ஞாயிறு, 11 ஜூன், 2017

எம்டன் செம்பகராமன்

முதலாம் உலக யுத்தம்...!!!

நீண்ட காலமாக பல்வேறு நாடுகள் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருத்த வெறுப்பு உணர்ச்சிகள் வெடித்து எரிமலையாய் சிதறியதொரு தருணம்...!!! நாடு பிடிக்கும் ஆசையில் உலகத்தில் இருந்த பலம் பொருந்திய நாடுகள் அனைத்தும் தங்களது இராணுவத்தினை களம் இறக்கிக் கொண்டிருந்தன.

அனைத்தையும் செம்பகராமன் கண்டுக் கொண்டு இருந்தான்.

'நீண்ட நெடியப் போராக இது இருக்கப் போகின்றது...அதில் சந்தேகமே இல்லை...அதுவும் குறிப்பாக இங்கிலாந்து இந்தப் போரினில் மிகத் தீவிரமாகவே ஈடுபடும்...ஈடுப்பட்டே ஆக வேண்டும்...அதற்கு வேறு வாய்ப்புகள் கிடையாது...இது தான் சரியான தருணம்...இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தினை முழு மூச்சாய் தொடங்க காலம் கனிந்து இருக்கின்றது. ஆரம்பிப்போம்...!!!" என்று எண்ணிக் கொண்டே செம்பகராமன் தனது செயல் திட்டத்தினை ஆரம்பிக்கின்றான்.


இந்திய சுதந்திரத்திற்காக போராடும் ஒரு இந்திய இராணுவத்தினை அமைப்பதே அவனது முதல் இலக்காய் இருந்தது. அவனது இலக்கிற்கு செர்மனி உதவிப் புரிந்தது...செம்பகராமனின் செயலும் பேச்சும் ஆட்களை கவர்ந்தன...வெகு விரைவில் ஒரு தோற்றம் பெற்றது இந்தியாவின் முதல் இராணுவம்...'இந்தியத் தேசியத் தொண்டர் படை (Indian National volunteers Corps)' என்றப் பெயரினைக் கொண்டே.

யுத்தம் காத்து இருக்கின்றது...படையும் தயாராக இருக்கின்றது...போதாது. களத்தில் குதித்தான் செம்பகராமன்...நேரடியாகவே. முதலாம் உலக யுத்தத்தில் செர்மனியின் புகழ் பெற்ற நீர் மூழ்கிக் கப்பலான எம்டன் (Emden) என்றக் கப்பலின் பொறியாளராகவும் இரண்டாம் பொறுப்பதிகாரியாகவும் செயல் புரிந்தது செம்பகராமனே ஆகும்.

அன்றைய காலத்தில் இந்தியப் பெருங்கடல் முழுமையும் ஆங்கிலேயக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆங்கிலேயப் படைகளின் செல்வாக்கு அப்படி. அப்படி இருந்தும், ஆங்கிலேய கப்பல் படையிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்டனில் இந்தியாவினை வலம் வந்து, சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நீதி மன்றம் மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் போன்றவற்றின் மீது ஆங்கிலேய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் தாக்குதல் நிகழ்த்தி விட்டு சென்றான் செம்பகராமன்.

ஆங்கிலேயர்களின் செல்வாக்கு மிகுந்த கடற்பரப்பில் தைரியமாக கப்பலினை எடுத்து வந்து அவர்கள் கொண்டாடிய சென்னையின் மீதே தாக்குதல் நிகழ்த்தி வெற்றிக்கரமாக செம்பகராமன் திரும்பிச் சென்று ஆண்டுகள் பல ஆகலாம்...ஆனால் அந்தச் செயல்...அந்தத் தைரியம் வரலாற்றில் பதிந்து விட்டது,ஒரு வட்டாரச் சொல்லாய்...'எம்டன்' என்றச் சொல்லாய்...இன்றும் அந்தச் சொல் திறமைசாலிகளைக் குறிக்கும் ஒருச் சொல்லாக தமிழகம் அதுவும் குறிப்பாக சென்னைப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்துக் கொண்டு இருக்கின்றது.

இது போதாதென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்றைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக உள்ள காபூலில் இந்தியாவின் சுதந்திர அரசினை நிறுவவும் அவன் செயலாற்றினான். அதாவது இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்த ஆங்கிலேய அரசிற்கு எதிராக இந்தியாவிலேயே சுதந்திரமாக இந்திய அரசினை அமைத்தான். அவ்வாறு அமைந்த அந்த அரசினில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தான் அவன்.

அனைத்தும் நன்றாகத் தான் தொடக்கத்தினில் சென்றுக் கொண்டு இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல செர்மனியின் வலுக் குறைய ஆரம்பித்தது...வெற்றிகள் இங்கிலாந்தின் வசம் செல்ல ஆரம்பித்தன...முடிவில் இங்கிலாந்தே போரில் வெல்ல செம்பகராமனின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தும் செர்மனியில் இருந்துக் கொண்டே தொடர்ந்து செயலாற்றத் தொடங்கினான் செம்பகராமன்.

பின்னர் செர்மனி மீண்டும் ஹிட்லரின் கீழ் எழுச்சிப் பெற்ற பொழுதும் செர்மனியில் ஒரு முக்கிய நிலையில் தான் செயலாற்றிக் கொண்டு இருந்தார் அவர்.

1933 ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் செர்மனியில் இருக்கும் வியன்னா என்னும் நகரில் ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்த பொழுது செம்பகராமனைக் கண்டு வெகு நேரம் பேசி இருவரும் தங்களது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். செம்பகராமனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கேட்ட பின்பு தான் 'இந்தியாவிற்கென்று தனி இராணுவம்' என்ற தனது சிந்தனையினை மேலும் விரிவாக்கிக் கொண்டார் சுபாஷ் சந்திர போஸ் என்ற கருத்துக்களும் இருக்கின்றன.

மிராவதி என்பவர் அவரது 'Lest We forget' என்னும் நூலிலே 'இந்தியா சுதந்திரம் பெற்று இருக்கும் இந்த நாளினை காண சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்து இருப்பார் எனில் நிச்சயமாக அவருடைய குருவான செம்பகராமன் பிள்ளைக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் அவர் வழங்கி இருப்பார்" என்றே குறிப்பிடுகின்றார். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் செர்மனிக்கே செல்ல வேண்டி இருக்கின்றது.

செர்மனி அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது...அதனுடையே நாஜிக்களும் தான். இரண்டையும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றார் ஹிட்லர் ஒரு கனவோடு...ஒரே கனவோடு. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களால் சுயமாக அவர்களை அவர்களே ஆழ முடியாது என்பதனைப் போன்றும் தவறாக ஹிட்லர் பேசி விட...அங்கேயே ஹிட்லரை எதிர்கின்றான் செம்பகராமன்.

"ஹிட்லர் பேசியது தவறு...இந்தியர்களின் வரலாற்றினை அறியாது கருத்தினைக் கூறி இருக்கின்றார்...அதற்கு ஹிட்லர் நிச்சயமாக மன்னிப்பு கேட்டாக வேண்டும்..."

செம்பகராமன் அவனது நிலையில் உறுதியாக நின்றான். இறுதியாக ஹிட்லர் அவன் தெரிவித்தக் கருத்துக்களுக்காக செம்பகராமனிடன் மன்னிப்புக் கோரினான்.

ஆனால் காலம் போக போக செர்மனியில் ஹிட்லரின் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லாத அளவிற்கு உயர ஆரம்பித்தது....எங்கும் அவன் குரல்...எங்கும் நாஜிக்கள்...எங்கெங்கும் ஹிட்லர். அந்த நிலையிலே மற்ற தலைவர்களின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

செர்மானியத் தலைவர்களின் செல்வாக்கே குறைந்தப் பொழுது இந்தியனான செம்பகராமனின் செல்வாக்கு மட்டும் சரியாமல் இருக்குமா? செம்பகராமனின் செல்வாக்கும் செர்மனியில் சரிய ஆரம்பித்தது.
 ஏற்கனவே ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்ததற்காக செம்பகராமனின் மீது பகை உணர்வுடன் இருந்த நாஜிக்கள் சிலர் அந்தத் தருணத்தினை பயன் படுத்திக் கொள்கின்றனர்.

செம்பகராமனின் உணவில் விஷம் இடப்படுகின்றது.

ஆங்கிலேயர்களுக்கு தனது சிறு வயதில் இருந்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த அந்த வீரன் இறுதியாக சூழ்ச்சிக்கு பலியாகின்றான்...தனது 43 ஆம் அகவையில். அது 1934 ஆம் ஆண்டு. இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு மாவீரனை இழந்த ஒரு ஆண்டு. சூழ்ச்சிக்கு பலியான தமிழர்களில் அவன் முதலானவனும் அல்ல...இறுதியானவனும் அல்ல...தமிழர்களின் வரலாற்றில் அவனும் ஒரு பகுதி ஆகின்றான்.

சாகும் தருவாயில் அவனது மனைவியிடம் அவன் கூறிய இறுதி வார்த்தைகள்

"பதினேழு வயதிலே பிறந்த நாட்டினை விட்டு, பிற நாடு ஓடி வந்தேன்; 26 ஆண்டுகள் கழிந்தன. எனது பிறந்த நாட்டினில் அடி எடுத்து வைக்கும் பாக்கியமில்லாது இறக்கப் போகின்றேன்...எனது தாய் நாட்டு மக்களை எனது வாழ்நாளில் காணாது சாகப் போகின்றேன்... சாகத்தான் போகின்றேன்...நான் செத்த பிறகாவது... எனது அஸ்தியை செந்தமிழ்நாட்டு வயல்களிலே தூவுங்கள்... எனது எண்ணத்தை நீராக...எனது அஸ்தியை உரமாகக் கொண்டு அந்தப் பச்சைப் பசும் பயிர்கள் வளரட்டும். அந்தப் பயிர்கள் விடுக்கும் கதிர்கள்... அந்தக் கதிர்கள் கொடுக்கும் கொடுக்கும் மணிகள்... அந்த மணிகளை உண்ணும் மக்கள்... அந்த மக்களின் இரத்தத்தோடு இரத்தமாக...சித்தத்தோடு சித்தமாகக் கலந்து விடுகின்றேன்...அங்கே, என்னைப் போல் ஆயிரமாயிரம் செம்பகராமன்கள் தோன்றட்டும்...!!!"

அவர் இறந்து 34 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது அஸ்தி இந்தியாவில் கரைக்கப்பட்டது. 17 வயதில் தனது நாட்டினை விட்டு போராட சென்ற வீரன் ஒருவனின் வரலாறும் அத்துடன் முடிவிற்கு வருகின்றது.

மேலும் சில குறிப்புகள்:

1) 'ஜெய் ஹிந்த்' என்றொரு முழக்கத்தினை நாம் இன்று அறிந்து இருப்போம்...அந்த முழக்கத்தினை அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்றச் செய்தி நம்மில் பலரும் அறிந்து இருக்க மாட்டோம். அந்தத் தமிழன் வேறு யாரும் இல்லை... செம்பகராமன் தான் அது. அவனது 16 ஆம் வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மேடையில் முழங்கியப் பொழுது அவன் பயன்படுத்திய அந்த முழக்கம் தான் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி இருக்கின்றது.

2) செம்பகராமன் ஆரம்பித்த இராணுவமான 'இந்தியத் தேசியத் தொண்டர் படை'யினைத் பின்பற்றித் தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பின்னாளில் தமது இந்தியத் தேசிய இராணுவத்தினை அமைக்கின்றார்.

3) செர்மனியின் உயர்ந்தப் பட்டமான 'வான் (Von)' என்றப் பட்டத்தினை செம்பகராமனுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கின்றது செர்மானிய அரசு. சுதந்திர இந்தியா அமையுமானால் அதன் முதல் சனாதிபதியாக செம்பகராமன் வர வேண்டும் என்றே செர்மானிய சக்கரவர்த்தியான கெய்செர் அவர்கள் கூறி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவனுக்கு 2008 ஆம் ஆண்டில் சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில் தமிழக அரசால் ஒரு முழு உருவச் சிலைத் திறக்கப்பட்டு உள்ளது. அதைத் தவிர வேறு ஏதாவது செய்யப்பட்டு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு வீரனின் வரலாற்றினை மக்களை அறியச் செய்து இருக்க வேண்டியது யார் கடமை? ஏன் இந்த வீரனின் வரலாறு மக்களிடம் சென்றடையவில்லை... இதனைப் போன்று இன்னும் எத்தனைப் பேர்கள் வரலாற்றின் இருண்டப் பக்கங்களில் உலாவுகின்றனரோ?

தெரியவில்லை...இருந்தும் அவர்களை அறிய முயல்வோம்...!!!

தொடர்புடைய இடுகைகள்:
1) வீரன் செண்பகராமன் - தமிழோசை பதிப்பகம்
2) http://www.frontlineonnet.com/fl2621/stories/20091023262112500.htm
3) http://en.wikipedia.org/wiki/SMS_Emden_%281908%29#Madras_to_Penang
4) http://en.wikipedia.org/wiki/Chempakaraman_Pillai
5) http://en.wikipedia.org/wiki/Bombardment_of_Madras
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பார்க்கும் பொழுது ஒரு வருத்தமான விடயம் கண்ணுக்கு புலனாகின்றது. அப்பக்கங்களில் சில இருட்டடிக்கப்பட்டு இருக்கின்றன. இருண்ட அப்பக்கங்களில் சிலர் மறக்கப்பட்டு கிடக்கின்றனர். சிலர் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றனர். ஏன் சற்று உற்றுப் பார்த்தால் இந்தியாவின் வரலாறே இவ்வாறு பல இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களைக் கொண்டு தான் விளங்குகின்றது.

சரி இருக்கட்டும், இருட்டடிப்பு செய்யப்பட்ட அனைத்துப் பக்கங்களைப் பற்றியும் அவற்றின் காரணிகளைப் பற்றியும் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் நமக்கு இப்பொழுது அவற்றிற்கு நேரமில்லை. காரணம் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களில் இருந்த ஒருவர் இப்பொழுது நம்மை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கின்றார்.

அவர் பெயர் செம்பகராமன் பிள்ளை.

1891 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் பிறந்து 1934 இல் செர்மனியில் மரணம் அடைந்த இவரின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது சற்று பிரமிக்க தான் வைக்கின்றது. அப்படி என்ன செய்து விட்டார் இவர்... காண்போம்!!!.

இன்றைக்கு போராட்டம், சுதந்திர வேட்கை போன்றச் சொற்கள் நம்மிடையே வெறும் வார்த்தைகளாக மட்டுமே பெரும்பாலும் இருந்துக் கொண்டு வருகின்றன...ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சொற்கள் தான் சிலருக்கு வாழ்க்கையாகவே இருந்து வந்தன...அதுவும் குறிப்பாக இளைஞர்களிடம்...மாணவர்களிடம்!!!

செம்பகராமனும் அப்படி ஒரு மாணவன் தான்...!!!

"வேண்டும் புரட்சி... திறமையான மக்கள் இங்கே நம் நாட்டிலேயே இருக்க அன்னியர்கள் எதற்காக நம்மை ஆள வேண்டும்...அடிமையாய் இருப்பதும் ஒரு வாழ்க்கையா?...இந்த நிலை மாற வேண்டும்...நிச்சயமாய்!!! மாற்றங்கள் தானாக என்றுமே வந்ததில்லை...எனவே நாம் தான் மாற்ற வேண்டும்...சுதந்திரத்தினை வென்றெடுக்க வேண்டும்...வருவாய் தோழனே...கடமைகள் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன" என்று சுதந்திர வேட்கையுடன் இந்தியத் தெருக்களில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த மாணவர்களின் தலைவனாய் இருந்தான் செம்பகராமன்...!!!

"பதினைந்தே வயது சிறுவன் நம்மை எதிர்த்துப் பேசுகின்றான்...செயல் புரிகின்றான்...வெறும் பேச்சாக இருந்தால் கூட விட்டு விடலாம்...ஆனால் இவன் பேச்சு மக்களை கவருகின்றதே...மக்கள் ஒன்று சேருகின்றார்களே...இவனை இப்படியே விட்டால் நமக்கு பின்னால் பிரச்சனைகள் எழலாம்...எனவே இவன் மக்களிடம் பேசுவதற்கு தடை விதிப்பது சரியானதொன்றாக இருக்கும்" என்று எண்ணி ஆங்கிலேய அரசும் செம்பகராமன் பொது இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு தடையினை அறிவித்தது. செம்பகராமனும் ஆங்கிலேய காவல்துறையின் கண்காணிப்பிற்கு கீழ் வந்தான்.

ஆனால் எத்தனை நாள் தான் சுதந்திர வேட்கை அடுக்குமுறைக்கு கட்டுப்பட்டுக் கிடக்கும்...சுதந்திரமாக செயலாற்ற எத்தனித்த செம்பகராமனுக்கும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வருகின்றது... ஒரு ஐரோப்பிய தாவரவியல் அறிஞர் வாயிலாக.

அவர் பெயர் சர். வால்டர் வில்லியம் ஸ்ட்ரிக்லேன்ட்!!! ஆங்கிலேய பரம்பரையினைச் சார்ந்தவராக அவர் இருந்தாலும் அவரது தாயார் செர்மனி நாட்டினைச் சார்ந்தவர். எனவே அவர் அக்காலத்தில் மறைமுகமாக செர்மானிய அரசுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்துக் கொண்டு வந்தார் ஆராய்ச்சி என்றப் பெயரில். அவர் கண்ணில் தான் துடிப்பான இளைஞனான செம்பகராமன் சிக்குகின்றார்.

"ஆங்கிலேயர்கள் ஆளும் நாட்டில் இருந்துக் கொண்டே அவர்களை எதிர்ப்பது கடினமான ஒரு செயல் என்று உனக்குத் தெரியாதா?"

"தெரியும்...ஆனால் அதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லை...!!!" என்றான் செம்பகராமன்.

சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"உன்னிடம் வேகமும் விவேகமும் இருக்கின்றது இளைஞனே...ஆனால் ஆங்கிலேயர்களை மீறி நீ போராட வேண்டும் என்றால் அவை மட்டுமே உனக்குப் போதாது... நீ இன்னும் அநேக விடயங்களைக் கற்க வேண்டும்...அதற்கு உனக்குச் சுதந்திரம் வேண்டும்" என்றார்.

அவரை உற்றுப் பார்த்தான் செம்பகராமன்.

"இதனை தாங்கள் என்னிடம் சொல்வதற்கு காரணம்...?"

மீண்டும் சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"பழைய கோட்பாடு தான் இளைஞனே...எதிரிக்கு எதிரி நண்பன்...அது தான் காரணம்" என்றார்.

"புரியவில்லையே...!!!" என்றான் செம்பகராமன்.

"உலகில் ஆங்கிலேயர்களுக்கு பகை நாடுகளும் இருக்கின்றன...அவைகளுக்கு இங்கிலாந்து வீழ வேண்டும்...அவ்வளவே...அதற்காக அவைகள் பல காரியங்களை செய்வதற்கு தயாராக இருக்கின்றன. அந்த நாடுகள் உனக்கு...உன்னுடைய குறிக்கோளுக்கு உதவி நிச்சயமாய் செய்யும்...! உனக்கு உன்னுடைய நாடு விடுதலை அடைய வேண்டும்...எங்களுக்கு இங்கிலாந்தின் செல்வாக்கு குறைய வேண்டும்...அவ்வளவே...!!! இலக்கு ஒன்றாக இருக்கும் பொழுது ஒன்றாக செயலாற்றலாம் தானே... என்ன சொல்கின்றாய்..." என்றுக் கூறி செம்பகராமனின் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்.

யோசித்தான் செம்பகராமன்.

"என்னை இப்பொழுது என்ன செய்ய சொல்லுகின்றீர்...?"

"கிளம்பு...ஐரோப்பா உனக்காக காத்திருக்கின்றது... அறிவை வளர்த்துக் கொள்...அங்கே உனக்கு உதவிகள் செய்ய நண்பர்கள் பலர் இருக்கின்றனர்..."
இதற்கு மேல் சிந்திப்பதற்கு ஒன்றும் இருப்பதுப் போன்று செம்பகராமனுக்குத் தோன்றவில்லை.

அவன் முடிவெடுத்து விட்டான்.

"சரி...கிளம்பலாம்...!!!"

ஸ்ட்ரிக்லேன்ட் அவர்களுடன் கப்பலேறி ஐரோப்பாவினை நோக்கி1908 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் தேதி பயணிக்க ஆரம்பித்தப் பொழுது அவனது வயது 17!!!

முதலில் இத்தாலி...அங்கே ஒரு பட்டப்படிப்பு...பின்னர் சுவிச்சர்லாந்து...அங்கும் படிப்பு...பின்னர் செர்மனி...அங்கும் கல்வி...பட்டம்...சாதாரண செம்பகராமன் ... டாக்டர். செம்பகராமன் ஆகின்றான். ஆனால் படிப்பினை மட்டுமே அங்கே அவன் கவனிக்கவில்லை... சென்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் மத்தியில் கூட்டம் போடுவது...ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினை தோலுரிப்பது... இந்தியர்களின் நியாயமானமான கோரிக்கைகளை உலக மக்களின் முன்னர் கொண்டு சேர்ப்பது போன்ற வேலைகளையும் கல்வியுடன் சேர்த்து அவர் செய்துக் கொண்டு தான் இருந்தார். இவரது இந்தச் செயல்கள் இந்தியாவின் குரலினை உலக மக்களிடையே கொண்டு போய் சேர்த்தன.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக பெர்லினில் 'இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி' என்ற ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயலாற்றினார். அந்த இயக்கத்தின் வழி 'ப்ரோ இந்தியா' என்ற ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் நடத்தி உலக மக்களின் பார்வைக்கு இந்திய மக்களின் கோரிக்கைகளையும் நியாயங்களையும் கொண்டு சேர்த்தார்.

செயல் வேகம் இருக்கின்றது... அறிவாற்றலும் இருக்கின்றது...அதனுடன் திறமையும் இருக்கின்றது...போதாதா...செர்மனியின் அரசியல் தலைவர்கள் செம்பகராமனின் நண்பர்களாக விருப்பம் கொள்ள, செர்மனியில் செம்பகராமனின் செல்வாக்கு உயர்கின்றது.... செர்மனியின் சக்கரவர்த்தியான கெய்சர் அவர்கள் அவரது நெருங்கிய நண்பனாக கருதும் அளவுக்கு அவனின் செல்வாக்கு உயர்கின்றது. செர்மனியின் சக்கரவர்த்தி எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னும் செம்பகராமனின் ஆலோசனையைக் கேட்கும் அளவு இருந்தது செம்பகராமனின் திறமை.

அத்தோடு அவன் நிற்கவில்லை...உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவன் குரல் எழுப்ப விரும்பினான்... அதற்காக அவன் ஆரம்பித்த இயக்கங்கள் தான் 'ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்' மற்றும் 'கீழ் நாட்டவர் சங்கம்'. இந்த இயக்கங்கள் மூலம் உலகின் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கும் அவன் குரல் எழுப்ப ஆரம்பித்தான்.

இங்கிலாந்தோ அவன் தலைக்கு ஒரு விலை (ஒரு இலட்சம் பொன்) வைத்து உலகம் முழுவதும் காத்துக் கொண்டு இருந்தது...ஆனால் அதனை துளிக் கூட பொருட்படுத்தாது உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டு இருந்தான் செம்பகராமன்... தென் ஆப்பிரிக்கா, பர்மா, அமெரிக்கா, சீனா, எகிப்து...இப்படி பல நாடுகளுக்குச் சென்று அங்கே மக்களுக்காக குரல் எழுப்பினான்.

அமெரிக்காவில் சென்று அங்கிருந்த ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக குரல் எழுப்பினான். அன்று இருந்த அமெரிக்க சனாதிபதியான உட்ரோ வில்சனை நேரில் கண்டு ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக பேசினான். சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய உரிமை என்று எண்ணியே அவன் மனிதத்திற்காக குரல் கொடுத்தான்.

கூடவே இந்தியாவில் இருந்த தலைவர்கள் மற்றும் போராளிகளுடனும் அவன் தொடர்பில் இருந்துக் கொண்டே தான் இருந்தான். போராளிகளுக்கு செர்மனியில் இருந்து ஆயுதங்களை பெற்றுத் தருவது, தலைவர்களின் குரல்களை உலகிற்க்குக் கொண்டுச் செல்வது என்று அவனால் இயன்ற அனைத்தையும் அவன் செய்துக் கொண்டே தான் இருந்தான். இந்தியத் தலைவர்களின் அகிம்சை வழிப் போராட்டத்தினை அவன் ஏற்றுக் கொண்டாலும், ஆயுதங்களுடன் இருக்கும் ஆங்கிலப் படையினர் அவர்களை நொடியில் அடக்கி விடுவர் என்றும் அவன் அறிந்து வைத்து இருந்தான்...அந்த எண்ணத்திலேயே இந்தியாவிற்காக போரிடும் ஒரு படையினையும் அவன் உருவாக்கத் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான்.

அவன் எதிர்பார்த்தக் காலமும் வந்தது.

1914 ஆம் ஆண்டு...முதலாம் உலக யுத்தம் தொடங்கப்பெருகின்றது.

23 வயதான வீரன் செம்பகராமன் தன்னுடைய திட்டத்தினை செயல்படுத்த ஆரம்பிக்கின்றான்.
nanri http://vazhipokkanpayanangal.blogspot.in

search "எம்டன்" செண்பகராமன் - ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக