ஞாயிறு, 11 ஜூன், 2017

வேதங்கள் பழமை ஆனவை கிடையாது

வேதங்கள் என்றால் என்ன?

இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவை எண்ணிக்கையில் நான்காகும்.

ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்."

என்ற விடையே விரைவாக நமக்கு கிட்டும். காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். வேதங்கள் நான்கு. அவை இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. நிற்க.

ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். அதுவும் குறிப்பாக சைவ வைணவ மற்றும் தமிழ் பெரியோர்கள், வேதத்தில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்களை தொன்று தொட்டே மறுத்து வந்து உள்ளனர். அவர்களுள் சிலர் தேவநேயப் பாவாணர், மறைமலைஅடிகள், திரு. கா.சு.பிள்ளை போன்றவர்களாவர். இந்நிலையில், வேதத்திற்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. பார்க்கலாம்.

முதலில் வேதங்கள் என்றால் என்னவென்றே காண்போம். பொதுவாக வேதங்கள் நான்கு எனப்படினும், அவற்றுள் முக்கியமானதொன்றாக விளங்குவது ரிக் வேதம் தான். ஏனைய வேதங்கள் ரிக் வேதத்தின் மறு வடிவமைப்புகளாகவே திகழ்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றன. விரிவாக பார்க்க வேண்டும் என்றால்,

"நான்கு வேதங்களுள் முதன்மையானதும் பழமையானதுமாக இருப்பது இருக்கு வேதமே. யசுர், சாமம், அதர்வணம் எனும் மற்றைய மூன்று வேதங்களும் இருக்கு வேதத்தின் மறுவமைப்புகளே" என்றே திரு சே.டால்போயிஸ் வீலர்(J.Talboys wheeler) என்னும் ஆராய்ச்சியாளர் தனது 'India of the Vedic age with reference to Mahabharata-Vol.1 of the history of India' நூலில் கூறுகின்றார்.

இவரதுக் கூற்றுகளை உறுதிப் படுத்துவது போல " மற்றைய மூன்றையும் இருக்கு வேதத்தின் பிற சேர்க்கை என்றும், இருக்கு வேதத்தின் விளக்கம் என்றும் சாரம் அல்லது சுருக்கம் என்றும் கூறலாம். இம்மூன்றில் யசுர் வேதம் பெரும்பாலும் இருக்கு வேதத்தின் பாடல்களைக் கொண்டு இருப்பதுடன் பலி செய்வதற்குரிய முறைகளை விளக்கும் பாடல்களையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக சாம வேதம், சோம பானம் தொடர்பான பாடல்களைக் கொண்டு விளங்குவதுடன் இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தின் பாடல்களையும் அதிகமாகக் கொண்டு உள்ளது. அதர்வண வேதம் இருக்கு வேதத்தின் பெரும்பாலான பாடல்களைக் கொண்டு இருந்தாலும் மந்திரம் மாயம் தொடர்பான பாடல்களையே அதிகமாகக் கொண்டுள்ளது" என்றே மற்றொரு ஆய்வாளரான கே.சு.மாக்டொனால்ட்ஸ் (K.S.Macdonalde) அவர்கள் அவரது 'The Vedic Religion' நூலில் குறிப்பிடுகின்றார்.

அதுவும் சாம வேதத்தில் இருக்கும் 1875 பாடல்களும் 75 பாடல்கள் மட்டுமே புதியவைகளாக இருக்கின்றன. ஆய்வாளர்கள் கருத்துப் படி இசையமைக்கப்பட்ட இருக்கு வேதப் பாடல்களே சாம வேதம் என்று வழங்கப்படுகின்றன.

அதாவது நான்கு வேதங்கள் என்று இவை தனித்தனியே இன்று வழங்கப்பட்டாலும் பொதுவாக பார்த்தால் அனைத்து வேதங்களும் இருக்கு வேதத்தை சார்ந்தே இருக்கின்றன. நிற்க.

இப்பொழுது நாம் வேதங்களில் காணப்படும் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் பற்றி சற்று கண்டு விடலாம்.

இருக்கு வேதத்தில் காணப்படும் தெய்வங்கள் பலர் இயற்கையின் உருவகங்களாகவே உள்ளனர். காற்று, மரம், ஆறு, மலை, வானம், கதிரவன் போன்றவை வழிப்படப்பட்டு உள்ளன. மேலும் "சோமபானம் என்னும் குடிவகையும் தெய்வமாக வழிப்படப்பட்டது. தெய்வங்களாக வழிப்படப்பட்டவற்றில் மருத், இந்திரன் போன்றோர் வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். சமயக் குருக்களாக அக்னி, பிரகசுபதி ஆகியோர் காட்டப்பட்டு உள்ளனர்" என்று மற்றொரு ஆராய்ச்சியாளரான எ.எ.மாக்டொனால்ஸ் (A.A.Macdonell) அவர்கள் அவரது 'India's Past' புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வேதங்களில் பல பெண் தெய்வங்களைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளன. கூடுதலாக தமிழர்களிடம் இருந்தது போல் நினைவுத் தூண் வழிபாடும் வேதங்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் பலி வழிபாடும் சரி மர வழிபாடும் சரி வேதங்களில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலே நாம் கண்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் பொழுது இன்று நம்மிடையே இருக்கும் முழு முதற் கடவுளை வணங்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இயற்கை வழிபாடுகளை உடைய வேதங்களுக்கும் சரி தொடர்பு இருப்பது போன்றா தெரிகின்றது?

"அட...நில்லுங்கள். வேதங்களைப் பற்றிப் பேசினீர்கள். வேதாந்தங்களைப் பற்றி ஏன் கூறவில்லை. வேதங்களின் ஒரு பகுதி தான் அவை அல்லவா...அவை முழு முதற் கடவுளைப் பற்றிப் பேசுகின்றது அல்லவா" என்று எண்ணினீர்கள் என்றால் முதலில் ஒரு விடயம், வேதாந்தங்கள் என்பவை உண்மையில் உபநிடங்கள் என்றே வழங்கப்பட்டன. பின்னரே ஏதோ ஒரு காரணத்திற்காக பிராமணர்களால் அவை வேதங்களின் ஒரு பகுதியாக ஆக்கப் பட்டன. அதனைத் தவிர்த்து வேதங்களுக்கும் சரி வேதாதங்களுக்கும் சரி தொடர்பு இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு இதோ தேவநேயப் பாவாணரின் கூற்று,

"ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வ வழுத்துத் திரட்டேயாதலால் ஓரேமுழுமுதற் கடவுளை உணர்த்தும் உபநிடதத்திற்கும் அதற்கும் மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத இடைவெளியுள்து” என்று கூறுகிறார் (தமிழ் இலக்கிய வரலாறு   - தமிழ் மண் பதிப்பகம்).

இவரின் கூற்றினை மெய்ப்பிப்பதை போன்றே பல விடயங்கள் வேதங்களுக்கும் சரி உபநிடங்களுக்கும் சரி வேறுபட்டுத்தான் இருக்கின்றன.

வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது'
உபநிடங்களோ 'இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிப் பேசி மனிதனை இறைவன் அறிவான்...அவன் பலி எதுவும் வேண்டுவது இல்லை' என்றுக் கூறி பலியினை மறுக்கின்றது.
வேதங்கள் ஆன்மாவினைப் பற்றிப் பேசவே இல்லை. உபநிடங்களோ ஆன்மாவினை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன.
வேதங்கள் இயற்கை வழிபாட்டினை உடையதாக இருக்கின்றது. உபநிடங்களோ பக்தி வழிபாட்டினை உடையனவாக இருக்கின்றன. நிற்க.
இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைப் பற்றி மேலும் காண வேண்டும் எனில் வேதங்களின் காலத்தையும் அவை யாரால் யாருக்காக எதுக்காக உருவாக்கப்பட்டன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

பொதுவாக வேதங்களின் காலம் என்றாலே அது ஏதோ ஒரு மிகப் பழமையான காலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பலரின் எண்ணத்திற்கும் வரும். காரணமில்லாமல் இல்லை, ஏனெனில் அப்படிப்பட்ட கருத்துக்கள் தாம் நம்மிடையே பரப்பப்பட்டு இருக்கின்றன. வேதங்கள் என்பது காலகாலமாக வாய் வழியாகச் சொல்லப்பட்டு வந்த ஒன்று. அவற்றின் காலம் இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாத வண்ணம் பழையக் காலம் என்றே போதிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் நீண்ட காலமாக வேதங்களைப் பொது மக்கள் படிக்க முடியாத வண்ணமே சூழ்நிலைகளும் இருந்தமையினால் அந்தக் கூற்றுக்களின் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய முடியாத நிலையே இருந்தது. ஆனால் இன்றோ அக்கருத்துக்களை மறுத்து அறிஞர்கள் சிலர் புதுக் கருத்துக்களை கூறுகின்றனர். அவர்கள் வேதங்களின் தொன்மையை மறுக்க ஒரு முக்கியமானக் காரணம் வேதங்களைப் பற்றிய சான்றுகள் எவையும் பழமையான காலத்தில் கிட்டப்பெறாமையே.

"வேதங்கள் மிகப் பழமையானவை என்றுக் கூறப்படினும், இக்கருத்தைக் கூறுவதற்கு அடிப்படையான தொல்பொருள் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ, நினைவுச் சின்னங்களோ, நாணயங்களோ கிடைக்கப் பெறவில்லை என்பதும், கிடைத்துள்ள எழுத்துப் படிவங்களும் அண்மைக் காலதிற்குரியவனவாக உள்ளன" என்ற Bloomfield பதிப்பகத்தாரின் 'The religion of the Vedas' புத்தகத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சரி அவர்களின் கருத்து இருக்கட்டும். இப்பொழுது நாம் வேறு சில விடயங்களைக் காண்போம்.

வேதங்களும் சரி...உபநிடங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் சமசுகிருதம் என்ற மொழியின் சான்றுகள் நமக்கு கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே தான் கிட்டப்பெற ஆரம்பிக்கின்றன என்று. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட மொழி என்றும் பொருள் தருகின்றது. எனவே வேதங்களின் காலமும் சமசுகிருதத்தின் காலமாகத் தான் இருக்க முடியும். எனவே வேதங்களின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே என்று முன்னர் பதிவினில் கண்டு இருந்தோம். (பார்க்க: சமசுகிருதத்தின் காலம்)

பொதுவாக எவராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்து தான். அதுவும் வேதங்களைப் பொறுத்த வரைக்கும் இக்கருத்தினை எவரும் ஏற்றுக் கொள்வது முதலில் அரிது தான். காரணம் வேதங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன என்றே நம்மிடம் கூறப் பெறுகின்றது, "அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவை எழுத்துருவில் கிடைக்கப் பெரும் காலத்தையே வேதங்களின் காலம் என்றுக் கூற முடியும், ஏனெனில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் நடைப் பெற்ற சில சரித்திர நிகழ்ச்சிகளில் வேதக் கடவுளர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றனவே...அவ்வாறு இருக்கையில் அவற்றின் காலத்தை எவ்வாறு அவை எழுத்துரு பெற்றக் காலத்தினை வைத்துக் கூறுகின்றீர்கள்...அது சரியான ஒன்றாக அமையாதே" என்றக் கேள்வி எழுவது இயல்பே.

உண்மை தான். இக்கேள்விக்கு பதில் தேடும் முன் ஒரு கேள்வியினை இங்கே முன் வைக்க விரும்புகின்றேன். ஆயிரமாயிரம் காலமாக வாய் வழியாகவே கூறப்பட்டு வந்த ஒன்றை திடீர் என்று எழுத்து வடிவத்தில் கொண்டு வர வேண்டிய தேவை யாது வந்தது? நிற்க.

இப்பொழுது வேதத்தின் காலத்தினைப் பற்றிக் காணலாம். அதற்கு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது. "அட என்னங்க வேதம் அப்படின்னு சொல்லிட்டு விவிலியத்தினைப் பார்போம் என்கின்றீர்களே" என்கின்றீர்களா, சற்று பொறுங்கள் பொருள் இருக்கத் தான் செய்கின்றது.
பழைய ஏற்பாட்டின் காலம் என்ன? என்ற கேள்விக்கு
கி.பி ஒன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்ற விடைகளே கிட்டும். ஆனால் பழைய ஏற்பாட்டில் உலகம் தொடங்கிய செய்திகள் முதற்கொண்டு ஏனைய பல வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அதனை எல்லாம் கணக்கில் கொண்டா பழைய ஏற்பாட்டின் காலத்தினைக் கணிக்க முடியும்? அவ்வாறு கணித்தால் உலகம் தோன்றிய பொழுதே பழைய ஏற்பாடும் தோன்றி இருக்க வேண்டும். மாறாக பல செய்திகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வந்ததே பழைய ஏற்பாடு. இது புது ஏற்பாட்டுக்கும் பொருந்தும். மற்ற தொகுக்கப்பட்ட நூல்களுக்கும் பொருந்தும். எனவே அந்த நூல்கள் என்று தொகுக்கப்பட்டனவோ அக்காலம் தான் அந்த நூல்களின் காலமாக கருதப்பட வேண்டும். அது தான் சரியான ஒன்றாகவும் இருக்கும்.

இந்த விதியே வேதங்களுக்கும் பொருந்தும். காரணம் வேதங்கள் என்பவை தொகுக்கப்பட்ட நூல்களே ஆகும் என்கின்றார் ஆய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள். அவரின் கூற்றின் படி, கி.பி காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியினில் அக்காலத்தில் இந்திய தேசத்தில் இருந்த மக்கள் பலருக்கும் ஒருக் கருத்தினைத் தெரிவிக்க தொகுக்கப்பட்டவை தான் வேதங்கள். தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் புதிய மொழி தான் சமசுகிருதம் என்றும் அவர் கூறுகின்றார். (வேதங்களைத் தொகுத்தவர் வியாசர் என்னும் திராவிடர் என்ற கருத்து நமக்கு ஏற்கனவே தெரியும்)

நம்புவதற்கு கடினமான விடயங்கள் தான். ஆனால் அவர் கூறும் கூற்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணம் சில சான்றுகளையும் அவர் தரும் பொழுது, அவற்றை முற்றிலும் நம்மால் புறக்கணிக்கவும் முடியவில்லை. அவ்வாறு அவர் தரும் சான்றுகள் என்ன...

காண்போம்...!!!


பின்குறிப்பு:ஆய்வாளர் தேவகலா அவர்களின் 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து நான் அறிந்தவனவற்றை எனக்கு புரிந்த வகையிலேயே இங்கே பதிவிட்டு உள்ளேன்.
nanri http://vazhipokkanpayanangal.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக