வியாழன், 22 பிப்ரவரி, 2018

குஞ்சன் நாடார் வரலாறு குமரி மண்மீட்பு போராளி

aathi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
கதிர் நிலவன்
1956, நவம்பர்.1
தமிழர் தாயக நாள்
'தெற்கெல்லை காப்புப் போராளி'
குஞ்சன் நாடார்
குஞ்சன் நாடார் அவர்கள் இன்றைய கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டம்
நெய்யாற்றின்கரை திருப்புறம் என்ற ஊரில் அப்பியான் வைத்தியர் என்ற இராயன்
நாடார் ஆசான் -அறத்தம்மாள் இணையருக்கு மகனாக 23.1.1910இல் பிறந்தார்.
இவரின் தந்தையார் பண்டாரவிளை தறவாடு என்ற செல்வக் குடும்பத்தைச்
சேர்ந்தவர். தமிழ் மருத்துவம் கற்றதோடு சிலம்பம், களரி விளையாட்டுகளில்
கை தேர்ந்தவர். குஞ்சன் நாடார் சிறுவயதிலே தந்தையாரிடம் மரபுக்கலைகளை
கற்றுத் தெளிந்தார்.
நெல்லிமூடு பள்ளியில் தொடக்கக் கல்வியையும், நெய்யாற்றின்கரையில் பள்ளி
இறுதி வகுப்பையும் முடித்த இவர் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில்
பட்டப்படிப்பில் சேர்ந்தார். அதன் பிறகு அரசர் சட்டக்கல்லூரியில் பயின்று
வழக்கறிஞர் தொழிலை மேற் கொண்டார். 1935இல் பேராயக் கட்சியில் இணைந்து
செயல்பட்டார்.
அதன்பிறகு திருவிதாங்கூர் சமசுதானக் காங்கிரசில் இணைந்தார். 1938ஆம்
ஆண்டில் நடைபெற்ற மக்கள் பொறுப்பாட்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு
18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு
என்னுமிடத்தில் பெருந்திரள் மக்கள் கூட்டத்தை நடத்திக் காட்டியதால்
"வட்டியூர் காவு வீரன்" என்று இவரை அழைப்பதுண்டு.
அப்போது பட்டம் தாணுப்பிள்ளையின் தமிழர் பகைப்போக்கிற்கு ஆதரவாக
திருவிதாங்கூர் சமசுதானக் காங்கிரசு செயல்பட்டு வந்ததைக் கண்டித்து
அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் 1948இல் மார்சல் நேசமணி
தலைமையிலான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.
பாளையங்கோட்டை தீர்மானம் காரணமாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு
கட்சி இரண்டாகப் பிளவுபட்ட போது தாணுலிங்கம் நாடார் தலைமையிலான போட்டித்
தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். சில மாதங்களில்
அக்கட்சியிலிருந்து விலகி கட்சியை ஒன்றுபடுத்தும் முயற்சியில்
ஈடுபட்டார்.
1952ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தலில் நெய்யாற்றின்
கரைத் தொகுதியில் தனித்து நின்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில்
போட்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தது.
நேசமணி தலைமையிலான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் அது தன்னை
மீண்டும் இணைத்துக் கொண்டது. குஞ்சன் நாடாரின் விருப்பமும் அதுவாக
இருந்தபடியால் தன்னையும் அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
மூணாறில் மார்சல் நேசமணி அவர்கள் மலையாள காவல் துறையினரால் கைது
செய்யப்பட்ட போது அடுத்த கட்டப் போராட்டத்திற்கு முதல் சர்வாதிகாரியாக
அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார். பட்டம் தாணுப்பிள்ளை அரசிற்கு
எதிராகவும், ஐக்கிய தமிழகம் அமைப்பதற்கு ஆதரவாகவும் திருவிதாங்கூர்,
சென்னை மாகாணத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை
உண்டாக்கினார்.
பசல்அலி புணரமைப்புக்குழு பரிந்துரை முடிவுகள் வரும் வரை ஐக்கியத்
தமிழகப் போராட்டத்தைக் கைவிடக் கோரிய பிரதமர் நேருவிற்கு "தமிழர்
பகுதிகள் சென்னை மாகாணத்தோடு இணைக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிட
முடியாது" என்று கடிதம் எழுதினார்.
திருவிதாங்கூர் தமிழர்களின் ஆகஸ்டுப் புரட்சி என்றழைக்கப்படும் "விடுதலை
நாள்" (1954) கிளர்ச்சியில் 11 தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப்
பலியாகினர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று ஆறுதல்
தெரிவித்ததோடு, அமைதி காக்கும்படி வேண்டிக் கொண்டார்.
விடுதலை நாள் பிரகடனம் வெளியிட்ட குஞ்சன் நாடார் மீது கோபம் கொண்ட மலையாள
இனவெறி கொண்ட காவல்துறை அன்று நள்ளிரவில் வீடு புகுந்தது. அவரது மனைவி
ரோசலின் கண்முன்னே, குருதி கொட்டக் கொட்ட அடித்தும், பூட்சுக் காலால்
மிதித்தும், தரதரவென்று இழுத்தபடி வேனில் ஏற்றியது. குழித்துறை சிறையில்
அடைக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் மிகத் தீவிரப் போக்குக்
கொண்ட தலைவராக குஞ்சன் நாடார் விளங்கிய காரணத்தால் பட்டம் தாணுப்பிள்ளை
அரசு இவரைக் கண்டு அஞ்சியது.
1956க்குப் பிறகு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி
கலைக்கப்பட்டு காமராசர் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரசு கட்சியோடு
இணைக்கப்பட்டது. அப்போது முதல் காங்கிரசு கட்சியில் இணைந்து குஞ்சன்
நாடார் செயல்பட்ட போதும் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை பகுதிகள்
தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தார்.
தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
அளிக்காமல் தொடர்ந்து இவரை புறக்கணித்து வந்தது.
இந்நிலையில், தனது 64ஆம் வயதில் அ.குஞ்சன் நாடார் அவர்கள் வேலூர்
கிறித்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 19.8.1974ஆம் ஆண்டு காலமானார்.
தமிழர் தாயகத் திருநாளில் தெற்கெல்லைப் போராட்ட முதல் சர்வாதிகாரி
குஞ்சன் நாடார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திடுவோம்!
7 மணி நேரம் முன்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக