வெள்ளி, 31 மார்ச், 2017

முல்லைப்பெரியாறு ஒன்றரை லட்சம் தமிழர் திரண்டனர் வினவு தேனி தமிழன்டா எழுச்சி போராட்டம் கம்பம்

aathi tamil aathi1956@gmail.com

12/1/16
பெறுநர்: எனக்கு
(10.12.2011) ” முல்லைப் பெரியாறு அணையை மீட்போம்” என்கிற முழக்கத்தை
முன்வைத்து பெரியாறு அணையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில்
இருக்கும் சுருளிப்பட்டி கிராமத்திலிருந்து முதலில் சுமார் 5000
விவசாயிகள் அணிதிரண்டு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி நடை பயணம் ஒன்றைத்
துவக்கினர். செல்லும் வழியெங்கும் இருந்த கிராமங்களைச் சேர்ந்த
பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள 40,000
ஆயிரத்துக்கும் மேலாகத் திரண்டு விட்ட அந்தக் கூட்டம் 144 தடையுத்தரவைக்
கிழித்துக் குப்பைத் தொட்டியிலெறிந்து விட்டு அணையை நோக்கி முன்னேறியது.
இடையில் ஆறு இடங்களில் போலீசு அமைத்திருந்த தடுப்பரண்களைத்
தகர்த்தெறிந்து விட்டு முன்னேறிய அந்த மக்கள் படை, தம்மை
பின்புறத்திலிருந்து போலீசு நெருங்கி விடுவதை தாமதப்படுத்த கற்களாலும்
மரங்களாலும் தடுப்புகளை அமைத்தவாறே தொடர்ந்து முன்னேறி அணையிலிருந்து 100
மீட்டர் தொலைவு வரை நெருங்கிச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டுக்
கலைந்தது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (11.12.2011), முந்தைய தினம்
கூடியதை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் ஒன்று திரண்டு மீண்டும் ஒரு
பேரணியை நடத்தினர். சுமார் 70,000க்கும் அதிகமாக கூடிய மக்களில் பெண்கள்
கணிசமான அளவு கலந்து கொண்டனர். தங்களைத் தடுக்கக் காத்திருக்கும்
போலீசுப் பட்டாளத்திற்கு தகுந்த பதிலை அளிக்க பெண்கள் கையில் கிடைத்த
விளக்குமாறு, பிய்ந்த செருப்பு உள்ளிட்ட ‘பேரழிவு’ ஆயுதங்களையும் ஆண்களோ
கையில் கிடைத்த கத்தி கடப்பாறை உள்ளிட்ட சாதாரண ஆயுதங்களையும் ஏந்திச்
சென்றனர்.
மக்கள் அணையை நெருங்குவதைத் தடுக்க, போலீசு கூடலூருக்கும் லோயர்
கேம்புக்கும் இடையில் இருந்த குறுவனூற்றுப் பாலத்தில் தடுப்பரண்
அமைத்துள்ளது. அதைத் தகர்த்து மக்கள் முன்னேறிச் சென்றனர். சுமார் 30
கிலோமீட்டர்களுக்கும் மேல் கால் நடையாகவே பேரணியில் நடந்து வந்த மக்கள்
எந்தச் சோர்வுமின்றி ஆவேசமாக மத்திய அரசையும் கேரள அரசியல் கட்சிகளையும்
எதிர்த்து கோஷங்களை எழுப்பியவாறு முன்னேறிச் சென்றனர்.
அணையை நோக்கி முன்னேறிச் சென்ற மக்களின் பேரணியை குமுளி-கேரள எல்லையில்
வைத்து மறித்தது தமிழக டி.ஐ.ஜி தலைமையிலான போலீசு படை. முல்லைப் பெரியாறு
அணை தொடர்பான சர்ச்சைகள் நியாயமாகத் தீர்க்கப்படும் வரை தமிழகத்தையும்
கேரளத்தையும் இணைக்கும் 13 நெடுஞ்சாலைகளையும் அரசே மூட வேண்டுமென்றும்,
இந்தக் கோரிக்கையை அரசு உடனே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், அதுவரை தாம்
கலைந்து செல்ல முடியாதென்றும் மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே அங்கே தனது அடிப்பொடிகளுடன் விஜயம் செய்தார் அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம். போராடும் மக்களிடையே சமரசம் பேசி கலைந்து போகச் செய்து
விடலாமென்ற நப்பாசையில் வந்த பன்னீர்செல்வத்துக்கு செருப்பாபிஷேகம்
செய்து தகுந்த மரியாதை அளித்தனர் மக்கள். ஓட்டுப் பொறுக்கி
அரசியல்வாதிகளை போராட்டத்தில் தலையிட அனுமதிக்க மாட்டொமென்று கோஷமிட்ட
மக்கள், “ஏழு நாளா போறாடுகிறோம், இப்ப கேரளாக்காரனுக்கு பிரச்சினைன்னு
சொன்னதும் எங்களை சமாதானம் செய்ய வந்தியா” என்று அர்ச்சனை செய்து
விரட்டியடித்துள்ளனர்.
மக்களின் ஆவேசம் கண்டு பீதியடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடிபட்ட கையோடு,
குமுளியில் இருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார். அமைச்சருக்கு கிடைத்த
மரியாதைக் கண்டு கொதித்த தமிழக போலீசு தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க
முயற்சித்தது. இதற்கிடையே கீழே இருக்கும் மக்கள் விஷயத்தைக்
கேள்விப்பட்டு கூடலூர் அருகே அமைச்சரின் வாகன பவனியைத் தடுத்து
நிறுத்தினர். “திரும்பிப் போ திரும்பிப் போ கேரளாவுக்கே திரும்பிப் போ”
என்று கோஷமிட்டு போர்கோலம் பூண்டு நின்றிருந்த மக்களிடமிருந்து எப்படியோ
தப்பித்தோம் பிழைத்தோமென்று அமைச்சரும் அடிப்பொடிகளும் பின்னங்கால்
பிடறியில் பட ஓட்டம் பிடித்தனர்.
தற்போது கேரளத்தில் காங்கிரசு, பாரதிய ஜனதா, சிபிஎம் மட்டுமின்றி மாநில
அளவில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் எந்த வேறுபாடுமின்றி ஸ்தாபன
ரீதியில் ஒருங்கினைந்து மலையாள இனவெறியை உயர்த்திப் பிடித்து, கேரள
மக்களிடையே அச்சமூட்டும் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். 200 கிலோ
மீட்டர்களுக்கு மனிதச் சங்கிலி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்
என்று வரிசையாக அணைக்கும் தமிழர்களுக்கும் எதிராக நடத்தப்படும்
பயபீதியூட்டும் பிரச்சாரங்களுக்கு கணிசமான அளவு கேரள
மக்கள்ஆட்பட்டுள்ளனர்.
தமிழகத்திலோ, ‘தேசியக்’ கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசு,
பாரதிய ஜனதா மற்றும் போலிகம்யூனிஸ்டு கட்சிகள் வெண்டைக்காயை
வெளக்கெண்ணையில் கழுவிக் கொட்டுவது போல் வழவழா கொழகொழாவென்று மென்று
முழுங்குகிறார்கள். அணை பாதுகாப்பானது என்பதை முன்னிறுத்தி தமது கேரளக்
கூட்டாளிகளிடையே பேச துப்பில்லாத இவர்கள் தமிழர்களிடம் ஒருமுகமும்
மலையாளிகளிடம் ஒருமுகமும் காட்டி இரண்டு பக்கமும் பொறுக்கித் தின்ன
வாய்ப்புகள் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.
கேரள மக்களின் வயிற்றுப்பாடும் வாழ்க்கையும் தமிழகத்தின் விவசாய
விளைச்சலில் தான் அடங்கியிருக்கிறது என்பதை முன்வைத்து கேரள மக்களின்
தேவையற்ற அச்சத்தை விளக்குவதை விடுத்து இனவெறி அரசியலில் ஒருவருக்கொருவர்
சளைக்காமல் முங்கி முத்தெடுக்கப் பார்க்கிறார்கள். இருந்தாலும்,
இப்போதைக்கு அதில் முன்னணியில் இருப்பது போலி கம்யூனிஸ்டுகள் தாம்.
இந்த சந்தர்ப்பவாத முகமூடிகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் தமிழக
விவசாயிகளோ தெளிவாக இவர்களை புறம் தள்ளி தன்னிச்சையாக அணையைக் காக்க
அணிதிரண்டு வருகிறார்கள். தங்கள் சொந்த அனுபத்தினூடாகவே துரோகிகளை
இனங்கண்டு விலக்கியுள்ள விவசாயிகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டியது இரு
மாநிலங்களிலும் இருக்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
கூடன்குளம் போராட்டத்தை தணிப்பதற்க்காக நாடகமாடிய பாசிச ஜெயா அதே
பாணியில் முல்லைப் பெரியாறு போராட்டத்தை ஆப்பு வைப்பதற்க்காக, வரும்
15.12.2011 அன்று சட்டசபையைக் கூட்டி தமிழகத்தின் உரிமையை
விட்டுத்தரமாட்டோம் என்று தீர்மானம் போட இருக்கிறார். மூவர் தூக்கிற்கும்
இப்படித்தான் தீர்மானம் போட்டு பின்னர் அதை அவரே காறித்துப்பினார் என்பது
நினைவு கூறத்தக்கது. ஐந்து காசுக்கு கூட மதிப்பில்லாத இந்த
தீர்மானங்களால் எந்த பயனுமில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெயாவின்
நோக்கம் போராடும் மக்களின் கோபத்தை தணித்து நீர்த்து போகச் செய்வதுதான்.
அதிலும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடிவாங்கிய பிறகு ஏதாவது செய்ய
வேண்டி இருக்கிறது.
ஆனால் மக்கள் போராட்டம் அத்தனை சுலபத்தில் தணியப் போவதில்லை. இன்றும்
12.12.2011 – கூடலூர் பகுதியில் மக்கள் திரண்டு செல்லப்போகிறார்கள்.
தற்போது இந்த போராட்டத்தில் சேர்ந்து கொள்ளும் மக்களின் புவிப்பரப்பு
அதிகரித்து வருகின்றது. இன்றைய போராட்டத்தில் சிவகங்கையிலிருந்தும்
விவசாயிகள் வரப்போவதாக எமது தோழர்கள் கூறுகிறார்கள். ஆனால் இருநாள்
அனுபவத்தை பார்த்து போலீசு இன்றுமுதல் வன்முறை நடவடிக்கையையும்,
முன்னணியாளர்களை கைது செய்து சிறையிலடைக்கும் என்றும் தெரிகிறது.
அப்படி தடியடி அல்லது துப்பாக்கி சூடு மூலம் கூட்டத்தை கலைத்து
விடலாமென்று இருமாநில போலீசு நினைத்தாலும் வரும் நாட்களில் மக்கள்
கூட்டம் சில பல இலட்சங்களுக்கு மாறும் போது யார் என்ன செய்ய முடியும்?
அரசுகளும், ஓட்டுக்கட்சிகளும், நீதிமன்றங்களும் செயலற்று போகும் போது
மக்களுக்கான உரிமையை அவர்களே மீட்டெடுப்பார்கள். அதற்கு
முன்னறிவுப்புதான் இந்த அணை காக்கும் போர்!
_________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக