திங்கள், 3 ஏப்ரல், 2017

அறுவைசிகிச்சை மருத்துவம் தமிழ் மன்னன் ஈழம் ஆரியர் அறிவியல் ஆரியச்சக்கரவர்த்தி

aathi tamil aathi1956@gmail.com

29/11/15
பெறுநர்: எனக்கு
அறுவை மருத்துவத்தில் புகழ்பெற்ற சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி செகராசசேகரன்
09.12.2012இல் இராசசேகரம் மூலிகை மருத்துவ நூல் வெளியீடு
இடம்பெறுகின்றது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது
சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் அனைவரும் தமிழின் ஆயகலைகள்
அறுபத்தினான்கிலும் புலமை பெற்று விளங்கினார்கள். அவர்களுள் மருத்துவம்,
அறுவை மருத்துவம், சோதிடம், வரலாறு, போர்க்கலையில் கீர்த்தி பெற்று
விளங்கியவன் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி செகராசசேகரன் ஆவான். சிங்கை
ஆரியச்சக்கரவர்த்தி வரோதயன் காலத்தில் 1380இல் கம்பளை அரசும், இறை காம
அரசும் திறை செலுத்துவதை நிறுத்திவிட்டதுடன் திறைசேகரிக்க சென்ற
அதிகாரிகளையும் சிரச்சேதம் செய்து தொங்கிவிட்டான்.
ஆத்திரமடைந்த வரோதயன், தளபதி தலைமையில் கம்பளைக்கும், செயவீரன் தலைமையில்
இறைகாமத்திற்கும் படை அனுப்பி இரு அரசுகளையும் கைப்பற்றி செயவீரனை மன்னன்
ஆக்கினான். கம்பளையிலும் கோட்டையிலும் செயவீரன் தம் சிங்கக் கொடியை
பறக்கவிட்டான். சிங்கை அரசின் கொடியாக அக்காலத்தில் சிங்கக் கொடி
விளங்கியது. இதனை தட்சண கைலாசபுராணம் சிறப்புப் பாயிரத்தில் விடலாண் வயமா
விளங்கிய கொடியோன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1394இல் தந்தை இறக்க,
சிங்கை நகரில் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி செகராசசேகரன் என்ற விருதுப்
பெயருடன் சிங்காசனம் ஏறினான் செயவீரன்.
செகராசசேகரம் என்ற மருத்துவ நூலை 4000 பாடல்களாக இயற்றினான். தட்சிண
கைலாசபுராணம் என்ற வரலாற்று நூலை இயற்றினான். செகராசசேகர மாலை என்ற
சோதிடநூலையும் இயற்றினான். கந்தமலை ஆரியர்கோன் என்று செகராசசேகரம்
குறிப்பிடுகிறது அதாவது கதிரமலையும் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
சேதுகாவலன் விஞ்சை விஞ்சு செகராசசேகரன் என்று சேதுக்கரையும் இவன்
ஆட்சியின் கீழ் இருந்ததாக குறிப்பிடுகிறது செகராசசேகரம். இவன் காலத்தில்
சிங்கை அரசினால் வெளியிடப்பட்ட நாணயங்களில் இவன் உருவம்
பொறிக்கப்பட்டிருந்துள்ளது என பேராசிரியர் புஷ்பரட்ணம்
குறிப்பிட்டுள்ளார். இராமேசுவரத்தை ஆண்ட மன்னர்களை சேதுபதிகள்,
சேதுகாவலன் என்று அழைத்தனர். இந்த ஆசிரியச்சக்கரவர்த்தியின்
கீர்த்தியிலும் நாணயத்திலும், கல்வெட்டுகளிலும் சேது என்று
பொறிக்கப்பட்டுள்ளது.
இராமேசுவரம் கோவிலை சிங்கை அரசர்கள் கட்டியதாக 1900 ஆண்டு வரை கோவிலில்
கல்வெட்டு காணப்பட்டது. சிங்கை பரராசசேகரன் இராமேசுவரம் கோவிலை
கருங்கல்லால் கட்டுவித்தான். செகராசசேகரன் ஆட்சிக்காலத்தில் இலங்கை
முழுவதும் இவன் ஆட்சி 12 வருடங்கள் நடைபெற்றது. பின்னர் திறை செலுத்தி
ஆட்சி செய்தனர். சிலாபத்தில் செகராசசேகரன் முன்னிலையில் முத்துக்குளிப்பு
நடைபெற்றுக் கொண்டிருந்தது. புவனேகபாகு திடீரென வந்து போரிட்டான்.
செகராசசேகரன் தோற்கடித்தான் மீண்டும் இலங்கை முழுவதிலும் செகராசசேகரன்
ஆட்சி நடைபெற்றது. தென்னிந்தியாவில் கங்கை நாட்டையும் பாண்டிய நாட்டையும்
வென்று தன் மகன் சூரியகுமாரனை மன்னனாக நியமித்தான். இலங்கை முழுவதிலும்
இந்தியாவின் தென்பகுதியிலும் சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகளின் சிங்கக்
கொடி பட்டொளி வீசிப் பறந்தது எனலாம். வரலாற்றின் பெரும்பகுதி சிங்கை
ஆரியச்சக்கரவர்த்திகளால் இலங்கை ஆளப்பட்டு வந்தது அல்லது திறை பெற்று
பெருவேந்தனாக மேலாண்மை செலுத்தி வந்துள்ளனர். சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி
செகராசசேகரனால் கோட்டைகாம கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது. அதில்
கங்கணம் வேற்கண்ணினையாற்
காட்டினால் காமர் வளைப்
பங்கையக்கை மேற்றிலதம்
பாரித்தார் - பொங்கொலிநீர்ச்
சிங்கை நகராரியனைச்
சேராவனுரேசர் தங்கள் மடமாதர்தாம்.
என்று உள்ளது.
இந்தக் கல்வெட்டு 15ம் நூற்றாண்டுக்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவன் இயற்றுவித்த கணக்கதிகாரம் என்னும் நூலும் சிறந்த நூலாகும்.
சர்ப்பசாத்திரம் என்னும் நூலில்
இலங்கை வேந்தர் சீரிய பொன் திறையளக்கச்
செங்கோலோச்சுஞ் செகராசசேகர மன்
சிங்கை மேவு மாரியர் கோன்
என்று புகழப்பட்டுள்ளான்.
(தொடரும்...)
சிங்கை அரசர்கள் பிராமணரான சேதுபதிகைள வென்றதால் ஆரியர்கோன் என
அழைக்கப்பட்டனர். இவனுடைய ஆட்சிக் காலத்தில் சிங்கை மருத்துவர்கள்
எவ்வாறு உடல் நூலைப் படித்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயம்பியவுடலு மூனு மென்பு நாடிகளும் மற்றும்
செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே.
அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால்
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி உறுப்புகளை
எடுத்து அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெரிவிக்கிறது.
போரில் காயப்பட்ட வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து காப்பாற்றுவதில்
மிகவும் தேர்ச்சி பெற்றவன். இவனுடைய ஆட்சிகாலத்தில் இலங்கையின் ஒன்பது
துறைமுகங்களிலும், தாழ்நிலத்திலும், மலைநாட்டிலும் சிங்கை அரசின்
அதிகாரிகள் சுங்கவரி வசூலித்தனர் என இராஜவலிய, பேராசிரியர் பத்மநாதன்
தெரிவித்துள்ளார். வரலாற்றாளர் கே.எம்.டி. சில்வாவின் கூற்றுபடி சிங்கை
அரசு கழனியாறு வரை நீண்டிருந்தது. மாத்தளை மாவட்டத்திற்குள்ளும்
ஊடுருவியிருந்துள்ளது. தென்னிலங்கை வரை கடற்படைகள் சென்று வந்தன. சிங்கை
ஆரியச்சக்கரவர்த்திகளின் கீர்த்தி பற்றி மருத்துவ நூல்களில் பின்வருமாறு
குறிப்புகள் காணப்படுகின்றன.
மன்னவனிலங்கைச் சிங்கம் வாழ்கீர்த்தி மருந்திற் சொல்வோம்
இலங்கைச் சிங்கைமன்னன் பொருதும் படைபோல.
இலங்கைச் சிங்கத்தைக் கண்ட படை போல
கடல் சூழ் இலங்கைச் சிங்கம் முன்னர்க் களபடை போல.
எண்டிசையில் மன்னர் போற்றும்
பெரிய மாலவாரச் சிங்கமன்னன்
மலங்காத ராசர்கள் முன்னெதிர்க்க
வரும் படை போல ஓடி வெளியாம்.
இறையா மிலங்கைச் சிங்கை மன்னனெதிர்த்த
மன்னர் பெரும்படைகள்
திறையேந்தி வணங்குவ போற்
றிருந்தா விழிகள் சீராமே.
இலங்கைச் சிங்கம் முன்னெதிர்த்த பெரிய மன்னர் புறங்கொடுத்து ஓடுமாப் போற.
அரியவதாரச் சிங்க முன்னெதிர்த்த அரசர் படை போல. இலங்கை சிங்க முன்னே
உருத்த மன்னர் பெரும்படைகள் மண்ணில் விழுந்து புறங்கெளவி வணங்கல் போல்.
கனகலங்கைச் சிங்கமன்னன் வணங்குந் திறையேந்தாத மன்னர் படைபோல.
வேந்தர் சிங்கம் வெள்ளப் படையை வென்ற களம் போல, கங்கைநாடன்,
கருங்கடற்சேர்ப்பன், சேதுகாவலன், சிங்கை நாடன் என்றெல்லாம் ஆட்சியாலும்,
வெற்றியாலும் புலவர்களால் புகழப் பெற்றவன் சக்கரவர்த்தி செகராசசேகரன்.
கருங்கடற் சேர்ப்பன் என்பது இந்து சமுத்திரமும் அவன் ஆட்சியில்
இருந்துள்ளது என தெரிவிக்கிறது. தமிழ்ச் சபையைப் பேணிக் காத்துப் போற்றி
வளர்த்தவன். தமிழின் அறுபத்தினான்கு துறைசார்ந்த புலவர்களையும் வாழ
வைத்தவன். கோயிற்பற்றுக்கள் தோறும் ஆதுரசாலைகளை அமைத்தவன். மக்களை
நோயின்றிக் காத்தவன்.
மூலிகைத் தோட்டங்களை வளர்ந்து தட்டுப்பாடின்றி மருந்துகளை கிடைக்கச்
செய்தவன். தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மட்டுமே அவன் ஆட்சிக் காலத்தில்
மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். தகுதி வாய்ந்த மருத்துவர்களிடம்
முறையாக கற்று செப்பு பெற்றவர்களே மருத்துவம் செய்யத் தகுதியுடையவர்களாக
அரசினாலும், மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். நாட்டில் நோயின்றி
மக்களைக் காப்பதற்கும், மன்னரையும் போர்வீரர்களையும் காயங்களிலிருந்து
குணமாக்கவும் மருத்தர் சபை நடவடிக்கை எடுத்து வந்தது. வீர வேந்தர்களான
வெற்றி வேந்தர்களால் சிங்கைப் பேரரசு ஆட்சி செய்யப்பட்டுள்ளதே
தமிழர்களின் வீர வரலாறு ஆகும். இலங்கைத் தமிழ் மக்களின் பொற்காலம் எனப்
போற்றப்படுவது சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சிக்காலமாகும்.
வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்கிய சிங்கை ஆரியச் சக்கவர்த்தி
செகராசசேகரனின் வரலாறு நம்மை புல்லரிக்கவும், பெருமை கொள்ளவும்
வைக்கிறது.
இந்த அரச பரம்பரையில் வந்தவர் தான் இராசசேகரம் நூலாசிரியர் இளவரசர் இராசசேகரம்.
சமூகசோதி
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
பொதுச்செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக