வெள்ளி, 6 அக்டோபர், 2017

கபிலர் அகவல் சாதியெதிர்ப்பு இலக்கியம் பிராமணீயம்

Palani Deepan
கபிலர் அகவல்.
இந்திய அளவில், ஏன் உலக அளவிலும் கூட சாதிப் பிரிவினையை கடுமையாகத்
தாக்கும் நூல் பச்சைத் தமிழன் கபிலர் எழுதிய இந்த கபிலர் அகவலைத் தவிர
இணையான நூல் வேறு எதுவும் இல்லை.
நூலின் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.
இந்தநூலின் நடை மிக எளிய, தனித்தமிழ் நடை. ஆனால் அது செல்லும் வேகம் வேறு
எந்த நூலுக்கும் இல்லை.
ஆதியில் தமிழரிடையே சாதி வேற்றுமை இல்லை. பிராமணர்கள் இங்கு வந்தப் பிறகே
சாதி வேற்றுமையும் உயர்வு தாழ்வும் உண்டாகியது.
உலகின் பாரதத்தை தவிர சீனம், சிங்களம், யவனம் போன்ற நாடுகளில் இந்த சாதி
வேற்றுமை இல்லை. ஏனெனில் அங்கெல்லாம் பிராமணர்கள் இல்லை.
”முற்படைப்பு அதனில் வேறாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதி இந்த நாட்டினில் நாடடினீர்...”
என்று பிராமணர்களைப் பார்த்து வேகமாகக் கேட்கிறார் கபிலர்.
இதற்கு மிக அழகான உவமையொன்றை கவிஞர் கையாள்கிறார்.
எங்காவது பசுவும் எருமையும் தம்முள் கலந்து மகவை ஈன்றெடுக்க முடியுமா...?
ஆனால் மனித குலத்தல் சாதி வேற்றுமை பாராமல் ஒரு பிராமணன் ஒரு புலைச்சியை
கூடினால் குழந்தை பிறக்காமல் போய்விடுமா...? அந்தக் குழந்தை பிராமணக்
குழந்தைதானே...?
அந்த பசுவும் எருமையும் பார்த்த அளவில் நமக்கு பேதம் தெரிகிறது. அது போல
மனிதரிடையே நம்மால் பேதத்தைக் காண முடியுமா...?
தென்நாடாம் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு புலையன் வடமாநிலத்திற்கு போவான்
ஆயின், வேதத்தை பழுதில்லாமல் ஓதி எளிதாக பிராமணன் ஆகிவிடுகிறான்.
அதுபோல, வடமாநில பார்ப்பான் தென்தமிழகம் வருவான் ஆயின், பிழைக்க
திக்கற்று ஒழுக்கம் கெட்டு புலையன் ஆகிவிடுகிறான்.
இதுதானே இயற்கை...?
”தென்திசைப் புலையன் வடதிசைக்கு ஏகின்
பழுதற ஓதிப் பார்ப்பான் ஆவான்
வடதிசைப் பார்ப்பான் தென்திசைக்கு ஏகின்
நடையது கோணிப் புலையன் ஆவான்”
என அடித்து விளையாடுகிறார் கவிஞர்.
அடுத்து பிராமண முனிவர்கள் வரலாற்றை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.
வசிட்ட முனிவர் யார்? பிரம்மனின் கூத்தி வயி்ற்றில் பிறந்தவன் தானே...?
சத்திய முனிவன் யார்? வசிட்டருக்கு சண்டாளியின் உறவில் பிறந்தவர் தானே?
வேதங்களை தொகுத்த வியாச முனி யார்? பராசரருக்கும் மீனவப் பெண்ணிற்கும்
பிறந்தர் தானே...?
ஆக இந்த நால்வரும் வேதங்கள் ஓதி பெரும் தவத்தினராக ஆனது எப்படி? என்று
விளாசுகிறார்.
சாதி வேற்றுமை இயற்கைக்கு உண்டா...? இயற்கைதானே இறைவன்.
மழை ஒரு குறிப்பிட்ட குலத்தவரை மட்டும் ஒதுக்கிவிட்டு பெய்கிறதா?
காற்று சிலரை நீக்கிவிட்டு வீசுகிறதா?
காயும் கதிரவன் சிலரை மட்டும் காயேன் என்கிறனா...?
நாம் வாழும் இந்த நிலம் யாரையாவது இருக்க பொறுக்க மாட்டேன் என்னுமோ...?
ஈர்ப்பு விதி யாவருக்கும் பொது தானே...?
“மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ?
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ”
என அழகு தமிழில் அழகாய் கோபிக்கிறார்.
கடைசியாய் தமிழர்களுக்கே உள்ள வள்ளல் தன்மைதான் மனிதத் தன்மை என்கிறார்.
”எந்நாள் ஆயினும் இரப்பவர்க்கு இட்டு...”
என மனித நேயத்தை வற்புறுத்துகிறார்.
கடைசியாக....
சாதி வெறியர்களையும், சாதி உணர்வைத் தூண்டி குளிர்காய்பவர்களையும்
முட்டாள்களே... என விளிம்பி,
”அழகான சிறப்பு மிக்க வாழ்வும் ஒழுக்கமுமே மனித குலத்திற்கு நலந்தரும்.
தான் பிறந்த பிறப்பு எந்த நலனையும் தராது” என முடிவுரை எழுதுகிறார் கபிலர்.
”சிறப்பும் சீலமும் அல்லது
பிறப்பு நலந் தருமோ பேதை யீரே...!”
தமிழன்தான் ஆதிமுதல் சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்து வருகிறான்.
அந்த ஏற்றத்தாழ்வு இன்றும் உள்ள ஒரே இடமான கோவில் கருவறைக்குள் யாவரும்
அர்ச்சகர் ஆகலாம் என துணிந்த பிராமணர் அல்லதவர்களை அர்ச்சகர்களாக
நியமித்த கேரளா அரசை பாராட்டி மகிழ்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக