திங்கள், 19 பிப்ரவரி, 2018

வேள்பாரி 5 நாவல் மரம் படகு வணிகம் கடல் குலசேகர பாண்டியன் யவனர் பெண் வைப்பாட்டி முருகன் வள்ளி வேடர் குறவர் சாதிமறுப்பு திருமணம் பாரி மிளகு

aathi tamil aathi1956@gmail.com

31/10/17
பெறுநர்: எனக்கு
நவீனன்  7,700
  Posted November 17, 2016
வீரயுக நாயகன் வேள் பாரி - 5
தனது நினைவில் இல்லாத ஒரு நாளைப் பற்றி கேள்விப்பட்ட கணத்தில் இருந்து,
கபிலர் சற்றே அதிர்ந்துபோயிருந்தார். நீலன், அவர் அருகில்தான்
உட்கார்ந்திருந்தான். அவனிடம் பேச கபிலரின் மனம் விரும்பினாலும், அவரது
எண்ணங்கள் முழுவதும் கைதவறிப்போன நினைவுக்குள்தான் இருந்தன.
நீலன் எழுந்தான்.
“ஊர்ப் பழையன் உங்களைப் பார்க்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார். அவரை
அழைத்துவருகிறேன்” என்று சொல்லிச் சென்றான். ஊரின் மிக வயதான ஆணை
`பழையன்' என்றும், பெண்ணை `பழைச்சி' என்றும் அழைப்பது வழக்கம்.
அதே யோசனையில் இருந்த கபிலர், தான் உட்கார்ந்திருக்கும் மரப்பலகையை
விரலால் கீறிக்கொண்டிருந்தார். `எவ்வளவு அகலமான பலகையாக இருக்கிறது. இது
என்ன மரம்?' என்று அதை உற்றுப்பார்த்தார். அவரால் கண்டறிய முடியவில்லை.
அந்தப் பெண், சிறு மூங்கில் கூடையில் நாவற்பழங்களைக் கொண்டுவந்து
கொடுத்தாள். அதை  வாங்கிக்கொண்ட கபிலர் “இது என்ன மரம்?” என்று கேட்டார்.
“திறளி மரம்” என்று சொன்னாள்.
“திறளி மரம் இவ்வளவு அகலமாக இருக்குமா!”
“இது நடுப்பாகம்தான். அடிப்பாகம் இன்னும் அகலமானது. எங்களது குடிலில்
இருக்கிறது. வந்து பார்க்கிறீர்களா?”
கபிலர், பதில் ஏதும் சொல்லவில்லை. திறளி மரம் பற்றிய பழம்பாடல் ஒன்று
நினைவுக்கு வந்தது. `தன் மனைவி உடன் இருந்தாலும் அழகியை நேசிக்க எந்த
ஆணும் தவறுவது இல்லை. அதேபோல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் மூவரும்
தங்களுக்கு எனத் தனித்த மரங்களை அரசச் சின்னங்களாகக் கொண்டிருந்தாலும்,
மூவருக்கும் பிடித்த மரமாக திறளி மரமே இருக்கிறது' என்று சொல்கிறது
அந்தப் பாடல். அதற்குக் காரணம், யவன வணிகத்தின் திறவுகோலாகத் திறளி
இருப்பதுதான்.
யவன நாட்டோடு வணிகத்தொடர்பு உருவாகி, பல தலைமுறைகள் உருண்டோடிவிட்டன.
இன்று அது உச்சத்தில் இருக்கிறது. இந்த வணிகத்தில் பெரும்செல்வமாக
யவனர்கள் கருதுவது மிளகைத்தான். கறுத்து, சிறுத்த அந்தத் தானியத்துக்காக,
யவனர்கள் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். யவனக் கப்பல்களை
தமிழ் நிலத்தின் துறைமுகங்களை நோக்கி இழுத்துவருவது மிளகுதான்.
பெரும் மதில்போல் கடலில் மிதந்துகொண் டிருக்கும் யவனக் கப்பல்களில் மிளகை
ஏற்ற, கரையில் இருந்து ஒற்றை அடிமரத்தாலான தோணியில் எடுத்துச்
செல்வார்கள். அந்தத் தோணி, திறளி மரத்தால் ஆனது. துறைமுகங்களில் நிற்கும்
திறளி மரத் தோணிகளே மிளகு வணிகத்தின் குறியீடாக மாறின. வணிகர்கள் கடலில்
மிதக்கும் கப்பல்களை எண்ணுவதைவிட, கரையில் மிதக்கும் திறளி மரத் தோணிகளை
எண்ணியே செல்வச்செழிப்பை மதிப்பிடுகின் றனர். பெரும்பானையில் இருக்கும்
உணவை அள்ளிப் போடும் அகப்பையைக்கொண்டு அளவிடுவதைப்போல.
யவன வணிகர்களுக்கு, இப்போது எல்லா கணக்குகளும் மிகத்தெளிவு.
நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறந்து விளங்கும் இந்த வணிகத்தை, அவர்கள்
துல்லியமான கணக்குகளின் மூலமே அளவிட்டனர். `தேர்ந்த மாலுமிகளால்
செலுத்தப்படும் கப்பல்கள், 40 இரவுகளும் 40 பகல்களும் கடக்கும் தொலைவைக்
கொண்டுள்ளது மேலைக் கடற்கரை' என்பது அவர்களின் கணக்கு. திறளியை `டிரோசி'
என்றே அவர்கள் உச்சரித்தனர்.
பேரியாறு, காவிரி, பொருநை என மூன்று நதிகளின் முகத்துவாரத்தில் இருந்த
மூவேந்தர்களின் துறைமுகங்களில் எத்தனை டிரோசிகள் நிற்கின்றன என்ற
கணக்குகள் நைல்நதிக்கரை நகரத்தில் எழுதிப் பாதுகாக்கப் பட்டன.
நீலக் கடலுக்கு அப்பால் விரிந்துகிடக்கும் நாடுகளை வணிகமே இணைத்தது.
அதுவே வரலாற்றை உந்தித் தள்ளியது. யவனர்கள் தங்களுக்குத் தேவையான
முத்தும் மிளகும் நவரத்தினங்களும் செழித்துக்கிடக்கும் பூமியாக தமிழ்
நிலத்தைக் கண்டனர். அழகின் பித்தர்கள் கூடிவாழும் செல்வவளம்மிக்க நாடாக
யவன தேசத்தை தமிழ் வணிகர்கள் அறிந்துவைத் திருந்தனர். இருநாட்டு
வணிகர்களும் அரசியல் சதுரங்கத்தில் முன்பின் காய்கள் நகர்வதற்குக்
காரணமாக இருந்தனர்.
வணிகமே வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கிறது. இந்தக் கருத்தோடு தொடக்கக்
காலத்தில் கபிலருக்கு உடன்பாடு இல்லை. ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக
தனது கண் முன்னால் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை அறிந்த பிறகு, அவர் தனது
கருத்தை மாற்றிக்கொண்டார். கடல் கடந்து நடக்கும் இந்தப் பெரும்
வணிகம்தான் பேரரசுகளை விடாமல் இயக்குகிறது. அறுபது வயதைக் கடந்துவிட்ட
குலசேகரபாண்டியனுக்கு தேறலை ஊற்றிக்கொடுக்க ஒரு `கிளாசரினா' தேவைப்படு
கிறாள்.
கடற்பயணத்தின் தொலைவும் கப்பல்களில் ஏற்றப்படும் பொருட்களும்
பெருக்கெடுக்கும் லாபமும் கணக்குகளால் கண்டறியப்பட்டபடி இருக்க, வணிகமும்
கணிதமும் பேரரசுகளின் இரு கண்களாகின.
மழை கொட்டி முடித்த ஒரு நண்பகல் நேரத்தில் கொற்கைத் துறையில் நின்ற
கபிலர், கொந்தளிக்கும் கடல் அலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது
அவரைக் கடந்து போன யவன வணிகர்கள், டிரோசியைப் பற்றி பேசியபடி சென்றனர்.
திறளியை யவனர்கள் இப்படித்தான் உச்சரிக்கின்றனர் என்பதை கபிலர் அன்றுதான்
கேட்டு அறிந்தார்.
பெரும்வணிகத்தின் திறவுகோலாக இருக்கும் திறளி, இங்கு படுத்து உறங்கும்
பலகையாகக் கிடக்கிறது. அதுவும் இவ்வளவு அகலமான திறளி மரம், செல்வத்தின்
பெரும்குறியீடு அல்லவா! எண்ணங்கள் எங்கெங்கோ ஓடியபடி இருக்க, விரல்
நகத்தால் திறளி மரத்தின் மீது அழுத்திக்  கோடு போட
முயற்சித்துக்கொண்டிருந்தார் கபிலர். அப்போது நீலன், ஊர்ப் பழையனை
அழைத்து வந்தான்.
அவரது உயரமே கபிலரை ஆச்சர்யப்பட வைத்தது. சுருங்கி மடிந்திருக்கும்
தோல்தான் வயோதிகத்தைச் சொன்னது. மற்றபடி நெடும் உயரம்கொண்ட அந்த மனிதரின்
கை எலும்புகள், உருட்டுக்கட்டைகளைப்போல இருந்தன. அடர்த்தியற்ற நரைமுடியை
பின்னால் முடிச்சிட்டிருந்தார். அவரது உடல் முழுவதும் தழும்புகள்
திட்டுத்திட்டாக இருந்தன. எத்தனை ஈட்டிகளுக்கும் அம்புமுனைகளுக்கும்
தப்பிப் பிழைத்த உடல் இது. இவ்வளவு வயதான ஆண்களை இப்போது எல்லாம்
பார்ப்பதே அரிதாகிவிட்டது.
பழையன் வந்து, திறளி மரப் பலகையில் கபிலருக்குப் பக்கத்தில் அமர்ந்தார்.
நீலன் நின்றுகொண்டிருந்தான்.
“தசைப்பிடிப்பு இன்று சரியாகிவிடும். நாளை நீங்கள் நடக்கலாம்” என்றார் பழையன்.
கபிலருக்கு அப்போதுதான் தசைப்பிடிப்பு நினைவுக்கு வந்தது.
“நீலன், என்னைப் பாதுகாப்பாக அழைத்துவந்துவிட்டான்” என்றார் கபிலர்.
“சிறுவன். இன்னும் பக்குவம் போதாது. நாகக்கிடங்கின் ஆபத்தை அவன்
உணரவில்லை” என்றார் பழையன்.
“ஆற்றைச் சுற்றிவந்து சேர்வது முடியாது என்பதால், அப்படிச் செய்ததாகச்
சொன்னான்” என்றார் கபிலர்.
“சுற்றிவந்து சேர முடியாமல் போகலாம், ஆனால், உயிரோடு வந்து சேர வேண்டும் அல்லவா?’’
கபிலர், நீலனைப் பார்த்தார். இளைஞர்களின் துணிவை பெரியவர்களால்
ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை. அதற்காக இளைஞர்கள் கவலைகொள்வது இல்லை. நீலன்
கவலைப் படாமல்தான் நின்றுகொண்டிருந்தான். ஆனாலும் பழையனின்
வார்த்தைகளுக்கு முன் பணிவுகொண்டு நின்றான். நாவற்பழம், பழையனுக்கு
மிகவும் பிடிக்கும். எனவே, இந்த வசவு வேகமாக முடிவுக்கு வரும் என
அவனுக்குத் தெரியும்.
“ஏன் பழத்தை எடுக்காமல் இருக்கிறீர்கள்? எடுத்து உண்ணுங்கள்” என்று
கபிலருக்கு அருகில் கூடையை நகர்த்தினார் பழையன்.
கூடையில் இருப்பது, காட்டில் பல்வேறு நாவல்மரங்களில் இருந்து பறித்த
பழங்கள். ஒவ்வொரு நாவற்பழத்துக்கும் ஒவ்வொரு வகையான சுவை உண்டு. எந்த
நாவற்பழத்தை முதலில் எடுத்து உண்ண வேண்டும் என்பதில் இருந்து
தொடங்குகிறது காடு பற்றிய அறிவு. புதிதாக எவராவது வந்தால், அவர்களுக்குக்
கூடை நிறைய நாவற்பழத்தைத் தருவது விருந்தோம்பல் மட்டும் அல்ல; காடு
பற்றிய அவர்களது அறிதலை அளத்தலும்தான்.
“எடுத்துச் சாப்பிடுங்கள்” என்று பழையன் கூடையை கபிலரிடம் தள்ளியபோது,
கபிலர் முதற்பழத்தை எடுத்து வாயில் போட்டார். அதில் இருந்தே
தெரிந்துவிட்டது, காடு பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று. ‘காடற்ற
மனிதனைக் காட்டுக்குள் அழைத்து வந்திருக்கிறாய்' என்று நீலனை
முறைப்பதைப்போல் இருந்தது பழையனின் பார்வை.
`சரி, இனி நாம் விளையாடவேண்டியதுதான்' என்று முடிவுசெய்தார் பழையன்.
நீலனின் கண்கள், அவர் தேர்ந்தெடுக்கப்போகும் பழத்தின் மீது இருந்தது.
அவர் உட்கார்ந்த கணத்தில் தனக்கான பழத்தைத் தேர்வுசெய்திருப்பார் என
நீலனுக்குத் தெரியும். ஆனாலும், அவர் இன்றைய விளையாட்டை எதில் இருந்து
தொடங்கப் போகிறார் என்பதை அறிய ஆவலோடு இருந்தான். ஆனால், கண்ணிமைக்கும்
நேரத்தில் பழையன் முதற்பழத்தை எடுத்து வாயில் போட்டுவிட்டார். நீலனால்
அவர் எந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டார் என்பதைக் கவனிக்க
முடியவில்லை.
கபிலரின் கண்களும் பழையனின் விரல்கள் மீதுதான் இருந்தன. மடிப்புகள்
அலையலையாக இறங்கி கருமையேறியிருக்கும் விரல்கள். நகம் பிளவுண்டு
உலர்ந்திருந்தது. தோலின் வழியே கனிந்து வழிந்துகொண்டிருந்தது வயோதிகம்.
கபிலர் கேட்டார், “உங்களின் வயது என்ன பெரியவரே?”
மென்ற நாவற்பழக் கொட்டையை இடது உள்ளங்கையில் துப்பியபடி பழையன் சொன்னார்,
“தொண்ணூற்று ஏழு”.
கபிலர் ஆச்சர்யத்தோடு அவரைப் பார்த்தார். நீலனின் கண்கள் அதைவிடக் கவனமாக
அவரது விரல்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவர் பதில் சொல்வதற்குள்
அடுத்த பழத்தை எடுத்து வாயில் போட்டார். இப்போது அவன் கண்டுபிடித்தான்.
அவர் கையில் எடுத்தது நரிநாவல். இது துவர்ப்பை உச்சத்துக்குக்
கொண்டுபோகும். அப்படியென்றால், இதற்கு முன்னால் அவர் எடுத்து வாயில்
போட்டது வெண்நாவலாகத்தான் இருக்கும். அதற்குத்தான் புளிப்பு அதிகம்.
மொத்த வாயையும் உச்சுக்கொட்டவைத்து விழுங்கும் எச்சிலின் வழியே பேராவலை
அது தூண்டும். அதற்கு அடுத்து நரிநாவலை எடுத்துத் தின்றால், தூக்கலான
துவர்ப்பு முற்றிலும் வேறு ஒரு சுவையைக் கொடுக்கும். ஆனால், இதில்
முக்கியமானது அடுத்து எடுக்கப்போவதில்தான் இருக்கிறது. பழையன் எந்தப்
பழத்தை எடுத்து சுவையின் பாதையை எப்படி அமைத்துக் கொள்ளப்போகிறார் என்பதை
அறிய ஆர்வத்தோடு இருந்தான் நீலன்.
கபிலர் விடுபடாத ஆச்சர்யத்தின் வழியே கேட்டார் “எப்படி இவ்வளவு
துல்லியமாக வயதைச் சொல்கிறீர்கள்?”
நரிநாவலில் சதையைவிட அதன் கொட்டையை அசைபோட்டு மெல்லுவதில்தான் சுவை
இருக்கிறது. அதன் மேல்தோல் கழறக் கழற, சுவை உச்சத்துக்குச் செல்லும்.
தப்பித் தவறி சற்றே அழுத்திக் கடித்து கொட்டையை உடைத்துவிட்டால்
அவ்வளவுதான்! உள்ளே இருக்கும் பச்சை நிறப் பருப்பின் கசப்பு இருக்கிறதே,
அது நாக்கையே கழற்றிப் போட்டாலும் போகாது. குறைந்தது மூன்று
மாதங்களுக்காவது காறிக்காறித் துப்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
எனவே, நரிநாவலைத் தின்னும்போது மிகக் கவனமாகத் தின்னவேண்டும்.
தந்திரத்தோடு அதன் கொட்டையின் மேல்பகுதியைக் கடித்துச் சுவைக்க வேண்டும்,
பழையன் வாயில் நரிநாவலை ஒதுக்கிவைத்திருக்கும்போது, கபிலர் இப்படி ஒரு
கேள்வியைக் கேட்டுள்ளார். எப்படிப் பதில் சொல்கிறார் பார்ப்போம் என்று
ஆவலோடு இருந்தான் நீலன்.
எத்தனை கேள்விகளைப் பார்த்தவர் பழையன், அவருக்குத் தெரியாதா நரிநாவலை
என்ன செய்ய வேண்டும் என்று! தாடையின் ஒரு பக்கவாட்டில் இருந்து மறு
பக்கவாட்டுக்கு நரியைப் பக்குவமாக அணைத்து ஓடவிட்டுக்கொண்டிருந்தார்.
துவர்ப்பின் சாறு உள்நாக்கில் இறங்கிக்கொண்டிருந்தது. கண்களாலேயே
கபிலரைப் பொறுத்திருக்கச் சொன்னார். `என்னென்ன வித்தைகளைக் காட்டுகிறான்
கிழவன்!' என ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் நீலன்.
நன்றாக மென்ற கொட்டையை இடது உள்ளங்கையில் துப்பிவிட்டு, கபிலரைப்
பார்த்து “என்ன கேட்டீர்கள்?” என்றார் பழையன்.
“வயது தொண்ணூற்று ஏழு என்று எப்படி துல்லியமாகச் சொல்கிறீர்கள்?” என்று
மீண்டும் கேட்டார் கபிலர்.
பழையனின் கைவிரல்கள், கூடையில் இருக்கும் பழங்களைக் கிளறி மூன்று பழங்களை
எடுத்தன. நீலன் அவர் எதை எடுத்திருக்கிறார் என உற்றுப்பார்த்தான்.
உள்ளங்கை சற்றே மூடியிருந்ததால், சரியாகத் தெரியவில்லை. பழையன், கபிலரைப்
பார்த்து “மேல் மலையில் இருக்கும் குறிஞ்சிச் செடியில் இரண்டாவது கணுவில்
பூ பூத்திருக்கும்போது, நான் பிறந்ததாக என் தாய் சொன்னாள். கடந்த ஆண்டு
அந்தச் செடியில் பத்தாவது கணுவில் பூ பூத்திருந்தது” என்றார்.
சொல்லி முடித்ததும் தனது கையில் உள்ள பழங்களை வாயில் போட்டார்.
அப்போதுதான் நீலன் கவனித்தான், இரண்டு நீர்நாவலும் ஒரு கொடிநாவலும் அதில்
இருந்தன. துவர்ப்பேறிய வெற்றிலையில் சுண்ணமும் தெக்கம்பாக்கையும்
சேர்ப்பதைப்போலத்தான் இது. இந்தச் சேர்மானம் தரும் சுவைக்கு அளவு இல்லை.
துவர்ப்பை அதன் முனையில் தட்டிவிட்டு வேறு ஒன்றாக்கும்.
கனிகளின் சுவையை நாம் எந்த வழியில், எந்தச் சேர்மானத்தோடு அழைத்துச்
செல்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு வழிக்கும் ஒவ்வொரு விதமான
வாசமும் வண்ணமும் உண்டு. `பழையன், துவர்ப்புக்கு அடுத்து சிறுநாவலை
எடுத்து இளங்காரத்தோடு முடிப்பார்' என்றுதான் நீலன் நினைத்தான். ஆனால்,
அவரோ சட்டென வேறு ஒரு சுவைக்குத் தவ்விக் குதித்துவிட்டார். அதுவரை நீலம்
ஏறியிருந்த அவரது நாக்கு, செவல் நிறத்துக்கு மாறத் தொடங்கியது. நீலன்
அதிர்ந்துபோய்தான் நின்றான். பழையன் தனது நாக்கால் மேல் உதட்டைத்
தடவியபடி பேசியதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. நெல்லிக்கனிக்கு
அடுத்து குடிக்கும் முதல் மிடறு நீர், நெல்லியால் அறியப்படாத சுவையை
நாக்குக்குத் தந்து முடிப்பதைப்போல்தான் இதுவும்.
நாவற்பழத்தின் அடர்கருநீலத்துக்குள் இருப்பது ஒரு சுவை அல்ல, சுவைகளின்
பேருலகம். கணக்கில்லாக் கனிகள் தொங்கும் மரத்தில் தனக்கான கனியைத்
தேர்வுசெய்யும் பறவையைப்போலத்தான் பழையனும்.
நீலன் ஆச்சர்யப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. கபிலருக்கு ஏற்பட்டது
ஆச்சர்யம் அல்ல, அதிர்ச்சி. அவர் மனதுக்குள் பழையன் சொன்ன கணக்கு சரிதானா
என்பதை எண்ணிக்கொண்டிருந்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சிப் பூ. இரண்டாவது கணுவுக்கும் பத்தாவது கணுவுக்கும் இடையில்
இருக்கும் கணுக்களின் எண்ணிக்கை, முன்னும் பின்னும் மீதி இருக்கும்
ஆண்டுகள் என எல்லாவற்றையும் மனதுக்குள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.
தொண்ணூற்று ஏழு என்று பழையன் சொன்ன கணக்கு மிகச் சரியானது என அறிந்த
போது, கபிலர் ஏறக்குறைய உறைந்துபோனார். கணிதம் கடலிலும் கப்பலிலும்
மட்டும் அல்ல, காட்டிலும் கணுக்களிலும் இருக்கிறது என்பதை ஒற்றைச்
செய்தியில் விளங்கவைத்தான் பழையன்.
ஆனால், கபிலரால் விளங்கிக்கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் அங்கு
நடந்துகொண்டிருந்தன. தான் எடுக்கப்போகும் நாவற்பழம் கொண்டு தனது காட்டு
அறிவு கணிக்கப்படும் என்பது, அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாத
ஒன்று. எடுத்த உடனே பூநாவலை எடுக்கும் ஒருவரைப் பற்றி சொல்ல என்ன
இருக்கிறது?
“இரவு கஞ்சி குடிக்கும் முன் இவருக்கு தும்முச்சிச் சாறு கொடுங்கப்பா”
என்று சொல்லிவிட்டுப் போனார் பழையன்.
“அது என்ன சாறு? எனக்குத்தான் கால் வலி சரியாகிவிட்டதே. பிறகு ஏன்
தரவேண்டும்?” என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.
நீலன் சொன்னான், “நீங்கள் காட்டுக்குப் புதியவர் அல்லவா, அதனால்தான்.”
“நானா காட்டுக்குப் புதியவன்? குறிஞ்சி நிலத்திலேயேதான் எனது வாழ்வின்
பெரும்பகுதியைக் கழித்திருக்கிறேன். அந்தத் துணிவில்தான் நான் பாரியைப்
பார்க்கத் தன்னந்தனியாக மலையேறத் தொடங்கினேன்” என்றார்.
``மனித வழித்தடங்களின் வழியாக நீங்கள் காட்டை அறிந்திருப்பீர்கள். இது
மனிதவாசனை படாத காடு. ஒளி விழாத இடத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும்.
பலவகையான பூச்சிகள் இருக்கின்றன. அவை எல்லாம் கடித்த பிறகுதான் உங்களால்
உணர முடியும். அதன் பின்னரும் உணர முடியாத பூச்சிகள்தான் இந்தக் காட்டில்
அதிகம். எனவே, இதைக் குடித்தால் மட்டுமே நல்ல உடல்நிலையோடு மலைக்கு மேல்
செல்ல முடியும். தற்காப்புக்கு மிகத் தேவை.”
நீலன் சொல்லிவிட்டுப் போன சிறிது நேரத்தில், அந்தப் பெண் சிறு குவளையில்
சாறு கொண்டு வந்தாள். அதைக் குடிக்கும்போதுதான் கபிலருக்குத் தோன்றியது,
மூவேந்தர்களாலும் பாரியை நெருங்க முடியாது என்று பாணர்கள் மீண்டும்
மீண்டும் பாடுவதன் அர்த்தம்.
- பாரி வருவான்...
http://www.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக