வியாழன், 22 பிப்ரவரி, 2018

அயோத்திதாசர் பாட்டன் திருக்குறள் பாதுகாத்ததற்கு சான்று பறையர் இலக்கியம் குறள்

aathi tamil aathi1956@gmail.com

3/11/17
பெறுநர்: எனக்கு
Kalachuvadu > டிசம்பர் 2014 >
கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்


போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்காகத் தமிழ் - ஆங்கில பொதுஅறிவு
மாதஇதழாக வெளிவரும் ‘பொது அறிவு’ இதழில் (ஜூலை 2014) அயோத்திதாசர் பற்றி
இரண்டு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இரண்டும் அயோத்திதாசரின் நினைவு
நூற்றாண்டை ஒட்டி (1914-2014) அவரை அறிமுகப்படுத்தும் நோக்கில்
அமைந்துள்ளன. ஒரு கட்டுரையை ‘பண்டிதர் அயோத்திதாசர் 100’ என்னும்
தலைப்பில் கோவி. லெனின் எழுதியுள்ளார். அயோத்திதாசரின் எழுத்துக் களே
நேரடியாகப் பயன்படுத்தப்பட்ட கட்டுரை மற்றொன்று. அயோத்திதாசரை
அறிமுகப்படுத்திய விதத்திலும் ‘பொது’ வாசகர்களுக்கான வரையறைக்கேற்பவும்
எழுதப்பட்ட கட்டுரை என்ற விதத்தில் கோவி. லெனின் கட்டுரை
எழுதப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையில் புலப்படும் பார்வைக் குறைபாடு
தலித்துகள் பற்றி நிலவிவரும் சாதியப் பார்வையை மறைமுகமாக மறுஉறுதி
செய்வதாக இருப்பதால் அதை இனங்காண்பது அவசியம்.
தலித்துகள் பற்றி எழுதவோ பேசவோ முன்வரும் யாருக்கும் அவர்களைப் பற்றிப்
பொத்தாம் பொதுவான சில முன்முடிவுகள் உண்டு. அவர்கள் காலங்காலமாக இழிவாகவே
இருப்பவர்கள், சுய விழிப்புணர்வு இல்லாதவர்கள் என்கிற முடிவுகளே அவை.
இம்முடிவுகள் வரலாற்று ரீதியானவை என்கிற நம்பிக்கையும் அவர்களுக்குண்டு.
தலித்து களுக்காகப் பேசவரும் யாரும் அவர்களுக்கு ஆதரவு தருவதாகக்
கருதிக்கொண்டு இத்தகு ‘சமகால இழிவுகளையே’ அவர்களின் என்றென்றைக்குமான
நிலைமையென்று பேசி வருகின்றனர். சாதி என்னும் மோசடியால்
வீழ்த்தப்பட்டதால் அவர்கள் இன்றைய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை
மறைத்து அவர்களின் இழிவை அவர்களே ஒத்துக் கொள்ளும்படி இச்சித்திரிப்பு
செய்துவிடுகிறது. இவ்வாறு ஒத்துக்கொள்ளும் மனநிலையே நிரந்தர உளவியலாக
மாறி அவர்களைக் கருத்தியல் அடிமை களாக ஆக்கிவிடுகிறது. சாதி ஆதரவு
பதிவுகளில் வெளிப்படையாகத் தெரியும் தலித்துகள் குறித்த இழிசித்திரம்
தலித் ஆதரவு பதிவுகளில் மறைமுகமாகப் பதிவாவதால் நம் கண்ணுக்குப்
புலனாவதில்லை. இந்தவகையான சிக்கலொன்று தான் கோவி. லெனின் கட்டுரையில்
வருகிறது.
அயோத்திதாசரின் கல்விபற்றி கோ.வி. லெனின் எழுதும்போது “இந்தியச்
சமுதாயத்தில் கடுமையான தீண்டாமை நிலவிய காலம் அது. பள்ளிப் பருவத்தில்
தீண்டாமையை நேரில் உணர்ந்தார். பிறப்பினால் ஒரு மனிதனை உயர்ந்தவர்
என்றும் இன்னொரு மனிதரைத் தாழ்ந்தவர் என்றும் சொல்கிற இந்துமதத்தின்
வர்ணாசிரம தர்மத்தையும் சாதிப் பிரிவினைகளையும் அவர் வெறுத்ததுடன்
மறுக்கவும் செய்தார்” (ப. 14) என்று குறிப்பிடுகிறார். மேலோட்டமாக
வாசிக்கும்போது இப்பதிவு தலித்துகளைப்
பற்றிச் சரியாகச் சொல்லுகிறது. அயோத்திதாசர் பள்ளிப்பருவத்தில்
தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டார். இவ்வாறு ஆளாக்கப்பட்டு வந்ததின்
தொடர்ச்சியாகவே அவர் பிற்காலத்தில் தீண்டாமை எதிர்ப்பு பேசவும்
தலைப்பட்டார் என்கிற விதத்தில் இப்பதிவு அமைந்துள்ளது. இதைப் படிக்கும்
எவரும் இதற்கு ஆதாரம் கேட்கப்போவதில்லை.
ஆனால் இத்தகவல் தலித்துகள் குறித்த வழக்கமான மனப்பதிவிலிருந்து
எழுதப்பட்டுள்ளதே தவிர ஆதாரங்களின்படி எழுதப்படவில்லை. இத்தகவலுக்கு
அயோத்திதாசரின் எழுத்துகளிலோ பிறவிடங்களிலோ எந்த ஆதாரமும் இல்லை.
அயோத்திதாசரின் நேரடி எழுத்துகள் கிடைக்கு மளவிற்கு அவரின் இளமைப்
பருவம், கல்விபற்றித் துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின்
பாட்டனார்பற்றியும் ஆசிரியர்பற்றியும் இரண்டொரு தகவல்களை எழுதியுள்ளார்.
மற்றபடி அவரின் வாழ்க்கைபற்றி மறைமுகமான பதிவுகளே கிடைக்கின்றன.
அப்பதிவுகள் கோவி. லெனின் கட்டுரை புனைந்துகொண்ட மேற்கண்ட தகவலுக்கு உதவி
செய்கிறவிதத்தில் இல்லை.
முதலில் அயோத்திதாசர் பயின்ற இடத்தை பள்ளி என்று கூறலாமா என்றுகூடத்
தெரியவில்லை. நாம் இன்றைக்குப் பள்ளி என்று பொருள்படுத்திக் கொள்வது
ஆங்கிலேயர்கள் மூலம் உருவான நவீன கல்வி முறையைத்தான். நவீன மனிதன் இந்த
அர்த்தத்தில் மட்டுமே இச்சொல்லைப் புரிந்துகொள்ள முடியும். காலனிய
செல்வாக்கினால் உருவாகியிருக்கும் அர்த்தம் இது. ஆனால் அயோத்திதாசர்
மரபான கல்விமுறையில் தான் பயின்றார். அவருக்கான கற்பித்தல் முறையும்
கல்வியும் மரபான கல்வி சார்ந்ததே ஆகும். அவரின் சிந்தனைகளையும் சிந்தனா
முறையையும் உற்று வாசிக்கும்போது இதை அறிந்துகொள்ள முடியும்.
அயோத்திதாசரின் குடும்பம் ஏடுகளை வாசித்து பாதுகாத்து வந்தது. சோதிடமும்
நாள் கோள் கணிப்பதும் குடும்பப்பணிகளாகவே இருந்தன. அயோத்திதாசரும்
தொடக்ககால தலித் இதழ்களும் தரும் குறிப்பின்படி அக்காலகட்டத்தில்
தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் ஏடுகள் இருந்ததாகவும் அக்குழுவினரிடையே அவை
வாசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட குழுவினரிடையே
செயற்பட்ட அறிவாக்க முறையாக இப்போக்கைப் பார்க்கலாம். தாழ்த்தப்பட்டோரில்
பல்வேறு புலவர்களும் கலைஞர்களும் இருந்தனர் என்ற குறிப்புகள்
கிடைக்கின்றன. இதன்படி பார்த்தால் கல்விமுறை என்பதன் பொருளே மாறுகிறது.
மரபான கல்விமுறையில் சாதி மதம் உள்ளிட்ட பிரிவுகளைத்தாண்டி எல்லோரும்
ஓரிடத்தில்கூடி முறைப்படுத்தப்பட்ட பாடம் படித்ததாகக் கூற முடியவில்லை.
மாறாக ஒவ்வொரு குழு மற்றும் சாதியினரிடம் அவர்களுக்கேயுரிய அறிவுருவாக்க
முறை செயற்பட்டதாகத் தெரிகிறது. அக்குழுவினரிடையே சிலர் உபாத்தியாயர்களாக
விளங்கியிருக்கின்றனர். அவர்கள் மக்களில் ஒருவராகவோ பெரும்புலவராகவோ
இருந்திருக்கின்றனர். அயோத்திதாசரின் ஆசிரியர் வல்லகாளத்தி வீ.
அயோத்திதாச கவிராஜ பண்டிதர் ஆவார். அவர் சென்னைப்பகுதியில் பெரும்புலவராக
விளங்கியிருக்கிறார். வைத்திய ஏடுகள் சிலவற்றை அச்சுக்கு கொண்டுவந்தார்.
அவரது பெயரே அவருக்கிருந்த கல்விப் புலமைக்குச் சான்றாகிறது. அவர்
பெயரையே தம்பெயராக அயோத்திதாசர் சூட்டிக்கொண்டார். வல்லகாளத்தி வீ.
அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரிடம் பயிலும்போது
நம்முடைய அயோத்திதாசருக்குத் தீண்டாமை அனுபவம் எப்படி ஏற்பட்டிருக்க
முடியும்? அவர் நடத்தியதைப் பள்ளி என்றோ அதில் பலசாதியினரும் பயின்று
தலித்துகள் மட்டும் ஒதுக்கப்பட்டனர் என்றோ கூறுவதற்கு இடமேது? இதற்கான
எந்தப் பதிவையும் அயோத்திதாசர் தராதபோது கட்டுரையாளர் எந்த ஆதாரத்தின்படி
இம்முடிவிற்கு வந்தார்?
‘நவீன’ மனிதர்களான நம்மில் யாருக்கேனும் மரபான கல்வி செயற்பட்டவிதம்
பற்றி ஏதேனும் தெரியுமா? அதைப்பற்றித் தேடியிருக்கிறோமா? அயோத்திதாசர்
வாழ்க்கையை எழுதும்போது அறிய வாய்ப்பில்லாத பகுதியை தாமே
நிரப்பிக்கொள்ளும் வரலாற்றாசிரியரின் ஊகம் போன்றது கோவி. லெனினின்
இப்பதிவு. எனவே கோவி. லெனினின் ஊகம் எப்படியும் இருந்திருக்கலாம். ஆனால்
தலித்மக்கள்பற்றி நிரந்தர நம்பிக்கையாக மாற்றப்பட்டிருக்கும்
சித்திரம்தான் அவருக்குள் வினையாற்றி அயோத்திதாசர் பள்ளியில்
தீண்டாமையைத்தான் சந்தித்திருக்க முடியும் என்கிற முடிவினை
எட்டியிருக்கிறார். அயோத்திதாசரின் சாதி மறுப்பு, தீண்டாமையின் நேரடி
அனுபவத்திலிருந்து உருவானது என்று கூறுவதைவிட மரபு
ரீதியான வரலாற்றுரிமை பெற்றவர்களிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு
நிற்கிறார்கள் என்பதை மரபார்ந்த புலமையின்மூலம் உணர்ந்துகொண்டதால்
உருவானது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். உண்மையில் சாதியமும்
சாதிகளும் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒரேமாதிரி
இருந்ததில்லை. இதை அறிந்துகொள்ளாமல் சமகால அரசியல் நோக்கோடு சாதியமைப்பை
என்றென்றைக்கும் ஒரேமாதிரி இருந்ததாக - நிரந்தர வடிவம் கொண்டதாகப்
புரிந்து கொள்வதால் வரும் விளைவு இது என்று கூறலாம்.
பகுத்தறிவின் ‘மூட நம்பிக்கை’
அயோத்திதாசரோடு தொடர் புடைய மற்றொரு பிழையொன் றையும் அண்மையில் பார்க்க
நேர்ந்தது. அதை நிகழ்த்தியிருப்பவர் சுபவீ. 2014 ஆகஸ்ட் 17ஆம் நாள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலத்தில் நடத்திய கல்விஉரிமை மாநாட்டில்
பேசப்பட்ட சுபவீ உரை, அக்கட்சியின் ஏடான ‘நமது தமிழ்மண்’ணில் (செப்டம்பர்
2014) வெளியாகியிருக்கிறது. அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன்
தொடர்புடைய வரலாற்றுத் தகவலொன்றை கீழ்வருமாறு அதில் விவரிக்கிறார்:
கந்தப்பன் சமையற்காரராய் இருந்தபோது எல்லீஸ் அவர்களுக்குப் பழைய
ஓலைச்சுவடிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. பயன்படாத ஓலைச்சுவடிகள் என்று
கருதியவற்றை நெருப்பிலே எரிப்பதற்குக் கொடுத்தார்கள். அவற்றை
எரித்துக்கொண்டிருந்தபோது ஒருசில சுவடிகளை கந்தப்பன் படித்தார். அது
அவரின் நெஞ்சத்தின் ஆழத்தைத் தொட்டது. அவர் எல்லீஸிடத்தில் இந்த
ஓலைச்சுவடிகள் எல்லாம் மிக அரிய கருத்துகளைச் சொல்வதுபோல இருக்கிறது
என்று சொன்னார். தமிழ் அறிந்த அறிஞர்களை வரவழைத்து அதை எல்லீஸ்
படித்தார். அவை அனைத்தும் திருக்குறளைத் தாங்கியிருந்த
ஓலைச்சுவடிகளாகும். திருக்குறளை தாங்கியிருந்த ஓலைச்சுவடிகளை
நெருப்புக்குப் போகாமல் காத்த கந்தப்பன் யார் தெரியுமா? அயோத்திதாசப்
பண்டிதரின் பாட்டன்.....
இன்றைய தலித் பிம்பமாகக் காட்டப்படும் அயோத்திதாசரின் பாட்டனாரை
பெருமைப்படுத்துவதன்மூலம் மாநாட்டில் கூடியிருந்த கூட்டத்தினரை
மகிழ்ச்சிப்படுத்துவதாக அமைந்த வீரபாண்டியனின் இப்பேச்சுக்கு எந்த
நூலிலும் ஆதாரம் இல்லை. இது சுபவீயே புனைந்த கதையாடல். ஆனால்
இத்தகவலுக்கான வேர்மட்டும் அயோத்திதாசரிடம் இருக்கிறது. கந்தப்பனை குறள்
பதிப்போடு தொடர்புபடுத்தி எழுதியிருப்பவர் அயோத்திதாசர்தான். ஆனால்
அயோத்திதாசர் இத்தகவலை விரிவான பின்புலத்தோடு எழுதியிருக்கிறார்.
அப்பின்புலத்திலிருந்து ஒரு தகவல் என்கிற அளவிற்கு இதைப்
பிரித்தெடுத்துவிட்டால் இதைப்பற்றி அயோத்திதாசர் எழுதியிருப்பதற்கான
காரணமே அடிபட்டுப் போய்விடுகிறது. முதலில் நாம் அயோத்திதாசர் எழுதிய
பதிவைப் பார்த்தால்தான் சுபவீ புனைந்த கதையாடலின் போதாமையைப்
புரிந்துகொள்ள முடியும்.
அயோத்திதாசர் ‘எனது பாட்டனார் ஜர்ஜ் ஆரிங்டியன் துரை பட்ளர்
கந்தப்பனென்பவர் ஓலைப்பிரிதியிலிருந்து திரிக்குறளையும், நாலடி
நாநூறையும் ஈஸ்ட் இன்டியன் கம்பனியார் காலத்தில் தமிழ்ச்சங்கங்கூட்டி
வைத்த கனம் எலீஸ் துரையவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வெளி
வந்திருக்கின்றது” (ப. 723, தொகுதி - வீ) அயோத்திதாசர் சிந்தனைகள், ஞான
அலாய்சியஸ் (தொ.ர்) என்று எழுதுகிறார். இதே தகவலை வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு பின்புலத்தில் அயோத்திதாசர் குறிப்பிட்டு செல்கிறார். 1813ஆம்
ஆண்டு சென்னை கல்விச் சங்கத் தைத் தொடங்கியபின்னர் எல்லீஸ் பல்வேறு
இடங்களிலிருந்து ஓலைச் சுவடிகளைத் திரட்டி வந்தார். எல்லீஸ் உள்ளூர்
புலவர்கள் மூலம் சில இடங்களில் சேகரித் தார். கையிருப்பில் இருந்த சிலர்
நேரடியாகவே அவரிடம் அளித்திருக் கிறார்கள். அயோத்திதாசர் தரும் தகவல்படி
பார்த்தால் எல்லீஸின் முயற்சிகளை அறிந்த கந்தப்பன் தம் குடும்பரீதியாகப்
பராமரிக்கப்பட்டு வந்த குறள் மற்றும் நாலடியார் ஆகிய இரண்டு ஏடுகளையும்
எல்லீஸிடம் அளித்திருக்கிறார். சித்த வைத்தியம், சோதிடம் கணித்தல் போன்ற
காரணங்களால் ஏடுவாசிக்கும் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்ப தால்
கந்தப்பனுக்கு இந்த வாய்ப்பு. இதுதான் அயோத்திதாசர் தரும் பதிவு. ஆனால்
சுபவீயின் கதையாடல் அயோத்திதாசரின் பதிவுகளிலிருந்து பாரதூரமான
வேறுபாட்டை கொண்டிருக்கிறது.
முதலில் சுபவீ தரும் சித்திரம் தகவல் அடிப்படையிலேயே பிழை. அவர்
கூறுவதுபோல கந்தப்பன் எல்லீஸின் சமையற்காரர் இல்லை. எல்லீஸ் காலத்தில்
சென்னையிலிருந்த மற்றொரு ஆங்கிலேய அதிகாரியான ஆரிங்டன் என்பவரின் பட்லர்.
பட்லர் என்பது சமையல் பணியாளரை குறிக்கும் பொதுச்சொல் என்றாலும்
அப்பணியில் பலநிலைகள் உண்டு. அதற்கேற்ப பதவியின் பெயர்கள் உண்டு. இங்கு
ஆரிங்டனுக்கும் கந்தப்பனுக்கும் என்ன மாதிரியான உறவு இருந்தது? எல்லீஸ்
ஏடுகள் தேடும் தகவலை கந்தப்பன் தானே அறிந்தாரா அல்லது ஆரிங்டன் சொல்லித்
தெரிந்துகொண்டாரா? அவர் பட்லரில் ஆரிங்டனை நெருங்கியிருக்கும் அளவிற்கான
பொறுப்பிலிருந்தார் என்பதைக்காட்டும் மறைமுகக் குறிப்புகள்
அயோத்திதாசரின் எழுத்துகளிலேயே இருக்கின்றன. இவ்வாறெல்லாம் விவரித்துப்
பார்ப்பதற்கான சாத்தியத்தை சுபவீயின் ‘சமையற்காரர்’ என்ற ஒற்றை விளிப்பு
மறைத்துவிடுகிறது. அச்சொல் இன்றைய ‘சாதாரண’ பொருளில் புரிந்து
கொள்ளப்படவே வாய்ப்பிருக்கிறது. அச்சொல்லை எளிமையாக்கிவிடும்போது அடுத்து
‘அவர் அடுப் பெரித்தார்’ என்று சொல்வதையும் வாசகமனம் ஏற்கத்
தயாராகிவிடுகிறது. சாதாரண சமையற்காரர் அடுப் பெரிக்கும் வேலையைத்தானே
செய்திருக்க முடியும்?
அக்கால சென்னையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே பல்வேறு புலவர்களும்
அவதானிகளும் இருந்தனர். ஏடுகளை வாசித்து பாதுகாத்து வந்ததோடு அச்சில்
வெளியிடவும் செய்தனர் என்றெல்லாம் அயோத்திதாசர் பலமுறை எழுதுகிறார்.
இதன்மூலம் அந்தந்த சமூகக் குழுவிற்கான ஒருவகை கல்விமுறை அவர்களிடையே
பயின்று இருந்தன என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அறிவு என்பதை
ஐரோப்பிய அறிவுலக பார்வையில் பயன்பாட்டு வாதமாக மட்டுமே புரிந்து
வைத்திருக்கிறோம். ஆனால் அயோத்தி தாசர் தாழ்த்தப்பட்டோரிடையே புழங்கிய
பாரம்பரியமான கல்வி மரபையே குறிப்பிடுகிறார். இதைப் புரிந்து கொள்ளாமல்
தாழ்த்தப் பட்டோரின் புலமைபற்றி அயோத்திதாசர் பேசுவதைச் சாதிப் பெருமை
பேசுவதாக பலரும் எண்ணிக் கொள்கிறோம்.
இப்பின்னணியிலிருந்துதான் கந்தப்பன் தன் குடும்ப பராமரிப்பிலிருந்த குறள்
மற்றும் நாலடியார் ஏடுகளை எல்லீஸுக்குக் கொடுத்தார் என்று அயோத்திதாசர்
கூறுவதைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லீஸுக்கு குறள் மற்றும் நாலடியார்
ஏடுகள் பல்வேறு இடங்களிலிருந்தும்கூட கிடைத்திருக்கலாம். அதிலொருவராக
கந்தப்பனும் இருந்திருக்கிறார். கந்தப்பனும் கொடுத்தார் என்பதை
வைத்துக்கொண்டு குறள் அச்சாக்கத்தில் தங்கள் முன்னோர் களுக்கும்
பங்குண்டு என்று அயோத்திதாசர் கூறுகிறார். எனவே இந்த உரிமைகோரலில்
நியாயமிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இது மட்டுமல்ல, குறள் அச்சில் வந்தபோது அதில் நடத்தப்பட்டிருந்த
திரிபுகளைச் சுட்டிக்காட்டி கந்தப்பன் எல்லீஸிடம் முறையிட்டதாகவும்
அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். தீவினையச்சம் என்னும் அதிகாரத்தில்
இடம்பெற்றுள்ள பத்தாவது குறளில் ‘அருங்கோடன்’ என்ற சொல் அருங்கேடன் என்று
பிழைபட்டுள்ளதாக முறையிட்டார். (ப.676, தொகுதி வீவீ) இந்த அளவில் குறள்
ஏட்டிலிருந்து அச்சுக்கு மாறிய தருணத்திலேயே தலையீடும் அதற்கான புலமையும்
கந்தப்பனுக்கு இருந்துள்ளது.
இங்கு கந்தப்பனை எதேச்சையாக ஏட்டைக் கண்டுசொன்ன சமையற்காரராக சுபவீ
சொல்லுவதற்கும் ஏடுகளைத் தன் குடும்ப இருப்பிலிருந்து தந்தார் என்று
அயோத்திதாசர் சொன்னதற்கும் வேறுபாடு இருக்கிறது. சுபவீயின் இக்கதையாடலால்
அயோத்திதாசர் தாழ்த்தப்பட்டோர் குறித்துக்காட்ட விரும்பிய வரலாற்று
சித்திரம் சிதைக்கப்பட்டுவிட்டது. கந்தப்பனின் குடும்ப பராமரிப்பிலிருந்த
ஏடுகள் என்று அயோத்திதாசர் கூறும்போது அவ்வேடுகளைப் படித்து பாதுகாத்து
வருபவர்கள் என்கிற சித்திரம் தானாகவே கிடைக்கிறது. இச்சித்திரிப்பை
ஏற்றுக்கொள்ளும்போது தாழ்த்தப்பட்டவர்கள் பூர்வகாலம் முதலே கல்வியறி
வற்றவர்கள்தாம் என்ற வழக்கமான நம்பிக்கை பொய்யாகிவிடுகிறது.
அயோத்திதாசரின் விவரணைக்குப் பின்னே இவ்வாறு விளக்கங்கள் நீள்கின்றன.
இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இன்றைய தாழ்த்தப்பட்டோர் கடந்தகால
வரலாற்று உரிமையிலிருந்து துண்டிக்கப்பட்டதாலேயே வீழ்த்தப்பட்டனர் என்கிற
புரிதலோடு சாதியமைப்பு இயற்கையானதல்ல என்பதைக் காட்டுவதற்காக அவர்கள்
பௌத்தர்களாய் இருந்தமை, குறள்போன்ற அறம் வலியுறுத்தும் நூல்களை படைத்தமை,
அதுபோன்ற பிறநீதி நூல்களையும் குடும்ப ரீதியாகப் பாதுகாத்துப்
படித்துவந்தமை போன்றவற்றை அயோத்திதாசர் காட்டினார். இதன்படியே
குறளுக்கும் ஔவையார் பாடல்களுக்கும் பௌத்தநோக்கில் உரை எழுதினார். ஆனால்
சுபவீயின் குறுக்கப்பட்ட கதையாடல் இப்பின்னணியை மறைத்துவிடுகிறது. அவரின்
அரைகுறையான சொல்முறை வரலாற்றுத் திரிபை நுட்பமாக நிகழ்த்திவிடுகிறது.
மாநாட்டில் திரண்டிருக்கும் மக்கள்திரள் முன் கடினமான வரலாற்றுத்
தகவல்களைக் கதைபோல எளிமையாகச் சொல்ல சுபவீ முயன்றிருக்கலாம் என்று கருதி
அமைதியடையலாம் என்றால் அதுவும் பொருந்தவில்லை. நடந்த சம்பவத்தைத்தான்
எளிமையான கதைவடிவில் கூறியிருக்கவேண்டும். கந்தப்பன் அடுப்பெரித்தபோது
ஏடுகளைக் கண்டறிந்தார் என்பதைக்கூறி தாழ்த்தப்பட்ட மக்களை உற்சாகப்படுத்த
முடியுமென்றால், குறளையே பாதுகாத்து அச்சுக்குக் கொணரும்படி செய்தவர்
என்ற உண்மையை கூறியிருந்தால் அதிக உற்சாகம் தரமுடியும் தானே! மேலும்
அடுப்பெரிக்கத் தந்த ஏடுகளை குறள்தான் என்று கண்டறிய வெளியிலிருந்து
தமிழறிஞர்கள் வரவழைக்கப்பட்டதாக சுபவீ கூறியிருக்கிறார். கண்டறிபவர்தான்
அறிஞர் என்றால் குறளின் திரிபுபற்றி எல்லீஸ்வரை முறையிட்ட கந்தப்பன்
யார்?
உண்மையில் சுபவீயின் கதையாடல்படி பார்த்தால் குறள்மீது அயோத்திதாசர்
விரும்பும் எந்த உரிமையையும் கோரவழி இல்லை என்றாகிவிடுகிறது.
மேலும் அதைவைத்து அயோத்திதாசர் விவரிக்கும் விரிவான வரலாற்று உரிமைக்கும்
இடமில்லாமல் போகிறது. இதுதான் சுபவீ காட்டும் கதையாடலின் பிரச்சினை.
அயோத்திதாசர் பாட்டனாரின் குறள் தொடர்பை அவர் எங்கோ படித்திருக்கிறார்.
அதில் அரைகுறையான புனைவை இணைத்து ‘தலித் ஆதரவு’ கருதி மேடையில்
பேசிவிட்டிருக்கிறார். ஆனால் தலித்துகளை, ஏடுகள் கையிருப்பில்
கொண்டிருந்த வகுப்பினராக அவரால் யோசிக்க முடியவில்லை. இங்கு கருத்தியல்
மற்றும் வரலாற்று நம்பிக்கையின்படி அவர்கள்பற்றிய இழிவு சித்திரம்
எல்லோருக்குள்ளும் ஆழமாக இருந்து சமயங்களில் வெளிப்படுகிறது. இங்கு
தலித்துகளை ஆதரித்துப் பேசுவது அரசியல்
ரீதியான தேவையாக இருக்கிறதேயொழிய சிந்தனையாக மாறவில்லை. இவ்வாறு
சிந்தனையளவில் படிந்திருக்கும் இழிசித்திரத்தை மாற்றியமைக்கவே
அயோத்திதாசர் எழுதிவந்தார்.
தானே சொல்லத் தேர்ந்துகொண்ட வரலாற்றுத் தகவலைக்கூட சுபவீயால் முழுமையாகச்
சொல்லமுடியவில்லை. கதையாடல் ஒன்றைக் கட்டும்போது தலித்துகள் குறித்த
வழக்கமான வரலாற்று நம்பிக்கையே அவருக்கு நினைவுக்கு வருகிறது. தலித்துகளை
அறிவுப்புலத்தோடு தொடர்புடையவர்களாகப் பார்ப்பதைவிடவும் அடுப்பெரிக்கும்
பணியாளர்களாக மட்டுமே யோசிக்க முடிந்திருக்கிறது. நவீன பயன்பாட்டுவாத
பகுத்தறிவு கண்ணோட்டத்தால் பீடிக்கப்பட்ட சுபவீ போகிறபோக்கில் ஏடுகளை
எரித்ததாகச் சொல்லிச் செல்கிறார். பயன்படாத ஏடுகளை எல்லீஸ் வீட்டில்
எரித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? மரபை முற்றிலும் எதிராகவும்
நவீனத்தை முழுஆதரவாகவும் பார்த்து எழுத்துசார் அதிகார அமைப்பான ஐரோப்பிய
சிந்தனைப்புலத்தை தொற்றி நிற்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் கடந்தகால
புலமையை ஏற்க மறுக்கிறார்கள்; சொன்னாலும் அவ்வாறு இருக்க முடியாது என்று
புறக்கணிக்கிறார்கள். சுபவீயிடம் செயற்படுவது இந்த (மூட) நம்பிக்கைதான்.
இதையெல்லாம்விட தலித் கட்சி ஒன்றின் மேடையிலேயே இக்கதையாடலினை அவர்
நிகழ்த்தினார் என்பதும் இதுவே பொய்மைகளுக்கு ஆதாரமாக எதிர்காலத்தில்
மாற்றப்படக்கூடும் என்பதும்தான் வரலாற்றின் முரண்நகை.
கொல்லாமெய் ஆக்கப்படாத கொல்லாமை
அயோத்திதாசர் தம் எழுத்து முழுவதும் மை என்ற எழுத்தை மெய் என்றே
கையாண்டார். அதில் உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்
இவ்வாறுதான் எழுதினாரென்பது வரலாறு. அவர் நடத்திய தமிழன் இதழில்
29.11.1911ஆம் நாள்முதல் குறளுக்கு உரை எழுதத் தொடங்கினார். குறள்
பௌத்தசார்பு நூல் என்பது அவரின் துணிபு. வாரம்தோறும் தவறாமல் வெளியான உரை
அவர் மரணமடைந்ததால் 29.04.1914ஆம் நாளிட்ட இதழோடு நின்று போனது. கடவுள்
வாழ்த்து என்னும் புத்தரது சிறப்புப்பாயிரம் தொடங்கி தெரிந்துதெளிதல் வரை
55 அதிகாரங்கள் அவரால் உரை எழுதப்பட்டது. இவற்றில் ‘மை’ கொண்டு முடியும்
அதிகாரங்களின் எண்ணிக்கை 21. அவற்றிலெல்லாம் மெய் என்றே அயோத்திதாசர்
திருத்தி எழுதியிருக்கிறார். அன்புடைமெய், அறிவுடைமெய், அருளுடைமெய்
என்பன போன்று. இவ்வாறு 20 அதிகாரங்களின் தலைப்பில் ‘மை’யை மாற்றம் செய்த
அவர் ஒரு அதிகார தலைப்பை மட்டும் மாற்றாமல் விட்டிருக்கிறார். கொல்லாமை
என்னும் தலைப்புதான் அது.
அயோத்திதாசரின் நேரடி எழுத்துகளுக்கான தொகுப்பாகத் தமிழில் இன்றிருப்பது
ஞான. அலாய்சியஸ் தொகுத்த மூன்று தொகுதிகள்தாம் (நாட்டார் வழக்காற்றியல்
மையம், பாளையங்கோட்டை வெளியீடு). அலாய்சியஸின் அளப்பரிய பங்களிப்பு இது.
இன்றைக்கு அயோத்திதாசர் பற்றிய எந்தக் குறிப்பானாலும் அதற்கான மேற்கோள்
அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது இத்தொகுதிகள்தாம். தமிழன் இதழ் இப்போது
கிடைப்பது சாத்தியமில்லையென்பதாலும் இது முறைப்படியான தொகுப்பு
என்பதாலும் அயோத்திதாசருக்கான ஆதாரமாக இத்தொகுதிகளைப் பயன்படுத்துவது
இயல்பு. இத்தொகுப்பில் கொல்லாமை என்று பதிவாகியிருப்பதால் அயோத்திதாசரின்
எழுத்தாகவே இப்பதிவை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதேவேளையில்
அயோத்திதாசர் எழுத்துகளை ஆராயவிரும்பும் எவரையும் இது குழப்பக்கூடும்.
அவரின் தொடர்ச்சியற்ற சிந்தனாமுறை என்றோ பிழை என்றோ விடுபடல் என்றோ
ஆராய்கிறவரின் கருத்துநிலை சார்ந்து இவற்றின்மீது அர்த்தம்
பிறக்கக்கூடும்.
ஆனால் அயோத்திதாசர் எழுத்துகளுக்கான மூலப்பிரதியாகிய தமிழன் இதழை
புரட்டிக்கொண்டு வந்தபோது 19.02.1913ஆம் நாளில் கொல்லாமை தொடர்புடைய
குறிப்பொன்றைக் காணமுடிந்தது. அதாவது முகப்பிட்டு அடுக்குவோர் கவனக்
குறைவாலும் கண்ணோக்கர் குறைவாலும் கொல்லாமெய் என்னும் அதிகாரத்தின் பெயர்
அதற்கு முன்னமைந்த கள்ளுண்ணா மெய் என்னும் பெயரிலேயே வெளியாகிவிட்டது.
எனவே கள்ளுண்ணாமெய் என்னும் மொழியைத் திருத்தி கொல்லாமெய் என்று
வாசித்துக்கொள்ள வேண்டு மென்று பத்திராதிபராகிய அயோத்திதாசர் பெயரிலேயே
குறிப்பு அமைந்துள்ளது. இக்குறிப்பின்படி இருபத்தொன்றாம் அதிகாரத்தை
கொல்லாமெய் என்றே கொள்ளவேண்டும். ஆனால் கள்ளுண்ணாமெய் என்று தவறு தலாக
அமைந்த தலைப்பைத் திருத்திக்கொண்ட தொகுப்பாசிரியர் பெயரை மட்டும்
தொகுப்பிற்குக் கொணரும்போது ‘கொல்லாமை’ என்று இன்றைய வழக்குப்படியே
கையாண்டிருக்கிறார். ஞான. அலாய்சியஸ் இதைத் திட்டமிட்டுச்
செய்திருக்கமாட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவொரு
விடுபடல்தான். தொகுப்பாசிரியருக்கு பதிப்பாசிரியருக்குரிய சீர்மை
தேவையில்லை என்று கருதப்பட்டிருக்கிறது. ஆனால் தொகுப்பாசிரியரின்
விடுபடல் மூல நூலாசிரியரின் விடுபடலாகவே மீந்து நிற்கிறது.
காணாமல் போன ஆபாதிதாஸ்
அம்பேத்கருக்கு முன்பும் சமகாலத்திலும் ஒடுக்கப்பட்டோர் அரசியல்
செயற்பாடுகளை முன்னெடுத்த விதத்தில் தமிழ்ப்பகுதிக்கென்று தனித்த வரலாறு
உண்டு. அவரின் 1956ஆம் ஆண்டின் பௌத்த தழுவலுக்கு முன்னோடியான முயற்சி
தமிழகத்தில்தான் நிகழ்ந்தது. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே
அயோத்திதாசர் பௌத்தம் தழுவியிருந்தார். ஆனால் அயோத்திதாசரின் சக பௌத்த
பயணியான லட்சுமிநரசுபற்றி அறிந்திருந்த அம்பேத்கர் அயோத்திதாசர் பற்றி
எங்கும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் அவர் அயோத்திதாசரை
அறிந்திருப்பதற்கான சான்றுகளைத் தேடினால் மறைமுக ஆதாரங்கள் எளிமையாகக்
கிடைக்கக்கூடும். இந்நிலையில் இந்த அறிதலுக்கான வெளிப்படையான ஆதாரமொன்று
கிடைத்தும் கவனிக்கப்படாமல் இருக்கிறது.
அதாவது அம்பேத்கரின் நேரடி உதவியாளராக இருந்து இன்றைக்குக் கிடைக்கும்
அம்பேத்கரின் நூல் தொகுதிகளைத் தொகுத்த மூலவரான வசந்த் மூன் அம்பேத்கரின்
வாழ்க்கை வரலாற்று நூலொன்றை மராத்தியில் எழுதி 1991ஆம் ஆண்டு
வெளியிட்டார். இந்நூல் மராத்தியிலிருந்து நேரடியாக ஸ்ரீதர் என்பவரால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் அம்பேத்கர் ‘‘ஆபாதிதாஸ்
என்பவர் எழுதிய தமிழ்க் கட்டுரையை மொழிபெயர்க்கப்படச் செய்தார்” என்ற வரி
இடம்பெற்றுள்ளது. இக்கூற்று அம்பேத்கரின் பௌத்த ஈடுபாடு பற்றிய பகுதியில்
இடம்பெற்றுள்ளது. குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அவரை ஈர்த்த
லட்சுமிநரசுவை குறிப்பிடுகிறது. அந்த இடத்தில் ஆபாதிதாஸ் என்று
குறிப்பிடுவது அயோத்திதாசரைத்தான் என்பது தெளிவு. இத்தகவல் வசந்த் மூனால்
குறிப்பிடப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கிலத்திலோ ஐரோப்பிய
ஆய்வுலக சட்டகம் வழியாகவோ செயற்படாத அயோத்திதாசரின் பௌத்தம்
அம்பேத்கருக்கு எட்டாமல்போனதில் வியப்பில்லை. ஆனால் சென்னை
பகுதியிலிருந்து அம்பேத்கரால் திரட்டப்பட்ட பௌத்தம்பற்றிய நூல்களில்
அயோத்திதாசர் நூல்களும் இடம் பெற்றிருந்தன. அவற்றை ஏதோவொரு விதத்தில்
மொழிபெயர்த்து புரிந்துகொள்ள அவர் முயற்சிசெய்தார் என்பதையே வசந்த்
மூனின் இத்தகவல் காட்டுகிறது. எனினும் இதுபற்றிய தமிழ் மொழிபெயர்ப்பு
தெளிவில்லாமல் இருக்கிறது. இதனைத் தெளிவாக்கிக் கொள்ளும் பொருட்டு வசந்த்
மூன் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்தால் நமக்குக் கிட்டுவது
பெரும் ஏமாற்றம்.
கிsலீணீ ஞிணீனீறீமீ என்பவர் மொழிபெயர்த்த அந்த ஆங்கிலநூலில் (2002)
லட்சுமிநரசு பற்றிய தகவல் சரியாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தும்
‘ஆபாதிதாஸ்’ குறித்த ஒருவரி மட்டும் காணப்படவில்லை. இதனால் மராத்தி
மூலநூலை ஆராய வேண்டுமென்று எழுத்தாளர் அம்பையை அணுகியபோது அவர்
மராத்திநூலின் குறிப்பிட்ட பக்க நகலையும் அதற்கான மொழிபெயர்ப்பையும்
அனுப்பினார். மராத்தியிலும் ஆபாதிதாஸ் என்றே இடம் பெற்றுள்ளது. ‘‘சென்னை
பயணத்தின்போது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பி. லட்சுமிநரசு எழுதிய
‘நவீன பார்வையில் பௌத்தம்’ என்ற புத்தகம் கிடைத்தது. 700 பக்கங்களைக்
கொண்ட இப்பிரதிக்கு அவர் குடும்பம் அனுமதி தராததால் பதிப்பிக்கப்படாமல்
இருந்தது. டாக்டர் ஆபாதிதாஸின் தமிழ்க் கட்டுரை ஒன்றையும் டாக்டர்
அம்பேத்கர் மொழியாக்கம் செய்வித்தார்’’ என்பது அவரனுப்பிய மொழிபெயர்ப்பு.
ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டும் ஆபாதிதாஸை குறிப்பிடும் வரி காணாமல்போனது
ஏன்? இதுவொரு விடுபடலாகவே இருக்கவேண்டுமென்பது அம்பையின் கணிப்பு.
அதேவேளையில் இந்த விடுபடல் பெரும்வரலாறு ஒன்றையே தவறவிடுகிறது என்பது
உண்மை. அயோத்திதாசரை திட்டமிட்டு மறைத்துவிடும் நோக்கமேதும் ஆங்கில
மொழிபெயர்ப்பாளருக்கு இருந்திருக்க நியாயமில்லை. ஆனால் ஆங்கிலம்மூலம்
சர்வதேசப் பார்வைக்குச் செல்லும்போது சிறு தகவலாக இடம்பெறும் வட்டாரம்
சார்ந்த பெயர் அவர்கள் அளவில் பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆங்கில
வாசகர்களுக்குத் தேவையான பண்டங்களாக உள்ளூர் அம்சங்களை உருமாற்றும்
நுட்பம் இதில் இல்லை என்றும் கூறிவிட முடியாது. மொழிபெயர்ப்பாளரின்
நவீனகால தலித் அரசியல் குறித்த புரிதல் சார்ந்தும் இந்த விடுபடல்
ஏற்பட்டிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக