வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஆண்டாள் அருணகிரிநாதர் புணர்தல் பாலியல் இல்லை பக்தி இலக்கியம் புணர்ச்சி கலவி

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 12
பெறுநர்: எனக்கு

ஆண்டாளும் புணர்ந்தாள். ஆசான் மாணிக்கவாசகரும் புணர்ந்தார்!
ம.செந்தமிழன்
புணர்ச்சி என்பது, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் நடவடிக்கை என்ற அளவில் புரிந்துகொள்பவர்கள் சமூகத்தில் மிகுதி. இவ்வாறானவர்களால், இறையியலில் உள்ள ’புணர்தல்’ எனும் சொல்லின் பொருளை உணரவும், விளங்கிக்கொள்ளவும் இயலாது. இறைவனைப் புணர்தல் என்றால், இறைவனுடன் உடலுறவு கொள்ளும் நடவடிக்கை அல்ல. தன் உடல், மனம் ஆகியனவற்றை முற்றும் முழுதாக பரம்பொருளுக்கே ஒப்படைத்தல் என்று பொருள்.
ஒரு பெண், தனது இறைச் சிந்தனை வழியாக இறைவனைப் புணர்தல் தமிழர் மரபில் விளைந்த விடுதலையின் வெளிப்பாடு. பொதுவாகவே காம உணர்ச்சியினைப் பாடல்களாகப் பாடி, பொதுவெளியில் அவற்றை வெளியிட்ட பெண்கள் தமிழகத்தில் பலர். அவ்வைக்கும் அதியமானுக்குமான காதலும் காமமும் வெளிப்படையானவை.
‘முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்’ என்ற பாடலில், ‘எனக்குக் காமம் மிகுந்துவிட்டது. நான் இப்போது என்ன செய்ய?’ என்று பித்து தலைக்கேறிப் பாடினாள் ஔவை. இப்பாடல்களை அக்காலத் தமிழரின் சங்கங்கள் போற்றின, ஏற்றன. பெண்கள் காமத்தை வெளிப்படுத்துவதையோ, புணர்ச்சி குறித்த கருத்துகளைத் தம் வாழ்வின் கொள்கைகளாக அமைத்துக்கொள்வதையோ அக்காலத் தமிழ்ச் சமூகம் தடுக்கவில்லை. இவ்வாறு தம் காமத்தை வெளிப்படுத்திய பெண்கள் எல்லோரும் ஒழுக்கக் கேடானவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவர்கள் என்று புரிந்துகொள்வதுதான் நவீனப் பகுத்தறிவின் வழக்கம்.
இறைவனைப் புணர்தல் என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்குமான ஒழுங்கு.
‘சிவத்தின் அரவணைப்பு கிட்டும்போது, தவம் செய்பவன் ஆணாகவே இருந்தாலும் தன்னை ஒரு பெண்ணாகக் கருதும் நிலை உருவாகும்’ என்பது திருமந்திரத்தில் உள்ள மந்திரங்களில் ஒன்று. ’உமை அம்மையின் அருளைப் பெறுதல் என்பது அவளிடம் பிச்சை எடுப்பதல்ல, உமை அம்மையுடன் கலவிகொள்ளுதல்தான்’ என்பதும் அதே திருமந்திரத்தின் பாடல்களில் பொதிந்துள்ள கருத்து.
ஆதி சங்கரர் தன், சௌந்தர்ய லகரியில் உமையன்னையைக் காமத்தின் குறியீடாகவும் விவரிக்கிறார். திருமந்திரத்தின் கருத்துகள் பலவற்றை ஒற்றி இயற்றப்பட்டது சௌந்தர்ய லகரி.
‘பொல்லா மணியைப் புணர்ந்தேனே’ என்றார் ஆசான் மாணிக்கவாசகர். புணர்ச்சிப் பத்து எனும் பதிகம், மாணிக்கவாசகருக்கும் இறைவனுக்குமான புணர்ச்சியின் நிலைகளை விவரிக்கிறது.
‘புணர்ப்பதொக்க எந்தை என்னை ஆண்டு பூணநோக்கினாய்
புணர்ப்பதன்றி தென்றபோது நின்னோடென்னோடு என்னிதாம்
புணர்ப்பதாக அன்றிதாக அன்புநின் கழற்கணே
புணர்ப்பதாக அங்கணாள புங்கமான போகமே’
என்பது அத்திருவாசகம்.
’ஆணும் ஆணும் புணர்ந்த ஓரினச் சேர்க்கை’ என்றுதான் நவீனப் பகுத்தறிவு இதைப் பார்க்கும். அதன் எல்லையும் பரப்பும் மனித உடல்களுடன் கட்டுண்டது. ஆசான் மாணிக்கவாசகர் தம்மை முற்றும் முழுதாக இறையுடன் கலக்கவிட்டவர். அப்பர், இறைவனின் அடியாரானார். சுந்தரர், இறைவனின் தோழன் ஆனார். சம்பந்தர், இறைவனின் பிள்ளையானார். மாணிக்கவாசகர் இறைவனின் அங்கமானார்.
எவரெல்லாம் இறையின் அங்கமாகத் தம்மை உணர்கிறாரோ அவரெல்லாம் இறையுடன் கலவிகொள்கிறார் என்பது இயல்பு. இதுவே படைப்பின் விதியும் ஒழுங்கும்.
அன்னை ஆண்டாளும், ஆசான் மாணிக்கவாசகரும் இருவேறு நெறிகள் வழியாக இறை எனும் ஓர் இலக்கை எட்டியவர்கள். ஆண்டாள், திருப்பாவை இயற்றினார். மாணிக்கவாசகர், திருவெம்பாவை பாடினார். இறைமீது கொண்ட காதலில் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை உணரும் தகுதி கொண்டோரால் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும்.
தேவரடியார் எனும் சொல் வேறு, தேவதாசி எனும் சொல் வேறு. இறைவனுக்கும் இறைவிக்கும் தம்மை ஒப்படைத்துக்கொண்ட பெண்கள் தேவர் அடியார். அக்காலத்தில் இது மதிப்புமிக்க செயல். பிற்காலச் சோழப் பேரரசர்கள் குடும்பப் பெண்களின் பெயர்கள் தேவரடியாருக்குப் பட்டமாக வழங்கப்பட்டன. சோழர்குலப் பெண்கள் பலர் தேவரடியாராக மாறி வாழ்ந்தனர். தேவரடியார்கள் திருமணம் புரிந்துகொண்டு குடும்பம் நடத்தினர். ஒருசிலர் மணம் புரியாமல் இருந்தனர். இதைப் பற்றி விரிவான கட்டுரை ஒன்றினை ஏற்கெனவே எழுதியுள்ளேன்.(https://www.facebook.com/directorsenthamizh…/…/4348745394582)ஆண்டாள் தன் முலைகளும் இடையும் கண்ணனுக்கானவை எனப் பாடினார் என்றால், அதுதான் ஒப்படைப்பின் பண்பு. ‘உடல் பொருள் ஆவி முழுதும் உனக்கே சொந்தம்’ என வெற்று வார்த்தைகளால் காதல் செய்வோருக்கும் அவ்வாறான காதலைச் சொற்களில் விற்பனை செய்வோருக்கும் ஆண்டாளின் இறைக் கலவி புரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
முருகப் பெருமான் ஆலயத்தில் ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபட்டதாக பரிபாடல் பதிவு செய்துள்ளது. இயேசுவுக்கு முந்தைய இசுரேல் சமூகத்தில் இவ்வாறான புணர்ச்சிவழி வழிபாடு நிகழ்ந்தது வரலாற்றில் பதிவாகியுள்ளது.
திருக்குற்றாலக் குறவஞ்சிப் பாடல்களில், ‘சிவபெருமானது இடை அழகும் மார்பழகும் பெண்களால் விவரிக்கப்படுகிறது’. முருகன் என்றாலே அழகும் இளமையும்தான் என்பது தமிழ் மறையின் உட்பொருள். பருவம் எய்திய பெண்கள், வெறிகொண்டதுபோல் அரற்றும்போது, ‘இப்பெண்ணின் மனதில் வேலன் குடிகொண்டுள்ளான்’ என்று ஆற்றுப்படுத்துவது சங்கத் தமிழர் பண்பாடு. அதற்கு ’வேலன் வெறியாட்டு’ என்று பெயர். ஒரு பெண்ணால் தன் காமத்தை ஊரார் முன்னிலையில் வெளிப்படுத்த முடியும் என்பதற்கான சான்றுகள் இவை.
நிலைமொழியும் வருமொழியும் இணைவதைக் கூட, ‘புணர்ச்சி’ என்று குறித்த மொழி இது. நிலைமொழியும் வருமொழியும் மாற்றமில்லாமல் இணைவது, ‘இயல்புப் புணர்ச்சி’ என்றாகும். நிலைமொழியும் வருமொழியும், திரிந்து இணைவது விகாரப் புணர்ச்சி’ என்றாகும்.
புணர்தல் நிகழ்ந்துகொண்டேதான் உள்ளது. சொற்கள் புணர்கின்றன. மழை நிலத்தைப் புணர்கிறது. வெம்மை ஈரத்தைப் புணர்கிறது. அமைதி ஓசையைப் புணர்கிறது. இருள் ஒளியைப் புணர்கிறது. இவற்றை எல்லாம் உணர்வோர் எக்காலமும் இறையைப் புணர்கிறார்கள்.
’புணர்ச்சி என்றால், ஆண் குறியும் பெண் குறியும் மோதிக்கொள்ளும் நடவடிக்கை’ என்றளவில் மட்டும் வாழ்வோருக்கு இவை எல்லாம் புரியாது.
’அன்னை ஆண்டாள் கண்ணனைக் கலந்தாள்’ என்பதை இறை உணர்வுகொண்டோர் புரிந்துகொள்ளும் முறைவேறு, இறைவன் மனித உடல் எடுத்து வந்தானா என்ன?’ எனக் கேட்பது நவீனப் பகுத்தறிவாளர்கள் முறை. உடலைக் கடந்து மனம் உண்டு, மனத்துக்கும் அப்பால் சித்தம் உண்டு. அன்னை ஆண்டாளும் கண்ணனும் மணந்தார்கள், புணர்ந்தார்கள் என்பதை உடல் இன்பங்களை மட்டுமே கருதி வாழ்வோரால் எக்காலமும் புரிந்துகொள்ள முடியாது. அவரவருக்கு என்ன தகுதியோ அதன்படியே புரிதல்கள் அமையும்.
ஆசான் மாணிக்கவாசகரும் ‘இறைவனைப் புணர்ந்தவர்’தான். அவரைப் பற்றிய எந்தக் கேள்வியும் இதுவரை எழுந்ததில்லை. நவீனப் பகுத்தறிவின் அக்கறை பெண்களின் புணர்ச்சி குறித்து மட்டும்தான் எழுமோ!
‘அர்த்தநாரீசர்’ எனப்படும் அம்மையப்பர் வடிவம், ‘ஒன்றே இரண்டாகி, இரண்டும் கலந்து ஒன்றாதல்’ எனும் புணர்ச்சி நிலையின் குறியீடாக அமைக்கப்பட்டது. அன்புகொள்ளுதலின் இறுதி அல்லது உச்சம் கலவி! இப்போதுள்ள அறிவின் அவலத்தைக் கொண்டு அன்பு எனும் மேன்மையை அளவிட இயலாது!
..........................................................................
நன்றி செந்தமிழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக