ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வீரப்பன் எங்க குலசாமி இருளர் பேட்டி விகடன்

aathi1956 aathi1956@gmail.com

புத., 13 ஜூன், 2018, முற்பகல் 10:18
பெறுநர்: நான்
நான் நின்றுகொண்டிருக்கும் இந்த இடத்தில்... ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று முறையோ, இன்னும், இன்னும் பல முறை வீரப்பனின் காலடி பட்டிருக்கக்கூடும். வீரப்பன் இங்கு நின்றிருக்கலாம். உட்கார்ந்திருக்கலாம். உறங்கியிருக்கலாம். சமைத்திருக்கலாம். வேட்டையாடி இருக்கலாம். இது இன்று சத்தியமங்கலம் வனத்தின் ஏதோவோர் இடம். ஆனால், அன்று இது "வீரப்பன் காடு".
கைகளில் ஏகப்பட்ட கீறல்கள். ரத்தம். அடித்த வெயில் பெரும் தகதகப்பைக் கொடுத்தது. வியர்வையும், ரத்தமும் கலந்து அந்தக் கீறல்களில் படர்ந்து பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. நிச்சயம் ஏதாவது நிழலுக்குப் போயாக வேண்டும். அந்த நிழலில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்ச நேரம் குட்டித் தூக்கம் போட்டால் கூட நன்றாக இருக்கும். வழிகாட்டியாக வந்திருந்த ராசு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அண்ணனைப் பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லாமல், தலை நிமிர்த்தி சுற்றியிருந்த மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
Advertisement
"ண்ணோவ்...கொஞ்ச நேரம் எங்கயாவது உட்காருலாம்ண்ணா"
"போலாம் தம்பி... அந்தப் பக்கம் ஒரு சின்ன ஓடை இருக்கு. அங்க போய் உட்கார்லாம் வாங்க" என்று முன்னால் நடக்க ஆரம்பித்தார்.
அது அத்தனை ஆசுவாசமாக இருந்தது. ஓடையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. ஓடும் அளவிற்குக் கூட இல்லை. தண்ணீர் தேங்கித்தான் இருந்தது. ஓடையையொட்டியிருந்த ஒரு மரத்தின் அடியில் "அக்கடா" என போய் விழுந்தேன். இருந்த கொஞ்சம் தண்ணீரைக் குடித்து முடித்தேன். ராசு அண்ணன் உட்காரவில்லை. ஏதோ ஒரு செடியின் இலைகளைப் பிடுங்கி நுகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஓர் இடத்திலேயே அவர் நிற்கவில்லை. அவருக்கு ஓய்வு தேவைப்படவில்லை. அங்குமிங்குமாக நடந்து கொண்டேயிருந்தார். ஓடையையொட்டி நிலம் சேறும், சகதியுமாகச் சொதசொதப்பாக இருந்தது. அங்கு போய் உட்கார்ந்து எதையோ பார்த்தவர்...
"தம்பி இங்க வந்து பாரு... நேத்து ராத்திரி யானை வந்து போயிருக்குது." என்று அவர் சொன்ன நொடி, அத்தனை களைப்பும் மறைந்து போய் பெரும் உற்சாகம் ஆட்கொண்டது. மரத்தடியிலிருந்து துள்ளி எழுந்து, ராசு அண்ணன் இருந்த இடத்திற்கு ஓடினேன். "ஜூராசிக் பார்க்" படத்தில் இது போன்ற ஒரு காட்சியைப் பார்த்ததாக நினைவு. அந்த சேற்றில் யானையின் பெரிய காலடித் தடம் இருந்தது.
Advertisement
"தம்பி அந்த எதிர் கரையில பாரு...அந்த பள்ளத்துல இறங்கும் போது கொஞ்சம் சறுக்கி விட்ருக்கும் அதுக்கு. அந்தத் தடத்த பாரு... சரிஞ்சு போயிருக்கு. யானைங்க எந்த மேட்டுலயும் அசால்ட்டா ஏறிடும். ஆனா, சின்ன எறக்கம்ன்னா கூட பெரும் பாடு பட்ரும். என்னிக்காவது மலை, காட்டுல சுத்தும் போது யானை துரத்துச்சுன்னா, யோசிக்காம ஏதாவது பள்ளத்துப் பக்கமா பார்த்து ஓடிடுங்க. தப்பித் தவறி கூட மேட்டுலயோ, நேரான பாதையிலோ ஓடிராதீங்க. நீங்க நினைக்குற மாதிரி இல்ல, யானையோட உருவத்துக்கும் ஓட்டத்துக்கும் சம்பந்தமே இருக்காது. சட்டுனு வேகமெடுத்திடும். இதோ... இங்க பாரு இது குட்டி யானையோட கால்தடம். நைட்டு நல்லா சாப்புட்டு, இங்க வந்து தண்ணிய குடிச்சிட்டு போயிருக்குதுங்க..." என்று அந்த வெளிச்சமான பகலில், முந்தைய இரவில் நடந்த கதைகளை அப்படியே நம் கண் முன் நிறுத்தினார் ராசு அண்ணன்.
மீண்டும் நடை தொடங்கியது. இப்போது அத்தனை சோர்வு இல்லை. ராசு அண்ணன் அளவாகத்தான் பேசுவார். பெரும்பாலும் காட்டிக்குள் நடக்கும்போது காட்டின் ஓசைகளைக் கேட்பதுதான் ஆகச் சிறந்த இசை அவருக்கு. இருந்தும் அவரை தொந்தரவு செய்தேன்...
"ண்ணா... ஒரு நாள் நடக்கவே இவ்வளவு கஷ்டமா இருக்கே. வீரப்பன்ல்லாம் எப்படித்தான் இங்க அத்தனை வருஷம் இருந்தாருன்னு தெரியிலயே?" என்று கேள்வியாகத்தான் அதைக் கேட்டேன்.
"ம்ம்ம்..." என்று சொன்னவர் பதிலாக ஏதும் சொல்லவில்லை. அமைதியாகவே நடந்தார். நானும். அவரின் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த புடைத்த நரம்புகள் அவரின் வலுவை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது.
சில நிமிடங்கள் கழித்து, ஒரு மலையின் மீது ஏறத் தொடங்கினோம். அவராகவே பேசத் தொடங்கினார்...
"அது இருக்கும் 15, 20 வருசத்துக்கு முன்னாடி தம்பி. நாங்கெல்லாம்
இருளர் பழங்குடி... இருளர் கேள்விப்பட்டிருக்கீங்களா? இங்கதான் இந்த மலையடிவாரத்துல இருக்க காட்டுக்குள்ளத்தான் எங்க கிராமம். அப்போ எனக்கு என்ன ஒரு 25 வயசு இருக்கும். ஊர்க்காரங்க எல்லாம் நிறைய வீரப்பன பத்தி பேசுவாங்க. ரொம்ப மரியாதையாதான் பேசிக்குவாங்க. நமக்கெல்லாம் அவரு மனசுல பெரிய ஹீரோ மாதிரி. என்ன மனுஷன்ய்யா இவரு? இவ்வளவு பெரிய காட்டுக்கே காவச்சாமியா இருக்குறாருன்னு... அவரை பத்தி நினைச்சாலே பெரிய பிரமிப்பா இருக்கும். கூடவே கொஞ்சம் பயமாவும் இருக்கும். பெரும் கோபக்கார மனுசன் வேற." என்று அவர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார். ஆர்வமிகுதியில் இடைமறித்து...
"நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டேன்.
"அன்னிக்கு அப்படித்தான் தம்பி. நாங்க வழக்கமா கழுதைய இழுத்துகிட்டு காட்டுக்குள்ள பலாக்காய் எடுக்கப் போவோம். நான் எங்க பசங்கன்னு, நாங்க ஒரு 6 பேரு... நாலு மூட்டைய நிரப்பிக் கட்டிட்டு, கொஞ்சம் விறகு, சுள்ளி எல்லாம் பொறுக்கிக் கட்டிட்டு கழுதைய ஓட்டி வந்திட்டிருந்தோம். அப்போ ஒரு இடத்துல வரும்போது, மக்கள் சலசலப்பு கொஞ்சம் கேட்டது. எங்களுக்குப் புரிஞ்சிடுச்சு. பயத்துல பசங்க ஆளுக்கு ஒரு பக்கம் பாய்ஞ்சு ஓடுறாங்க. நானும், என் கூட்டாளி ஒருத்தனும் மட்டும் டக்குன்னு என்ன பண்றதுன்னு தெரியாம கழுதைய புடிச்சிட்டு நின்னுட்டிருந்தோம். அதுக்குள்ள அவங்க ஆளுங்க எங்கள சுத்திட்டாங்க..."
இப்போது வெயில் கொஞ்சம் குறைந்திருந்தது. மாலை நெருங்கத் தொடங்கியிருந்தது.
"எனக்கெல்லாம் வெலவெலத்துப் போச்சு. முத ஒரு அஞ்சு பேரு சுத்தினாங்க... பார்த்திட்டே இருக்கோம், அப்படியே அந்தப் பக்கத்துலருந்து அவரு வர்றாப்ல. அந்த நிமிஷத்த இப்ப நினைச்சாலும் என் உடம்பெல்லாம் ஏதோ பண்ணும். அந்த மீசையும், அந்தப் பார்வையும் போதும் தம்பி ஒருத்தன அப்படியே பயந்து நடுங்க வச்சிடும்... நாங்க உயிர் பொழச்சு ஊரு போய் சேருவோமான்னு பயத்துல இருந்தோம். கையில இருந்த துப்பாக்கிய அப்படியே தோள்பட்டையில போட்டுக்கிட்டு எங்கக்கிட்ட வந்தாரு...
'யார்றா நீங்க... எந்த ஊரு? இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க'ன்னு ரொம்ப சாதாரணமாத்தான் கேட்டார். என் கூட்டாளிக்குப் பேச்சே வரலை... அப்புறம் நான்தான் எங்க ஊரு,பேரெல்லாம் சொல்லி பலாக்காய எடுத்து அவருக்குக் காட்டினேன். அப்புறம் இன்னும் சில விஷயங்கள விசாரிச்சாரு... அவங்க ஆளுங்க எங்கள முழுசா சோதனப் போட்டு பார்த்தாங்க. எதுவுமில்லைன்னு தெரிஞ்சதும்...'சரி வாங்க' அப்படின்னு சொல்லி கொஞ்ச தூரம் கூட்டிப் போனாங்க. அந்தப் பக்கம் ஒரு பாறை இருக்கும். அந்த இடத்துக்கெல்லாம் நான் எத்தனையோ தடவை வந்திருக்கேன். ஆனா, அங்க இப்படி ஒரு இடம் இருக்குறதே எனக்குத் தெரியாது. இந்தப் பாறைக்கு அந்தப் பக்கம் நல்ல மறைவான இடம். அங்க அவரு ஆளுங்க சமைச்சிட்டிருந்தாங்க. என்னைப் பார்த்து,
'வாய்யா...வந்து உட்காரு. சாப்பிடலாம்'ன்னு சொன்னாரு. நாங்களும் கொலப்பசில இருந்தோம். நல்லா சாப்பிட்டோம். அப்படியே கொஞ்ச நேரம் ஊரு நிலவரம், ஊருக்குள்ள அவர பத்தி என்ன பேசிக்குறாங்க, போலீஸ்காரங்களோட அராஜகங்கள்ன்னு கேட்டு விசாரிச்சாரு. ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.
'சரி கிளம்புங்கடா...இருட்டுறதுக்குள்ள ஊரு போய் சேருங்க. அங்க போய் இங்க பார்த்த கதயெல்லாம் பேசிக்கிட்டிருக்காதீங்க. இந்தாங்க...' என்று சொல்லி ஆளுக்கு 500 ரூபாய் எடுத்துக் கொடுத்தார். அன்னிய தேதிக்கு 500 ரூபாங்குறது எங்களுக்கு மிகப் பெரியத் தொகை. நாங்க இதெல்லாம் பேசிக்கிட்டிருக்கும் போது, அவங்கக் கூட்டத்து ஓரத்துல அந்த ஜடாமுடி சாமி உட்கார்ந்திட்டிருந்துச்சு. அது எதுவுமே பேசுல. சும்மா சோளிய உருட்டிக்கிட்டு இருந்துச்சு." என்று சொல்லிக் கொண்டிருந்த ராசு அண்ணன், ஒரு பாறையின் மீது தாவி ஏறி, அதில் உட்கார்ந்து கொஞ்சம் இளைப்பாறினார்.
எனக்கு மொத்தக் களைப்பும் கலைந்து, பெரும் உற்சாகம்தான் மூண்டிருந்தது. வெயிலும் பெருமளவு குறைந்துவிட்டிருந்தது.
"யாருன்னா அந்த சாமி?"
"அது யாருன்னே தெரியில தம்பி... ஊர்க்காரங்க நிறைய பேரு அந்த ஜடாமுடி சாமிய பத்தி பேசுவாங்க. வீரப்பன் எது செய்றதுன்னாலும், அந்த சாமி சொல்றதக் கேட்டுதான் செய்வாறாம். ஆனா, அவரு யாரு, என்னங்குற விவரம்ல்லாம் தெரியாது. ஊர்க்காருங்க மலைக்குள்ள போகும்போது சமயத்துல அந்த சாமி தவம் பண்ணிட்டிருக்குறத பார்த்ததா சொல்லுவாங்க. அதுல என்னன்னா அவரு கண் இமைக்குற நேரத்துல காணாமப் போயிடுவாரு. நம்ம கீழ ஒரு ஓடையில உட்கார்ந்திருந்தோமே? அதுக்கு கொஞ்சம் அந்தப் பக்கம்... சாயங்காலம் நேரம். நானும், என் கூட்டாளியும் நடந்து போயிட்டிருக்கோம். அப்போ, பாதையோட அந்த பக்கம் புதருக்குள்ளருந்து வீரப்பனும், அவரோட ஆட்களும் பாதைய குறுக்கா கடந்து அடுத்த புதருக்குள்ளப் போனாங்க.
நாங்க அப்படியே கொஞ்சம் ஒதுங்கி தள்ளி நின்னோம். அவங்க ஏதோ பேசிட்டே அப்படியே கடந்து போனாங்க. வீரப்பனும் எங்கள பார்த்து சின்னதா சிரிச்சிட்டு அப்படியே பேசுன மாதிரியே போயிட்டாரு. அப்போ, எல்லோரும் போயிட்டாங்கன்னு நாங்க நகரத் தொடங்குறோம், திடீர்ன்னு புதருக்குள்ளருந்து அந்த ஜடா முடி சாமி வெளிய வந்துச்சு. வீரப்பன் போன பக்கம், சடார்ன்னு போயிடுச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க... இருக்குறது நாங்க நடக்குற அந்த ஒரே பாதை தான். மற்றபடி புதருக்குள்ள புகுந்துதான் வரணும். ஆனா, அன்னிக்கு நாங்க வீட்டுக்குப் போய் சேர்றதுக்குள்ள மொத்தம் மூணு இடத்துல அந்த ஜடா முடி சாமிய பார்த்தோம். எங்க பாதையில கண்டிப்பா அவரு வர்ல... ஆனா, புதருக்குள்ள புகுந்து வந்திருந்தாலும் அவ்வளவு வேகமா எங்களுக்கு முன்னாடி எப்படி வந்தாருன்னும் தெரியில.
வீரப்பனுக்குப் பெரிய பாதுகாப்பா இருந்தது அந்த சாமிதான்னு சொல்லுவாங்க. வீரப்பன் இறந்ததுக்கு அப்புறம் இன்னிய வரைக்கும், ஊர்க்காரங்க யாருமே அந்த சாமிய பார்க்கவேயில்ல. அவரு என்ன ஆனாருங்குறது பெரிய மர்மமாவே போயிடுச்சு..." என்று ராசு அண்ணன் சொல்லி முடிக்கவும், அங்க இருள் படரத் தொடங்கியது.
"சரி...கிளம்பலாம் தம்பி.
தெங்குமரஹடா பக்கம்தான். அங்க போயி தங்கிக்கலாம்." என்று சொன்னதும் மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம்.
"வீரப்பன் எங்களுக்கெல்லாம் குலசாமி தம்பி. அது இருந்த வரைக்கும் எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்ல... இப்ப பாருங்க. எங்க பொண்டாட்டி, புள்ளைங்கள காட்டுக்குள்ள கூட்டி வரணும்ன்னா கூட தலைக்கு 200ரூவா பாரஸ்ட் ஆபிஸருக்குக் காசு கொடுத்தாதான் கூட்டி வர முடியும். ஒரு பலாக்காயக் கூட எங்க புள்ளைக்கு நாங்க காட்டுலருந்து கொண்டு போயிட முடியாது. வீரப்பன் காட்டை கொள்ளையடிச்சா, கொள்ளையடிச்சான்னு சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு டூரிஸ்டுங்குற பேர்ல பாரஸ்டுகாரனுக்கு காசக் கொடுத்துட்டு காட்டுக்குள்ள வர்றானுங்க பாருங்க, அவனுங்கதான் தம்பி இன்னிக்கு பெரிய கொள்ளைக்காரனுங்க. காட்டுக்குள்ள வந்து குடிச்சிபுட்டு அவனுங்க பண்ற அட்டகாசம் எல்லாம் சொல்லி மாளாது. பாரஸ்டுகாரங்க அடிக்குற கொள்ளைய பத்தி வாய் திறந்து பேசிட முடியாது. என்ன பண்றது... இப்ப எல்லாமே மாறிப் போயிடுச்சு தம்பி..." என்று விரக்தியான குரலில் சொல்லியபடியே, தூரத் தெரிந்த தெங்குமரஹடா கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அதன்பின் அவர் அதிகம் பேசவில்லை. நானும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் இரா.கலைச் செல்வன் 

பழங்குடி காடு வீரப்பனார் வனத்துறை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக