வெள்ளி, 22 டிசம்பர், 2017

காளி கொற்றவை பாலை தெய்வம் வழிபாடு மதம் கடவுளர் பெண்

aathi tamil aathi1956@gmail.com

அக். 15
பெறுநர்: எனக்கு
அழகன். விம
பாலைத் தெய்வம்:
நீர்நிலைகளெல்லாம் வற்றி வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலைநிலம்,
போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழ்ங்
காடாதலால், பிணந்தின்னும் பேய் கட்குத் தலைவியாகிய காளியே அதற்குத்
தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில்
பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப் பரணிப் பகுதிகளாலும்,
தெளிய அறிக.
பேய்நிறங் கருப்பாதலால், கருப்பு என்பதே பேயைக் குறிக்கும் பண்பாகு
பெயராயிற்று. பேய்கட்குத் தலைவியாகிய காளியும், அக் கரணியம் பற்றியே அப்
பெயர் பெற்றாள். அதனால் நீலியென்றும் அவட்குப் பெயர். கள் - காள் - காளம்
- காளி = கருப்பி. நீலம் (கருப்பு) - நீலி. கருப்பி என்றும் நீலி என்றும்
பெண்டிர்க்கு இடும் பெயரெல்லாம் காளி பெயரே. காளி பாலை யாகிய
காட்டிற்குத் தெய்வமானதனால், காடு கிழவோள்(- காடு கிழாள் - காடுகாள்)
என்று சொல்லப்பட்டாள். அவள் என்றும் இளமையானவள் என்னுங் கருத்துப்பற்றி,
கன்னி குமரி யென்றும் பெயர் பெற்றாள். எல்லார்க்குந் தாய்போன்றவள் என்று
கருதி, அம்மை என்றும் அவளைக் குறித்தனர். கருப்பாய், நீலம்மை, அங்காளம்மை
என்னும் பெயர்கள் அக் கருத்துக் கொண்டன. ஏராளமாகப் பிணங்கள் விழும்
போருக்குத் தலைவி என்பதுபற்றி, அமரி சமரி என்றும், சூலத்தைப் படையாகக்
கொண்டமையாற் சூலி யென்றும், காளிக்குப் பெயர்கள் தோன்றின. போர்
வெற்றியும் அவளால் தரப்படுவதென்று கருதி, அவளைக் கொற்றவை என்றனர்.
கொற்றம் - வெற்றி. அம்மை - அவ்வை = தாய். கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை -
கொற்றவை.
காளி மாபெரு மறத்தியாதலால், அவளுக்கு அரிமாவும் விரைந்து பாய்ந்தோடுங்
கலைமானும் ஊர்தியாயின. அவள் மறத் தினாலேயே, அம்மை யென்னும் பெயர் அம்மன்
எனத் திரிந்தது.
பாலைவாணரான எயினரும் வேட்டுவரும் மறவரும், தமக்கு நில விளைச்சலின்மையால்,
ஆறலைத்தற்கு வழிப்போக்கரை வருவிப்பது காளியரு ளென்று நம்பினர்.
பாலைநிலத்திற்குரிய வேனிற் காலத்திற் காணுங் கொப்புள நோய், அம்மையாகிய
காளியின் சினத்தால் நேர்வதென்று கருதி, அதற்கு 'அம்மை' நோய் என்றே
பெயரிட்டனர்.
அம்மைநோய் மக்களெல்லார்க்கும் பொதுவாதலால், அதை நீக்குமாறு காளி வணக்கம்
நாளடைவில் நானிலத்திற்கும் பொது வாயிற்று; ஊர்தொறும் காளிகோயில்
தோன்றிற்று.
மூவேந்தரும் போர் வெற்றியை விரும்பினதினாலும், பாலை வாணர் படையாகிய
காட்டுப் படையைத் துணைக்கொண்டிருந்தத
னாலும், போர்த் தொடக்கத்திற் கொற்றவை வழிபாடு இன்றியமை யாததாயிற்று.
"மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே" (புறத். 4)
என்று, தொல்காப்பியம் கூறுதல் காண்க. இங்ஙனம் காளிவணக்கம் பொதுவியலும்
வேத்தியலு மாயிற்று.
தெய்வமேறி யாடுபவர், ஆடவராயின் தேவராளன், மருளாளி யென்றும்; பெண்டிராயின்
தேவராட்டி, சாலினி என்றும், பெயர் பெறுவர். காளி பெண்தெய்வ மாதலின்,
அணங்காடுபவள் பெரும் பாலும் சாலினியே யென்பது, 'வேட்டுவ வரி'யால் அறியக்
கிடக்கின்றது. மருளாளியும் சாலினியும், ஆடுகளின் அல்லது ஆட்டுக்
குட்டிகளின் பச்சை யரத்தத்தைக் குடிப்பது முண்டு.
சேவல், ஆட்டுக்கடா, எருமைக்கடா ஆகியவை, காளிக்குக் காவு கொடுக்கப்பட்டன.
ஆரியர் வருமுன்னரே தமிழர் வடநாட்டிற் போய்ப் பரவி யிருந்ததனால்,
வங்கநாட்டிற் காளிக்கோட்டம் கட்டப்பட்டது. அதன் பெயரே அஃதுள்ள
நகருக்குமாகி, இன்று ஆங்கில வழியாய்க் கல்கத்தா என்று திரிந்து
வழங்குகின்றது.
காளி கடுஞ்சினத் தெய்வமாகக் கருதப்பட்டதனால், அலகு குத்துதல், உருமத்தில்
உருண்டு வலம்வரல், தீமிதித்தல், செடிற் குத்துதல் (hook-swinging) முதலிய
அஞ்சத்தக்க முரட்டு வினைகள் பத்திச் செயல்களாக நேர்ந்துகொள்ளப்பட்டன.
(பாவாணர் தமிழர் மதம் பக்கம் 27,28,29)


துர்க்கை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக