வெள்ளி, 22 டிசம்பர், 2017

கைகோளார் போர்க்குடி பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N மற்றும் தமிழன் நந்தா உடன் உள்ளார்.
# பகுதி-4 # செங்குந்தர் _ கைகோளர் ..
பூட்கை மறவர்_தறுகண் மறவர்_புனைகழன் மறவர்..
( # கோசர் கட்டுறை @பாவாணர்..)
+++++++
எத்தொழிலராயினும், பிறர்க்குக் கீழ்ப்பட்டு வாழும் மக்களெல்லாம், தம்
தலைவர்பொருட்டு உற்றவிடத் துயிர் வழங்குவோரும் வழங்காதோரும் ஆக
இருவகையர்.
"..................................நட்புந் தயையும்
கொடையும் பிறவிக் குணம்"
என்னும் ஒளவையார் கூற்றும்,
"அன்பிலா ரெல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பு முரியர் பிறர்க்கு"
(குறள். 172)
என்னும் வள்ளுவர் கூற்றும், அன்பு பிறவிக்குணம் என்பதையும், அஃதுடையார்
தம்மால் அன்பு செய்யப்பெற்றோர்க்கு உயிரையும் உதவுவர் என்பதையும்,
தெரிவிக்கும்.
இறைவனடியார் தம் திருவடிமைத் தொண்டில் தம் உயிரையும் விட அணியமாய்
(தயாராய்) இருப்பதுபோன்றே அரசப்பற்று மிக்க பணியாளரும் தம் அரசன்பொருட்டு
என்றும் உயிர்விட இருப்பர்.
இவ்வுலகத்து நீடுவாழ்ந்து இல்லறஇன்பந் துய்க்க விரும்பும் பொதுப்பணியாளர்
மனநிலையே இஃதாயின், போர்க்களத்து மடிதலைப் பொன்னுலகம் புகுதலாகக் கொண்டு
கூற்றுவனையும் அறைகூவவும், கொற்றவைக்குத் தம்மைத்தாமே பலியிட்டுத் தம்
தலையைத் தம் வலக்கையிலேந்திக் கூத்தாடவும் வல்ல தறுகண் மறவர் நிலையைச்
சொல்லவும் வேண்டுமோ!
பன்னூற்றாண்டுகளாகத் தமிழரசின்மையாலும், கழி பல நூற்றாண் டாகப் பிறப்பொடு
தொடர்புற்ற ஆரியமுறைக் குலப் பிரிவினையாலும், தமிழர் பெரும்பாலும்
மறமிழந்திருக்கும் இற்றைநிலை நோக்கி, பண்டைத் தமிழர் மறம்பற்றியும் சிலர்
ஐயுறுகின்றனர்.
அவர் தொல்காப்பியப் புறத் திணையியலிலும் படைபற்றிய திருக்குற
ளதிகாரங்களையும், புறப்பொருள் வெண்பாமாலையையும் நம்பாவிடினும், சில
புறநானூற்றுச் செய்யுட் களையும், கரிகால்வளவன், செங்குட்டுவன்
முதலியோரின் வடநாட்டுப் படையெடுப்பையும், முதலாம் இராசராசன், முதலாம்
இராசேந்திரன் முதலியோரின் மெய்கீர்த்தியையும், கலிங்கத்துப் பரணியையும்,
நோக்கியேனும் தம் கருத்தைத் திருத்திக்கொள்வாராக.
பண்டைத் தமிழ்ப்படை மறவருள், போரிற் புறங்கொடுக்கக் கூடா தென்றும்
அரசனுக்காக உயிரைத் துறத்தல் வேண்டுமென்றும் சூளிட்டுக் கொண்ட ஒருசாரார்
இருந்தனர். அவர் பூட்கை மறவர் என்னப்பட்டனர்.
பூட்கை, உறுதி பூணுதல். அவர்போன்றே, அரசனுக்கு அவ்வப்போது வேண்டும்
பணிகளைத் தப்பாது செய்யவேண்டுமென்
றும், தப்பின் உயிர்துறப்பதென்றும், சூளிட்டுக்கொண்ட ஒருசார் பணியாளர்
இருந்தனர். அவர் வேளைக்காரர் என்னப்பட்டனர். வேளை தவறாது பணி செய்பவர்
வேளைக்காரர். அவர் தலைவன் வேளைக்கார நாயகம் என்னப்பட்டான்.
"ஓடாப் பூட்கை விடலை"
(புறம். 295)
"போரெனிற் புகலும் புனைகழன் மறவர்"
(புறம். 31)
"உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை யறையு மணிகொள் தேர்வழி"
(புறம் 68)
என்னும் பகுதிகள், பண்டைத் தமிழ் மறவரின் மேற்கோளையும் போர்
விருப்பத்தையும் தெளிவாகப் புலப்படுத்தும்.
பூட்கை, மேற்கோள், கோள் என்பன ஒருபொருட்சொற்கள். ஒன்றை உறுதியாகக்
கடைப்பிடிப்பதென மேற்கொள்வது மேற்கோள். அங்ஙனமே உள்ளத்தில் அல்லது
செயன்முறையிற் கொள்வது கோள்,
"மாட்சியின் மாசற்றார் கோள்"
(குறள். 646)
என்று திருவள்ளுவரும் கூறுதல் காண்க.
கொள்வதும் பூணுவதும் மேற்கொள்வதும் நன்றிற்கும் தீதிற்கும் பொதுவேனும்,
கோள் பூட்கை மேற்கோள் என்னும் முச் சொல்லும் வழக்காற்றில் நற்கொள்கையையே
குறிக்கும்.
பூட்கை மறவரும் அவர் தலைவரும் உறுதியான கோளுடைமைப் பற்றிக் கோளர்
என்னப்பட்டனர். கை என்பது படையுறுப்பாதலின், படையுறுப்பைச் சேர்ந்த கோளர்
கைக்கோளர் என்னப்பட்டனர். ஏனெனில், படையுறுப்பைச் சேராது தற்சார்பான
கோளருமிருந்தனர் (free lance):
"ஒப்பன படையுறுப் பொழுக்கம் சிறுமை
கரமும் பின்பிறந் தாளும் கையே"
என்பது பிங்கலம்.
(பதிவுகள் 10 ல் இது 4 மற்றவை தொடரும்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக