருத்த
துளங்கு இரும் கமம் சூல் = இடியுடன் கூடிய கருமேகங்கள் சூழ்ந்திருந்த
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி = குளிர்ச்சிமிக்க அந்த பெரிய கடலிலே பயணித்து
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் = பேய்போல் தோற்றமுடைய அவுணர்கள் காவல்காக்கின்ற
சூர் உடை முழுமுதல் தடிந்த பேர் இசை    = கொடிய தெய்வமேறிய மரத்தினைப் பிளந்து பெரும்புகழ்பெற்ற       
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு = கடுஞ்சினமும் வெற்றியுமுடைய முருகன் யானையின் மேலமர்ந்து வருவதைப் போல
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப = குருதி தோய்ந்த வாளினால் எதிர்ப்படுவோரை வெட்டவும்
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் = உடலில் உண்டான புண்ணில் இருந்து வழியும் குருதியால்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து = நீலமணி போன்ற கழிமுக நீரின் நிறம் மாறி
மனால கலவை போல அரண் கொன்று = குங்குமக் கலவை போல ஆகுமாறு காவலை அழித்த       
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை = சிறந்த வலிமைகொண்ட உயர்ந்த தலைவனே !
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின் = பலரும் மொய்த்துப் பாதுகாத்த திரண்ட பூக்களுடைய கடம்பமரத்தின்
கடி உடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று  = பூசைசெய்த அடிப்பகுதி வெட்டுறுமாறு தாக்கி வென்று
எறி முழங்கு பணை செய்த வெல் போர் = போரில் வெற்றிமுரசு கொட்டியவனும்
நார் அரி நறவின் = நாரினால் கட்டிய மாலையைப் போன்றதும் நறுமணம் மிக்கதுமான                
ஆர மார்பின்    = செங்கடம்ப மாலையை அணிந்தவனும்
போர் அடு தானை சேரலாத = போரில் வெல்கின்ற பெரும்படையினை உடையவனுமாகிய சேரலாதனே !
மார்பு மலி பைம் தார் = மார்பினை நிறைக்கும் அழகிய மாலையுடன்
ஓடையொடு விளங்கும் = ஓடை எனும் அணியினை அணிந்த
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை = மேல்நோக்கிய தந்தங்களுடன் கூடிய குறையில்லாத யானையினது
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த = பொன் அணிந்த பிடரியின்மேல் அமர்ந்தவாறு விளங்கும்
நின் பலர் புகழ் செல்வம் = உன்னுடைய புகழ்மிக்க செல்வத்தால்            
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி = கவரிமானானது முருக்கமரங்கள் நிறைந்த சாரலில் தூங்கும்போதுகூட
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் = அருவிநீரையும் நரந்தப் புல்லையும் உண்பதாகக் கனவுகாண்கின்ற
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் = ஆரியர்கள் கூட்டமாக வாழ்கின்ற புகழ்பெற்ற இமயமலை முதலாக
தென்னம் குமரியொடு ஆயிடை = தெற்கிலே குமரியினை ஈறாகக் கொண்ட இடைநிலத்தில் உனது
மன் மீக்கூறுநர் மறம் தப = பெருமையினைப் புகழ்ந்தோரின் வறுமை ஒழிவதை
இனிது கண்டிகுமே கடந்தே = இனிதே கண்டவாறு கடந்துவந்தேன்.

பொருள் விளக்கம்:

மலைபோல எழுகின்ற உயரமான அலைகளையும் தூறல் மழையினையும் உடையதாய் சூறைக்காற்றும் உடன்வீசி வருத்த இடியுடன் கூடிய கருமேகங்கள் சூழ்ந்திருந்த குளிர்ச்சிமிக்க அந்த பெரிய கடலிலே பயணித்து குருதி தோய்ந்த வாளினால் எதிர்ப்படுவோரை வெட்டவும் உடலில் உண்டான புண்ணில் இருந்து வழியும் குருதியால் நீலமணி போன்ற கழிமுக நீரின் நிறம் மாறி குங்குமக் கலவை போல ஆகுமாறு காவலை அழித்த சிறந்த வலிமைகொண்ட உயர்ந்த தலைவனே! பலரும் மொய்த்துப் பாதுகாத்த திரண்ட பூக்களுடைய கடம்பமரத்தின் பூசைசெய்த அடிப்பகுதி வெட்டுறுமாறு தாக்கி வென்று போரில் வெற்றிமுரசு கொட்டியவனும் நாரினால் கட்டிய மாலையைப் போன்றதும் நறுமணம் மிக்கதுமான செங்கடம்ப மாலையை அணிந்தவனும் போரில் வெல்வதான பெரும்படையினை உடையவனுமாகிய சேரலாதனே ! பேய்போல் தோற்றமுடைய அவுணர்கள் காவல்காக்கின்ற கொடிய தெய்வமேறிய மரத்தினைப் பிளந்து பெரும்புகழ்பெற்ற கடுஞ்சினமும் வெற்றியுமுடைய முருகன் யானையின் மேலமர்ந்து வருவதைப் போல மார்பினை நிறைக்கும் அழகிய மாலையுடன் ஓடை எனும் அணியினை அணிந்த மேல்நோக்கிய தந்தங்களுடன் கூடிய குறையில்லாத யானையினது பொன் அணிந்த பிடரியின் மேலமர்ந்து விளங்கும் உன்னுடைய புகழ்மிக்க செல்வத்தால் கவரிமானானது முருக்கமரங்கள் நிறைந்த சாரலில் தூங்கும்போதுகூட அருவிநீரையும் நரந்தப் புல்லையும் உண்பதாகக் கனவுகாண்கின்ற ஆரியர்கள் கூட்டமாக வாழ்கின்ற புகழ்பெற்ற இமயமலை முதலாக தெற்கிலே குமரியினை ஈறாகக் கொண்ட இடைநிலத்தில் உனது பெருமையினைப் புகழ்ந்த புலவர்களின் வறுமை ஒழிவதை இனிதே கண்டவாறு கடந்துவந்தேன்.

மேல் விளக்கம்:

சேரலாதனின் வீரத்தினை விரிவாகக் கூறும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். சேரலாதனின் படைகள் போர்புரிவதற்காகக் கப்பல்களில் பயணிக்கும்போது கடலின் நிலை எவ்வாறு இருந்தது என்பதனை நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் புலவர். கடல் கொந்தளித்ததோ என்று எண்ணும் அளவுக்கு மலை உயரத்திற்கு அலைகள் எழுகின்றனவாம்; புயல் காற்று வேறு வீசி கப்பல்களை அலைக்கழிக்கிறதாம்; பலத்த இடியுடன் மழையும் சேர்ந்துகொள்ள, கார்மேகங்கள் கூட்டம் கூட்டமாய் வானில் இருந்தவாறு கப்பல்களின் தள்ளாட்டத்தினை வேடிக்கை பார்க்கிறதாம். இப்படியொரு பயங்கரமான இயற்கை சீற்றத்திற்கு இடையில் உயிரைப் பணயம் வைத்து வங்கக் கடலில் பயணிப்பதற்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும் இல்லையா?. அது சேரலாதனிடம் நிறையவே இருக்கிறது என்று முதல் வரிகளிலேயே உணர்த்திவிடுகிறார் புலவர்.

அடுத்த வரிகளில் எதிரி நாட்டில் சேரன் நடத்திய வீர விளையாட்டினை விவரிக்கிறார். வங்கக் கடலில் பயணித்து எதிரி நாட்டு கடல் எல்லையைக் கடக்கும்போதே எதிரி வீரர்கள் தாக்குவதற்காக திரண்டு ஓடி வருகின்றனர். அப்படி எதிரில் வருவோர் அனைவரையும் தனது வாளினால் வெட்டிக்கொல்கிறான். வெட்டுண்டு இறந்து வீழ்வோரின் உடலில் இருந்து பெருகி வழியும் குருதியானது அருகில் இருந்த கடற்கழியின் நீரில் கலக்க, அது குங்குமக் கலவை போல செந்நிறமாய் மாறுகிறது. அடுத்து, சேரலாதனின் பார்வை எதிரிகள் தமது தெய்வம் போல பூசித்துவருகின்ற காவல் மரமான கடம்ப மரத்தினை நோக்கித் திரும்புகிறது. அம் மரத்தினை நெருங்க விடாமல் சுற்றிலும் காவல் காத்தவாறு ஏராளமான எதிரி வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அந்தக் காவல் மரத்தினை அடியோடு வெட்டி வீசுகிறான். எதிர்த்தோர் அனைவரும் உயிரற்று மண்ணில் வீழ்ந்துகிடக்க, வெற்றி முரசு அடிக்கப்பட, தனக்குரிய யானையின் மேல் அமர்ந்தவாறு நாட்டுக்குள் செல்கிறான் சேரலாதன்.

போரில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற பழிகள் / குறைகள் அதாவது காயங்கள், வெட்டுக்கள் போன்ற எதுவும் இல்லாமல் பொன்னால் செய்த ஓடை என்னும் அணியினை அணிந்தவாறு மேல்நோக்கிய தந்தங்களுடன் கம்பீரமாக நடந்துசெல்லும் அந்த யானையின்மேல் மார்பில் மாலை அணிந்தவாறு வீற்றிருக்கும் சேரலாதனைக் கண்டதும் புலவருக்கு ஏனோ முருகனின் நினைப்பு வருகிறது. பதுமாசுரன் என்ற அரக்கர் தலைவனை முருகன் கொன்ற நிகழ்ச்சியினை நினைவுகூர்கிறார். பேய்போன்ற உருவமுடைய அரக்கர்களின் காவல் தெய்வமான பதுமாசுரன் முருகனுக்குப் பயந்து மாமரத்தில் சென்று ஒளிந்துவிடுகிறான். அம் மரத்தைச் சுற்றிலும் பல அரக்கர்கள் காவலாக இருக்க, அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அம் மரத்தினையும் அடியோடு வெட்டிவீழ்த்தியபின், தனக்குரிய யானையின்மேல் அமர்ந்தவாறு பெரும்புகழுடன் முருகன் சென்றதனை இங்கு கூறியதன் மூலம், மலைநாட்டு மன்னனாம் சேரலாதனைக் குறிஞ்சிக் கிழவனாம் முருகனுடன் மறைமுகமாக உவமைப்படுத்துகிறார் புலவர்.

பொதுவாக தமிழ்ப் புலவர்கள், தமிழ் மன்னர்களின் வீரத்தை மட்டுமின்றி அவர்களின் ஈரத்தையும் அதாவது உதவிசெய்யும் பண்பினையும் மறக்காமல் போற்றுவார்கள். அவ்வகையில், இப் பாடலிலும் சேரலாதனின் கருணையினைப் போற்ற புலவர் மறக்கவில்லை. வடக்கில் இமயமலை முதலாக தெற்கில் குமரி வரையிலான இடைப்பட்ட பகுதி முழுவதும் சேரலாதனின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததாகவும், அப் பகுதியில் வாழ்ந்த புலவர்கள் சேரலாதனின் பெருமைகளைப் புகழ்ந்துகூறி வறுமைத் துன்பமே அறியாத வண்ணம் வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார். இப்படி பல்லோரும் புகழ்ந்து ஏத்துகின்ற சேரலாதனின் பெருஞ்செல்வம் தனது வறுமையினையும் போக்காதா என்ற புலவரின் ஏக்கம் இப்பாடலில் தொக்கிநிற்கிறது.

இப்பாடலில் வரும் ஆரம் என்பது செங்கடம்பு மரத்தினைக் குறிக்கும். கடம்ப மரத்தில் பலவகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று தான் ஆரம் என்றும் செங்கடம்பு என்றும் அழைக்கப்படும் சமுத்திரப்பழ மரமாகும். ஆங்கிலத்தில் இது barringtonia acutangula என்று அழைக்கப்படும். பேருக்கேற்றாற்போல இம் மரங்கள் கடற்கரையினை ஒட்டிய பகுதிகளில் தான் அதிகம் காணப்படுகின்றன. இம் மரத்தின் பூக்கள் மிக்க நறுமணம் கொண்டவை. அதுமட்டுமின்றி, நார்கொண்டு கட்டிய பூமாலையினைப் போல இம் மரத்தின் பூக்கள் இயற்கையாகவே ஒரு மலர்மாலையினைப் போல மரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் அழகே தனிதான். அருகில் இதன் படம் இணைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு எப்படி இந்த செங்கடம்பு மலர்மாலையினைப் பிடிக்குமோ அதைப்போல சேரலாதனுக்கும் இந்த மாலையினைப் பிடித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. காரணம், இம் மலரை அணிய நார்கொண்டு கட்டத்தேவையில்லை. மரத்தில் இருந்து அப்படியே இரண்டு மலர்ச்சரங்களைப் பறித்தெடுத்து முனைகளில் முடிச்சுபோட்டு கழுத்தில் மாலையாக அணிந்துகொள்ளலாம்.

இமயமலையினைப் பற்றிக் கூறுமிடத்து, ஆரியர்களைப் பற்றியும் கவரிமான்களைப் பற்றியும் கூறுகிறார். ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்வதாகவும், மலைச்சாரலில் வாழும் கவரிமான்கள் முருக்கமரங்களின் நிழலில் தூங்கும்போதுகூட நரந்தம் எனப்படும் எலுமிச்சைப் புற்களை உண்டு அருவி நீரைப் பருகுவதாகக் கனவுகாண்பதாகவும் கூறுகிறார். உண்பதற்கு நறுமணம் மிக்க எலுமிச்சைப்புல், பருகுவதற்குச் சுவையான அருவிநீர், படுத்து உறங்குவதற்கு செம்பட்டுப் போன்ற முருக்கமலர்கள் தூவிய மெத்தை.. ஆகா, இந்தக் கவரி மான்களுக்குத்தான் என்ன ஒரு இனிமையான வாழ்க்கை இல்லையா?. கவரி மான்களுக்கு அமைந்த இதுபோன்றதோர் இனிய வாழ்க்கை சேரலாதனின் செல்வத்தால் தனக்கும் அமையவேண்டும் என்பதே புலவரின் ஆசை.  இமயமலையினைப் பற்றி விளக்கமான செய்திகளைக் கூறுவதால் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு அரணாக இந்தப் பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம் என்பது துணிபாகும்.

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 7
செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே - புறம். 214

வரி விளக்கம்:
செய்குவம் கொல்லோ நல்வினை எனவே = ஆதலால் நல்ல செயல்களையே செய்வோமாக
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி = நீங்காத ஐயங்களும் குற்றமுள்ள அறிவும்
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே = பொருந்திய உள்ளத்தில் உறுதியும் இல்லாதவர்களே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே = யானையை வேட்டையாடியவன் யானையுடன் வருவதும்
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே = காடையை வேட்டையாடியவன் வெறுங்கையுடன் வருவதும் உண்டு
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு = அதனால் உயர்ந்த நோக்கத்தினை உடைய பெரியோருக்கு
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் = செய்யும் வினைப்பயன் வழியாக அடையமுடிவதாக
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் = குறையேதுமில்லா சொர்க்கவாழ்வும் கைகூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின் = குறையேதுமில்லா சொர்க்கவாழ்வு கைகூடாவிட்டாலும்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் = மாறிமாறித் தோன்றுவதாகிய பிறப்பிலிருந்து விடுதலையும் கைகூடும்
மாறி பிறவார் ஆயினும் = மாறிப்பிறவாமல் மனிதராகவே பிறந்தார் என்றால்
இமயத்து கோடு உயர்ந்து அன்ன = இமயமலையின் உயரமான உச்சியைப் போல
தம் இசை நட்டு = தமது உயர்ந்த புகழினை நிறுவி
தீது இல் யாக்கையொடு = தீமை செய்யாத உடலினராய்
மாய்தல் தவ தலையே = இறப்பதே மிகச் சிறப்பானது.

பொருள் விளக்கம்:

நீங்காத ஐயங்களும் குற்றமுள்ள அறிவும் பொருந்திய உள்ளத்தில் உறுதியும் இல்லாதவர்களே ! யானையை வேட்டையாடியவன் வெற்றிபெற்று யானையுடன் வருவதும் உண்டு; காடையை வேட்டையாடியவன் தோல்வியுற்று வெறுங்கையுடன் வருவதும் உண்டு. அதனால் எப்போதும் உயர்ந்த நோக்கத்தினையே உடைய பெரியோருக்குச் செய்யும் வினைப்பயன் வழியாக அடையமுடிவதாகக் குறையேதுமில்லா சொர்க்கவாழ்வும் கைகூடும். ஒருவேளை குறையேதுமில்லா சொர்க்கவாழ்வு கைகூடாவிட்டாலும் மாறிமாறித் தோன்றுவதாகிய பிறப்பிலிருந்து விடுதலையும் கைகூடும். ஒருவேளை மாறிப்பிறவாமல் மனிதராகவே பிறந்துவிட்டார் என்றால் இமயமலையின் உயரமான உச்சியைப் போல தமது உயர்ந்த புகழினை நிறுவி யாருக்கும் தீமை செய்யாத உடலினராய் இறப்பதே மிகச் சிறப்பானது. ஆதலால் இனி நாம் நல்ல செயல்களையே செய்வோமாக !.

மேல் விளக்கம்:

வாழ்வியல் குறித்த அறிவுரைகளைத் தரும் பல புறநானூற்றுப் பாடல்களில் மிகச் சிறந்த பாடல் இதுவாகும். வாழ்க்கையில் எப்போதும் நல்ல செயல்களையே செய்யவேண்டியதன் தேவையினை மிகத் தெளிவாகச் சில சான்றுகளுடன் விளக்குகிறார் புலவர். அதேசமயம், ஒருவர் கெட்ட செயல்களை ஏன் செய்கிறார் என்பதற்கான காரணங்களையும் கூறுகிறார். நீங்காத ஐயங்கள், குற்றமுள்ள அறிவு, உள்ள உறுதியின்மை ஆகியவையே குற்றங்கள் செய்வதற்கான அடிப்படை என்று விளக்குகிறார்.

நீங்காத ஐயங்கள் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம். நம்மாலும் பிறருக்கு நன்மை செய்யமுடியுமா?, நன்மை செய்வதால் நாம் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வோமா?. எப்படி பிறருக்கு நன்மையைச் செய்வது?. பிறருக்கு நன்மை செய்வதால் நமக்கேதும் பலனுண்டா?. - இதைப்போன்ற பல ஐயப்பாடுகள் நம்மில் பலர் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. இவற்றைக் கேள்விக்குரியாகவே என்றும் மனதில் பொதிந்துவைத்திருக்கக் கூடாது. இவற்றுக்கான விடைகளை முயன்று கண்டறிந்து தெளிவுபெற வேண்டும். அப்போதுதான் நாம் பிறருக்கு நன்மை செய்யவேண்டியதன் தேவையினைப் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்துவருவது குற்றமுள்ள அறிவு. தீமையை நன்மையாக அதாவது தவறாகப் புரிந்துகொள்கின்ற அறிவே குற்றமுள்ள அறிவாகும். தெளிவாகச் சொல்வதென்றால் பிறருக்குச் செய்யும் தீமையை தனக்குச் செய்யும் நன்மையாகப் புரிந்துகொள்வது. திருட்டு, கொலை, வழிப்பறி, மோசடி போன்றவை யாவும் பிறருக்குச் செய்யப்படும் தீமைகள். இவற்றைத் தனக்கு நன்மை தருபவையாக எண்ணச்செய்வது குற்றமுள்ள அறிவு. குற்றமுள்ள அறிவுடையவன் ஒருபோதும் பிறருக்கு நன்மை செய்யமாட்டான். இத்தகைய அறிவு ஒருவருக்குத் தோன்றக் காரணம் மேலே நாம் கண்ட நீங்காத ஐயங்களே. ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள முயலாமல் அப்படியே விட்டுவிடும்போது நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணமே தகர்ந்து தீமையினையே நன்மையாகக் கருதுகின்ற குற்றமுள்ள அறிவு தலையெடுக்கிறது.

அடுத்து வருவது உள்ளத்தில் உறுதியின்மை. நீங்காத ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு தெளிவாக உணர்ந்தாலும் தீமையினை விடுத்து நன்மையினைச் செய்ய உள்ளத்தில் உறுதி வேண்டும். உள்ள உறுதி இல்லாதவர்களால் தொடர்ந்து நன்மை செய்ய இயலாது. இப்படிப் பட்டவர்கள் ஒரு உந்துதலில் அல்லது ஒரு சூழ்நிலையில் நன்மை செய்வர். உந்துதல் விலகியதும் அல்லது சூழல் மாறியதும் மறுபடியும் தீமை செய்யத் தொடங்கிவிடுவர். எந்தச் சூழ்நிலையிலும் பிற உயிர்களுக்குத் தீமை செய்யாமல் இருப்பதற்கு நெஞ்சுரம் வேண்டும். நெஞ்சுரம் மிக்கவர்கள் தம் இன்னுயிர் போவதாயினும் பிறருக்குத் தீமை செய்யமாட்டார்கள். இதைப்பற்றி வள்ளுவரும் பல குறள்களில் விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

பிறருக்குத் தீமை செய்வது மிக எளிதானது; ஆனால் நன்மை செய்வது மிகக் கடினமானது என்னும் கருத்தினை விளக்குவதற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களைக் கூறுகிறார் புலவர். செய்வதற்கு மிக எளிதானது என்று எண்ணி காடையினை வேட்டையாடச் சென்றவன் தோல்வியுற்று வெறுங்கையுடன் வருவதுண்டு. அதேசமயம், செய்வதற்குக் கடினமான வேலையாக இருந்தாலும் யானையை வேட்டையாடச் சென்றவன் வெற்றிபெற்று யானையுடன் வருவதுமுண்டு. ஆக, ஒரு வினையைச் செய்ய முற்படும்போது அது எளிதானதா கடினமானதா என்ற அடிப்படையில் வினையைத் தேர்ந்தெடுக்காமல் நோக்கத்தின் அடிப்படையில் தான் தெரிவுசெய்ய வேண்டும். செய்வதற்குக் கடினமாகவே இருந்தாலும் நமது செயல்களின் நோக்கம் உயர்வாகவே இருக்கவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பிறருக்குத் தீமை தராமல் நன்மை தரும் செயல்கள் எவையோ அவையே உயர்ந்த நோக்கம் கொண்டவை.

சரி, இவ்வளவு கடினங்களைச் சந்தித்து பிறருக்கு நன்மை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?. இக் கேள்விக்கும் விடை சொல்கிறார் புலவர். உயர்ந்த நோக்கமுடைய பெரியோரால் தொடர்ந்து செய்யப்படும் நற்செயல்களின் பயனாக அவர்களுக்குத் தொய்யா உலகமாகிய சொர்க்கத்தில் வாழ்வு கிடைக்கும் என்கிறார். ஒருவேளை சொர்க்கவாழ்வு கிட்டாமல் போனாலும் மாறிமாறிப் பிறப்பதாகிய இந்தப் பிறவித்தளையில் இருந்தேனும் விடுதலை கிடைக்கும் என்கிறார். ஒருவேளை பிறவித்தளையில் இருந்து விடுதலை கிட்டாமல் மறுபடியும் பிறக்க நேரிட்டால் அவர்கள் மனிதராகவே பிறப்பர் என்றும் அப்படிப் பிறந்தபோதும் அவர் தமது மன உறுதியினைக் கைவிடாமல் பிறருக்குத் தீமை செய்யாமல் தொடர்ந்து நன்மையே செய்யவேண்டும் என்கிறார். அப்படிச் செய்வதால் அவரது புகழானது உயரமான உச்சியினை உடைய இமயமலையைப் போல உயர்ந்து விளங்குவதுடன் இமயமலையானது உயரம் குன்றாமல் என்றும் வாழ்வதைப் போல அவர் தமது பூதவுடல் மறைந்தாலும் புகழுடலால் மண்ணில் என்றும் வாழலாம் என்கிறார்.

" பிறருக்கு எப்போதும் நன்மை செய்வதால் சொர்க்கவாழ்வு கிடைக்காமல் போகலாம்; பிறவித்தளையிலிருந்து விடுதலை கிட்டாமல் போகலாம்; ஆனால் இமயமலை போல என்றும் குன்றாத உயர்ந்த புகழுடன் மண்ணிலேயே வாழ்வது மட்டும் உறுதியாகும். எனவே இனி நாம் பிறருக்கு நன்மையே செய்வோமாக " என்று கூறித் தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துகிற இப் புலவரின் நுண்மாண் நுழைபுலம் என்னே என்னே !!. இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்வதில் தவறில்லை. 

........... தொடரும்............
நேரம் டிசம்பர் 01, 2016
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக