புதன், 8 ஜூலை, 2020

ஆசீவகம் பற்றி அறிமுகம் விரிவான கட்டுரை மதம்


aathi1956 <aathi1956@gmail.com> 21 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:32
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>



ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும்
தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களிலேயே ஐகாரமும் ஔகாரமும் தனிச் சிறப்புடையன. எழுத்துப் பாலியலில் பெண் எழுத்துக்களாகக் கருதப்படும் இவையே ஊழ்க மெய்யியலில் (யோகம்) முதன்மையான இடத்தைப் பெற்றவை. தமிழின் பிற எழுத்துக்கள் மொழிக்கு இலக்கணம் கூறும்காலை, இவ்வெழுத்துக்கள் மெய்யியலுக்கு இலக்கணம் கூற வல்லவை.
இவற்றுள் ஐகாரம் என்பது சூரிய, சந்திர கலைகளின் இயைபினாற் தோன்றும் சுழுமுனை என்னும் கலையினையும், நாடிகளில் சேட்டுமம் என்னும் நாடியையும் குறிக்கும். ஐயம் என்னும் சொல் சேட்டுமத்தைக் குறிப்பதாகும்.
ஐயம் > ஐ+ய்+அம்
ஐ – பகுதி
ய் – உடம்படுமெய்
அம் – விகுதி
ஐயம் என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாம். இரு பொருளின் மயக்குத் தோற்றமாம் நிலையினை ‘ஐயம்’ (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாம்.
இந்த ஐய நிலை கைவரப் பெற்ற ஊழ்க மெய்யியலில் முதிர்ந்தோரையே ஐயன் எனவும் ஐயனார் எனவும் வழங்கும் வழக்கம் தோன்றியது.
ஐயன் > ஐ+ய்+அன்
ஐ – பகுதி
ய் – உடம்படுமெய்
அன் – ஒருமை ஆண்பால் விகுதி
இவ்வாறு ஊழ்க மெய்யியலில் இறுதி நிலை கைவரப் பெற்ற ஆசீவகத் துறவிகளே ஐயனார் எனும் சிறப்புத் தகுதி நிலையினால் தமிழர்களால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர். நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட ஐயா எனும் விளி குறிப்பதாயிற்று.
இவ்வாறு பல்லாற்றானும் சிறந்த நிலையில் போற்றத் தக்க கருத்துகளைத் தம் நூலில் வழங்கிய காரணத்தாலேயே திருவள்ளுவரைக் கூட அண்மைக் காலத்தில் ஐயன் திருவள்ளுவர் என வழங்கும் வழக்கு தோன்றியது.
இந்த ஐகாரம் எனும் எழுத்திற்கான பிறப்பிலக்கணத்தினைத் தொல்காப்பியர் உட்பட இலக்கண ஆசிரியர் பலரும் வரையறை செய்துள்ளனர். இவ்வெழுத்தொன்றும் தமிழுக்கோ, அல்லது தமிழ் மொழியினைப் போற்றி வளர்த்த ஆசீவகத் துறவிகளுக்கோ புதிதன்று.
ஐ எனும் எழுத்தின் வரி வடிவினை நோக்குங்கால் இரண்டு யகரங்கள் ஒன்றுடன் ஒன்று உள் நோக்கிப் புணர்ந்த நிலையினைக் குறிக்கும்.
தமிழில் உயிரெழுத்துக்களின் வரிவடிவங்கள் யாவும் வட்ட வடிவத்துடனேயே தொடங்கும் எனும் ஆசீவக மரபின் கருத்துக் கொப்ப ஐகாரத்தின் மேற்பகுதியில் உள்ள யகரம் ஒரு வட்டச் சுழியுடன் தொடங்கப்படுகிறது.
இந்த யகரம் ஆசீவகத்திற்கும் பின்னாளில் தமிழகத்தில் பரவிய சிவனியத்தில் கூட ‘நமசிவய’ எனும் மந்திரத்தில் விண்ணைக் குறிக்கும் எழுத்தாகவும், உயிரைக் குறிக்கும் இடுகுறியாகவும் காட்டப் பெறுகிறது.
யகரம் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் இணைக்கப் பெறுவதே ஐகாரத்தினைத் தோற்றுவிக்கும் வரிவடிவாம். இந்த யகரம் இருபகுதியிலும் (மேலும் கீழும்) வெளி நோக்கியவாறு எழுதினால் ஆசீவகக் குறியீடான இருபுற முத்தலைக்கோல் தோன்றும். இரண்டையும் ஒரு சிறு கோட்டால் இணைத்து இக்குறியினைப் பெறலாம். ஆசீவகர்களின் முதுமக்கள் தாழிகளிலும் இக்குறியீட்டினைக் கண்ட ஆய்வாளர்கள் யகரம் உயிரைக் குறிக்கும் எழுத்தாகையால் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் உள்ள யகரம் உயிர் பிறப்பதனையும் இறப்பதனையும் (அல்லது உயிர் ஒடுங்குதலையும்) குறிக்கும் குறியீடே இது எனக் கண்டுரைத்தனர்.
இவ்வளவு சிறப்புக்குரிய ஐகாரமும் அதன் இரு (மேல், கீழ்) பகுதிகளாய் இயங்கும் யகரமும் பிரிக்க இயலாதன. இந்த ஐகாரம் பயின்று வரும் தமிழிக் கல்வெட்டுகளில் கூட யகரத் தொடர்புடனே எழுதப் பட்டுள்ள வழக்கினைக் காணலாம். ஐகாரத்தின் சிறப்பினையும் அதன் மெய்யியல் தொடர்பினையும் விவரிக்க இக்கட்டுரை எழுதப் படவில்லை என்பதனால் இத்துடன் நிறுத்திக் கொண்டு செய்திக்கு வருவோம்.
இத்தகு ஐகாரத்தினை ஒழித்துக் கட்ட அதிகம் படித்த பலதும் ஆதிக்கம் செலுத்தும் சிலதும் முயல்வதாகத் தெரிகிறது. இதன் பின்னூற்றை ஆயுங்கால், ஒரு இனத்தினைச் சிதைக்க வேண்டுமாயின் அவ்வினத்தின் மொழியினைச் சிதைக்க வேண்டும் என்பது செயலாக்கச் சிந்தனையின் அடிப்படையாகும். எனவே, தமிழினத்தினை அழிக்க-அதன் தனிச்சிறப்பினையுடைய மொழியினை அழிக்க-வடுக வல்லாதிக்க வழிகாட்டியும் நிறுவனருமான ஈரோடு வெங்காய மண்டி இராமசாமி நாயக்கர் எனும் ஒருவரால் தொடங்கப் பட்ட இந்த அழிவு வேலைக்கு ‘எழுத்துச் சீர்திருத்தம்’ என்று பெயர். இவரது கருத்துப்படி ஐகாரம் ‘அய்’காரமாகக் குறிக்கப்படும். ஐகாரம் தனது இரண்டு மாத்திரைக்கான வரிவடிவினை இழந்து ஒன்றரை மாத்திரைக்கான வரிவடிவமாகச் சிதைக்கப்படுவதாகும். இந்த எழுத்துச் சீர்திருத்தத்தினை முன்மொழிந்த இவர் தமிழறிவோ அல்லது இலக்கண அறிவோ துளியும் இல்லாதவர் என்பது நாடறிந்ததே.
பெரிய சுவர் ஒன்றினை முழுதுமாக அழிக்க வேண்டுமாயின் ஆங்காங்கு ஒரு சில செங்கற்களைப் பிடுங்கினால் போதும். நாளடைவில் அந்த சுவரும் அந்த சுவரினால் அடைக்கப்பட்ட கட்டடமும் சிதைந்து அழியும் என்ற அடிப்படையில் தமிழ் மொழியினை வேரறுக்கத் துணிந்த வடுக வல்லடியினரின் வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டிய செயல் இது என்பது வெள்ளிடை மலை.
ஈ.வெ.இரா. எந்த நாளிலும் தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவர் அல்லர். மாறாக காட்டுமிராண்டி மொழியென்றே கூறிவந்தார். தமிழர் தம் அடையாளத்தினை வலுக்கட்டாயமாகத் தொலைக்கச் செய்து திராவிட அடையாளத்தினை தமிழர்கள் மீது திணித்தவர் அவர். அத்தகு அரசியலால்தான் தமிழரல்லாத இனங்கள் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆளும் அவலம் ஏற்பட்டது.
இக்கருத்தினை ஒருசில சான்றோர் அவ்வப்போது முன் வைத்த போதெல்லாம், திராவிட மாயைக்கு ஆளாகிப் போய்விட்ட திராவிடத் தமிழர்களும் வாக்கு வணிகர்களும் உண்மைக்குப் புறம்பாய் மழுப்பியும் மயக்கியும் தமது வல்லாதிக்கத்தினை வழிமொழிந்து வருகின்றனர்.
மதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரிய பெரியோரை ஐ என்று குறிக்கும் வழக்கு சங்க காலம் தொட்டே இருந்து வந்துள்ளதனை பொய்யா மொழிப் புலவராம் திருவள்ளுவரும் தமது 771ஆம் திருக்குறளில் நெடுமொழி வஞ்சியில் பாடியுள்ளார். திருவள்ளுவரை ஐயன் திருவள்ளுவர் என்று வழங்கும் இந்த அரசு திருவள்ளுவராலும் முதுபெரும் மொழி ஆர்வலர்களாலும் போற்றப்படும் ஐகாரத்தினை காப்பதன் மூலமாக மட்டுமே திருவள்ளுவரையும் அவர்தம் அறிவு மரபினையும் ஆன்றோர் வளர்த்த தமிழையும் உண்மையில் மதிப்பதாகக் கருதப்படும் என அறிக.
தமிழர்களை திராவிட மாயைக்கு ஆளாக்கித் தமிழரல்லாத இனங்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்குவதற்கான பல்வகை சூழ்ச்சிகளில் ஒன்றாகவே இந்த மொழிச்சிதைவு எழுத்துச் சீர்திருத்தம் இருப்பதனை தமிழர் உணர்ந்து கொண்டு இந்த ஐகாரம் மட்டுமன்றி ஏனைய எழுத்து வடிவங்களையும் காக்க முனைவோம் என்ற அறைகூவலுடன் முடிக்கின்றோம்.
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்திற்காக,
நன்றியுடன் விடைபெறும்
ஆதி. சங்கரன்
கோரக்கர் அறிவர் பள்ளி
https://aaseevagam.wordpress.com/category/ஆய்வு/


ஆதித் தமிழர் மெய்யியல் – ஆதி. சங்கரன்
ஆதித் தமிழர் மெய்யியல்
ஆதி. சங்கரன்
முதன்முதலாக உலக மாந்தர்க்கு –
மாந்தத் தொகுதிகட்கு – அறிவியல்,
மெய்யியல் மற்றும் வாழ்வியல்
கருத்துக்களைத் தகுந்த தருக்க
நெறிகளோடு படைத்து வழங்கிய
முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத்
தமிழனே என்பதற்குப் பலவகைச்
சான்றுகளும் மேற்கோள்களும்
இருப்பினும் அவற்றைச் சரியான
முன்வைப்பு முறையில் தெளிவு
படுத்த வேண்டியது நமது
கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின்
மெய்யியல் கோட்பாடுகளையும்,
அவை வழங்கி வந்த பல்வேறு
நிலத்திணையிலிருந்து இன்று
அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி
பற்றியும், குமுகத்தில் இன்று அக்
கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல்
நிலை குறித்தும் குமுகத்தின்
பார்வையில் இப்பழம் பெரும்
மெய்யியல் அறிவு இன்றைக்கு
எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது
பற்றியும், இன்றைய நிலையில்
அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு
மற்றும் சமயப் போர்வைகள்
குறித்தும் பண்டைய செய்திகளைத்
தற்போதைய நடைமுறையுடன்
சுட்டிக் காட்ட வேண்டிய
பொறுப்பும் நமதேயாம்.
பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து
மெய்யியல் கோட்பாடுகளை நாம்
பின்வரும் பகுப்புக்களில்
எடுத்துரைக்கலாம்.
1. இடத்திணையின் அடிப்படையில்
முன்வைத்தல்.
2. மெய்யியல் படிநிலைகளின்
அடிப்படையில் முன்வைத்தல்.
3. மருவிய வழக்கு முறையில்
அயன்மைத் தோற்றம் பெற்றவை.
என்ற மூவகை முன்வைப்பில்
காண்போம்.
முதலாவதாக,
இடத்திணையின் அடிப்படையில்
பார்க்கின்ற போது தமிழர் தாம்
வாழ்ந்த நிலத்தினைக் குறிஞ்சி
முதல் பாலையீறாக ஐவகையாகப்
பகுத்தனர்.
குறிஞ்சியில் முருகன்
தெய்வமாகவும்,
முல்லையில் திருமால்
தெய்வமாகவும்
மருதத்தில் இந்திரன் தெய்வமாகவும்
நெய்தலில் வருணன் தெய்வமாகவும்
பாலையில் கொற்றவை
தேய்வமாகவும்
கருப்பொருள் இலக்கணம் கண்டனர்.
இன்றைக்குச் செம்மையாகப்
பரவியிருக்கும் சிவனியமும், இந்து
என்ற சமயமும் பண்டைத் தமிழ்
இலக்கியங்களுள் யாண்டும் காணப்
பெறாத ஒன்று.
குறிஞ்சி நிலத் தெய்வமாகக்
கருதப்பட்ட முருகனுக்கு, இரண்டு
மனைவியரும், வினாயகர் போன்ற
உடன் பிறந்தோரும் இருந்ததாக சங்க
இலக்கியச் சான்றுகள் எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை.
கௌமார சமயம் எனும் நிலைக்கு
முருக வழிபாடு வந்த பின் பிற்கால
நாடக ஆசிரியர்களின்
புலமையாலும், திரைத்துறையின்
பக்தித் திரைப்படங்களாலும்
குறிஞ்சி நில முருகனின்
பொதுவான வடிவம் காண்போர்
மயங்கும் வண்ணம் இவ்வாறு
திரிக்கப் பட்டுள்ளது.
முல்லை நிலத்தின் திருமாலும்
இரண்டு மனைவியர்களுடன்தான்
பிற்காலத்தில் மாற்றம் செய்யப்
பட்டார். ஆழ்வார்களும்,
சமயாசிரியர்களும் (திருமாலை
உயர்த்திப் பேசுவதாக நினைத்து)
அவர் செய்த்தாகப் பல்வேறு பாலியல்
குற்றச்சாட்டுக்களை அவர் மீது
சுமத்தியதில் சங்க
இலக்கியங்களுக்கு எந்தப் பங்கும்
இல்லை என்பதனை இதன் மூலம்
வெளிப்படுத்த விரும்புகிறோம்.
அடுத்ததாக, மருத நிலத்தின்
இந்திரன் ஆசீவகச் சமயத்தின்
ஒருபடிநிலைத் தெய்வம் (அதனைப்
பின்னர்க் காண்போம்.) ஆனால் அந்த
இலக்கியச் சான்று கொண்ட மருத
நிலத் தெய்வத்தைக் கூடப் பின்னர்
வந்த வந்தேறிக் கட்டுக் கதைகள்
இழிவு செய்தன. அவரது உடல்
முழுக்கவும் பாலுறுப்பு
முளைத்ததாகக் கூறி நமது தமிழ்த்
தெய்வத்தினை வஞ்சித்து ஏசியது,
ஒரு காலத்தின் கொடுமை.
நெய்தல் நிலத்து வருணனோ ஒரு
துணைத் தெய்வமாகப் படியிறக்கம்
செய்யப்பட்டு திசைமக்கள் எண்மரில்
ஒருவனாக முதன்மை யிழந்து
போகச் செய்தனர்.
பாலை நிலத்துக் கொற்றவை நமது
முன்னோர்களின் தாய்த் தெய்வ
வழிபாட்டிற்கு மூல வடிவமானவள்.
ஆனால் அவளை அடங்காப் பிடாரி
என்றும், தீமையே செய்யும்
இரக்கமற்றவள் என்றும் வைதீக
வந்தேறிக் கதைகள் உருவகப்
படுத்தின. இவ்வாறாக
இடத்திணையின் பிரிவாக நாம்
காணும் ஐவகை நிலத்தின்
தெய்வங்களையும் வைதீக
வல்லடியாளர்கள் சிறுமைப் படுத்தி
இழித்துக் காட்டியுள்ளனர். இவற்றை
அப்படியே நாம் நம்பி ஏற்றுக்
கொள்ளும் இழிநிலைக்கு
நம்மையும் கொண்டு வந்து,
அவ்வாறு அறிவிலியாக ஏற்றுக்
கொண்டவர்களுக்கு ‘இந்துக்கள்’
என்றொரு புதுச்சொல் ஒன்றை நம்
தலைமீது சுமத்தினர்.
ஒரு சமயம் என்று சொன்னால் அது
தோன்றிய இடம், பல்வேறு
மாற்றங்களுடன் அது வளர்ந்த நிலை,
அதன் பதிவுகள், சமூக
அடையாளங்கள் இன்னோரன்ன
பிறவும் தான் அது ஒரு சமயம்
என்பதனை வரையறுக்கும். ஆனால்
இந்த இந்து என்கிற சமயத்துக்கு
ஏதேனும் தோற்ற இடமும், காலமும்
உண்டா? இதனைப் பின்பற்றிய மாந்தத்
தொகுதியினர் யார் என்ற விவரமும்
உண்டா? கூற முடியாது.
இவ்வாறு தமிழ் இலக்கியங்களில்
கூறப்பட்ட தெய்வங்களைப் பாலியல்
குற்றவாளிகளாக உருவகப்
படுத்தும் வல்லடிச் சமயமே இந்து
என்ற சமயம். இதன் மூலம் தமிழனின்
தொன்மங்களைக் கொச்சைப்
படுத்தினர். நமது விழுமியங்களைத்
தின்றே வைதீகம் வளர்ந்தது. (அது
மட்டுமின்றிச் சமய மறுப்பாளர்கள்
கூடத் தாங்கள் விரும்பா விட்டாலும்
ஏதோ ஒரு சமயப் பகுப்புக்குட்
படுத்தப் படுகின்றனர். தான் தனக்கு
விரும்பிய கருத்துக்கொப்பத் தனது
சமயத்தினைத் தேர்ந்தெடுக்கும்
அறிவு உரிமையும் சமய
விடுதலையும் நமக்கு இன்றளவில்
வழங்கப் படாமையையே அது
காட்டுகிறது.)
நாம் ஒரு பெரிய அறிவியல் மரபில்
வந்த பண்பாளர்கள். எனவே, வைதீக
வந்தேறிகளின் பொய்க்கதைகளை
நமது தருக்க அறிவு ஏற்றுக்
கொள்வதில்லை. இந்த இக்கட்டான
சூழலில் நமது தொன்மையான
மெய்யியல் கூறுகளை வந்தேறிச்
சமயங்கள் விழுங்கி விட்டன அல்லது
இருட்டடிப்புச் செய்தன. இத்தகு
கையறு நிலையில் மெய்யியல்
தருக்க முறைகளும் மறைந்தன.
இத்தகையதோர் அறிவு மயக்க
நிலையில் வைதீகத்தோடு
தங்களைச் சமாதானப் படுத்திக்
கொண்டு போக முடியாத
பகுத்தறிவாளர்கள் மெய்யியலையே
புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்
பட்டனர். இப்படி
இறைமறுப்பாளர்களானவர்கள் கூடப்
பழைய பண்பாட்டுக் கூறுகளுக்குப்
புறம்பாக ஒருபோதும்
நடப்பதில்லை, ஒழுக்கக் கேடுகளை
ஆதரிப்பதில்லை என்பதிலிருந்தே
நமது பண்பு நேர்மையினை
வைதீகர்கள் ஒத்துக் கொண்டேயாக
வேண்டும். மெய்யியலை
ஆதரிப்போர் இறைவன் பெயரால்
நல்லன செய்க என்பதும், நமது இறை
மறுப்பாளர்கள் கடவுள் பெயரால்
அல்லன செய்யற்க என்பதும் ஒரே
கருத்தின் மறுதலை வடிவமே.
இதிலிருந்தே நாம் மெய்யியலில்
எந்த நிலையினை ஏற்றுக்
கொண்டாலும் ஒரே சால்பினராக
இருக்கிறோம் என்பது தெளிவாக
விளங்கும்.
இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள்
கீழ்மைப் படுத்தப் பட்டதில்
வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான
சிவனியத்திற்குப் பெரும்
பங்குண்டு. பாலை நிலத்
தெய்வமான கொற்றவை
சிவனுக்குப் பெண்டாகவும்,
குறிஞ்சி நிலத் தெய்வமான
முருகன் சிவனுக்குப் பிறந்தவன்
என்றும், முல்லை நிலத் தெய்வமான
திருமாலைச் சிவனுக்கு அளியன்
என்றும், மருத நிலத் தெய்வமான
இந்திரன் சிவனின் தயவால் இந்திர
உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல்
நிலத் தெய்வமான வருணன் சிவனது
ஏவலாளாக மழை பொழியும்
வேலையைச் செய்பவன் என்றும்
இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த்
தெய்வங்களைக் கொச்சைப்
படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின்
ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர்
கொல்லா நோன்பினர்,
அவர்களையெல்லாம் அனல்வாதம்
என்ற பெயரால் சுண்ணாம்புக்
காளவாயிலிட்டு எரித்தும்,
புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக்
கட்டிக் கடலில் எறிந்தும்,
ஆட்சியாளர்களின் துணையோடு
கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம்
விழுமிய மெய்யியலை அழித்ததில்
சிவனியமே முதலிடம் பெற்றது.
ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன்
குழியும் பறித்தது போன்று
தமிழர்களின் தனிப்பெரும் சமயம்
சிவனியமே என்றதோர்
மாயையையும் ஏற்படுத்தியது.
அண்மைக் காலத்திய தமிழ்ச்
சான்றோர் சிலரும் கூடத் தமிழும்
சைவமும் இரண்டு கண்கள் என்றனர்.
அந்த அளவுக்குத் தமிழர்களை
மடையர்களாக்கியது சிவனியமே.
இரண்டாவதாகப் படிநிலை
வளர்ச்சியின் அடிப்படையில்
பார்க்கின்ற போது,
1. அறிவு வளர்ச்சியில் படிநிலைப்
படியும்,
2. மெய்யியல் வளர்ச்சியில்
படிநிலையிலும்
இருவகைப் பகுப்புகளில் ஆதித்
தமிழரின் மெய்யியலை ஆய்வோம்.
முதலாவதாக அறிவு வளர்ச்சிப்
படிநிலையில் துவக்கக் காலத்தில்
தாய்த் தெய்வ வழிபாடும்
குறிப்பிடத் தக்கது. தாயாரம்மாள்
என்று பெயர் வைக்கும் முறையும்
அண்மைக் காலம் வரையில்
தொடர்ந்தது. “சப்த மாதாக்கள்” என்று
கன்னியர் எழுவரின் வழிபாட்டு
வழக்கம் இன்னமும் சில
குடிகளிடையே உண்டு. ஏழு
கன்னியரில் ஒருவரான அம்பிகா
எனும் அம்பிகையே சமணத்தின்
இயக்கியருள் ஒருவர். அம்பிகா எனும்
அம்பிகையே பின்னாளில் சிவனியக்
கலப்பில் சக்தி வழிபாட்டில் தனிப்
பெரும் தெய்வமாக சிவனின்
மனைவியாக மாற்றம் பெற்றாள்.
பழங்குடிகளுள் ஒரு பிரிவினரான
இருளர் இன மக்கள் இன்னமும்
கன்னியர் வழிபாடு செய்து
வருகின்றனர். அவர்களிடையே ‘யட்சினி’ எனும் பெண் தெய்வம்
குறிசொல்லும் வழிபாடும் உண்டு.
இந்த யட்சினி எனும் தெய்வத்தின்
பெயரால் இன்றும் பலர் குறி
சொல்கின்றனர். இந்த யட்சினி யார்
என்று பார்ப்போம்.
கணி நந்தாசிரியனுக்கு இயக்கன்
என்றொரு பெயரும் உண்டு. மொழி
முதல் வாரா எழுத்துக்களின் முன்
எழுதப்படும் ‘இ’கரம் ஒலி பெறாது.
எனவே இராமன் என எழுதி ராமன் என
ஒலிப்பது போல் அவ்வழக்கிலேயே
இயக்கன் ‘யக்கன்’ என ஒலிக்கப்படும்
வழக்காயிற்று. ‘தக்கன்’ எனும் பெயர் ‘தட்சன்’ என மருவியது போல் யக்கன்
எனும் பெயர் ‘யட்சன்’ என மருவியது.
இந்த யட்சன், பிரம்மயட்சன் எனும்
பெயர்கள் சமணத்தை விழுங்கிய
சைனத்தில் இன்றும் உண்டு. யட்சன்
என்பதற்கு இணையான பெண்பால்
பெயர் ‘யட்சினி’யாகத் தருவிக்கப்
பட்டது.
இதல்லாமலும் சிற்சில விடங்களில்
தாய்த் தெய்வ வழிபாடு மூதாள்
வழிபாடு என்ற பெயரில் இன்று
வரை தொடர்வதைப் பல ஊர்களில்
நேரில் கண்டு வருகிறோம். மூதாள்
என்ற சொல் தாய்த் தெய்வத்தின்
அன்பினையும்,
முதன்மையினையும் பகரும்
சொல்லாகும். இருளாயி,
கருப்பாயி போன்ற தாய்த் தெய்வ
வழிபாடும் எண்ணத் தக்கது. சாக்தம்
என்ற சக்தி வழிபாடு செல்வாக்குப்
பெற்றபின் பழைய தாய்த் தெய்வ
வழிபாடு தனது முதன்மையினை
யிழந்தது. இன்றும் கூடப் பல
ஊர்களில் அம்மன் திருவிழாக்கள்
முடிந்த மறுநாளில் ஒரு
களிமண்ணாலானதோர் பெண்
உருவச் சிலையினை வைத்துப்
பலவாறாக ஏசியும் திட்டியும்
கொண்டுபோய் நீரில் கரைத்தழிப்பர்.
இதனை ‘மாதங்கி ஏசுதல்’ என்றும்
அந்தச் சிலைக்கு மாதங்கி என்றும்
பெயர் சொல்கின்றனர். இந்த மாதங்கி
என்ற சொல் ஆசீவக மெய்யியலில்
சிறப்பு பெற்ற பெண் தெய்வத்தின்
பெயராகும். திருநிலைகளிலும்
கால்காசுகளிலும் இருக்கும் பெண்
உருவமே இந்த மாதங்கியாகும்.
பழைய ஆசீவக வழிபாட்டு மரபு
செல்வாக்கிழந்து சக்தி வழிபாடு
செல்வாக்குப் பெற்றதனையே
இந்நிகழ்வு காட்டுகிறது. இத்தகு
வழிபாடுகள் பெரும்பாலும்
இலக்கியங்களில் பதிக்கப்
பெறாதவை.
அடுத்ததாக மெய்யியலின் வளர்ச்சிப்
படிநிலையில் காணும் போது
பழந்தமிழரின் மெய்யியலில் ஆசீவக
மரபே பெரிதும் முதன்மை
பெறுகிறது.
எந்த ஒரு அறிந்த
செய்தியிலிருந்தும் அறியாமல்
உள்ள விடையை அறியலாம். அதற்கு
ஈவு என்று பெயர். ஈவு என்பது
வகுத்தும் பகுத்தும் பெறப்படும்
விடையாம். கணக்கியலில்
மட்டுமின்றி இயங்கியலில் உள்ள
அனைத்துத் திணை, துறை,
பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும்
நமக்குத் தெளிய வேண்டியவற்றைப்
பகுத்தும் வகுத்தும் நாம் காணும்
விடை ஈவு ஆகும்.
பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப்
பாகுபாடுகள் இன்னதென்று
அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர்
வெள்ளந்தியாக வாழ்ந்த
காலத்திலும், அவனது உடலியல்,
மருத்துவம், உழவு, தொழில்,
வானியல் போன்றவற்றில் பல்வேறு
ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன.
தன்னை விடவும் படிப்பறிவிலோ,
பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை
அடையாளம் கண்டு அணுகிடப்
போதுமான செய்திப்
பரிமாற்றங்களும் ஏந்துகளும்
இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான
ஈவு பெறுவது?
அவனுக்கும் அன்று ஈவு
கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது.
அதுவே ஆசீவகத் துறவிகளின்
கற்படுக்கை. அங்குச் சென்று
தனக்குத் தேவையான ஈவுகளைப்
பெற்றதால் அத் துறவிகளின்
கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப்
பெயர் பெற்றது. (உணவு தருமிடம்
உணவகம் எனவும், மழிக்குமிடம்
மழிப்பகம் எனவும் வழங்குதல்
போன்று.) இதற்காக கைம்மாறு
எதுவும் கருதாமல் எவ்வகைப்
பிழையுமின்றிச் செம்மையாக ஈவு
தந்ததால் ஆசு+ஈவகம் எனச்
சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு
கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது
போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக்
கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த
துறவிகள் ஆசீவகத் துறவிகள்
எனவும் பெயரிடப் பெற்றுச்
சிறப்புற்றனர்.
ஆசு+ஈவு+அகம்
ஆசு – பிழையற்ற செம்மையான
தோல்வியேற்படுத்தாத கேட்ட
போதே தங்கு தடையின்றி
மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வு
அகம் – தருமிடம் என்பதே
ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின்
வாழிடத்திற்கான பெயரேயாம்.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு
நன்னெறிகளைப் போதித்து
அவர்களை வழி நடத்தினர்.
ஆசீவகத் துறவிகளின் வாழிடங்கள்
பெரும்பாலும் கற்குகைகளே. இந்தத்
துறவிகளின் துறவு வாழ்க்கையில்
அறுவகையான நிறக் கோட்பாடு
பின்பற்றப் பட்டது.
துவக்க நிலையில்
இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச்
சீருடையும் படிப்படியாக
மெய்யியலில் முன்னேறும்
போதெல்லாம் வேறு வேறு வண்ணச்
சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக
அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள
துறவு மாணவர்களை அவர்தம்
சீருடையின் வண்ணத்தைக் கொண்டே
அவரது மெய்யியல் படிநிலையினை
அறிந்து கொள்ளலாம்.
இதில் முதலாவதாக
வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு
வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண
உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு
நிலையில் உள்ளவராகக் கூறப்
படுவர். இந்த நிலை மெய்யியலின்
துவக்க நிலையாகும். இந்த
நிலையில் உள்ளவர்களுக்கு
உணவுப் பழக்கங்களிலும், துறவறப்
பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல்
இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க
நிலை. கரும் பிறப்பு நிலையைக்
கடந்த பின் அதாவது அடிப்படை
ஒழுக்கங்களையும் துவக்க நிலைப்
பயிற்சிகளையும் செம்மையாகக்
கற்றபின் கருநீல வண்ண உடையால்
அடையாளப் படுத்தப் படுவர். அதன்
பின்னர் அடுத்த படிநிலைக்கு
உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண
உடையால் அவர் அடையாளப் படுத்தப்
படுவார்.
இவ்வாறு ஆறு படிநிலைகளை
ஒருவர் கடந்த பிறகே இறுதி
நிலையான நல்வெள்ளை நிலைக்கு
அவர் சென்று வீடுபேறடைவார்.
இவ்வாறு அறுவகை நிலையிலும்,
ஒவ்வொரு வண்ணத்திலும்
மூவகைப்பட்ட படிநிலைகள்
அதாவது 6 x 3 மொத்தம் 18
படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே
அவர் வீடடைய முடியும் என்பது
வரைவு.
ஆசீவக மெய்யியலை அறிய முற்படு
முன் ஒருசில:
1. ஏற்கெனவே ஆசீவகம் பற்றி
ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள
கருத்துக்கள் யாவும் ஆசீவக
எதிர்ப்பணியினராலும் பின்னர் வந்த
வைதீக நஞ்சினாலும் இழித்துக்
கூறப்பட்டு அவரவர் நூல்களில்
பதிவு செய்யப்பட்ட மாற்றார்
கூற்றுக்களே என்பதனை நாம்
நினைவில் கொள்ள வேண்டும்.
2. ஆசீவகத்தின் தோற்றம், காலம்
போன்றவற்றில் மயக்கம் ஏற்படக்
காரணம் வார்த்தைப் புரட்டும்,
வரலாற்றுப் புரட்டுமே.
வார்த்தைப் புரட்டு
ஆசீவகத்தை அறிவு வழியிலும்,
அறிவியல் வழியிலும் நேர் கொள்ள
இயலாத வைதீகச் சார்பு மற்றும்
ஆசீவக எதிரணியினரால் ஆசீவக
அடிப்படைக் கூறுகள் குறித்துத்
தவறான பொருள் தரும்படிச்
சொற்கள் திரிவாக்கம் செய்யப்பட்டன.
எடுத்துக்காட்டாக ஊழ் என்பதற்கு
ஆசீவகம் கூறும் பொருள் ‘இயற்கை
நிகழ்வு’ என்பதே. அணுக்களின்
புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின்
துணையினால்) ஏற்படும் இயற்கை
மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல்
குறிக்கும். (இவ்வூழ் பற்றிப்
பின்னர்க் காணலாம்.)
ஆனால் எதிரணியினரோ ஆசீவகம்
கூறும் ‘ஊழ்’ என்ற சொல்லுக்குப் பல
பிறவிகளாகத் தொடர்ந்து வரும்
பாவம், புண்ணியம் ஆகியவற்றின்
தொகுப்பு எனத் திரித்துப் பொருள்
கூறினர்.
இந்தப் பொருள் முரண்பாட்டால்
ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாட்டின்
அடிப்படையே தகர்ந்து போகிறது.
அமணர் என்பது ஆசீவக மெய்யியலின்
அடிப்படையில் அமைந்த தமிழ்ச்
சொல்.
அமணர் = அம் + அணம் + அர்
அம் – ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி
மேலேறும் போது மேல்நோக்கி
மேலண்ணத்தைக் கடக்கும் போது
அம்மெனும் ஒலியை எழுப்பும்
என்பது ஊழ்கக் கருத்து.
அணம் – ஊழ்கியின் மேலண்ணம் (அண்ணம் – அணம் என நின்றது.)
அர் – பலர்பால் சிறப்பு விகுதி
அம்மெனும் ஒலியைக் கொண்ட
ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை
உடையவர் எனும் பொருள் கொண்ட
இச்சொல், அம்மணம் எனும்
ஆடையின்மைக் குறிக்கும்
சொல்லின் திரிவாக அம்மணர் எனச்
சுட்டப் பட்டதும் வழுவே.
(அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப்
பயிற்சி உடையவர் எனும்
பொருள்படும் அண்ணர் எனும்
சொல்லும் இதன் அடிப்படையில்
எழுந்ததே. ஈற்றுப் போலியாக
அண்ணல் எனவும் மருவி இத்தகு
அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு
அண்ணர் மலை, அண்ணல் மங்கலம்
எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு
இன்று திருவண்ணாமலை,
அண்ணமங்கலம் எனும் பெயர்களால்
வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப்
பள்ளிகளின் எச்சங்கள் காணக்
கிடக்கின்றன.)
அது போன்றே சூத்திரர் என்ற
சொல்லும் தவறாகவே பொருள்
சுட்டப் பட்டது. யாதெனில் எல்லாத்
துறைகளிலும் எவ்வகைச்
சிக்கல்களுக்கும் விடை காணும்
நுட்பமான வழிமுறைகள் சூத்திரம்
என வழங்கப்படும். இதன்
அடிப்படையிலேயே இலக்கண
நூற்பாக்களும் கணக்கியல்
வழிமுறைகளும் சூத்திரம் என்ற
சொல்லால் வழங்கப்படுவது
நடைமுறையில் உள்ள ஒன்று. இந்த
சூத்திர முறைகளை அறிந்தவர்
எனும் பொருள் படும் சூத்திரர் என்ற
சொல்லுக்கு இழிவானவர் என்ற
பொருள் கற்பிக்கப் பட்டு
தாழ்த்தப்பட்டனர். இந்த சூத்திரம் என்ற
சொல் சூழ்ச்சி எனும் சொல்லின்
வேரிலிருந்து சூழ் + திறம் > சூழ் +
திரம் > சூழ்த்திரம் > சூத்திரம் என
வருவிக்கப்பட்ட சொல்லாகும்.
சூழ் > விடையைச் சூழ்தல்.
பல்லாற்றானும் பட்டறிவாலும்
தருக்க அறிவினாலும் விடையைச்
சூழ்தல்.
திரம் > அவ்வாறு விடைகாணும்
ஆற்றல். திறம் > திரம். மயங்கொலிப்
பிழையால் வந்த மயக்கு வழூஉ.
அது போலவே, சமணம் வேறு; சைனம்
வேறு. சமணம் ஆசீவக மரபில்
கிளைத்தது. மூன்று நல்வெள்ளை
நிலையினரால் நெறியாளப்பட்டது.
அவர்களில் மூன்றாமவரான
மற்கலியும், மகாவீரருமே
ஒன்றாயிருந்தனர். அந்த நேரத்தில்
மகாவீரருக்கும் மற்கலிக்குமிடையே
ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால்
இருவரும் பிரிய நேர்ந்தது. தாய்
மரபான ஆசீவகத்தில் உலகாய்தம்,
பொருளியல், மாந்த வாழ்வியல்
போன்றவற்றிற்கான
கருத்துகளுக்கு இடம் உண்டு.
அதாவது குமுகத்தைப்
புறக்கணித்துத் துறவி கூட வாழ
இயலாது என்ற கருத்து
ஆசீவகத்தினுடையது.
உழவினார் கைம்மடங்கின் இல்லை
விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
எனும் திருக்குறளும் இங்கு
எண்ணத் தகும்.
மாறாக மகாவீரரோ துறவிக்கு
உலகியல் பற்றிய சிந்தனை
இருந்தால் துறவும் கை கூடாது
என்பதில் உறுதியாக இருந்தார்.
துறவிகள் இல்லறத்தாருக்கு
வழிகாட்டும் பொறுப்பாளர்களாக
இருப்பதனை அவர் விரும்பவில்லை.
துறவற ஒழுக்கக் கூறுகள் மட்டுமே
தமக்குப் போதும் என்பது அவர்
கருத்து. இக் கருத்து வேறுபாட்டால்
ஆசீவக சமணத்தை விட்டு சைன
சமயத்தை உருவாக்கினார்.
மூன்று ஐயனார்களைத் தவிர
நல்வெள்ளை நிலையை
அடைந்ததாக தமிழ் அறிவர்களால்
யாரும் சுட்டப்படவில்லை. பின்னர் 23
திருத்தங்கரர் வரிசை கற்பிக்கப்
பட்டதில் இன்றளவும் நமக்கு
உடன்பாடில்லை. அது குறித்த
ஆய்வுகள் தொடர வேண்டும் என்பதே
நமது வேண்டுகோள். சைனம் தனது
மரபுக்கு வலிமை சேர்க்க ஆசீவக
ஐயனார்களைச் சேர்த்துக் கொண்டதா
என்பதே நம் ஐயம். ஒரு வேளை
திருத்தங்கரர் மரபினை ஒரு
வாதத்திற்காக ஏற்றுக்
கொண்டாலும், மகாவீரர் தனக்கெனத்
தனிச் சமயத்தை உருவாக்கிய பின்,
அவருக்கு முன்பிருந்த
திருத்தங்கரர்கள் 23 பேரும் சைனர்கள்
என்று எப்படிக் கூற முடியும்?
எள்ளுப் பேரனுக்குப் பிறந்த
கொள்ளுப் பாட்டன் என்பது
போலிருக்கிறதல்லவா இந்த வாதம்?
சைனம் சமணத்திலிருந்து 23
திருதங்கரத் தலைமுறைகள்
பிற்பட்டுத் தோன்றியது. எனவே இந்த 23 திருத்தங்கரர்களுக்கும் முரண்பட்ட
சமயமே சைனம் என்பது தெளிவு.
இந்த சைனம் பழைய கள்ளைத்
திருடிப் புதிய மொந்தையில்
வைத்த கதையாக சமணம் – சைனம்
எனும் இரு சமயமும் ஒன்று என்பதான
ஒரு மாயையை ஏற்படுத்தி, இன்று
அந்தச் சமயத்தைப் பின்பற்றுவோர்
கூடத் தாங்கள் சமணரா அன்றிச்
சைனரா என்று கேட்டால் விழி
பிதுங்கும் நிலையில் உள்ளனர்.
இந்த வார்த்தைப் புரட்டுகளுக்கும்
மேலானதோர் வரலாற்றுப் புரட்டும்
உண்டு. அதுதான் ஆசீவகத்தின்
தோற்றக்காலம் பற்றிய கருத்து. 23
திருத்தங்கரர்களுக்கு அடுத்து வந்த
மற்கலி மகாவீரரின் பிரிவுக்குப்
பின் சமணத்தை ஆசீவகக்
கருத்துகளின்று பிறழாமல் ஒரு
சமய வரைவிற்குக் கொண்டு வந்தார்.
ஆனால் அவருக்கு முன்பே 23
திருத்தங்கரத் தலைமுற்களும்,
அதற்கும் முன்பே குமுக மரபு
கொண்டதுமான ஆசீவகத்தை
மற்கலிதான் உருவாக்கினார் என்பது
தவறு என்று, சிந்தித்துப் பார்த்தால்
விளங்கும். ஆசீவகத்தின் தோற்ற
வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளி,
அந்தப் பழைய வரலாற்றை மகாவீரரின்
சைனத்திற்கு சேர்த்து விடும்
வரலாற்றுப் பிழையே இது என்பது
தெளிவு.
3. வைதீகம்
வினைக்கோட்பாட்டையும், ஆசீவகம்
வினைமறுப்புக் கோட்பாட்டையும்
அடிப்படையாகக் கொண்டவை. இந்தக்
கருத்தில் இன்றளவும் ஆசீவகம்
நீர்த்துப் போகவில்லை. ஆனால்
ஆசீவகர்கள் வினைக் கோட்பாட்டின்
உடன்பாட்டாளர்கள் என்பதான வீண்
புரளியும் உண்டு.
ஆசீவகத்தின் நிறக்கோட்பாட்டை
மக்கள் தவறுதலாகப் புரிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காகவே
வைதீகம் வருணக் கோட்பாட்டைக்
கொண்டு வந்தது. நிறம் என்பது
வர்ணம் (வண்ணம்). எனவே வர்ணக்
கோட்பாடு ஆசீவகத்தில் உண்டு
என்று பேசியது. உண்மையில்
ஆசீவகத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட
பயிற்சியாளர் மேல்நிலை யடையும்
வரை அறுவகை நிறத்தால்
குறிக்கப்பட்டனர். அது அவர்களின்
படிநிலை வளர்ச்சியைக் குறிப்பதே
ஒழிய வேறில்லை. இன்றைய பள்ளிக்
கூடங்களில் ஒரே பள்ளியில் பத்தாம்
வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண
உடையும் பதினோராம் வகுப்பு
மாணவர்க்கு ஒரு வண்ண உடையும்
விதிக்கப் படுவது போல ஒரு
ஆசீவகப் பள்ளியில் உறையும்
புதியவர், இயல் மாந்தர் போன்றோர்
அங்குள்ளோரை வகைப் படுத்தி
அடையாளங் காணவே இந்த நிறக்
கோட்பாடு. மேலும் அவரவர் தகுதி
நிலையினை அறியவும் இந்த நிறக்
கோட்பாடு பயன்பட்டது. (இந்த அறிவர்
மரபினால் உலகுக்கு அளிக்கப்பட்ட
தற்காப்புக் கலையான கராத்தே
பயிற்சியில் கச்சை அளிப்பதில்
இன்னமும் இந்த நிறக் கோட்பாடு
பின்பற்றப் படுவது கண்கூடு.
ஆனால் நிறங்கள் மட்டும் திரிவாக்கம்
பெற்றுள்ளன.) ஆனால் வைதீகமோ
ஆடையின் சிறப்பு
தெரியாதவர்களால் உருவாக்கப்
பட்டதாகையால் மக்களின் தோலின்
நிறத்தையே வகைப்படுத்திப்
பிறக்கும் போதே பாகுபாடு
செய்தனர்.
மேற்கூறிய குழப்பங்களைத் தள்ளி
வைத்து விட்டு ஆசீவகத்தைப்
பார்த்தால் மட்டுமே அது
யானையாகத் தெரியும். இன்றேல்
அது வெறுங் கல்லாகவே தெரியும்.
ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற
பின்னரே இல்லறத்திற்குச் செல்லும்
வழக்கமிருந்தது. வாழ்வியல்
சிக்கல்களுக்கு விடைதேடி
அலைவதினை இது குறைக்கும்
என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட
உழைத்தே உண்ண வேண்டும் என்பது
ஆசீவகப் பொருளியல். வைதீகமோ
பக்தன் ஆழ்வார், ஆச்சாரியர்களுக்குப்
பணிவிடை செய்து படையலும்
போட்டுக் கைகட்டி நிற்க வேண்டும்
என்கிறது. நெய்யும், பருப்புமாகச்
சாப்பிட்டு விட்டு உழைக்காமல்
உட்கார்ந்திருந்தால் அவனது
சிந்தனை மெய்யியலை நோக்கியா
போகும்? மெய்யுடல் சார்ந்தல்லவா
போகும்.
ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால்
வகைப்படுத்தப் பட்டனர். இந்த
வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை,
செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப்
பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை
அடிப்படையாகக் கொண்டது. இந்த
ஆறு நிறங்களாவன:
1. கருமை & சாம்பல் – துவக்க நிலை
2. நீலம் – இரண்டாம் நிலை
3. பசுமை – மூன்றாம் நிலை
4. செம்மை – நான்காம் நிலை
5. மஞ்சள் – ஐந்தாம் நிலை
6. வெள்ளை – இறுதி நிலை
இந்த அறுவகை வண்ணத்திலும்
மும்மூன்று படிநிலைகள் உண்டு.
அவை:
1. துவக்க நிலை – இது வண்ண
ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த
வண்ணத்திற்குரிய
ஒழுக்கங்களையும் கடமைகளையும்
அறியத் துவங்கும் புகுநிலை
மாணாக்கர் முதல்
படிநிலையிலிருப்பவர்.
2. இடைநிலை – இது வண்ண
ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும்
செயல்படுத்தி முறைப்படுத்தி
ஒழுகினாலும் ஐயந்தெளியா
நிலையில் உள்ள மாணவர்கள்.
3. கடைநிலை – இது வண்ண
ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும்
செவ்வனே தேர்ந்து அடுத்த
நிறத்திற்கு உயர்வு பெறத்
தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற
உணர்ந்தவர்.
ஒரே நிறத்தில் இந்த மூன்று
படிநிலைகளையும் உணர்த்த
படிநிலை உயர உயர நிறத்தின்
அழுத்தம் குறைக்கப்படும்.
1. கரும்பிறப்பில் 1. கருமை முதல்
படி
2. கருமை இரண்டாம் படி
3. சாம்பல் மூன்றாம் படி
2. நீலப் பிறப்பில் 1. கருநீலம் முதல் படி
2. நீலம் இரண்டாம் படி
3. வான்நிறம் மூன்றாம் படி
3. பசும் பிறப்பில் 1. அடர்பச்சை முதல்
படி
2. பச்சை இரண்டாம் படி
3. வெளிர்பச்சை மூன்றாம் படி
4. செம்பிறப்பில் 1. செம்மை முதல்
படி
2. இளம்சிவப்பு இரண்டாம் படி
3. காவி மூன்றாம் படி
5. மஞ்சள் பிறப்பில் 1. அடர் மஞ்சள் முதல்
படி
2. இளமஞ்சள் இரண்டாம் படி
3. பொன்மை மூன்றாம் படி
6. வெண்பிறப்பில் வெண்மை
மூன்று படிகளிலும்.
இவற்றைக் கடந்த பிறகே (மேலே
கூறப்பட்ட 18 படிகளையும்)
நல்வெள்ளை எனும் நிறமிலி
நிலையினை அடைவர் என்பதே
நிறக்கோட்பாடு. அதாவது
கருமையிலிருந்து நல்வெள்ளை
நிலை வரையிலும் தகுதி உயர உயர
நிறத்தின் அடர்வு குறைவதனைக்
காணலாம். அதாவது
பயிற்சியாளரின் குறைகளும்
குறையும். அவரது அறிவைச்
சூழ்ந்துள்ள மாசு
குறைவதனையே (அறியாமை
இருள் நீங்குவதனை) இந்த நிற
வேறுபாடு குறிக்கும்.
படிநிலை உயர உயர நிறம்
குறையும். இதுவே ஊழ்கப்
பயிற்சியிலும் 18 படிநிலைகளைக்
கடந்த ஐயனாரை அடைவது எனும்
கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே
தற்போது ஐயப்ப வழிபாட்டால்
தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால்
செய்யும் ஐயனார் வழிபாட்டில்
தற்போது சரியான குருமார்களின்
வழிகாட்டல் இன்மையால், பிறழ
நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.
இந்த வழிபாடு செய்ய மாலை
அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள்
செல்வர். இதில் முதல்
மூன்றாண்டுகளும் கருப்பு
உடையினையும், அடுத்த
மூன்றாண்டுகளில் நீல
உடையினையும், அடுத்த
மூன்றாண்டில் பச்சை
உடையினையும், அடுத்த
மூன்றாண்டுகளில் சிவப்பு
உடையினையும் அதற்கடுத்த
மூன்றாண்டுகளில் மஞ்சள்
உடையினையும் இறுதி
மூன்றாண்டில் ஒளிர் வெண்மை
உடையினையும் அணிந்து
நோன்பிருப்பர். 18ஆம்
ஆண்டிறுதியில் தென்னை வைத்து
நோன்பு முடிப்பர். இது ஆசீவக
மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய
ஒரு வழிபாடேயாகும். இதில்
இறுதியில் கூறப்படும் தென்னை
வைத்தல் எனும் நிகழ்வு
தேங்காயின் உட்பருப்பு
நல்வெள்ளை எனும் கருத்துப் படவே
கையாளப் படுகிறது.
நல்வெள்ளை எனும் இறுதி நிலை
நிறமிலி எனும் நிலையினைக்
குறிக்கும். கருமையில் பிறவி
துவங்கி அறியாமை இருளுடன்
வாழ்வைத் துவங்கும் ஆசீவக
மாணவன் தனது பயிற்சியினாலும்
ஒழுக்கத்தினாலும் அறுநிறப்
பதினெண் படி கடந்து நிறமிலி
நிலையினை அடைவதே ‘வீடடைதல்’
எனப்படும். அப்படி ஒளியடைதலே
ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த
அறிவு மரபில் வந்த அறிவர்களுள்
ஒருவரான வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும்
இந்த நல்வெண்மை நிலையையே.
இந்த நிலையினை வீடடைதல் என்று
சொன்னால், வைதீகம் கூறும்
சொர்க்கம், நரகம் போன்றே ஆசீவகமும்
கூறுகிறதோ எனும் ஐயம்
எழக்கூடும். இந்த வீடடைதல் என்பது
வைதீகர்களின் சொர்க்கப்
புரட்டிலிருந்து எவ்வாறு
வேறுபட்டு உயர்ந்து நிற்கிறது
என்பதனை விளக்க ஊழ்கத்தை
விளக்குவோம். ஊழ்கம் (யோகம்)
எனும் சொல் ‘ஊழ்’ எனும்
சொல்லினைக் கொண்டு
கிளர்த்தலால் ஆசீவகம் கூறும்
ஊழினை முதற்கண் விளக்குவாம்.
உழு எனும் சொல்லினடியாக ஊழ்
எனும் சொல் கிளைத்தது. ‘விழு’
என்பது ‘வீழ்’ என வந்தது காண்க. ‘உழு’
என்ற சொல் உழுதல் (நிலத்தை) எனும்
செயலைக் குறிக்கும்.
நிலத்தை உழுகின்ற போது ‘மண்’
எனும் பூதம் ‘நீர்’ எனும் பூதத்துடன்
சேர்க்கப்பட்டு கதிரவன் ஒளிவெப்பம்
எனும் ‘தீ’ பூதத்தின் முன்னிலையில் ‘வளி’ எனும் பூதம் மண்ணின்
கண்ணறைகளில்
சேமிக்கப்படுவதைக் குறிக்கும்.
இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்பட்டே
பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது.
உயிர்வளி சேமிக்கப்படும் போது
மண் கண்ணறைகளில் உள்ள நீர் எனும்
பூதம் தீ எனும் (கதிரவன் ஒளி)
பூதத்தால் ஆவியாக்கப்பட்டு, அந்த
வெற்றிடத்தில் வளி
சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிர்வளி
சேமிக்கப்படுதல் உழு எனும்
சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த
உழு, ஊழ் எனும் சொல்லின்
அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும்
பயிற்சி மாந்த உடலின் (நுண்ணிய)
கண்ணறைகள் தோறும் உயிர்வளி
சேமிக்கப் பயன்படுகிறது. இந்த
உயிர்வளியினை அதிகம் பெறும்
இயற்கைச் சூழல் அமைந்த
சோலைகளிலும், மலைக்
குகைகளிலுமே பெரும்பாலும்
ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.
இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு
இயற்கையில் நிகழும் அணுவியல்
மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே
ஆசீவக விளக்கமாகும். இயற்கை
நிகழ்வுகளின் ஒழுங்கமைவு
என்பது விதிப்படியே நிகழும்
ஆதலால் அணுவியம் பற்றியும்
இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பூதங்களில் ‘வெளி’ என்பது
இடத்திணையாதலால் இது ஆசீவகக்
கோட்பாடுகளில் தெரிநிலை
பூதமாகக் கருதப் படவில்லை. (நிலம்,
நீர் வளி ஆகியவற்றுக்கு காட்சி
அளவையும் நிறை அளவையும்
உண்டு. தீக்கு காட்சி அளவை மட்டும்
உண்டு. வெளிக்கு காட்சி
அளவையும் நிறை அளவையும்
இல்லை. எனவே இது தெரிநிலை
பூதமாகக் கருதப்படவில்லை. ஆனால்
மண், நீர், தீ, வளி ஆகியவை
தெரிநிலை பூதமாகக்
கருதப்படுகின்றன. இவற்றை ஆசீவகம்
பின்வருமாறு வரிசைப்
படுத்துகிறது.
1. மூலஅணு
2. விளைவணு
மூல அணு என்பது வளியணுவாம்.
இவ்வளியணுக்கள் வெவ்வேறு
விழுக்காடுகளில் தமக்குள்
புணர்ந்து நிலவணுவையும்
நீரணுவையும் விளைவிக்க வல்லன.
எனவே வளியணு மூலவணுவாகக்
கருதப் படுகிறது. நீரணுக்களையும்,
நிலவணுக்களையும்
வளியணுக்களாலப் பகுக்க இயலும்.
ஆனால் வளியணுக்களைப் பகுக்க
இயலாது. இவ்வளியணுவே ஏனைய
பூதங்களுக்கு அடிப்படை அலகாய்
அமைதலின் இது ‘இயக்கணு’ எனவும்
வழங்கப்படும். ஆசீவக அணுவியம்
மூலவணுவை அழிக்க முடியாது
என்கிறது.
விளைவணு
நீரணுவும், நிலவணுவும்
வளியணுக்களின் வெவ்வேறு
விழுக்காட்டுச் சேர்க்கையினால்
விளைவன. எனவே இவை ‘இயங்கணு’
எனவும் மூல அணுவால்
விளைவிக்கப் படுதலின் ‘விளைவணு’ எனவும் வழங்கப்படும்.
நீரணு, நிலவணு, வளியணு
ஆகியவை அவ்வப் பூதங்களுக்கு
அடிப்படை அலகாம். ஆனால் ‘தீ’
என்கின்ற பூதமோ அணுவிலாப்
பூதம் என்று வழங்கப்படும். ‘தீ’ என்பது
மூல அணுக்களிலிருந்து
விளைவணுவை உருவாக்கவும்,
மீண்டும் விளைவணுவிலிருந்து
மூல அணுவைப் பகுக்கவும்
பயன்படும் ஆற்றலேயன்றி அதற்கு
அடிப்படை அணுக்கள் கிடையாது.
ஆனால் ஏனைய மூன்று
பூதங்களிலும் உள்ளுறைந்து
நிற்றலால் ‘தீ’ உள்ளுறைப் பூதம் என
வழங்கப் பெறும். அணுவிய
நிகழ்வுகள் (புணர்தலும் பிரிதலும்)
வெப்பத்தின் முன்னலையில் மட்டுமே
நிகழும். வெப்பமின்றி அணுவிய
நிகழ்வுகள் நடப்பதில்லை. இரு
அணுக்கள் புணர்தல் நிகழும்
போதுள்ள வெப்ப ஈர்ப்பு அந்த
அணுக்கள் பகுக்கப் படும் போது
வெளிப்படும். அவ்வாறே இரு
அணுக்கள் புணரும் போது வெப்பம்
வெளிப்பட்டால் அவை பகுபடும்
போது அதே அளவு வெப்பம் ஏற்றுக்
கொள்ளப்படும்.
வெப்பம் ஏற்றுக் கொள்ளுதலும்,
உமிழப்படுவதுமாகிய வெப்ப
விளைவு, நிகழ்வுகளின்
நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கும்.
பிற நேரங்களில் வெப்பம் இயல் நிலை
அளவிலேயே இருக்கும். ஏனைய
மூன்றணுக்களுக்கும் (நில, நீர், வளி)
பரும அளவு உண்டு. தீ எனும் பூதம்
இம்மூன்றிலும் உள்ளுறைவதால்
தனி அணுவோ பரும அளவோ
கிடையாது. இது ஒரு ஆற்றல்
வெளிப்பாடே. ஆனால் பூதங்களில்
இத்தீயாற்றலும் ஒன்றாகவே
கொள்ளப்படும். மூல அணுவான
வளியணுவுடன் ‘தீ’ சேர்ந்தே ஏனைய
அணுக்களை விளைவிக்கும். ‘தீ’
பூதம் ‘அணுவிலி பூதம்’ எனவும்
வழங்கப்படும்.
நிலவணு படுசீரும் (அ) வீழ்சீரும்
நீரணு பாய்சீரும்
வளியணு கிடைச்சீரும்
தீயாற்றல் மேற்சீரும் கொண்டவை.
சீர்களின் தன்மைக்கேற்ப இயக்கம்
நிகழும்.
ஒரு பொருளில் எந்தப் பூதத்தின்
கூறு அதிகமாக உள்ளதோ அந்த
பூதத்தின் சீரிலேயே இயக்கம்
நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட
பூதியம் குறிப்பிடத் தக்க அளவில்
இருப்பின் அவற்றின்
தொகுபயனுக்கேற்ப சீர் விளைவும்
இயக்கமுமிருக்கும்.
பால் தன்மைக்கேற்பப் பொருட்களின்
வடிவமையும். களிமண், சேறு,
பானை, ஓடு போன்றவை ஒரே
பொருளின் பல்வேறு பால்
தன்மையால் வந்த புற வேற்றுமை
வடிவங்களே.
பொருட்களின் அணுவியல்
செயல்பாடுகள் ஊழ் எனவும், இது
நிகழத் தற்செயல் கூறுபாடுகள்
முதன்மைக் காரணிகள் எனவும்,
இந்நிகழ்வு இவ்வாறுதான் நிகழ
முடியும் என்பதே நியதி என்றும்,
இதில் பாவம், புண்ணியம் மற்றும்
இவற்றுக்குக் காரணம் என்று
எதனையும் கற்பித்து
மயங்காதிருத்தலே வினைமறுப்பு
எனவும், மாற்றம் என்பது ஒன்றே
மாறாதது எனவும், பொருளியல்
சார்ந்த உழைப்பில் யாருக்கும்
தனிப்பட்ட விலக்குமில்லை எனவும்
ஆசீவகம் வலியுறுத்தும்.
இத்தகு ஆசீவகம் ஏன் வீடுபேற்றை
வலியுறுத்தியது? அப்படியானால்
வீடடையாதவர்களின் நிலை பற்றி
ஆசீவகம் என்ன நிலைப்பாடு
கொள்கிறது? வீடு
பேறடையாதவர்கள் மறு
பிறவிக்குள்ளாவார்கள் என்று
ஆசீவகம் நம்புகிறதா? என்பன போன்ற
கேள்விகளுக்கு விடையாவது
யாதெனில் மாந்த உடலின் பிணி,
மூப்பு, சாக்காடு எனும்
இழவூழ்களை வெல்லவும் உடலின்
பயனாய ஊழ்கத்தின் உயர்
நிலையினை அடையவுமே
அவ்வாறு நல்வெள்ளை
நிலையினை அடைவது சிறப்பு.
அடையாவிடினும் அந்நிலை
அடையும் வரை மீண்டும் மீண்டும்
பிறப்போமென்றோ அதனால்
பெருங்கேடு விளையுமென்றோ
ஆசீவகம் கூறவில்லை.
ஊழ்கமும் மெய்யியலும்
ஊழ்கம் செய்வதற்கு ஆசீவகத்
துறவிகள் தனிப்பள்ளிகள்,
நிலாப்பாறை, வானியல் ஆய்வுப்
பாறைகள் எனப் பல்வேறிடங்களைத்
தம் பள்ளி வளாகங்களில்
கொண்டிருந்தனர். இவை யாவும்
உயிர்வளி மிக்க செறிவுடன்
விளங்கும் இடங்களே. ஊழ்கத்தின்
மூலம் உயிர்வளியினைத் தங்கள்
உடலிற்றேக்கி வைத்து தனது
உடலணுக்களைச் செம்மைப் படுத்தி
விழுமிய ஆற்றல் நிலைகளை
ஏற்படுத்தினர். இதன் மூலம்
உடலணுக்களில் வளிநிலை மூல
அணுக்களின் தேக்கத்தினைக்
கூட்டிப் பிறவணுக்களின்
இயக்கங்களையும் நிகழ்வுகளையும்
சுருக்கி இறுதியில் ஒளியுடல்
பெறுவதே (நல்வெள்ளை)
ஊழ்கத்தின் நோக்கமாகும். இவ்வாறு
ஒளியடைந்தவர்களுக்கு உலகியலில்
ஏற்படும் புறத் தொல்லைகள்
இருக்காது. மேலும் வாழ்வியல்
மெய்ப்பாட்டின் இறுதி
நிலையாகவும் இருக்கும். ஆசீவகம்
கோரும் நிலைப்பாடும் அதுவே
யாகும். மறுபிறவியை ஆசீவகம்
பேசவில்லை.
ஊழ்கமும் உடலும்
உடலின் அணுக்களிடையே
உயிர்வளியினைத் தேக்கி வைத்து
ஒளியுடல் பெறும் நுட்பத்தினைப்
பின்வருமாறு அறிவர்கள்
பயிற்சியின் வாயிலாகப் பெறுவர்.
வளியோட்டத்தினை உடலுக்குட்
செலுத்த இரண்டு நாசிப்
புழைகளுள்ளன. இவற்றின்
வழியாகக் காற்றினை நாம்
உள்வாங்கி வெளியிடுகிறோம்
என்பது யாவருமறிந்ததே. ஆனால்
உட்செல்லும் காற்றும்,
வெளியேறும் காற்றும் எந்தப் புழை
வழியாகச் சென்று எந்தப் புழை
வழியாக வெளியேறுகிறது
என்பதனை உற்று நோக்க வேண்டும்.
வலப்புழையில் காற்று
கூடுதலாகவும், இடப்புழையில்
குறைவாகவும் இயக்கம்
நிகழுமாயின் இது வலநாடியாகப்
பிங்கலை நாடி என்றும், ஆண்நாடி
என்றும், சூரிய கலை என்றும்
சொல்லப்படும். இடப்புழையில்
இயக்கம் அதிகமிருப்பின் இடகலை
என்றும், பெண்நாடி என்றும், சந்திர
கலை என்றும் வழங்கப்படும். இரு
புழைகளிலும் சம இயக்கம் நிகழின்
இதனைச் சூழுமுனை என்றும்
அலிநாடி என்றும் அக்கினி நாடி
என்றும் சொல்லப்படும். இவை
முறையே கதிர், மதி, சுடர் என
வழங்கப்படும்.
இடகலை நாடி வாதமென்றும்
பிங்கலை நாடி பித்தமென்றும்
சூழுமுனை நாடி ஐயமென்றும்
சொல்லப்படும்.
வாதநாடி பயிற்சிக்கும்
வளர்ச்சிக்கும்
பித்தநாடி போட்டிக்கும்
வெல்வதற்கும்
ஐயநாடி உலகியனீங்கிய ஊழ்க
மெய்யியலுக்கும்
சிறப்பானவை. வாதத்திலும்
பித்தத்திலும் சிதறியோடும்
மூச்சினை ஐயத்தில் நிற்க வைத்து
உடலின் மாசுக்களை நீக்கி ஐயத்தில்
நிறுத்தி மெய்யூழ்கம் பெறும்
பயிற்சியே ஊழ்கப் பயிற்சியாகும்.
இந்த மூச்சோட்டத்தினை
முறைப்படுத்த ஆசீவகர்களின்
கற்படுக்கைகள் பல்வேறு
சாய்வுகளில் அமைக்கப்பட்டிருப்பது
நல்ல ஏந்தாகும். எந்தப்புறம் உடல்
எடையினால் அழுத்தப்படுகிறதோ
அதன் எதிர்ப்புறத்திலுள்ள
புழையில் மூச்சோட்டம் நிகழும்.
நாளடைவில் ஐய நாடியில் நின்று
ஊழ்கப் பயிற்சி கைவரப் பெற்றவர்
பல்வேறு ஆற்றல்கள் கைவரப்
பெறுவர். மெய்யியல் படிநிலை
வளர்ச்சியும் கூடும். அவ்வாறு
ஐயநிலை கைவரப் பெற்றவர்களே
ஐயன் என்றும், ஆர் என்னும் சிறப்பு
விகுதி சேர்த்து ஐயனார் என்றும்
வழங்கப் பெறுவர்.
இயல்பாகவே மாந்த உடலில் எந்தக்
கால் மடக்கப்பட்டு அழுத்தப்
பெறுகிறதோ அதற்கு எதிர்ப்புறம்
உள்ள புழையில் மூச்சோட்டம்
நிகழும். காலுடன் உள்ள
தொடர்பாலேயே மூச்சோட்டம் கால்
ஓட்டம் என்றும், மூச்சினைக் கால்
என்று சிறப்பு இடுகுறியாகவும்
வழங்கப்படுகிறது. இதனைக்
குறிக்கவே ஐயனார் (ஐயப்பன்) உருவச்
சிலைகளில் இருகாலையும்
சமப்படுத்தி ஒரு கட்டுப்
போடப்பட்டிருக்கும். இது இரு
மூச்சும் சமமான ஐய நிலை என்று
குறிப்பால் உணர்த்தவே. அன்றி
இடக்காலையோ வலக்காலையோ
தனியாகக் கட்டுப் போட்டுக்
கட்டினால் எதிர்ப்புழையில்
மூச்சோட்டம் செல்லும் நிலை
என்றறிய வேண்டும்.
சிலர் ‘என்னைக் காலைக் கட்டும்
வரை நான் இதற்கு உடன் படேன்
என்று சொல்வர்’. அப்படியாயின்
தனது மூச்சு நிற்கும் வரை
அல்லது மரணம் நேரும் வரை உடன்
படேன் என்பதாகும்.
மயங்கினாரினின்று இறந்தாரைப்
பிரித்தறிய இறந்தாரின்
இருகாலையும் சேர்த்துக்
கட்டியிருக்கும். இதற்கு நாடிக் கட்டு
என ஆசீவகம் குறிக்கும். அவனது
நாடி அதாவது மூச்சு நிறுத்திக்
கட்டப்பட்டு விட்டது என்பதே அதன்
பொருள். அதன் பிறகே
இறந்தாருக்கான ஒன்பது கடன்கள்
செய்யப்படும். அவ்வாறு உயிர்
பிரிந்த உடலுக்கும் ஊழ்கத்திலுள்ள
உடலுக்கும் உள்ள வேறுபாடுகள்
எளிய மாந்தர்க்குத் தெரியாது.
உயிரடக்கம் என்பது வேறு; மரணம்
என்பது வேறு. இதனைப்
பிரித்தறியச் சில நுட்பமான
வழிமுறைகள் உண்டு. ஆனால் இயல்
மாந்தர்க்கு இது கடினம். இழவூழ்
குறைந்து ஆகூழ் மிஞ்சினால்
உயிர்ப்பு அடங்கிய உடலில் மீண்டும்
இயக்கம் ஏற்பட வழியுண்டு.
ஒருவேளை அவ்வாறு இயக்கம்
ஏற்படுமானால் அந்த உடல்
சிதையாமல் காப்பாற்றப்பட்டு
வந்தால்தான் மீண்டும் உயிருடன் எழ
முடியும். மேலும் ஆகூழ்
கூடுவதற்காக அந்த உடல் சில
வகைகளில் பாதுகாக்கப்படும். (ஆசீவக மரபின் ஆசு மருத்துவத்தில்
உயிர் அடக்கமும், உயிர் மரணமும்
பற்றிப் பல்வேறு விந்தையான
உண்மைகள் கூறப்பட்டுள்ளன.)
உடல் அழுகாமல் ஆகூழ்
கூடுவதற்காகப் பின்வரும்
வகையான கடன்கள் செய்யப்
படுகின்றன. இறந்தவரின் உடலின்
இரு பாதியும் (வலம், இடம்) ஒன்றை
யொத்ததாகவே மறுபாதியும்
கிடத்தப்படும்.
1. வாயில் பாலூற்றுதல்.
2. அழுக்கு நீங்க நீரால் கழுவுதல்.
3. உள்ளங்காலுக்கு அருகில் (வெம்மையைக் கூட்ட) தீச்சட்டி
வைத்தல்
4. நெய்த்திரிகளை எரியூட்டி சூழ
நின்று பிடித்தலால்
புறவெப்பத்தினைச் சீர்செய்தல். (கரிவளி உமிழாதிருக்கவே
நெய்த்திரி)
5. நல்லெண்ணையினைத் தாழியில்
ஊற்றி அதற்குள் உடலை வைத்து
வெப்பச் சம நிலையினைப்
பாதுகாத்தல் (நல்லெண்ணெயின் தன்
வெப்பம் மாந்த உடலுக்கு ஆகூழ்
தரும் என்பதாலேயே வாரம் ஒரு
முறை நல்லெண்ணெய்க் குளியல்
நடைமுறைப் படுத்தப் பட்டது.)
6. தலையில் மருந்து
எண்ணெயினைத் தேய்த்தல். இதில்
ஒவ்வொரு மரபிலும் அதே மரபைச்
சேர்ந்தவர்கள் கமுக்கமான தனித்தனி
மருத்துவ முறைகள்
வைத்திருந்ததனால் அம் மரபைச்
சார்ந்தவர்கள் மட்டுமே இதனைச்
செய்ய அனுமதிக்கப் பட்டனர். (இன்றும்
கூட உயிர் நீத்தாரின் மகன்கள்
மட்டுமே இதனைச் செய்ய உரிமை
உள்ளவர்களாகக் கருதப் படுகின்றனர்.)
7. தீச்சட்டியில் பசுவின் வரட்டியினை
எரித்து மூச்சுக் காற்றில் நெடி
சேர்த்தல்.
8. உடல் வீங்கி அழுகாதிருக்க
புதுத்துணியினால் சுற்றி
வைத்தல்.
9. நீர்க்குடத்தினை சிறு
துளையிட்டு உடலினைச் சுற்றி
நீர்த்துளிகள் சிதறும்படி செய்தல்.
இன்னவற்றுடன் நுண்ணுயிர்ச்
சிதைவினைத் தவிர்க்கும்
பொருட்டுத் துளசி முதலிய
மூலிகைகளும், கருப்பு
வெற்றிலையும் வாயில் வைத்துப்
பொதிதல். இவ்வாறு உடலைப்
பாதுகாத்தல் பாடம் செய்தல்
எனப்படும். ஓலைச்சுவடி போன்றவை
சிதைந்து அழியாமல் இருக்கக்
கரிசாலை, மஞ்சள் முதலியன
கொண்டு பூச்சு செய்வதற்குப்
பாடம் செய்தல் அல்லது பாடம்
போடுதல் என்று பெயர். ஒரு ஆசீவக
ஊழ்கியின் உடலுக்கு அவர் சார்ந்த
ஆசீவகப் பள்ளியினரால் மட்டுமே
இக்கடமைகள் செய்யப்பட வேண்டும்.
அப்பள்ளியின் மாணவர்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப்
பாடம் இடும் நிகழ்ச்சியை ஒரு
பாடத்திருவிழாவாகவே
கொண்டாடுவர்.
ஊழ்கம் செய்யும் போது
துவக்கத்திலேயே ஐய நாடி கைவரப்
பெறாதாகையால் சூரிய, சந்திர
நாடிகளை (கதிர், மதி) சமமாக ஓட்ட
வேண்டும். ஐந்து நாழிகைக்கு ஒரு
முறை கதிரும், மதியும் மாறி நடக்க
வேண்டும். இவ்வாறு ஒரு நாளில்
ஆறு முறை பெண் நாடியும்,
ஆறுமுறை ஆண் நாடியும் ஆகப்
பன்னிரு முறை மாறி நிகழும்.
இதனையே ஒரு நாளில் இலக்கினம்
ஆறு ஆண் இராசி மண்டலத்தையும்,
ஆறு பெண் இராசி மண்டலத்தையும்
மாறிக் கடந்து பன்னிரு
இராசிகளைக் கடந்து வருவதாக
ஆசீவக அறிவியலான கோளியல்
கணியம் சுட்டிக் காட்டும். இந்த ஐந்து
நாழிகைப் போதில் ஒவ்வொரு
இராசியிலும் நிகழும் மூச்சோட்டம்,
நிலப்பூதியத்தில் 11/2
நீர்ப்பூதியத்தில் 11/4
நெருப்புப்பூதியத்தில் 1
வளி பூதியத்தில் 3/4
வெளிபூதியத்தில் 1/௨
ஆக மொத்தம் 5 நாழிகைப் பொழுது
செல்ல வேண்டும். இதனைப்
பயிற்சியால் அறியலாம்.
இந்த ஒழுங்குக்கு உட்பட்டுச்
செய்யப்படும் ஊழ்கம் ஆகூழ்
எனப்படும். அதாவது உடலியலில்
நன்மை தரத்தக்க வளர்ச்சி
நிலைகளைக் காட்டும். இன்றேல்
ஒழுங்கு தப்பின் அது
உடலணுக்களுக்குக் கேடாய்
முடிந்து அணுக்களின்
அழிவுக்குக் காரணமாகும். இந்தக்
கேடு தரும் ஊழ் போகூழ் எனப்படும்.
இதனை இழவூழ் என்றும் கூறுவர்.
இழவூழ் தொடர்ந்து நடக்கின்
உடலழிந்து மரணம் நேரும்.
எனவேதான் மரணம் நடந்த இடத்திற்குச்
செல்வோர் தாம் இழவூழுக்குப்
போவதாகக் கூறுவர். தற்போதைய
வழக்கில் இழவுக்குப் போகிறேன் (இழவூழ் > இழவு) என்கின்றனர்.
ஆகூழும் போகூழும்
சமமாயிருக்கும் நிலைக்கு
அறிவூழ் என்று பெயர். ஆசீவகக்
கணிய அறிவியல்,
ஆகூழை > அமிழ்த ஊழ்கம் என்றும் (அமிர்தயோகம்)
போகூழை > மரண ஊழ்கம் என்றும் (மரணயோகம்)
சம ஊழை > அறிவூழ்கம் என்றும் (சித்தயோகம்)
கூறுகின்றது.
இவை யாவும் ஆசீவக மரபின் ஆசு
கணியர்கள் பின்பற்றும்
நுட்பமென்றறிக. ஐங்கூறில் கிழமை,
உடு, உவா, ஊழ்கம், கருவி செயல்
வகை என்ற ஐந்தும் இடம் பெறும்.
இவ்வாறு ஊழ்க நிலையில் உயர்
நிலையினை அதாவது ஆறு
வண்ணங்களின் 18
படிநிலைகளையும் கடந்து
ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல்
செறிவுற்று ஆகூழ் மிஞ்சி
அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி
யிணைந்து உடலழியா நிலையும்,
ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக
இறுதி இலக்காகக் கருதப்
படுகின்றது. அவ்வாறு இறுதி
நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை
உறுதிப் பொருள்களைக் கடக்க
வேண்டி இருக்கின்றது
அவையாவன:
1. கடைமிடறு
இறுதி நிலையிலுள்ளவர்கள்
நாவரட்சியினை நீக்கும் பொருட்டும்
ஊழ்கம் வெற்றி பெறவும் வேண்டி
அவருடனிருப்போரால் அளிக்கப்
பெறும் இந்த இறுதி நீர்மமே ‘இறுதிப் பானம்’ என்று
சொல்லப்படும் இந்தக் கடை மிடறு.
இந்த ஆசீவக அறிவு மரபினை
உள்வாங்கித் தோன்றிய மாலியத்தில்
கூட இறுதி
நிலையிலுள்ளவர்களுக்குத் துளசி
கலந்த நீர் வாயில் ஊற்றப்படுகிறது.
சிவனியர் வில்வ இலையினைத்
தண்ணீரில் போட்டு இறுதி
நிலையாளரின் வாயில்
ஊற்றுவதும் இதன் தழுவலே. ஆசீவகத்
துறவியர் தம் குகைகளைச்
சுற்றிலும் நத்தைச்சூரி, அருகுபத
மூலி ஆகிய செடிகளை
வைத்திருப்பதும் இந்தத் தேவை
கருதித்தான்.
2. இறுதிப் பாடல்
இறுதி நிலையாளரைச் சுற்றி
யமர்ந்து ஆசீவகர்கள் தம் குரு
மரபினை வாழ்த்தியும் ஊழ்கம்
நல்லபடியாகப் படி கடக்க வேண்டு
மென்றும் வாழ்த்திப் பாடுவது.
தற்போது கூட உயிர்
துடிப்பவர்கருகிருந்து மாலியர்
திவ்வியப் பிரபந்தம் பாடுவதும்,
சிவனியர் தேவாரம், சிவபுராணம்
பாடுவதும் கண்கூடு. இது இறுதி
நிலையாளருக்குப் புத்துணர்வும்
நம்பிக்கையும் ஊட்டும் என்பது
கருத்து.
3. இறுதி ஆடல்
கடைப்படி கடக்க வேண்டி ‘நிருத்தம்’
எனக் குறிக்கும் வகையினை ஒத்த ‘சூரிய நாடி’ ஓடச் செய்யும் ஓர்
நடனம். இது உடலில் வெம்மையைக்
கூட்டி ஊழ்கியின் நாடிச் சவ்வினை
இளக்கி அச்சவ்வினைக் கிழித்து
உயிர்வளி மேலேறப் பயன்படும்.
4. இறுதி வரவேற்பு
ஊழ்கியின் உறுதியையும், பயிற்சி
வளமையையும் கண்டு, ஊழ்கியால்
மதிக்கப் படும் அவரது குரு மரபினர் (ஏற்கெனவே ஒளியுடல் பெற்றவர்கள்)
இவ்வூழ்கியை எதிர் கொண்டு
வரவேற்பர் என்ற நம்பிக்கை. இன்றைய
மெய்யியலார் மலர்ப் பல்லக்கில்
தேவர்கள் எதிர் கொண்டு அழைத்துச்
செல்வர் என்று கூறுவதும் இந்த
நம்பிக்கையின் தழுவலே.
5. காரிருள்
இறுதி நிலையினை அடையுமுன் (தமர் திறக்கு முன்) உயிர் வளியின்
அழுத்தம் கூடக் கூட ஏற்படும் ஒரு
அழுத்த நிலையினால் கடும்
காரிருளும் மேகமும் சூழ்ந்தது
போல் தோன்றுமாம். அப்போது
உறுதியாக ஊழ்கத்தினைத் தொடர
வேண்டும். இதுவே மிகவும்
கடுமையான நிலை என ஊழ்க
மெய்யியல் வரைவு செய்கின்றது.
6. நிறையாவழிகையமிழ்தூற்று
உயிர்வளி மேலழுத்தலால் அண்ணம்
என்று சொல்லப்படும் உள்நாவிற்குப்
பின்புறம் ஒரு சிறு புழை
யானையின் தும்பிக்கை போன்ற
சிறு சவ்வின் முனையில் தோன்றி
ஐய நீரைச் சுரக்கும். இதுவே
ஊழ்கிகள் அமிழ்தம் என்று
சொல்வதாகும். இந்த அமிழ்தம்
இனிப்புச் சுவை உடையதென்றும்
இதனை யுண்டால் உடல் எளிதில்
அழியாதென்றும் உணவோ, நீரோ
அவர்களுக்குத் தேவைப் படாது
என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த
அமிழ்தம் ஊறிக் கொண்டிருக்குமே
ஒழிய எதிலும் வழித்து நிரப்ப
இயலாது. அவ்வளவு
நுண்புழையில் மிகச் சிறிய
ஊறலாக அமையும் இந்த
நிலையடைந்த பின் கவலைகளும்
துன்பங்களும் இல்லை என்பர்.
7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர்
திறப்பு
ஊழ்கம் முற்றுப் பெறும் நிலை இது.
மேலெழுப்பப்பட்ட உயிர்வளி அமிழ்த
ஊற்றைக் கடந்தபின் ஒரு சிறு தமர்
திறக்கும். இது கண்ணின் பின்புறம்
உள்ளதாகக் கூறுவர். அந்தத் தமர்
உடைந்தபின் உயிர்வளியும்
உயிர்ப்பும் தாமரை மலர் போன்ற
இதழினையுடைய உயிர்ப்பெரு
வெளியில் சென்றடையும் என்றும்
இதனால் ஒளியுடல் கிட்டும் என்றும்
இதுவே வீடுபேறு எனவும்
கூறப்படும். இந்தத் தாமரை மலரில் 1008 இதழ்கள் உள்ளதாக ஊழ்க
மெய்யியல் கூறுகிறது.
மலர்மிசை ஏகினான் மாணடி
சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
8. ஐயன் நிலை அடைதல்
இந்த நல்வெள்ளை நிலையினை
அடைந்தவர் ஐயனாராகக்
கருதப்படுவார் என்பது ஆசீவக
மெய்யியல் கோட்பாடு.
முடிவுரை
இவ்வாறு பல்வகைச் சிறப்புக்
கூறுகளைத் தன்னகத்தே கொண்டு
விளங்கிய ஆதித் தமிழரின்
மெய்யியல் பின்னர் வந்த வந்தேறி
சமயங்களால் விழுங்கப்பட்டு
திரிவாக்கம் பெற்று வெவ்வேறு
பெயர்களுடன் உருமாற்றம் பெற்றது.
இன்று ஆதித் தமிழரின் மெய்யியல்
பதித்துள்ள சுவட்டின் தடங்கள்
புழுதி மண்டி மறைந்து
கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து
அறிவு நிலையில் மேம்பட்டு உயர
வழிகாண வேண்டியது ஆய்வாளர்தம்
கடமையும் பொறுப்புமாம்.
https://aaseevagam.wordpress.com/category/1/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக