வெள்ளி, 22 டிசம்பர், 2017

ஜே.சி.குமரப்பா வாழ்க்கை காந்திய தற்சார்பு பொருளாதாரம் டிராக்டர் சாணி போடாது

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
காந்தியை மிஞ்சிய காந்தியவாதி!
தஞ்சாவூர்க் கவிராயர்
Published :  05 Jan 2017  10:14 IST Updated :  16 Jun 2017  11:42 IST
மேற்கத்திய பாணி உடை, ஆங்கிலம் என்று துரைமார் தோற்றத்தில் இருந்த
மனிதர், பின்னாட்களில் இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு எளிய
உடைகளுடன், தவறாத நேர்மையுடன் உழைத்தார் என்று சொன்னால், காந்தியைக்
குறிப்பிடுவதாகக் கருதுவோம். ஆனால், இவர் காந்தியையும் மிஞ்சிய
காந்தியவாதி. ஜே.சி.குமரப்பா! காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார
வடிவம் அமைத்துக் கொடுத்தவர்.
தஞ்சாவூரில் சாலமன் துரைசாமிக்கும் எஸ்தர் அம்மையாருக்கும் ஒன்பதாவது
குழந்தையாக 1892 ஜனவரி 4-ல் பிறந்தவர் குமரப்பா. இவரது இயற்பெயர்
செல்லத்துரை. பிரிட்டனில் கணக்குப் பரிசோதனைப் படிப்பில் உயர்கல்வி
பயின்று, அமெரிக்காவில் பொருளாதாரம் பயின்றார். அமெரிக்காவில் மாணவராக
இருந்தபோதே தமது ஆய்வுக்கென இந்திய மக்களைப் பற்றி அவர் சேகரித்த
தகவல்கள் இந்தியாவை உறிஞ்சி வாழும் இங்கிலாந்தின் உண்மை உருவத்தை
அம்பலமாக்கியது. மாணவப் பருவத்தில் 'இந்தியா வறுமைப்பட்டது ஏன்?' என்ற
தலைப்பில் இவர் ஆற்றிய உரையை 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டது.
திருடனும் வணிகனா?
இவரது பொருளியல் ஆசிரியர் டாக்டர் தேவன் போர்டுடன் ஏற்பட்ட கருத்து
மோதல்தான் காந்தியிடம் இவரைக் கொண்டுவந்து சேர்த்தது. ஒரு கருத்தரங்கில்,
"வர்த்தகப் பொருளாதாரத்தில் சுயலாபம் ஒன்றே குறிக்கோள். அங்கே எந்தவிதமான
கோட்பாடுகளுக்கும், லட்சியங்களுக்கும் இடமில்லை. திருடன் ஒருவன்
கன்னக்கோல் கொண்டு கொள்ளையிட்டுப் பணம் சேர்த்தால், அவனும் ஒரு நல்ல
வணிகனே" என்று வாதிட்டார் தேவன்போர்டு. அவரை எதிர்த்து வாதிட்ட குமரப்பா,
"அறம் சாராத பொருளாதார அமைப்பு மனசாட்சிக்கு விரோதமானது. மனிதன் வெறும்
பணம் திரட்டும் யந்திரமல்ல. அறமற்ற பொருளாதாரம் உயிரற்ற உடல்தான்" என்று
உறுதிபடக் கூறினார். பேராசிரியருக்கு ஆத்திரம் உண்டானாலும் குமரப்பாவின்
விவாதத் திறமையை மெச்சினார்.
காந்தியடிகள் நேர மேலாண்மையைத் தீவிரமாகக் கடைப் பிடிப்பவர் என்பதை
அறிவோம். ஆனால், ஒப்புக்கொண்ட வேலை நிறைவடையாத நேரத்தில், காந்திஜியே
தன்னைச் சந்திக்க விரும்பியபோது, பேச அவகாசமில்லை என்று கூறி அவரைத்
திருப்பி அனுப்பியவர் குமரப்பா. ஒரு முறை, பிஹார் பூகம்ப நிவாரண வேலையில்
ஈடுபட்டிருந்தபோது, நிவாரணப் பணிகளைப் பார்வையிட வந்திருந்த
காந்தியடிகளுக்கு எல்லோரையும்போல ஒரு நாள் உணவுக்காக மூன்று அணாதான்
கொடுக்க முடியுமென்று கூறிவிட்டார் இவர். காந்தியடிகளே தலையிட்டு, 'நான்
வந்தது நிவாரணப் பணிக்காக என்பதால், செலவை அந்த நிதியில் ஏற்கலாம்' என்று
கூறியபோதும்கூட, வகுக்கப்பட்ட விதிமுறைகளை யாருக்காகவும் மீற முடியாதென
உறுதியாகச் சொல்லிவிட்டார்.
முதல் சந்திப்பு
பொதுப் பணத்தைக் கையாள்வதில் தனது குருவையும் மிஞ்சக்கூடிய சீடராக
குமரப்பா இருந்தார். இதனால், 'காந்தியத்தை காந்தியை விடவும் அதிகம்
கடைப்பிடிக்கும் காந்தியின் சீடர்' என்று அவரைப் புகழ்வது உண்டு.
தான் எழுதிய கட்டுரை தொடர்பாக முதன்முதலாக காந்தியடிகளைச் சந்திக்கச்
சென்றார் குமரப்பா. சபர்மதி ஆசிரமத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு சந்திப்பு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பைப் பற்றி பின்னர் குமரப்பா
இப்படி விவரித்தார். "காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டை எனக்குக்
காட்டினார்கள். குறித்த நேரத்துக்கு அங்கு சென்று அவரைச் சந்திக்க
வேண்டும் என்றும் எச்சரித்தார்கள். ஒரு கையில் கைத்தடியுடனும் மறு கையில்
கட்டுரைச் சுருளுடனும் இரண்டு மணிக்கே சபர்மதி ஆற்றின் கரையில் உலவ
ஆரம்பித்தேன். வழியில் ஒரு மரத்தடியில் சாணமிட்டு அழகாக மெழுகப்பட்ட
இடத்தில் ஒரு கிழவர் உட்கார்ந்து நூல் நூற்றுக்கொண்டிருந்தார். நான்
அதற்கு முன் ராட்டையைப் பார்த்ததே கிடையாது. ஆகவே, ஆச்சரியத்துடன்
கைத்தடியைக் கீழே ஊன்றி, அதன்மேல் சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கத்
தொடங்கினேன். என் சந்திப்புக்கு இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. இவ்வாறு
சுமார் ஐந்து நிமிடம் வரை வேடிக்கை பார்த்தேன். காந்தியடிகளைச்
சந்திப்பதற்கான நேரத்தைத் தவறவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாகப்
பையினின்றும் கடிகாரத்தை எடுத்து சரியான நேரத்தைப் பார்த்தேன். இதை
அக்கிழவர் கவனித்து, பொக்கை வாயைத் திறந்து ஒரு புன்னகையுடன்,
'நீங்கள்தான் குமரப்பாவா?' என்று விசாரித்தார். அக்கிழவர் காந்தியடிகளாக
இருக்கக்கூடுமோ என்று திடீரென என் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆகவே,
நீங்கள்தான் காந்தியடிகளா என்று பணிவுடன் கேட்டேன். அவர் தலையை
அசைத்ததும் கீழே உட்கார முயன்றேன்; இஸ்திரி செய்யப்பட்டிருந்த 'பட்டு
சூட்' அழுக்காகிவிடுமே என்று கவலைப்படாமல், சாணம் மெழுகிய தரையிலேயே
உட்கார்ந்துவிட்டேன்".
இந்தச் சந்திப்பு, வெள்ளைக்காரத் துரையாக இருந்த குமரப்பாவை, உடையிலும்
சரி, உள்ளத்திலும் சரி காந்தியவாதியாக மாற்றியது. ஆடம்பர வாழ்க்கையைக்
கைவிட்டு, காந்தியடிகளுடன் தேசப் பணியில் ஈடுபடுவது என்று
தீர்மானித்தவர், நேராக கதர் கடைக்குச் சென்ற குமரப்பா, தனக்கு வேட்டிகள்
வேண்டுமென்றும் அதைத் தயாரித்துக் கொடுக்க அளவெடுத்துக் கொள்ளும்படியும்
கேட்டுக்கொண்டார். வேட்டிக்காக யாரையும் அளவெடுக்கத் தேவையில்லை என்று
கடைச் சிப்பந்தி சிரித்தபடி விளக்கினார். அந்த அளவுக்கு இந்திய உடைகளைப்
பற்றிய புரிதலின்றி இருந்தவர், பிற்காலத்தில் காந்தியப் பொருளாதாரத்தின்
தந்தையாகப் பரிமளித்தார்.
கந்தல் உடையும் பத்தொன்பது லட்சமும்
குமரப்பா உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்தவர். காந்தி எங்கு சென்றாலும்
கையில் பகவத்கீதை இருந்ததைப் போல குமரப்பா வோடு பைபிள் இருக்கும்.
ரெவரென்ட் டாக்டர் வெஸ்ட்காட், கல்கத்தாவில் இருந்த கிறிஸ்தவர்களின்
தலைமைக் குரு, காந்தியடி களின் அஹிம்சைப் போராட்டம் கிறிஸ்துவின்
போதனைகளுக்கு முரண்பட்டதென்று விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டிப்
பிரச்சாரம் செய்தார். குமரப்பா அவர் கருத்துக்கு எழுதிய மறுப்புகள் 'யங்
இந்தியாவில்' கட்டுரைகளாக வெளிவந்தன. அக்கட்டுரையில், "ஒரு உண்மையான
கிறிஸ்தவர்… உண்மையான காந்தியவாதியாகவே இருப்பார்" என்று ஆணித்தரமாக
வாதிட்டிருந்தார் குமரப்பா.
ஒருமுறை குமரப்பா ராஜதுவேஷ வழக்கில் கைதாகி, சிறைவாசத்துக்குப் பின்னர்
வெளியே வந்தார். அவரது உடைகள் சிறையில் இருந்த எலிகளால் கடித்துக்
குதறப்பட்டு கந்தல் கந்தலாக ஆகியிருந்தன. அந்த உடையை அணிந்துகொண்டு வந்த
குமரப்பா, அப்போது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிஹார் பூகம்ப நிவாரணக்
குழுவின் பொறுப்பை ஏற்றார். கிழிந்த உடையுடன் கையில் பத்தொன்பது லட்ச
ரூபாய் காசோலையுடன் இம்பீரியல் வங்கிக்குச் சென்றார். குமரப்பா
பெற்றிருந்த மேலை நாட்டுப் பட்டங்களுக்கும் அவர் தோற்றத்துக்கும்
சம்பந்தமே இருக்கவில்லை. அவரைக் காவலர்கள் வங்கிக்குள் விட மறுத்தனர்.
அவரது அறிமுக அட்டையை வங்கி மேலாளர் பார்த்துவிட்டு, எழுந்து வந்து
அழைத்துச் சென்றார்.
அமைச்சர் ஒருவர் குமரப்பாவிடம் சமுதாய நலத் திட்டங்களைச்
செயல்படுத்துவதால் ஏற்படும் 'வளர்ச்சி' குறித்து விரிவாகப் பேசலானார்.
குமரப்பா குறுக்கிட்டு, 'நான் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இந்தத்
திட்டங்களை நிறைவேற்றும் முன்னதாக, முதலில் அங்குள்ள ஏழைகளின் விலா
எலும்புகளை எண்ணுவேன். திட்டக்காலம் முடிந்ததும் அந்த எலும்புகளில்
ஏதாவது சதைப்பற்று காணப்படுகிறதா என்று ஆராய்வேன். அப்படிக் காணப்பட்டால்
அந்தத் திட்டம் வெற்றிபெற்றிருப்பதாகக் கருதுவேன்" என்றார்.
டிராக்டர் சாணி போடாது
எந்திரக் கலப்பைக்கும் மாடுகள் பூட்டிய கலப்பைக்கும் உள்ள வித்தியாசம்
பற்றி அவர் தெரிவித்த கருத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது.
வெளிநாட்டு ஆய்வாளர் குமரப்பாவிடம் "நீங்கள் எந்திரங்களுக்கு எதிரியா...
டிராக்டர் பயன்படுத்துவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?" என வினவினார். குமரப்பா
சிரித்துக்கொண்டே 'ஏன் என்றால் டிராக்டர் சாணி போடாது!' என்றாராம்.
இந்திய அரசின் திட்டக் குழு உறுப்பினராக குமரப்பா
நியமிக்கப்பட்டிருந்தார். இக்குழுவின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவர்
மாளிகையில் நிகழ்ந்தது. இக்கூட்டத்துக்கு மாட்டுவண்டியில் சென்றார்
குமரப்பா. குடியரசுத் தலைவர் குடியிருக்கும் வீதிக்குள் நுழைய அனுமதி
மறுக்கப்பட்டது. 'இது பொதுச்சாலை.. யாரும் செல்ல உரிமை உண்டு' என்று
காவலரிடம் வாதிட்டார். 'இந்த வழியாக நேருஜி வருகிறார். ஆகவே, வண்டிகள்
வருவதைத் தடுக்கிறோம்' என்றார்கள். "நானும் திட்டக் குழு உறுப்பினர்தான்"
என்று கூறி, வண்டியில் தொடர்ந்து சென்றார். இப்படிப் பல இடங்களில்
மாட்டுவண்டி நிறுத்தப்பட்டது. வண்டியிலிருந்து இறங்கி நடந்து செல்லுமாறு
கூறப்பட்டது. குமரப்பா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன்,
தேவைப்பட்டால் சத்தியாகிரகம் செய்யப்போவதாகவும் கூறினார். ஜவாஹர்லால்
நேரு, 'ராணுவ லாரிகள் மிகுதியாகச் செல்லும் இச்சாலையில்,
மாட்டுவண்டிகளின் பாதுகாப்பைக் கருதியே அவற்றை அனுமதிப்பதில்லை' என்று
கூறினார். அதற்கு குமரப்பா, "பொது இடத்தில் நல்லவனும் தீயவனும்
இருந்தால், தீயவனைத்தான் அகற்ற வேண்டுமே ஒழிய நல்லவனை அல்ல" என்றார்
காட்டமாக.
மந்திரியே ஆனாலும் ...
நேர மேலாண்மையை ராணுவ அதிகாரிகளைவிட அதிக கட்டுப்பாட்டுடன் பின்பற்றி
வந்ததன் காரணமாக, நெருங்கியவர்கள் இவரை 'கர்னல் சாகேப்' என்றே
அழைத்தார்கள். ஒருமுறை பாட்னாவில் நிவாரணக் கமிட்டியின் கணக்கு
வழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்த குமரப்பாவைக் காண காந்திஜி
வந்தார். கமிட்டியின் கணக்கில் சில அணாக்கள் வித்தியாசம் வந்தது. இதைக்
கண்டு பிடிக்க ஆடிட்டர்களாலும் முடியவில்லை. குமரப்பா தனி அறைக்குள்
சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். வித்தியாசத் தொகையைக் கண்டுபிடிக்கும்
வரை அவர் கதவைத் திறக்க மாட்டார் என்று காந்திஜியிடம் கூறப்பட்டது.
மறுநாள் காலை வெளியில் வந்து பல் துலக்கிக்கொண்டிருந்த குமரப்பாவைப்
பார்த்து, "இன்று உங்களுடன் பேச வேண்டும். எப்போது பார்க்கலாம்?" என்று
கேட்டிருக்கிறார். "எனக்கு நிறைய வேலை இருக்கிறது, இன்னொரு நாள்
பார்க்கலாம்" என்றார் குமரப்பா. வேறுவழியின்றி காந்தியடிகள்
திரும்பிவிட்டார்.
காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், குமரப்பாவைச் சந்திக்க ஒருநாள் பிற்பகல் 3.30
மணிக்கு நேரம் நிச்சயித்திருந்தார். ஆனால், சில அவசரமான பணிகளைக்
கவனித்துவிட்டுத் தமது அதிகாரிகள் புடை சூழ மாலை 5.30க்குள் வந்து
சேர்ந்தார். குமரப்பா 5.30 நடைப் பயிற்சிக்குச் செல்லும் வழக்கமுடையவர்.
மந்திரி காலதாமதமாக வந்ததால் தம்மை நடைப்பயிற்சியில் சந்திக்குமாறும்
பேசிக்கொண்டே நடக்கலாம் என்றும் கூறிவிட்டார். வேறு வழியில்லாமல் மந்திரி
குமரப்பாவைப் பின்தொடர்ந்து 4 மைல்கள் நடக்க வேண்டி வந்தது.
நிதி திரட்ட மறுப்பு
காந்தி மறைவை ஒட்டி காங்கிரஸ் மகாசபை அவருக்கு ஒரு மிகப்பெரும் நினைவு
நிதி திரட்ட முடிவுசெய்து, அந்தப் பணியை குமரப்பாவிடம் ஒப்படைத்தது.
குமரப்பா இதை ஏற்கவில்லை. காந்தி நினைவைப் பொருள் உருவில் நிறுவத்
தேவையில்லை. நிதி திரட்டச் செலவிடும் நேரத்தை தேச நிர்மாணத்
திட்டங்களுக்குச் செலவிடலாம். பண மூட்டையைச் சேகரிக்கும் அந்த
வேலையிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.
தமது அந்திமக் காலத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் வந்து
தங்கியிருந்தார் குமரப்பா. அங்கே சிறுகுடில் ஒன்றை அமைத்துக்கொண்டு, பல
கிராமியக் கலைப் பொருட்களின் உதவியால் அதை அலங்கரித்தார். இக்குடிசையில்
அவரைக் காண தேசத் தலைவர்கள் பலரும் வந்தனர். குடியரசுத் தலைவர் ராஜேந்திர
பிரசாத் வந்தபோது 'தனிப்பட்ட முறையில் தம்மைக் காண வருமாறும் குடியரசுத்
தலைவராக வர வேண்டாம்' என்றும் கூறினார். குமரப்பா கூறியதை ஏற்று
தனிமனிதராக கல்லுப்பட்டி குடிலில் வந்து சந்தித்தார். தரையில் விரித்த
கம்பளத்தில் அமர்ந்து குமரப்பாவுடன் உரையாடினார்.
ரோஜாவின் வேருக்கு உரம்
அவரது இறுதிநாள் நெருங்கியபோது சென்னை பொதுமருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரைக் காண பிரதமர் நேரு வந்தார். அந்த
உரையாடலின்போது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அவரது யோசனைகளைக்
கேட்டுக் குறித்துக்கொண்டார் நேரு. விடைபெறும்போது நேருவின் கையிலிருந்த
குறிப்பு நோட்டை வாங்கிப் புரட்டினார். பிறகு, அதனை சுக்கல் சுக்கலாகக்
கிழித்து பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் போட்டார். நேரு
அதிர்ச்சியில் உறைந்துபோனார். "நீங்கள் டெல்லி சென்று என்ன செய்வீர்களோ,
அதை நான் இங்கேயே செய்துவிட்டேன்" என்றார் குமரப்பா. நேரு வேறு பாதையைத்
தேர்ந்தெடுத்துவிட்டார் என்பதை இவர் அறிந்திருந்தார்.
புதியதோர் உலகம், சர்வோதய சமுதாயம், இம்மண்ணில் ரோஜாவாகப் பூக்க வேண்டும்
என்பதே குமரப்பாவின் விருப்பம்! உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்த குமரப்பா,
தமது மறைவுக்குப் பிறகு தன்னை எரிக்க வேண்டும் என்றும் தனது சாம்பலை
கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமத்தில் தனது குடிலைச் சுற்றி, தான்
வளர்த்த ரோஜாச் செடிகளுக்கு உரமாக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
பூத்துச் சிரித்தபடி காட்சி தந்த ரோஜாப் பூக்களின் வேரில் உரமாக
உதிர்ந்தார் குமரப்பா.
- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com .
தொடர்பெண் 

ஜே.சி.குமரப்பா தற்சார்பு பொருளாதாரம் டிராக்டர் சாணி போடாது புதுமுயற்சி

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு

ஜே. சி. குமரப்பா
ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா (சனவரி 4, 1892 - சனவரி 30, 1960)
என்னும் முழுப்பெயர் கொண்ட ஜே. சி. குமரப்பா என்பவர் காந்தியத்
தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் எனக்
கருதப்படுபவர் ஆவார். தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழரான இவர், பட்டயக்
கணக்கராக விளங்கினார். பின்னர் நிர்வாக மேலாண்மை , பொருளியல் ஆகிய
துறைகளிலும் தகைமைகள் பெற்றார். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு அவருடன்
இணைந்து பணியாற்றிய குமரப்பா, காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட
பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும்
இருந்தார். காந்தியின் " யங் இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர்
பொறுப்பிலும் இவர் பணிபுரிந்துள்ளார். ஜே.சி.குமரப்பா தனது ஓய்வுக்
காலத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன்
ஆசிரமம் வந்தார். அவர் சட்டப்பூர்வமாக 1956 ல் ஆசிரமத்தை பதிவு செய்து
முதல் தலைவரானார். காந்தி நிகேதனில் இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக
ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம் எனும் பெயரில்
மகளிர் மற்றும் இளையோருக்குப் பல்வேறு தொழிற்பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
வெளியிணைப்புக்கள்
ஆக்கத்திறன் கொண்ட விடுதலையைக் கட்டியெழுப்புதல் : ஜே சி குமரப்பாவும்
அவரது பொருளாதாரத் தத்துவமும்
Economic and Political Weekly, vol. 40 no. 52 Dec 24, 2005
குமரப்பா ஊர்த் தன்னாட்சி நிறுவனம்
குமரப்பாவின் வரலாறு
குமரப்பா போற்றிய புகைப்படம் தினமணி
எளிமையின் சிகரம் குமரப்பா தினமணி
குமரப்பா நினைவலை தினமணி

https://ta.m.wikipedia.org/wiki/ஜே._சி._குமரப்பா

ஜே.சி.குமரப்பா தற்சார்பு பொருளாதாரம் கரும்பு அரிசி எதிர்ப்பு

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
புரிந்துகொள்ளப்படாத பசுமைச் சிந்தனையாளர் - ஜே.சி.குமரப்பா
வ. ரகுபதி
Published :  07 Jan 2017  10:29 IST Updated :  16 Jun 2017  11:45 IST
காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப்பாவின் 125 –ஆம் ஆண்டு
நிறைவின்போது அவருடைய சிந்தனைகளை நினைவுகூர்வது மிகவும் அவசியம்.
வேளாண்மையும் நமது உடல்நலமும் இன்றைக்குக் கண்டுள்ள சீரழிவை, அன்றைக்கே
முன்னுணர்ந்து எச்சரித்த தீர்க்கதரிசி குமரப்பா.
குமரப்பா
சிறுதானிய ஆதரவு
ஒருமுறை தமிழக முதல்வர் காமராஜர் குமரப்பாவைச் சந்திக்க வந்திருந்தபோது,
அவரிடம் சில கருத்துக்களை குமரப்பா முன்வைத்தார். கிராமப்புறங்களில்
மின்சார நீர் இறைப்பான்களையும் கிணற்றுப் பாசனத்தையும் விரிவுபடுத்துவதை
மிகக் கவனமாகச் செய்ய வேண்டும் என்பது அவர் முன்வைத்த முதல் கருத்து.
அதற்கு மாற்றாக ஏரிகளையும் குளங்களையும் அரசு விரிவுபடுத்த வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.
கிராம வேளாண்மையில் புஞ்சைப் பயிர்களான சிறு தானியங்கள், தீவனங்கள்,
எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் போன்றவை உள்ளூர் மக்களின்
வாழ்வாதாரத்துக்கானவை. மின்சார நீர் இறைப்பான் கூடவே வரும் பணப்
பயிர்களான கரும்பு, வாழை, பருத்தி, புகையிலை ஆகியவற்றின் வரவு கிராம
மக்களின் நலனுக்காக இல்லாமல், பெருநகரங்களின் வணிகத் தேவைகளுக்காக
வேளாண்மையைத் தலைகீழாக மாற்றிவிடும் என்றார்.
தீட்டிய அரிசியின் நுகர்வை அதிகப்படுத்துவது மக்களின் உடல்நலத்துக்கும்,
பொருளாதார நலனுக்கும், கிராமியப் பொருளாதார நலனுக்கும் பெருங்கேடாக
முடியும் என்பது குமரப்பாவின் வாதம். தீட்டிய அரிசியைக் காட்டிலும், சிறு
தானியங்களும் தீட்டாத அரிசியும் மக்களின் நலனுக்கு ஏற்றவை என்றார்.
தீட்டிய அரிசி நீரிழிவு நோயையும், வைட்டமின், தாதுப் பொருட்களின்
குறைவையும் ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
சர்க்கரை ஆலைக்கு எதிர்ப்பு
பிறகு தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் பெருமளவில் தொடங்கப்பட்டபோது,
குமரப்பா அவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். கரும்பு உற்பத்தி,
வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி, அதனுடன் சேர்த்து எரிசாராய உற்பத்தி
ஆகியவற்றுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு சட்டங்களையும் கொள்கைகளையும்
கொண்டுவந்து கொண்டிருந்தது. சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, பனைமரங்கள்
தரும் பதநீரையும், கருப்பட்டியையும் மேம்படுத்த அரசு பெரும் முதலீடு
செய்ய வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. பதநீரும், கருப்பட்டியும்
உடல்நலத்துக்கு அமிர்தம் போன்றவை என்பது அவருடைய வாதம்.
உணவு தரும் நல்ல நிலங்களைக் கரும்புச் சாகுபடிக்கு மாற்றுவதற்கு மாறாக,
உபயோகமற்றுக் கிடக்கும் நிலங்களில் பெருமளவு பனைமரங்கள் வளர்க்க முயற்சி
செய்ய வேண்டும். ஆலை முதலாளிக்கு, எரிசாராய வியாபாரிகளுக்குப் பெரும்
லாபத்தைத் தரும் சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, ஏழைத் தொழிலாளர்களுக்கு
வாழ்வு தரும் பனைத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றார் குமரப்பா.
இப்படித் தொடர்ச்சியாக அவர் முன்வைத்த கருத்துகளால் ‘பசுமைப் பொருளாதாரச்
சிந்தனையின் சிற்பி' என்று அவர் போற்றப்படுகிறார்.
விடுதலைப் போரில்...
முனைவர் ஜே.சி. குமரப்பா, 1892–ம் ஆண்டு ஜனவரி 4–ம் தேதி தஞ்சாவூரில்
பிறந்தார். லண்டனில் தணிக்கையாளராகத் தகுதி பெற்ற பின், அமெரிக்காவின்
புகழ்பெற்ற கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பொது நிதி குறித்து
குமரப்பா ஆய்வு செய்தார். இந்தியாவில் வறுமையைத் தூண்டும் முக்கியக்
காரணி அரசின் கொள்கைகளே என்று அந்த ஆய்வில் கண்டறிந்தார். விவசாய
நெருக்கடி, உணவுப் பஞ்சம், பட்டினிச் சாவு, கிராமங்களின் வீழ்ச்சி
ஆகியவற்றுக்குக் காரணம் ஆங்கிலேய அரசின் கொள்கைகள். இங்கிலாந்தின்
அபாரமான வளர்ச்சிக்கு உறுதுணையாக அந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன
என்பதே அவருடைய ஆய்வு முடிவு.
லண்டனிலும் பின் அன்றைய பம்பாயிலும் வெற்றிகரமாக ஆடிட்டர் தொழிலை நடத்தி
வந்த குமரப்பா, தொழிலையும் ஆடம்பர வாழ்வையும் துறந்து 1929-ம் ஆண்டில்
காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிய முன்வந்தார். அதன் பிறகு
காந்தியடிகளின் ‘யங் இந்தியா’ வார இதழின் பொறுப்பாசிரியராக
நியமிக்கப்பட்டார். அப்போது ஆங்கிலேய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு
எதிராக குமரப்பா கடும் வாதங்களை முன்வைத்தார். அவரின் புரட்சிகர
எழுத்துக்களுக்காக ஆங்கிலேய அரசால் மூன்று முறை சிறைத் தண்டனையும்
அனுபவித்தார்.
கொள்ளைப் பொருளாதாரம்
அவரது கருத்துக்கள் நிலைபெற்ற பொருளாதாரத் தத்துவங்களைத் தலைகீழாகப்
புரட்டிப்போடும் புரட்சிகரமான வாதங்களை முன்வைத்தன. பெருந்தொழில்களும்,
பெரும் பொருளாதார அமைப்புகளும் அரசின் ஆதரவுடன், மோசமாகவும் அநீதியாகவும்
சிறு தொழில்களையும், மக்களின் பரவலான பொருளாதார அமைப்புகளையும் அழித்து
உருவாக்கப்பட்டவை என்பதை அவர் உறுதியாக எடுத்துக்காட்டினார்.
கிராமங்களும், கைத்தொழில்களும், வேளாண்மையும் ஆங்கிலேய அரசின்
வஞ்சத்தினால் வீழ்த்தப்பட்டன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், முன்னேற்றம் போன்ற பசுத்தோல்களால்
அந்த அநீதிகள் மறைக்கப்பட்டுள்ளன என்றார். இன்றைக்கு நாம் பெரிதும்
வலியுறுத்திக்கொண்டிருக்கும் பெருந்தொழில்கள், பெரும் பொருளாதாரங்கள்,
வல்லரசுகள், பெருந்தேசங்கள் ஆகியன இயற்கையையும், எளியவர்களையும்
உறிஞ்சியே உருவாகவும், காலப்போக்கில் நிலைக்கவும் முடியும் என்பதை அன்றே
அவர் சுட்டிக்காட்டினார்.
விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களைப் பெருந்தொழில்களுக்கு இலவசமாக அல்லது
மானிய விலையில் அரசின் கொள்கைகள் எடுத்துக் கொடுக்கின்றன. குறிப்பாக
நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற எரிபொருட்கள் நம்ப முடியாத குறைந்த விலையில்
அள்ளி அள்ளிக் கொடுக்கப்படுவதால், பெருந்தொழில்களின் உற்பத்திச் செலவு
பெருமளவு குறைகிறது. எளிய மக்கள் உடல் உழைப்பால் தங்களுடைய
தன்னிறைவுக்காக உற்பத்தி செய்யும் பொருட்கள், வலிந்து விலை குறைக்கப்பட்ட
இந்தப் பெருந்தொழில் உற்பத்தியுடன் போட்டி போட முடிவதில்லை. இயற்கையைக்
கொள்ளையடித்துக் குறுகிய காலத்தில் அளவில்லாது உற்பத்தி செய்து
பெருஞ்செல்வம் ஈட்டும் பெருந்தொழில்களும், பெரும் பொருளாதாரமும் இயற்கை
வளங்களை முற்றிலும் அழித்தொழிக்கும் அம்சங்கள் என்றார் குமரப்பா. இதைக்
‘கொள்ளைப் பொருளாதாரம்’ என்றே அவர் அடையாளம் காட்டினார்.
அழிவற்ற பொருளாதாரம் எது?
பரவல்முறை உள்ளூர்ப் பொருளாதாரம் வளம் சேர்ப்பதாகவும், வளர்ச்சியை
அனைவருக்கும் பகிர்ந்து தருவதாகவும், இயற்கையைப் பேணுவதாகவும் இருக்கும்
என்று அவர் நம்பினார். இயற்கையோடு இயைந்த எல்லைக்கு உட்பட்ட பொருளாதாரம்
அழிவற்ற பொருளாதாரமாகப் பல்லாயிரம் ஆண்டுகள் தொடரும் என்பது அவருடைய
நம்பிக்கை. குமரப்பா தனது கருத்துக்களைத் தொகுத்து ‘அழிவற்ற பொருளாதாரம்’
என்ற நூலாக 1942–ம் ஆண்டு வெளியிட்டபோது, மகாத்மா காந்தி அவருக்கு
டாக்டர் பட்டத்தை வழங்கினார். அப்போது குஜராத் வித்யாபீத்
பலகலைக்கழகத்தின் வேந்தராக காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனவுக்காகப் போராட்டம்
காந்தியப் பொருளாதாரத் தத்துவத்தின் அதிகாரபூர்வ கருத்தாளராகப்
போற்றப்பட்ட குமரப்பா, தனது வாழ்வின் பெரும் பகுதியை கிராமியத்
தொழில்நுட்ப வளர்ச்சிக்காகச் செலவிட்டார். 1934-ம் ஆண்டு காந்தி
தலைமையில் தொடங்கிய அகில இந்திய கிராமக் கைத்தொழில் சங்கத்தின்
செயலாளராகப் பணியாற்றிய குமரப்பா, அழிந்துவரும் கிராமத் தொழில்களை
மீட்டெடுப்பதற்காக கடுமையாகப் பாடுபட்டார். காந்தியின் சேவா கிராம
ஆசிரமத்தின் அருகே ‘மகன்வாடி’ என்ற பெயரில் கிராமத் தொழில்களுக்கான தேசிய
மையத்தை அமைத்தார். அதன் தொடக்க நாட்களில் குமரப்பாவுடன் காந்தியும்
தங்கி, அவருடைய பணிகளுக்கு மதிப்புக் கூட்டினார். பிரம்மச்சாரியான
குமரப்பா ஒரு எளிய விவசாயியைப் போல, தனது வாழ்வு முழுவதையும்
மாற்றிக்கொண்டு காந்திஜியின் கனவான கிராமியப் பொருளாதாரத்துக்கான தீரம்
மிகுந்த போராட்டத்தை நடத்தினார்.
கிராமியம், சிறுதொழில்கள், இயற்கையைப் பேணுவது, சிற்றளவுப் பொருளாதாரம்,
எளிய வாழ்வு, சேமிப்பு, பகிர்வு போன்ற கருத்துக்களை முன்னெடுத்துச் சென்ற
ஆரம்ப நாட்களில் அவருக்குத் துணை நின்றவர்கள் மிக மிகக் குறைவு. 'கிராமம்
எளியவர்களின் சரணாலயம். பெருநகரங்கள் சுரண்டிக் கொழிப்பவர்களின் பாசறை'
என்பது அவரின் வாதம். நகரங்கள் வன்முறையின், சுரண்டலின் அடையாளச்
சின்னங்கள் என்ற காந்தியின் நிலைப்பாட்டை சரியாகப் புரிந்துகொண்ட மிகச்
சிலரில் குமரப்பா முதன்மையானவர். காந்தியின் மற்ற சகாக்களான நேரு, படேல்,
ராஜாஜி, ராஜேந்திரபிரசாத் போன்றவர்களால் குமரப்பாவின் கருத்துகள்
முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப் படவில்லை. குமரப்பா
ஒரு தீர்க்கதரிசி. அவரின் நுட்பமான கருத்துகள், பல்லாண்டுகள் முன்கூட்டிய
சிந்தனையில் உருவானதால், அவருடைய கருத்துகளை எவரும் புரிந்துகொள்ளவில்லை.
எங்கெங்கும் ஒலிக்க வேண்டிய குரல்
காந்தியின் மறைவுக்குப் பின் சேவா கிராம ஆசிரமத்திலும், பண்ணை
ஆசிரமத்திலும் கிராமியத் தொழில் வளர்ச்சிக்காகவும், இயற்கை வேளாண்மை
மேம்பாட்டுக்காகவும் பல்வேறு முன்னோடிப் பரிசோதனைகளை குமரப்பா
செய்துபார்த்தார். மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி காந்தி நிகேதன்
ஆசிரமத்தின் பணிகளால் கவரப்பட்ட குமரப்பா, 1954 முதல் தனது
ஓய்வுக்காலத்தை அங்கு செலவிட்டார். 1960–ம் ஆண்டு சென்னை பொது
மருத்துவமனையில் குமரப்பா காலமானார். கல்லுப்பட்டி காந்தி நிகேதன்
ஆசிரமத்தில் அமைந்துள்ள அவருடைய சிறிய குடில், நினைவிடம், எளிய
அருங்காட்சியகம் போன்றவை அவருடைய வாழ்வின் செய்தியை இப்போதும்
நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ச்சி என்ற பெயரில் நுகர்வுப் பேராசைக்காக உற்பத்தி செய்யும்
பெருந்தோழில்களையே, அரசும் நன்கு படித்த மேதாவிகளும் அன்றும் இன்றும்
ஆதரிக்கின்றனர். சுதேசி என்ற வார்த்தையைச் சொல்ல இன்று நாதி இல்லை.
'இந்தியாவின் எளிய மக்களுக்காக உற்பத்தி' என்ற கருத்து தூக்கி
எறியப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டவர்களுக்கு உற்பத்தி
செய்யும் கூலிப்பட்டறையாகவும், சுற்றுச்சூழல் குப்பைத் தொட்டியாகவும்
மாற்றப்படும் காலத்தில், குமரப்பாவின் கருத்துகள் மிக அரிதானவை. எங்கேயோ
கேட்டதாக இருந்த குமரப்பாவின் குரல், எங்கெங்கும் ஒலிக்க வேண்டிய குரலாக
உள்ளது.
கட்டுரையாளர், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
தொடர்புக்கு: ragugri@rediffmail.com

வேளாண்மை விவசாயம் நம்மாழ்வார் பணப்பயிர் புதுமுயற்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக