திங்கள், 10 பிப்ரவரி, 2020

முல்லைப்பெரியாறு கேரளா பொய்ப்பிரச்சாரம் புதியதலைமுறை கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 19 ஆக., 2018, முற்பகல் 11:01
பெறுநர்: எனக்கு

ஆபத்தில் காக்கும் முல்லைப் பெரியாறு : ஏன் எதிர்க்கிறது கேரளா ?
நம்பிக்கை ராஜ்
 Published: 10 Aug, 2018 08:13 pm
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்யும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தொட்டது. தற்போதைய தொடர் மழையால் 142 அடியையும் அணை தொட்டுவிடும். அதற்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க நமக்கு அனுமதி இல்லை. முல்லை பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீரை தேக்க முடியும். அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்த
கேரளா இன்று முல்லை பெரியாறிலிருந்து தண்ணீர் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என இயற்கையிடம் மன்றாடுகிறது.
காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?
முல்லை பெரியாறு அணைக்கு கீழே இருப்பது இடுக்கி அணை. இந்த இடுக்கி அணை ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (arch dam)இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை விவசாய தேவைக்கோ, குடிநீர் பயன்பாட்டிற்கோ கட்டப்பட்ட (1973) அணை அல்ல; 167.68 மீட்டர் உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவிற்கு பெரியது. ஏறக்குறைய நம் மேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை இந்த அணை கொண்டிருக்கிறது. 750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அரபிக் கடலில் நேரடியாக கலந்துவிடும். இந்த அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை இரண்டுமுறை (1992, 2018) மட்டுமே அதன் முழுக் கொள்ளளவை அடைந்திருக்கிறது.
மற்ற காலங்களில் இந்த அணை நிரம்பாததற்கு காரணம் மேலேயிருக்கும் முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடப்படுவதால் இடுக்கி அணை நிரம்ப போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் இடுக்கி அணை வருடம் முழுவதும் நிறைந்திருக்கும். அதற்கு தடையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. அதனால்தான் அந்த அணையை அகற்ற அணை பலவீனமாக இருக்கிறது, அணையில் ஓட்டை விழுந்துவிட்டது எனப் பல கதைகளை சொல்லி 155 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க செய்துவிட்டது கேரளா.
பிறகு தொடர்ச்சியான சட்ட போராட்டத்தால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார் ஜெயலலிதா. இடுக்கி அணையில் நீர் நிரம்ப வேண்டும் என்றால் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணை பற்றிய வதந்திகளை கேரள அரசும், கேரள ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து வந்தன என்ற கருத்தும் உண்டு. 1973ல் கட்டப்பட்ட இடுக்கி அணை 6 ஆண்டுகளாகியும் நிரம்பாததால் 1979ல் பத்திரிகை ஒன்று மூலமாக ஒரு வதந்தியை மக்களிடையே பரப்பி பீதியாக்கியது. முல்லை பெரியாறு அணை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் ஒரு யானை நுழைந்துபோகும் அளவிற்கு அணையில் ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த அணை உடையலாம். அணை உடைந்தால் முல்லை பெரியாறு ஆற்றை ஒட்டியிருக்கும் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அரபிக் கடலில் பிணமாக மிதப்பார்கள் என்ற வதந்திதான் அது. மக்கள் பீதியடைந்து முல்லை பெரியாறு அணைக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.
முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக சொல்லி 39 ஆண்டுகளாகிறது. தற்போதுவரை முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக, கேரள அரசின் சார்பில் நிபுணர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை கொடுத்திருக்கிறது. தொடர்ந்து மக்களிடையே பயத்தை கிளப்ப 'டேம் 999' என்ற படத்தை எடுத்து மக்களை அச்சுறுத்தினார்கள். ‘Dam999’என்ற தலைப்பே விஷமத்தனமானது. ‘Dam999’என்பது முல்லை பெரியாறு அணையின் ஆயுள். முல்லை பெரியாறு அணையை கட்டி அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதைதான் படத்திற்கு பெயராக வைத்தார்கள்.
விஷமத்தனமான கருத்துக்களோடு இருமாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால் உண்மையில் அவர்கள் வதந்தி பரப்புவதுபோல முல்லை பெரியாறுஅணை உடைந்தாலும் கேரள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. காரணம் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவைவிட மிகப்பெரியது இடுக்கி அணை. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச நீர் தேக்குத்திறன் 15 டி.எம்.சி ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 72 டி.எம்.சி. முல்லை பெரியாறு போன்ற நான்கு அணைகளின் தண்ணீரை இடுக்கி அணை என்ற ஒரே அணையில் தேக்கிடமுடியும். மேலும் முல்லை பெரியாறு அணை அமைந்திருப்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில், இடுக்கி அணை இருப்பது அதன் அடிவாரத்தில்.
முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் வெள்ளம் பாய்ந்துவரும் வழியில் எந்த ஊர்களும் இல்லை. மலைக்கு நடுவிலும், காடுகளுக்கு இடையேயும் பாய்ந்து வந்து இடுக்கி அணையில் அந்தத் தண்ணீர் சேர்ந்துவிடும். இந்த உண்மை கேரள அரசிற்கும், மலையாள ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும் ஆனாலும் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக முல்லை பெரியாறு அணையை எரிச்சலோடு பார்க்கிறார்கள். தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை இரண்டாம் முறையாக முழுமையாக நிறைந்திருக்கிறது. இடுக்கி அணை நீரால் வெள்ளத்தில் மிதக்கிறது அலுவா நகரம். தற்போது அந்த மக்கள் முல்லை பெரியாரிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது என பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஆனால் தமிழகம் உதவி செய்ய நினைத்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. 142 அடிவரை மட்டுமே முல்லை பெரியாறுஅணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதற்கு மேல் தண்ணீரைதேக்க வேண்டும் என்றால் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்திருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றால் மட்டும்தான் கர்னல் ஜான் பென்னி குயிக் கட்டிக்கொடுத்த 155 அடிவரையிலான அணையில் தண்ணீரை தேக்க முடியும்.

அணை நதிநீர் மலையாளி கேரளா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக