வியாழன், 22 பிப்ரவரி, 2018

எல்லீஸ் தமிழ்ப்பற்று புலமை திருக்குறள் அச்சு தொல்காப்பியம் புறநானூறு குரவர் வார்த்தை

aathi tamil aathi1956@gmail.com

3/11/17
பெறுநர்: எனக்கு
எல்லீஸின் திருக்குறள் மொழிபெயர்ப்பு…
 JULY 23, 2014  ADMIN  அறத்துபால்,
இரா.வெங்கடேசன் , எல்லீஸ், காமத்துபால் ,
காலனிய ஆட்சி , திருக்குறள்,
பொருட்பால்
முனைவர்இரா. வெங்கடேசன்
காலனிய ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்து செயல்பட்ட
புலமையாளர்களுள் எல்லீஸ் முக்கியமானவர். தமிழிற்கு வரலாற்றுத்
திருப்புமுனைக்குரிய பல செயல்களுக்கு முன்னோடியாக இருந்தவர். Telugu
Grammar, எழுதிய A.D. Campbell, (1816) என்னும் நூலிற்கான அறிமுகக்
குறிப்பில் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய சிந்தனையைப் பதிவுசெய்த முதல்
முன்னோடி மொழியியல் அறிஞர். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் உரையும்
மொழிபெயர்ப்பும் செய்த முன்னவர். இவர் செய்த திருக்குறள் மொழிபெயர்ப்பு
ஆங்கிலமொழியில் அமைந்த முதல் மொழிபெயர்ப்பாகும். இவற்றிற்குக் களமாக
இருந்த கோட்டைக் கல்லூரியைச் சென்னையில் நிறுவிய கல்வியாளர். ஐரோப்பிய
ஆட்சியாளர்களுக்குத் தென்னிந்திய மொழிகளைக் கற்றுத்தருவதற்கான நிறுவனமாக
அது செயல்பட்டிருந்தாலும் தமிழிற்கு ஆக்கப்பூர்வமான பல முன்னோடிப் பணிகள்
அங்குதான் நடந்தன. தமிழ் நூல்கள் பல அச்சுவடிவம் பெறுவதற்கு வாய்ப்பாகக்
கோட்டைக் கல்லூரியினுள் சென்னைக் கல்விச் சங்க அச்சகம் என்னும்
அச்சகத்தைத் தொடங்கியவர்.
திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட முன்னோடி அறிஞர். தமிழ்
யாப்பு பற்றிய அரிய பெரிய நூலை எழுதிய இலக்கண அறிஞர். தமிழ்ச் சுவடிகளைச்
சேகரித்து தமிழின் பழஞ்செல்வங்களைப் பாதுகாத்த தமிழறிஞர். இதுவரை சொன்ன
அனைத்தும் எல்லீஸீன் கல்விப் பணி சார்ந்த செய்திகள் மட்டுமேயாகும்.
எல்லீஸ் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில்(1810) சென்னையில் மிகப்பெரும்
பஞ்சம் ஏற்பட்டது. அப்போது பல கிணறுகளை வெட்டியதும் அக்கிணற்றை
வெட்டியபோது எழுதிப் பதித்த கல்வெட்டில் திருக்குறளை எழுதியமைத்ததுமான பல
பணிகள் எல்லீஸீன் அதிகம் அறியப்படாத பணிகளாகும். இன்னும் அவரைப் பற்றிய
ஏராளமான செய்திகள் உள்ளன. அதைச் சொல்லநேர்ந்தால் சொல்ல வந்த நோக்கத்தைத்
திசைதிருப்பிவிடும். திருக்குறள் மொழிபெயர்ப்பு, அவற்றுள் உள்ள மேற்கோள்
நூல்கள் பற்றிய செய்திகளை மட்டும் இங்குக் கவனப்படுத்துவோம்.
எல்லீஸ் திருக்குறளுக்கு உரையும் மொழி பெயர்ப்பும் செய்துள்ளார். இவர்
மொழிபெயர்ப்பே திருக்குறளுக்கான முதல் மொழிபெயர்ப்பாகும். எல்லீஸ்
திருக்குறளை மொழி பெயர்த்த ஆண்டு 1812 அல்லது 1819 இதில் எது சரி
என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள சான்றுகள் இல்லை. இலண்டன் அருங்காட்சியக
நூலகத்தில் இருந்த தமிழ் நூல்களுக்கான அட்டவணையைப் போப் அவர்கள்
உருவாக்கினார். அது 1909இல் வெளிவந்தது. அவற்றிலும்கூட எல்லீஸின்
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலைப் பற்றி பதிவுசெய்யும்பொழுது Without
Title Page என்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இன்று நமக்குக் கிடைத்துள்ள
எல்லீஸ் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலும் முகப்புப் பக்கம்
சிதைந்தவையாகவே காணப்படுகிறது. முகப்புப் பக்கமும் தெளிவான பதிப்பாண்டும்
இல்லாத நிலையில் அம்மொழிபெயர்ப்பு நூல் எந்த ஆண்டு வெளிவந்தது என்பதை
உறுதியாக அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த நிலையில், எல்லீஸ் திருக்குறளை
மறுமுறை வெளியிட்ட அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் 1819இல்
வெளிவந்ததாகக் குறிப்பிடுகிறார். 1955இல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக
அந்நூல் வெளியானது. இந்த மறுவெளியீட்டில் எல்லீஸ் காட்டியுள்ள இலக்கணக்
குறிப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளமை பெருங்குறையாகும். அது தனித்து
விவாதிக்கும் அளவினதாகும்.
அறத்துப்பாலின் 304 குறள்களுக்கு மட்டுமே எல்லீஸ் மொழிபெயர்ப்பு
செய்துள்ளார். ஆங்கில மொழிபெயர்ப்போடு ஆங்கில உரையும் எழுதியுள்ளார்
எல்லீஸ். இந்த 304 குறள்களுக்கான உரையில் 300க்கும் அதிகமான
நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். தமிழ் உரையாசிரியர்களுள்
‘உச்சிமேற் புலவர்கொள்’ என்று போற்றப்பட்ட நச்சினார்க்கினியர்கூட பல
நூல்களுக்கு உரையெழுதிய போதும் 80-க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து
மட்டுமே மேற்கோள் பாடல்களை எடுத்தாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால்
எல்லீஸ் 300 குறள்களுக்கு 300 நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பது
வியப்புக்குரியனவாகும். அவர் காட்டும் மேற்கோள் பாடல்களின் நூல்கள் பல
மொழி சார்ந்தவையாக உள்ளன. அவற்றுள் தமிழ் நூல்களின் எண்ணிக்கை 63 ஆகும்.
அவை கீழ்வருமாறு:
1. அருங்கலச் செப்பு 2. அறநெறிச்சாரம் 3. அறநெறிதீபம் 4. அறிவானந்த
சித்தி 5. ஆசாரக்கோவை 6. ஆத்திச்சூடி 7. இரத்னசபாபதி(ஆசிரியர்) 8.
இராமாயணம் 9. இறையனார் பொருள் 10. இனிய நாற்பது 11. ஏலாதி 12. ஒழிவில்
ஒடுக்கம் 13.ஔவையார் (ஆசிரியர்) 14. கணேச புராணம் 15. காசிகாண்டம் 16.
கூர்மபுராணம் 17. கோவிந்த சதகம் 18. சங்கத்துப் பாரதம் 19. சிதம்பர
பண்டாரம்(ஆசிரியர்) 20. சிந்தாமணி, சீவக சிந்தாமணி 21. சிவசிவவெண்பா 22.
சிவவாக்கியம் 23. சிறுபஞ்சமூலம் 24. சீவதர்மோத்தரம் 25. சூடாமணி 26.
சூடாமணி நிகண்டு 27. செந்தில்காந்த சதகம் 28. ஞானாதிகராயர் காப்பியம் 29.
தண்டலையார் சதகம் 30. திருக்குறள்  31. திருமுருகாற்றுப்படை
32. திருமூலமந்திரம் 33. திருவருட்பயன் 34.திருவாசகம் 35. திருவாய்மொழி
36. திருவிளையாடல் 37. தேம்பாவணி 38. தொல்காப்பியம் 39. தொன்னூல்
விளக்கம் 40. நல்வழி 41. நன்னூல் 42. நன்னெறி 43. நாலடியார் 44.
நான்மணிக்கடிகை 45. நிகண்டு 46. நீதிநெறிவிளக்கம் 47. நீதிவெண்பா 48.
நெகிழ்தம்(நைநடம்) 49. பகவத்கீதை 50. பழமொழி 51. பாரதம் 52.
பிரபுலிங்கலீலை 53. பிரம்ம கீதை 54. பிரமோத்தரகாண்டம் 55. புதுமொழி 56.
புறநானூறு 57. பெரியபுராணம் 58. பெருந்தேவனார் பாரதம் 59. மகாபுராணம் 60.
மூதுரை 61. வசிஷ்டம் 62. வளையாபதி 63. ஸ்கந்தம்
இந்த 63 நூல்கள் மட்டுமின்றி 1. திருக்குறள் பரிமேலழகர் உரை 2.
தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை 3. திருக்குறள் கவிராயர் உரை ஆகிய
உரை நூல்களையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார் எல்லீஸ்.
எல்லீஸ் உரை குறித்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு செய்தி
மேற்கோள்களையும் மொழிபெயர்த்துள்ளமையாகும். அவர் காட்டும் அனைத்து
மேற்கோள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இது
எல்லீஸின் புலமையைத் துலக்கமாக வெளிப்படுத்துகின்றன.
எல்லீஸின் புலமையைக் கண்டு வியப்பதற்கு இன்னொரு காரணம் அவருக்கு இருந்த
சுவடிப் புலமையாகும். திருக்குறள் மொழிபெயர்ப்பில் காட்டும் எந்த நூலும்
அவர் காலத்தில் அச்சு வடிவம் பெறாமல் சுவடிகளில் இருந்தவையாகும். எல்லீஸ்
எந்த அளவு சுவடியை வாசிக்கும் பயிற்சியையும் தமிழ் நூல்களை வாசிக்கின்ற
ஆர்வத்தையும் கொண்டிருந்தார் என்பதற்கு இவை சான்றாக உள்ளன. தாம் எழுதும்
கருத்திற்கு இணையான ஒன்றை மேற்கோளாகக் காட்டுகிறோம் என்றால் பல நூல்களைப்
படித்து அதில் மிகுந்த புலமைபெற்றிருந்தால் அன்றி அது சாத்தியப்படாது.
இன்று செவ்வியல் நூல்கள் என்று போற்றப்படுகின்ற தொல்காப்பியம் உள்ளிட்ட
13 நூல்களிலிருந்து மேற்கோள் பாடல்களை எடுத்தாண்டுள்ளார் எல்லீஸ்.
முற்காலத்தில் பழந்தமிழ் நூல்கள் பல வகையான பெயர்களில் வழங்கின
என்பதற்கும் இவரின் மேற்கோள்கள் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன.
எல்லீஸின் மொழிபெயர்ப்பு நூல் வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது என்பதற்கு
ஏராளமான சான்றுகளைச் சுட்டலாம். முக்கியமாக அவற்றுள் உள்ள மூன்று தரவுகள்
நமது கவனத்தைப் பெறுகின்றன. ஒன்று தொல்காப்பியம், இரண்டு புறநானூறு,
மூன்று இறையனார் அகப்பொருள் பற்றிய மேற்கோள் தரவுகளாகும். எல்லீஸ்
காட்டும் இந்த மூன்று நூல்களின் மேற்கோள் பாடல்களைப் பார்த்துவிட்டு அந்த
மேற்கோள் குறித்த செய்திகளுக்குச் செல்வோம்.
தொல்காப்பிய நூற்பாக்கள்  3
1. வாராக் காலத்து நிகழுங்காலத்தும்
ஓராங்குவரூஉம் வினைச்சொற் கிளவி
யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள வென்மனார் புலவர்
(3ஆம் குறள் உரை, ப.3)
2.    வினையின் றொகுதி காலத் தியலும்
(5ஆம் குறள் உரை, ப. 5)
3. தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே
(10ஆம் குறள் உரை, ப. 31)(தொல்காப்பியம் இறையனார் அகப்பொருள் நூற்பா)
4.    இன்பமும் பொருளு மறனு மென்றாங்
கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற்
காமக்கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுட்
டுறையமை நல்யாழ்த் துணைமையோர் ரியல்பே
(வாழ்க்கைத் துணைநலம், 1ஆம் குறள் உரை, ப. 157)
புறநானூற்றுப் பாடல்கள் 2
1. படைப்புப்பல படைத்துப் பலரோடு ண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்பட
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
யிட்டுந் தொட்டுங் கௌவியுந் துழந்து
நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்து
மயக்குறு மக்களை யில்லோர்
பயக்குற விலர்தாம் வாழு நாளே
(புதல்வரைப்பெறுதல், 5ஆம் குறள் உரை, ப. 208)
2.    ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கு
மாணிழை மகளீர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வருவாய் மருங்கிற் கழுவாயு முளவே
நிலம்படை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றார்க் குய்தி யில்லென்
றறம்பா டின்றே யாயிழை கணவ (புறம். 34)
(செய்நன்றி அறிதல், 5ஆம் குறள் உரை, ப. 280)
இந்த மூன்று நூல்களின் மேற்கோள்களும் தமிழ்ப் புலமையுலகம் கொண்டுள்ள
மனப்பதிவிற்கு மாற்றான கருத்திற்கு விடைசொல்வதாக அமைகின்றன. ஒரு நூலில்
எடுத்தாளப்படும் மேற்கோள்களும் காலம் கடந்து வரலாற்றின் ஆவணமாக அமையும்
என்பதற்கு எல்லீஸ் காட்டும் மேற்கோள்கள் சிறந்த உதாரணமாக அமைகின்றன.
1. 18,19ஆம் நூற்றாண்டுகளில் தொல்காப்பியம் புறக்கணிக்கப்பட்டது என்ற
சிலரின் கருத்திற்கு மறுப்புச் சொல்லும் வகையில் எல்லீஸ் உரையில்
மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள மூன்று தொல்காப்பிய நூற்பாக்கள்
அமைந்துள்ளன.
2. இறையனார் அகப்பொருள் நூற்பா என இன்று நாம் அறிந்துள்ள இன்பமும்
பொருளும் … எனத்தொடங்கும் நூற்பாவைத் தொல்காப்பிய நூற்பாவாக எல்லீஸ்
காட்டுவது சிந்திக்கத்தக்கது. அவர் மேற்கோளாகக் காட்டும் மேற்கோளினுடைய
மூலநூலின் பெயரைத் தலைப்பில் சுட்டும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.
மேற்சுட்டிய, இன்று நாம் இறையனார் அகப்பொருள் என்று கருதும் நூற்பாவின்
தலைப்பில் தொல்காப்பியம் பொருளதிகாரம் மூன்றாவது களவியல் என்று
சுட்டியுள்ளார். இது சிந்தனைக்குரிய ஒரு பதிவாகும்.
3. எல்லீஸ் உரையில் இரண்டு இடங்களில் புறநானூற்றுப் பாடல்கள் மேற்கோளாகக்
காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் ஒரு பாடல் பாடவேறுபாட்டு ஆய்விற்கு
முக்கியமான சான்றாக உள்ளது. 1894இல் புறநானூற்றைச் சுவடியிலிருந்து
முதன்முதலாக அச்சிற்கு மாற்றியவர் உ.வே.சாமிநாதையர். அந்த முதல்
பதிப்பில் உள்ள 34ஆம் பாடலின் மூன்றாமடியிலுள்ள முதல் சீர் பார்ப்பார்
என்பதாகும். எல்லீஸ் மேற்கோளாகக் எடுத்தாண்டுள்ள புறநானூற்றுப் பாடலில்
குரவர் என்று காணப்படுகிறது. இதைக் கொண்டு (எல்லீஸ் பதிப்பைக் கொண்டல்ல,
1955இல் ரா.பி.சேதுப்பிள்ளை வெளியிட்ட மறுபதிப்பைக் கொண்டு) சிலர்
உ.வே.சா. மீதும் அவர் உருவாக்கிய புறநானூற்றுப் பதிப்பு மீதும்
விமர்சனத்தை முன்வைக்கின்றனர். உண்மையில் நிலமை என்னவென்றால் இன்று
கிடைத்துள்ள புறநானூற்றின் எந்தச் சுவடியிலும் (உ.வே.சா. புறநானூற்றுப்
பதிப்பில் காட்டும் சுவடிகள் உட்பட) குரவர் என்ற பாடம் இல்லை. பார்ப்பார்
என்ற பாடமே காணப்படுகிறது (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
செவ்வியல் நூல்களின் செம்பதிப்பிற்காக உலகம் முழுவதும் உள்ள
புறநானூற்றுச் சுவடிகளைச் சேகரித்துள்ளது. அந்தச் சேகரிப்பைக் கொண்டு
இந்தத் தகவல் இங்குப் பதிவுசெய்யப்படுகிறது. வேண்டுவோர் நிறுவனத்திற்கு
வந்து புறநானூற்றுச் சுவடிகளைப் பார்வையிட்டுத் தெளிந்து கொள்ளலாம்).
உ.வே.சா.விற்குக் கிடைத்த எந்தச் சுவடியிலும் குரவர் என்ற பாடம்
இருந்தமைக்கு வாய்ப்பில்லை என்பதே சுவடிகள் வழிப்பெறப்படும் உண்மை
நிலவரமாகும். உ.வே.சா. மீது வைக்கப்படும் விமர்சனம் அர்த்தமற்றது;
ஆதாரமற்றது என்பதைப் புறநானூற்றுச் சுவடிகள் உணர்த்துகின்றன. அப்படி
என்றால் உ.வே.சா. விற்கு முன்னர் புறநானூற்றை வாசித்த எல்லீசுக்கு
எங்கிருந்த கிடைத்தது குரவர் தப்பிய என்ற பாடம். இது ஆய்விற்குரியது;
ஆவணங்களைத் தேடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டவல்லது.
சான்றாதார நூல்கள்
1. எல்லீஸ், சி.ஙி. 1812, 1819 திருக்குறள் எல்லீஸ் மொழிபெயர்ப்பு.
சென்னை: சென்னைக் கல்விச் சங்கத்து அச்சுக்கூடம்
2. சாமிநாதையர், உ.வே. 1894. புறநானூறு மூலமும் பழைய உரையும், சென்னை:
வெ.நா. ஜுபிலி அச்சுக்கூடம்
3. தாமஸ் டிரவுட்மன். 2007. தமிழில்: இராம. சுந்தரம். திராவிடச் சான்று,
சென்னை: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், காலச்சுவடு.
4.    Sethu Pillai, R.P. 1955. Tirukkural Ellis Commentary, Madras:
University of Madras.
5. Barnett, L.D., and the Late Pope.G.U. (Compiled). 1909. A Catalogue
of the Tamil Books in the Library of the British Museum.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக