வியாழன், 30 மார்ச், 2017

நாட்டு மாடு வளர்க்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு நாட்டுமாடு

மாடு வளர்க்கும் கம்ப்யூட்டர் எஞ்சினியர்!


‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என பள்ளிகளில் விழும் திட்டை, ஆசீர்வாத வார்த்தைகளாக மாற்றியிருக்கிறார் சண்முகம். கம்ப்யூட்டர் எஞ்சினியரான அவர், ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தவர். மாதம் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் வருமானம். இது 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது அடையாளம். இப்போது அவர் ‘நாட்டு மாடு’ சண்முகம். மாடு வளர்க்கும் தொழில்நுட்பத்தை அவரிடம் கற்றுக்கொள்ள, தமிழகம் முழுவதுமிருந்து நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் வருகிறார்கள். அழிவின் விளிம்பில் இருக்கிற நமது பாரம்பரிய ரக மாடுகளைத் தேடித் தேடி வாங்கிவந்து மிகப்பெரும் பண்ணை ஒன்றை நடத்துகிறார் சண்முகம். இப்போது அவரது பண்ணையில் அபூர்வமான 62 மாடுகள் வளர்கின்றன. இது மட்டுமின்றி, மாட்டுச்சாணம் மற்றும் கோமயத்தை வணிகப்பொருளாக மாற்றி சாதித்திருக்கிறார் அவர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த சண்முகத்தின் குடும்பத்துக்கும் விவசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது ஒரு கொடூர சம்பவம். 





ஒருநாள் அலுவலகத்தில இருந்து வீட்டுக்குப் போகும்போது ஒரு லாரியைப் பாத்தேன். முழுக்க மாடுகள். கொடூரமா கட்டிக் கொண்டு போனாங்க. மாடுகளோட கோலத்தைப் பாக்க பரிதாபமா இருந்துச்சு. விசாரிச்சப்போ, கேரளாவுக்கு வெட்டுக்குக் கொண்டு போறதா சொன்னாங்க. கேட்கவே அதிர்ச்சியா இருந்துச்சு. அதுக்குப்பிறகு தினமும் லாரிகளைக் கவனிக்க ஆரம்பிச்சேன். ஒருநாளைக்கு நான்கைந்து லாரிகள்... நூற்றுக்கணக்கான மாடுகள்... 

மாட்டை தெய்வம்னு சொல்லுவாங்க. ‘மாட்டோட எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் மனிதர்களோட வாழ்க்கைத்தரம் இருக்கும்’னு எங்க அப்பா சொல்லுவார். இப்படி லாரிலாரியா மாடுகள் வெட்டுக்குப்போனா தமிழகம் என்னவாகிறது..? பல விதங்கள்ல மனிதர்களை வாழ வைக்கிற மாடுகளை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டா, கடைசியில என்ன மிஞ்சும்..?’’ - ஆதங்கம் தொனிக்கக் கேட்கிறார் சண்முகம்.

‘‘மாடுகளைப் பத்தி நிறையப் படிக்க ஆரம்பிச்சேன். விவசாயத்தோட அடிப்படையே மாடுகள்தான். சாணம் உரம்; கோமயம் பூச்சிக்கொல்லி. வயல்ல விளையுறதுல மிஞ்சிக் கிடைக்கிற சக்கையைப் போட்டா போதும்... மாடுகள் காலம் முழுதும் உழைச்சுக் கொட்டும். என்னைக்கு மாடு வெட்டுச்சந்தைக்கு வந்துச்சோ, அன்னைக்கே லாபகரமான விவசாயம் முடிவுக்கு வந்திருச்சு. தஞ்சாவூர் மாதிரி விவசாய மண்ணுலகூட மாடுகள் இல்லை. எல்லாத்தையும் வணிகமா பாத்த மனுஷன், மாட்டையும் வணிகமா பாத்துட்டான். 

சத்தமில்லாம ‘வெண்மைப் புரட்சி’ங்கிற பேர்ல ஒரு மோசடியே இங்கே நடந்திருக்கு. லாப வெறியில மிக உன்னதமான நாட்டு மாடுகளை எல்லாம் அழிச்சுட்டு, நம்ம மண்ணுக்குத் தொடர்பில்லாத கலப்பினங்களையும், மரபணு மாற்றப்பட்ட மாடுகளையும் கொண்டுவந்து குவிச்சிட்டாங்க. இந்த மாடுகளால மண்ணுக்கோ, மனுஷனுக்கோ எந்த லாபமும் இல்லை. மருத்துவ குணமும், தெய்வீக அம்சமும் பொருந்தியதா கருதப்படுற சாணம், இப்போ வைரஸ் கிருமிகளை பரப்புற ஆயுதமா மாறிடுச்சு.

இதையெல்லாம் மாத்த வெறும் பேச்சு போதாது. உடனடியா செயல்ல இறங்கினேன். ஒரு மாட்டுப் பண்ணையைத் தொடங்கணும்; நாட்டு மாடுகளை மட்டுமே வளர்க்கணும். அதை லாபகரமான தொழிலா மாத்தணும். வேலையை ரிசைன் பண்ணினேன். கையில இருந்த பணத்தை வச்சு மருதமலை அடிவாரத்தில குப்பைப்பாக்கம்ங்கிற கிராமத்துல கொஞ்சம் நிலம் வாங்குனேன். மாடு வளர்க்கிறதுல அனுபவம் உள்ள ஊர்க்காரங்க ரெண்டு பேரை வேலைக்குச் சேத்தேன். ஊரு ஊரா அலைஞ்சேன். எல்லா சந்தைகளுக்கும் போனேன். 

எந்த விவசாயியும் மனம் ஒப்பி மாட்டை விக்கறதில்லை. கலங்கிய கண்ணோடதான் விக்கறாங்க. விவசாயமே இல்லாதபோது அவர் மாட்டை வச்சு என்ன பண்ணுவார்..? எல்லா சந்தைகள்லயும் கேரளத்து மாட்டு வியாபாரிகள் வியாபிச்சு இருக்காங்க. சொல்ற விலைக்கு வாங்கிட்டுப் போறாங்க. காலையில ஏத்துற மாடுகள் சாயங்காலம் காணாமப் போயிடுது.

இந்தியாவில மொத்தம் 33 வகையான நாட்டு மாடுகள் இருக்கு. இந்த மாடுகள் பால் கம்மியா கறக்கலாம். ஆனா ஒவ்வொரு சொட்டும் மருந்துக்கு சமம். பால் மட்டுமில்லாம சாணம், கோமயம் எல்லாம் மருந்து. நம் மக்கள் விவசாயம் நொடிச்சுப் போன உடனே மாட்டை வித்துடுறாங்க. ஆனா, விவசாயத்தை விட மாடு வளர்ப்புல நல்ல லாபம் இருக்குன்னு அவங்களுக்குத் தெரியலே. பாலை மட்டுமே ஆதாரமாக் கொண்டு மாடு வளர்க்கக் கூடாது. எல்லாத்தையும் பயன்படுத்தணும்.

தமிழ்நாட்டுல பர்கூர், காங்கேயம், செம்மரை, ஆலம்பாடி, அலிகார், உம்பளச்சேரி, வெச்சூர், கோவைக்குட்டைன்னு பல நாட்டு மாடு ரகங்கள் அழிவோட விளிம்பில இருக்கு. பல ரகங்கள் வழக்கொழிஞ்சு போச்சு. இங்கேயிருந்து பிரேசில், ஹாலந்து, ஜப்பான் நாடுகளுக்கு அந்த ரகங்களைக் கொண்டு போய் வளர்க்கிறாங்க. நம்ம வெச்சூர் மாட்டை அமெரிக்காவில ‘மினியேச்சர் மாடு’ன்னு சொல்லி வளர்க்கிறாங்க. அவங்கல்லாம் பிழைக்கத் தெரிஞ்சவங்க. பல்வேறு செல்வங்களை மேலைநாடுகளுக்கு பறிகொடுத்த மாதிரி மாட்டுச் செல்வங்களையும் பறிகொடுத்து வெறும் மெஷின் மாதிரியான கலப்பின மாடுகளை நம்பி வாழ்ந்துக்கிட்டிருக்கோம்’’ - என்கிறார் சண்முகம்.

தமிழ்நாட்டு நாட்டு மாடுகள் மட்டுமின்றி, இந்தியா முழுதும் அழியும் நிலையில் உள்ள பல ரகங்களை தனது பண்ணையில் வளர்க்கிறார் சண்முகம். குஜராத் மாநிலத்தின் தார்பார்க்கர், பஞ்சாப் மாநிலத்தின் கிர், சாகிவால், ராஜஸ்தானின் காங்கிரிஜ், ராட்டி, பஞ்சாப் மாநிலத்தின் ரெட்சிந்தி மாடுகள் இவரது பண்ணையில் உலவுகின்றன. 

‘‘மாடு வளர்க்கப்போறேன்னு சொன்னவுடனே வீட்ல எல்லாரும் அதிர்ந்து போயிட்டாங்க. ‘திடீர்னு நோய் வந்துட்டா, எல்லாம் அழிஞ்சி போயிடும்’னு சில பேர் மிரட்டுனாங்க. என் மனைவி மட்டும், ‘உங்களால நல்லா பண்ண முடியும்’னு ஊக்கப்படுத்தினா. தைரியமா இறங்கிட்டேன். அதேநேரம் பிழைப்புக்கு ஒரு வழியையும் ஏற்படுத்திக்கிட்டேன். நண்பரோட சேந்து வெல்டிங் ராடு விக்கிற வேலை. பெரிசா தொந்தரவிருக்காது. 

மாடுகள் வாங்கினபிறகு, கிட்ட இருந்து அதுங்களோட இயல்புகளை கண்காணிச்சேன். ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு சிறப்பம்சம் இருக்கு. செம்மரை மாட்டுக்கு லாடமே தேவையில்லை. காருக்கு இணையா ஓடும். உலகம் முழுவதும் வெறும் 3000 மாடுகள்தான் இருக்கு. கோவைக்குட்டை காங்கேயம் மாட்டோட அடுத்த வெரைட்டி. மனித இயல்போட பொருந்திப் போறதுதான் நாட்டு மாடுகளோட ஸ்பெஷலே’’ என்று சிலாகிக்கிற சண்முகம், ‘ஒரு விவசாயி 1 நாட்டு மாட்டை வளர்த்தால் நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டலாம்’ என்று வியப்பூட்டுகிறார். சொல்வது மட்டுமல்ல, செய்தும் காட்டுகிறார்.

‘‘மாட்டோட கழிவுகளை வச்சு 53 வகையான பொருட்களைத் தயாரிக்கலாம். கோமய அரக்குக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருக்கு. ஊதுபத்தி, கொசுவர்த்திச்சுருள், திருநீறு, சோப்பு, வலிநிவாரணி மருந்துகள், விவசாயத்துக்கு தேவைப்படுற பஞ்சகவ்யானு நிறைய பொருட்கள் இருக்கு. எல்லாம் அதி உன்னதமான பொருட்கள். எந்த பக்கவிளைவும் இல்லை. இதையெல்லாம் செஞ்சு விக்கமுடியுமான்னு கேக்கலாம். அந்த தயக்கமும் இயலாமையும்தான் நம்ம பிரச்னையே. முதல்ல களத்துல இறங்கணும். தாராளமா வீட்டில இருந்தபடியே தயாரிச்சு விக்கலாம். நல்ல பொருளுக்கு எப்பவுமே நல்ல மார்க்கெட் இருக்கும். தயாரிக்க முடியாதவங்க கோமயத்தையும் சாணத்தையும் விக்கலாம். ஒரு நாட்டு மாடு ஒரு நாளைக்கு 4 லிட்டர் கோமயம் தரும். ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கம், 1 லிட்டர் நாட்டுமாட்டுக் கோமயத்தை 35 டாலருக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யிது. லிட்டர் 200 ரூபாய்னு வச்சாக்கூட கணிசமான லாபம் இருக்கு’’ என வியப்பூட்டுகிறார் சண்முகம். 

‘‘கிராமங்கள்ல ஏகப்பட்ட செல்வங்கள் புதைஞ்சு கிடக்கு. ஆனா அதை எப்படி சந்தைப்படுத்துறதுன்னு மக்களுக்குத் தெரியலே. ஒரு பொருளை அப்படியே விக்கிறதை விட, மதிப்பூட்டி வித்தா அதிக லாபம் கிடைக்கும். நாட்டு மாடுகளும் அப்படித்தான். நான், கோமய அரக்கு, குளியல் சோப்பு, பற்பொடி, சாம்பிராணி, கொசுவர்த்தி, திருநீறுன்னு 7 பொருட்களைத் தயாரிக்கிறேன். 53 பொருட்களையும் தயாரிக்கிறதுதான் என்னோட இலக்கு’’ என்கிற சண்முகம், நாட்டு மாடுகளை எங்கேயிருந்தாலும் வந்து வாங்கிக் கொள்கிறார். சாணம், கோமயத்தை வைத்து பொருட்கள் தயாரிப்பது பற்றிய பயிற்சியையும், தருகிறார். (தொடர்புக்கு: 09865877168.) மாடு மேய்ப்பதை அவமானகரமாகக் கருதும் தமிழ் சமூகத்துக்கு பாடமாக மாறியிருக்கிறார் இந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர்.



No comments:

Post a Comment



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக