சனி, 4 ஆகஸ்ட், 2018

காவிரி இலக்கியம் காவேரி கடிதம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 31
பெறுநர்: எனக்கு

எப்படி மஞ்சள் நதியால் சீனாவின் ஜிங் வம்சம் அழிந்ததோ அதுபோல எங்கள்  காவிரியால் உங்கள் காவி அரசியலும் வீழும்

கரிகாலன் கவிதை
திறந்த மடல்!

🔥

பிரதமர் மோடி அவர்களே!

காவிரி குறித்து எங்கள் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பரணரும் இளங்கோவும் சீத்தலைச்சாத்தனாரும் பாடியபோது இந்தியா இல்லை, கர்நாடகா இல்லை, கன்னடம் இல்லை,குஜராத் இல்லை, புது டெல்லி இல்லை, காங்கிரஸ் பிஜேபி எந்த எழவுமில்லை. ஆனால் தமிழ் இருந்தது!

தமிழ்ப் பண்பாட்டை நனைத்து காவிரி ஓடியது.காவிரி மீது எங்கள் வீரத் தமிழ்ப் பிள்ளை கரிகாலன் கல்லணை கட்டினானே அது உங்கள் ராமர் பாலம் போல புராணப் புளுகு அல்ல. அப்போதெல்லாம் காவிரியை மேலாண்மை செய்தவன் தமிழன்!

மயிலுக்கு போர்வையைக் கொடுத்த தமிழ் மனமே குடகை இந்தியாவுக்குத் தந்தது. 'ஸ்கீம்' எனும் சொல்லுக்கே நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பவர் நீங்கள். காவிரி எங்கள் உடமை என்பதற்கு எம் சங்கக் கவிகள் எழுதிய உயில்கள்  இருப்பதை அறிவீரோ?

'வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி' தமிழ்ப்
பழங்கவி உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை வரிகள் ஈரத்தோடு தமிழ் இதயங்களை இன்னும் நனைத்தபடிதான் இருக்கிறது!

'கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுருள் போல
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே' என  தமிழ்க்
காதல் வளர்த்த காவிரி தீரத்துக் கதைகள் அகப்பாடலெங்கும் சாரலை அள்ளித்தெளிக்கிறதே, அறிவீர்களா
மிஸ்டர் மோடி!

'புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல்
மலி நீர் மன்பதை புரக்கும் நல்
நாட்டுப் பொருநன்'
அடடா..ஒரு நதியை தாயின் வற்றாத முலையூற்று என்ற கற்பனையை எந்த மொழியிலாவது  படித்ததுண்டா நீங்கள்?

'பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து
குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகு அசைய நடந்தாய்!
வாழி காவேரி' இந்த சிலப்பதிகார வரிகளுக்கு பொருள் விளக்க   திருச்சிக்கோ புகாருக்கோ அழைத்துச் சென்று வெறும் பாலையாய் கானல் புரளும் காவிரியைக் காட்டினால் எம்பிள்ளைகள் நம்புவார்களா?

'பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை' விண்ணில் கோள்கள் திரிந்தாலும் மண்ணில் நிலைமாறாதவள் எங்கள் குலக்கொடி காவிரி. அய்யோ.. எம் காவிரிக்கரை உழுகுடியின் கண்ணீரில் மணிமேகலை அழிந்தால் ஐம்பெருங்காப்பியம் கொண்ட வளமான தமிழ் என எங்களால் தலைநிமிர்ந்து எவ்வாறு முழங்க முடியும்!

'காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என மேவிய ஆறு பல வோடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு' பழங்கதையென எண்ணி மறப்போமென்றால் பாரதிவரை தொடர்ந்த உறவன்றோ காவிரி!

அய்யா மோடி அவர்களே!

காவிரியைப் போலவே சீனாவில் ஒரு நதி ஓடியது.சீன மொழியில் ஹெ  (河) என்று அழைக்கப்பட்ட மஞ்சள் ஆறு.
நாங்கள் காவிரியைப் புகழ்வது போலவே சீனர்கள்  சீன நாகரீகத்தின் தொட்டில் என மஞ்சள் நதியைக் கொண்டாடுவார்கள்.

சீனாவின் துயரம் என அழைக்கப்படும் இவ்வாற்றில் ஏற்பட்ட வெள்ளப்
பெருக்கால்  கிபி 11ம் நூற்றாண்டில் 
ஜிங் வம்சம் வீழ்ந்தது.

இன்று எங்கள் காவிரியில் கானல் பாய்கிறது.சோறுடைத்த சோழகுடிகளின் ஏர்முனை துருப்பிடித்துவிட்டது. அம்பானி அதானி நலம்விழையும் ஒரு கார்ப்ரேட் புரோக்கரால் உழுகுடிகளின் கண்ணீரையோ வேர்வையையோ அறியமுடியாதுதான்.

பிஜேபியின் அரசியல் சூதாட்டத்துக்கு காவிரியை அடகு வைக்கத் துணிந்தீர்கள்.
நீதி குறித்த எந்த அறவுணர்வும் உங்களுக்கோ அமித்ஷாவுக்கோ கிடையாது என்பதற்கு நிறைய முன்னுதாரணங்கள் இருப்பதை யாமறிவோம்.

நீங்கள், எடப்பாடியை, ஓபிஎஸ்ஸை,
பொன்னாரை, தமிழிசையை வைத்து தமிழரை எடைபோடுகிறீர்கள். தமிழ் மொழி காக்க, இனம் காக்க தீப்பற்றி வெடித்த எண்ணற்ற முத்துக்குமார்கள் செங்கொடிகள் வாழ்ந்த
வீரத் தமிழ்நிலமிது.

செங்குட்டுவன் கரிகாலன் நெடுஞ்செழியன் ஏந்திய வீரத்தில் தூசுபடிந்துவிடவில்லை.

எப்படி, மஞ்சள் நதியால் ஜிங் வம்சமழிந்ததோ, அப்படி எங்கள் காவிரியால் வீழும்
உங்கள் காவி அரசியல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக